புதன், 24 நவம்பர், 2010

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்மண்ணில் பிறக்கையிலே

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே

அது நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பினிலே'

என்ன அற்புதமான வரிகள்; எத்தனை ஆழமான கருத்துகள். பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய வைக்க வேண்டியதை அழகாக இரண்டே வரிகளில் அழகாக சொல்லியுள்ள கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியது.

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதல்ல. அது கலை, அது அறிவியல். இன்றைய சூழலில் அது பெரும் சவால். "என்னங்க பெரிய கலை; அறிவியல் - அந்தக் காலத்திலே எங்க தாத்தாவுக்கு 10 பிள்ளைகள். டாக்டர், வக்கீல்னு எல்லோரும் நல்ல நிலையிலேயே இருங்காங்க. என்கூடப் பிறந்தது 8 பேரு. நாங்க எல்லோரும் நல்லாத்தான் இருக்கோம். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி குழந்தை வளர்ப்பு சவால் அது இதுன்னு சொல்லிக்கொண்டு என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.

உண்மைதான். அந்தக் காலத்தில் ஏராளமான பிள்ளைகளை பெற்று நன்முறையில் வளர்த்தனர். ஆனால் இன்று காலம் மாறிப் போச்சு. வாழ்க்கை முறை மாறிப் போச்சு. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, சிதறி தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர்.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதென்பது உண்மைதான். "ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்; இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்''. அது நேற்றைய தாரக மந்திரம். தற்போது ஒருபடி மேலே சென்று பெரும்பாலானோர் ஒன்றுடன் நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் 5 ஆண்டுகள் 7 ஆண்டுகள் கழித்து 2-வது குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
இப்படி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று தனிக்காட்டு ராஜாவாக வளரும் குழந்தைகளுக்கு மிதமிஞ்சி செல்லம் கொடுக்கிறார்கள். சக்திக்கு மீறி செலவும் செய்கின்றனர். இங்குதான் பிரச்சினை உருவாகிறது. இப்படி இஷ்டம் போல் வளர அனுமதித்துவிட்டு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கும்போது முரண்டு பிடிக்கிறது.

இந்த அவசரகதி உலகத்தில் குழந்தை வளர்ப்பு பிரச்சினையாகி உள்ளது.


குழந்தைகள் வளர்ப்பு குறித்து விரிவான தகவல்கள்:

பிரச்சினை எங்கே தொடங்குகிறது?

"அலுவலகத்தில் சோர்ந்து திரும்பிய மனைவி சாப்பாடு தயார் செய்யும்போதுதான் "அம்மா எனக்கு கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடு' என்று குழந்தை கேட்கும். "என்னங்க கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடுக்கக் கூடாதா' என்று மனைவி கேட்க, "எனக்கு வேறு வேலை இல்ல பாரு' என்று கணவர் உறும அங்குதான் உரசல் ஆரம்பிக்கும். இதுபோன்ற நேரங்களில் குழந்தையும் முரண்டு பிடிக்கும். இதனால் அம்மா தனது ஆத்திரத்தை, இயலாமையை குழந்தையிடம் வெளிப்படுத்துவாள். இந்த கலாட்டாக்களில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைதான்.
உணர்ச்சிகளைச் சமநிலையில் (Emotional Intelligence) வைத்து நிதானமாகச் செயல்படும் தன்மை பெரும்பாலான பெற்றோருக்கு இல்லை. எதிர்ப்பு இருக்காது. திருப்பிப் பேசாது என்ற தைரியத்தில் நமது ஆத்திரம், கோபம், இயலாமையை குழந்தைகளிடம் காட்டுகிறோம். நமது கோபத்தின் வடிகால் நமது குழந்தைகள் அல்ல.

குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடுவது இல்லை என்ற குறை பரவலாக உள்ளதே?

"என் குழந்தைக்கு பால் இல்லைன்னா எதுவுமே வாய்க்குள்ள இறங்காது. டாக்டர் அவன் சாதமே சாப்பிடுறது இல்லை டாக்டர். இப்படி புலம்பும் அம்மாக்கள் பலர். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் காரணம். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதை குழந்தை சாப்பிட்டுப் பழகும். அந்தந்த காலகட்டம், வயதுக்கு ஏற்ப எல்லா உணவுகளையும் கொடுத்துப் பழக்கவேண்டும்.

"ஐயோ என் குழந்தைக்கு அது சாப்பிட்டா பிடிக்காது, இது சாப்பிட்டா பிடிக்காது' என்று நாமே தடுத்துவிடுகிறோம். நாம் கொடுப்பதில்லை. சாப்பிடவில்லையா விட்டுவிடுங்கள். பசி வந்தால் தானாகச் சாப்பிடும். நிறைய நொறுக்குத் தீனி கொடுத்து பழக்கிவிட்டு பிறகு சாப்பிடவில்லை என்று புலம்புவதில் பலன் இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்து முறையான உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
டாக்டர், 10 வயசாகுது - இன்னும் நான்தான் ஊட்டி விடவேண்டியதிருக்கு - இது பல பெற்றோரின் புலம்பல். சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். குழந்தை தானாகச் சாப்பிடும். ஒரு நாள் அடம் பிடிக்கும்; இரண்டு நாள் அடம் பிடிக்கும். நீங்கள் உறுதியாக இருந்தால் வழிக்கு வரும். எதையும் கேட்டுச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

குழந்தைகள் தவறு செய்யும் நிலையில் கண்டிக்கலாமா? அடிக்கலாமா?

கண்டித்தே ஆக வேண்டும். ஆனால் கண்டிக்கும் அணுகுமுறையில்தான் நாம் தவறு செய்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் Negative Communication செய்கிறோம். பாலைக் கொட்டிவிட்டால் "ஏய் சனியனே நீ எதுக்கு அதைப் போய் தொட்டாய்' என்று எரிந்து விழுவதற்குப் பதிலாக "பால் கொட்டிருச்சா, சரி பரவாயில்லை, இனி பார்த்து, கவனமாக இருக்கனும் சரியா, என்று கனிவு கலந்த கண்டிப்போடு சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை பாலை எடுக்கும்போது குழந்தை கவனமாக எடுக்கும். எதையும் பாசிட்டிவாக அணுகுங்கள். தவறை உணர வைக்க (realise) வேண்டும். அதைவிட்டு கத்துவதால் எந்தப் பலனும் இல்லை.

அடம் பிடிக்கும் குழந்தையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

குழந்தை அடம் பிடித்தால் நம்மில் பெரும்பாலோர் அடித்து, உதைத்து நம் வீர - தீரத்தைக் காட்டுகிறோம். சரி, அடிக்காவிட்டால் குழந்தை அடங்குமா என்று கேட்பீர்கள். "சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் நாம் சொல்வதை குழந்தை கேட்கும். கஷ்டப்பட்டால்தான் நாம் எதையும் அடைய முடியும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு உணர்த்துங்கள்.

100 ரூபாய் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரியவையுங்கள். நமது வாங்கும் சக்தி இவ்வளவுதான். நமது எல்லை எதுவரை என்பதை குழந்தை தெரிந்துகொள்ளவேண்டும். சில நேரங்களில் அடிப்பதுபோல் மிரட்டவேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த நிமிஷத்திலேயே அன்பாகப் பேசி, அரவணைத்து, இப்படிச் செய்யலாமா? என்று பேசி தவறை உணரவைக்கவேண்டும்.
பொத்தி பொத்தி வளர்ப்பது (Over Protection) சரியா?

இந்தப் போட்டி மிகுந்த உலகத்தை எதிர்கொள்ளும் ஆளுமை, தைரியம் குழந்தைக்கு வேண்டும். என் குழந்தையை சின்ன வேலையைக் கூட செய்ய விட்டதில்லை. அவனுக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்று பெருமை பேசும் அம்மாக்கள் உண்டு. பொத்திப் பொத்தி வளர்ப்பதால் வளர்ந்த பிறகு தனித்தன்மையோடு செயல்படும் திறன் இருக்காது. குழந்தைக்கு எல்லாவற்றையும் பழக்குங்கள். அவன் வேலையை அவனே செய்ய அனுமதியுங்கள். அப்படிச் செய்ய சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் எதிர்கால போராட்டங்களைச் சந்திக்கும் மனபக்குவம் வளரும்.

நன்றாகப் படிப்பதில்லையே?

படிப்பு என்றாலே வேப்பங்காயாகக் கசக்கிறது. எங்களுக்காகப் படிக்கிறான். ஆனா அவனுக்கு ஆர்வமே இல்லை என்பது பல பெற்றோரின் புகார். அவனைப் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. புத்தகத்தை எடுத்தாலே அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. படிப்புன்னா வேப்பங்காயா கசக்கிறது. இது பெற்றோர் பலரின் புலம்பல்.

குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெரிய கலை. பள்ளியில் இருந்து வந்தவுடன் குழந்தைகளிடம் பாசமாகப் பேசி இளைபாற விடுங்ள். விளையாட்டு போன்ற மனதுக்குச் சந்தோஷமான செயல்களில் ஈடுபட அனுமதியுங்கள். இயந்திரத்தனமாகச் செய்வதால்தான் சுமுகமான சூழ்நிலை மாறி படிப்பு கசப்பாகிவிடுகிறது. குழந்தை முரட்டுத்தனமாக செயல்படுவதற்கு இதுதான் காரணம்.

முதலில் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உனக்கு என்ன கஷ்டம் என்று அமைதியாகக் கேளுங்கள். அவனது பேச்சுக்கும் காது கொடுங்கள். கண்ணா படிப்புதான் உனக்கு வசதிகளை வாங்கித் தரும் என்று உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தை 50 மதிப்பெண் வாங்கியிருந்தால். பரவாயில்லடா கண்ணா 50 மார்க் வாங்கி பாஸ் செய்திருக்க, அடுத்த முறை 80 மார்க் வாங்கனும், உன்னால முடியும். "படிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சினை' என்று கனிவோடு அணுகுங்கள்.

குழந்தையின் சின்ன, சின்ன வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை ஏதாவது படம் வரைந்தால் அதைப் பாராட்டுவதை விட்டு சனியன் படிக்க துப்பு இல்லை, படம் வரையறான் என்று திட்டி குழந்தையின் திறமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள். எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதில் அவன் திறமையை வளர்ப்பதற்கு உதவுங்கள்.

என் மகன் டாக்டராக வேண்டும் என்று நினைப்பதில் தவறு என்ன?

நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக வேண்டும் என்று அவன் விரும்பினால் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவனை டாக்டராக்கிக் காட்டுங்கள். அவன் விளையாட்டு வீரராக வேண்டும், இசைக் கலைஞர் ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தடை போடாதீர்கள்.

ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பதில் குறைபாடுகள் (learning disability) இருக்கும். அதைச் சரி செய்யுங்கள். எதில் திறமை உள்ளது எனக் கண்டறிந்து அதில் "நம்பர் ஒன்' ஆக்குங்கள். அதைவிடுத்து அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும்.

நமது குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகள் உண்டு என்பதை பெற்றோர் உணரவேண்டும். அட நாங்க என்ன, அவனுக்குக் கெடுதலா பண்ணப்போறோம் என்று பல பெற்றோர் சொல்கின்றனர்.

நிச்சயமாக எந்தப் பெற்றோரும் குழந்தைக்குக் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. குழந்தையின் அறிவாற்றல், இயல்பான திறமை, அவனது விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப பாதை அமைத்துக் கொடுங்கள். நிச்சயமாக சாதித்துக் காட்டுவான். இதில் தவறு செய்யும்போதுதான் பல குழந்தைகள் சரியாகப் படிக்காமல் போய்விடுகின்றனர்.

குழந்தை சரியாக படிக்காத நிலையில் பெற்றோர் அதிருப்தி அடைந்து வெறுப்பைக் காண்பிக்கின்றனர். பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்உங்கள் குழந்தையை நீங்கள் எப்படி வளர்க்கிறீர்கள்? நீங்களே தெரிந்துகொள்ள இதோ ஒரு பரீட்சை - கீழே உள்ள கேள்விகளுக்கு நான்கு வகையான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதோ அந்தப் பதிலை டிக் செய்யவும்.

கேள்விகள்

o. எப்பொழுதும் இல்லை o. சில நேரங்களில் o. அடிக்கடி o. எப்பொழுதும்
1. குழந்தை கேட்பதையெல்லாம் நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்களா?

2. உங்கள் குழந்தையை மிகவும் பொக்கிஷம்போல் (Possessive) வளர்க்கிறீர்களா?

3. குழந்தைகளின் அன்றாடக் காரியங்களை (குளிப்பது, ஆடை அணிவது, சாப்பிடுவது, ஷூ போடுவது போன்றவை) அவர்களே செய்து அனுமதிப்பீர்களா?

4. குழந்தை அழுது அடம்பிடித்தால் உடன் பணிந்துவிடுவீர்களா?

5. குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவீர்களா?

6. குழந்தைகளைத் தனித்துச் செயல்படவிடுவீர்களா (அருகில் உள்ள கடைக்குச் செல்வது போன்றவை)?

7. குழந்தைகளுக்கு வேண்டிய பொருள்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்குவதில் அவர்களின் விருப்பத்துக்கேற்ப செய்வீர்களா?

8. உங்கள் குழந்தையை இடம், பொருள், காலம் அறிந்து செயல்பட எடுத்துச் சொல்வீர்களா?

9. குழந்தையின் முன் நீங்கள் இருவரும் (தாய், தந்தை) சண்டை போட்டுக் கொள்வீர்களா?

10. தாய் பற்றி தந்தையோ, தந்தை பற்றி தாயோ குழந்தை முன் குறை கூறிப் பேசுவீர்களா?

11. டி.வி. பார்ப்பது, கதைப் புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிடுவீர்களா?

12. உங்கள் குழந்தைகளின் செயல்களை சந்தேக நோக்குடன் பார்ப்பீர்களா?

13. குழந்தைகளுக்கு வேண்டியவற்றைச் செய்துவிட்டு, வாங்கி கொடுத்துவிட்டு சொல்லிக்காட்டுவீர்களா?

14. உங்கள் குழந்தைக்கு அவர்கள் விரும்பும் வகையில் அன்பு, பாசம் காட்டுவீர்களா?

15. சகோதர, சகோதரியைப் பாராட்டி குழந்தையைக் குறை கூறுவீர்களா?

16. குழந்தையின் சிறிய தவறைப் பெரிதுபடுத்திப் பேசுவீர்களா?

17. நாம் கஷ்டப்பட்டாலும் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்று கருதி சக்திக்கு மீறி செய்வீர்களா?

18. குழந்தைகள் தங்கள் பிரச்சினைகளை, தேவைகளைச் சொல்லும்போது காது கொடுத்து அமைதியாகக் கேட்பீர்களா?

19. உங்கள் இருவரிடையே (தாய் - தந்தை) உள்ள மன வேற்றுமைகளை குழந்தை முன் காட்டுவீர்களா?

20. குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்து அவர்களைக் கண்காணிப்பீர்களா?

21. உங்களுடைய பதற்றம், பரபரப்பு, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளைக் குழந்தை மீது காட்டுவீர்களா?

22. குழந்தைகளிடம் குடும்பப் பிரச்சினைகளைக் கலந்து பேசுவீர்களா?

23. குழந்தைகளுக்கு சிறிய, சிறிய பொறுப்புகளைக் கொடுப்பீர்களா?

24. குழந்தையை பாராட்டும் நேரத்தில் பாராட்டி, கண்டிக்கும் நேரத்தில் கண்டிப்பீர்களா?

25. குழந்தைகளிடம் அன்பு, கண்டிப்பு, பாசம் காட்டிப் பழகுவீர்களா?



நீங்கள் நல்ல பெற்றோரா என்ற புதிருக்கான விடை

நீங்கள் டிக் செய்துள்ள எண்களை கூட்டி மொத்தத் தொகை என்ன என்று பாருங்கள். உங்கள் மதிப்பீடு 58-க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தை விரும்பும் பெற்றோர்.

உங்கள் மதிப்பீடு 58-க்கும் அதிகமாக இருந்தால் குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் சில மாற்றங்கள் செய்துகொள்ளவேண்டும். அதாவது குழந்தைகளைக் கண்டிக்க வேண்டும். ஆனால் அன்பு, பாசம் காட்டி கனிவோடு கண்டிக்கவேண்டும். பாராட்ட வேண்டிய விஷயங்களுக்கு குழந்தையைத் தக்க நேரத்தில் பாராட்டவேண்டும்.

தன் காரியங்களை (உதாரணம்: சாப்பிடுதல், ஆடை அணிதல் போன்றவை) குழந்தையே செய்ய பழக்கவேண்டும். குழந்தைகளைப் பொத்தி பொத்தி (over protection) வளர்க்கக் கூடாது.

படிப்பில் பிரச்சினையா?

குழந்தை 51-க்குப் பதிலாக 15 என்று எழுதிவிட்டால், "மக்கு, படிப்பிலே கவனமே இல்லை' - எப்பவும் டிவி பார்த்துகிட்டு, கார்ட்டூன் பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி கவனம் இருக்கும் என்று பலர் திட்டித் தீர்க்கிறோம். சிலர் கோபத்தில் அடித்து, உதைத்து அக் குழந்தைக்கு படிப்பு என்றாலே வெறுப்பு ஏற்படும் அளவுக்கு நடந்துகொள்வார்கள். இது சரியல்ல. இதனால் குழந்தையின் படிப்புத் திறன் மேலும் பாதிக்கப்பட்டு அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் ஆபத்து உள்ளது.

இதை கற்றலில் குறை (learning difficulty) என்கிறோம். இக் குறையுள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அறிவுத்திறன், சிந்திக்கும் திறன் எல்லாம் நன்றாக இருக்கும். சிறு சிறு குறைகளால் தவறு செய்வார்கள்.

"படிப்பில் அதிகக் கவனம் செலுத்துவதே இல்லை; படித்த அனைத்தையும் உடனே மறந்துவிடுகிறான். அதிக எழுத்துப் பிழைகள், கல்வியில் சரிவரத் தேர்ச்சிஅடைய முடிவதில்லை, படிப்பைத் தவிர மற்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறான்' எனப் பெரும்பாலான பெற்றோர் புலம்புகின்றனர்.
மேற்கூறிய அனைத்தும் கற்றலில் உள்ள குறைபாட்டால் ஏற்படுவது அல்லது கற்கும் திறனில் உள்ள இயலாமையைக் குறிக்கும்.

கற்றலில் குறை (Learning Difficulty) என்றால் என்ன?
o படிப்பதிலும் எழுதுவதிலும், உச்சரிப்பிலும் மற்றும் கணிதம் போன்றவற்றை கற்பதிலும் ஏற்படும் குறைகளையே கற்றலில் உள்ள குறைபாடு என்கிறோம்.

o கற்கும் திறனில் உள்ள இயலாமைகளுக்கு மூளையில் ஏற்படும் ஒரு சில நரம்பியல் செயல் மாற்றங்களின் நிகழ்வே ஆகும்.
o இது ஒரு குறைபாடு - நோய் அல்ல.ஊ குறைந்த மதிப்பெண்கள், எழுதுவதில் ஏற்படும் பிழைகள், எழுதுவதில் தாமதம் போன்றவற்றில் இக் குறை தெரியவரும்.

o ஒரு குழந்தையின் இயலாமை மற்றும் அதன் பாதிப்பின் அளவை நரம்பியல் மருத்துவ உளவியல் சோதனை (Neurophysichological Assessment) மூலம் தெரிந்துகொள்ள இயலும். சிறப்புப் பயிற்சி முறைகள் மூலமே இக் குறைபாட்டை நீக்க முடியும்.
சிறப்புப் பயிற்சி முறைகள்: இது டியூஷன் வகுப்பு அல்ல.

1. மொழியின் அடிப்படை எழுத்து வரிசைகளைக் கற்றுக் கொடுத்தல்.

2. சொற்களின் உச்சரிப்பு முறைகளை கற்றுக்கொடுத்தல்

3. எண்களின் வரிசைககளைக் கற்றுக் கொடுத்தல்

4. கணிதத்தில் உள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றின் வழிமுறைகளைக் கற்றுக் தருதல்.

5. பெருக்கல் வாய்ப்பாடு கற்றுத் தருதல்.

6. எழுத்து - எண்வரிசை, வழிமுறை - எண்களைப் படிக்கவும் எழுத்து முறையில் எழுதவும் கற்றுக் கொடுத்தல்.

7. எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தல். ஆங்கிலப் பாடத்தில் கேபிட்டல் (Capital) ஸ்மால் (Small) எழுத்துகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுதல். சில குழந்தைகள் க்ஷ -க்குப் பதிலாக க் என்று எழுதுவார்கள். அதாவது ball என்பதற்குப் பதிலாக dall என்று எழுதுவார்கள். அதுபோல் ல் -க்குப் பதிலாக வ், த்-க்கு பதிலாக ண் என்று எழுதுவார்கள். அதுபோல் Pencil என்பதற்குப் என்பதற்குப் பதிலாக Pencile என்று எழுதுவார்கள். Happily என்பதற்குப் பதில் Happly. இதுபோன்ற எழுத்துப்பிழைகள் இருக்கும். அதுபோல் படிக்கும் போது was என்பதை saw எனப் படிப்பார்கள்.

தமிழ்: மாம்பழம் என்பதை "மாம்பலம்' என்றும் பள்ளிக் கூடம் என்பதை "பல்லிக்குடம்' என்றும் கண்ணாடி என்பதை "கன்னடி' என்றும் மந்திரம் என்பதை "மண்திரம்' என்றும் எழுதுவார்கள். இதுபோன்ற எழுத்துப் பிழைகளை வாக்கியம் எழுதும்போது பார்க்கலாம்.

சிலர் எழுத்தைத் தலைகீழாக எழுதுவார்கள்.

கணக்கு: கணக்கை எடுத்துக்கொண்டால் 39 உடன் 3-ஐ கூட்டச் சொன்னால், 9-ஐயும் 3-ஐயும் கூட்டி கீழே 12 என்று எழுதிவிட்டு, 12-க்கு முன்பு 3-ஐயும் போட்டு, "312' எனத் தவறாக எழுதிவிடுவார்கள். இதுபோல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாவற்றிலும் பிரச்சினை வரும். இக் குறைகளை உரிய பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம்.

குழந்தை எப்போது நடக்கும்?

o குழந்தை பிறந்து முதல் மூன்று மாதங்களில் கைகளை ஊன்றும்; தலையைத் தூக்கும்.
o பிறந்து நான்கு மாதங்களுக்குள் கழுத்து நிற்கும். குழந்தையைப் படுக்க வைத்து மேலே நேராகப் பொம்மையை அசைத்து தாய் பயிற்சி அளித்தால் கழுத்து நிற்க ஆரம்பித்து விடும்.

o பிறந்து 6 மாதம் ஆனவுடன் பிறர் உதவியுடன் குழந்தை உட்காரும். தலையை நிமிர்த்தும்; முதுகு நேராகும்.
o பிறந்து 8 மாதம் ஆனவுடன் பிறர் உதவியின்றி உட்காரும்; கைகளை நீட்டிப் பொருள்களை எடுக்கும்.

o ஒரு வயது ஆனவுடன் எதையாவது பற்றிக்கொண்டு நிற்கும்.ஊ ஒரு வயது மூன்று மாதம் ஆவதற்குள் பிறர் உதவியின்றி எழுந்து நடக்கத் தொடங்கி விடும்.

o குழந்தையின் கால்கள் பின்னிப் பிணைந்திருந்தால் அடிக்கடி இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

லேபிள்கள்:

நேரத்தின் முக்கியத்துவம்

நேரத்தின் அருமை நமக்குத் தெரியவேண்டுமானால் வாழ்க்கையில் சிலரைச் சந்திக்க வேண்டும. ஓர் ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்கவேண்டும். அவன் கத்துவான், கதறுவான் ஒரு சிறு கவனக் குறைவால் மீண்டும் படித்த பாடங்களையே ஆண்டு முழுக்கப் படிப்பது எவ்வளவு பெரிய கசப்பு என்று!

ஒரு மாதத்தில் அருமையை உணர வேண்டுமானால் குறைப் பிரவசமாகக் குழந்தை பெற்ற தாய்மார்களைக் கேட்கவேண்டும்.

குறைப் பிரசவக் குழந்தைகளைத்தான் காப்பாற்றுவதில் எவ்வளவு இடர்பாடுகள்! சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் குறைப்பிரசவக் குழந்தையைப் பராமரிக்கச் சராசரியாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள. ஓரிரு மாதங்கள் தள்ளிப் பிறந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு வாரத்தின் அருமையை உணர வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைக் கேட்கவேண்டும்.

ஒரு நாளின் அருமையை உணரத் தினக்கூலிகள், அன்றாடங் காய்ச்சிகள், சாலையோர நடைபாதைக் கடைக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகளைக் கேட்க வேண்டும். -பந்த்- என்கிற பெயரால் தேவையில்லாமல் கதவை இழுத்துச் சாத்துகிற வியாதி இங்கே மிக அதிகம். அனைத்தும் செயல்படாமல் போகின்றபோது கூடவே வருமானமும் போய்விடுகிறது. வியாபாரத்தை வைத்தும் அன்றன்று கிடைக்கிற கூலியை வைத்தும் பிழைக்கிறவர்கள், பந்த் நாட்களில் வயிற்றில் ஈரத் துணியைப்போட்டுக்கொள்ள வேண்டியது தான். இவர்களைக் கேளுங்கள், ஒரு நாளின் அருமையைப்பற்றி விலாவாரியாகச் சொல்வார்கள்.

ஒரு மணி நேரத்தின் அருமையை உணரவேண்டுமா? மருத்தவரைக் கேளுங்கள். இவர்கள் சொல்வார்கள் -சற்றுமுன்பாக அழைத்து வந்திருந்தால் இந்த உயிரை நான் காப்பாற்றியிருப்பேன்- என்று. விபத்தில் சிக்கியவர்களை விபத்து நடந்த நேரம் முதல் மருத்துவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வரை இருக்கிற நேரத்தை ஆங்கிலத்தில்"GOLDEN HOUR" என்று அழைக்கும் வழக்கு மருத்துவ உலகில் உண்டு. இந்த தங்க நேரத்துக்குள் அடிபட்டவரைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாமல் போனதால் எத்தனையோ பேர் தங்களது இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.
ஒரு நிமிடத்தின் அருமையை உணர, புகையிரதத்தை கோட்டை விட்டார்கள் அல்லவா, அவர்களைக் கேளுங்கள். இப்பத்தான் சார் வந்தேன். அதற்குள் அது புறப்பட்டுவிட்டது’ என்பார்கள் பரிதாபமாக. இரயிலின் கடைசிப் பெட்டியைப் பார்த்து பரிதாபமாக ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

ஒரு விநாடியின் அருமையை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தைச் சந்தித்தவர்களைக் கேட்கவேண்டும். -இப்படித்திரும்பிப் பார்ப்பதற்குள் என்னை அடிச்சுத் தூக்கிட்டான்;! என்பார்கள். சிலர் இதைச் சொல்வதற்குக் கூட இருக்கமாட்டார்கள் போய்ச் சேர்ந்து விடுவார்கள்.!

மில்லி செக்கண்ட் என்று ஒரு அளவு உண்டு. பலருக்கு இதைப் பற்றித் தெரியாது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலைமையிலும் இவர்கள் இல்லை. அண்மையில் ஆசியத் தடகளத்தில் ஜேதிர்மாயி தங்கம் வென்றது விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில் தான; பி. டி. உசா நாலாவது ஓடி வந்ததும் விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில்தான். எண்ணிப் பாருங்கள் 4 ஆண்டுகள் பயிற்சி செய்து இப்படிச்சுண்டுகிற நேரத்தின் ஒரு பகுதியில் தங்கப் பதக்கத்தை இழந்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். !
என்ன, லேனா உதாரணமாக அடுக்கிக் கொண்டே போகிறாரே என்று பார்க்கிறீர்காளா? இன்னும் கூட ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் மைக்ரோ செக்கண்ட். இந்தக் குறைந்த நேரத்தில் அமெரிக்காவில் இருக்கிற ஒரு சூப்பர் கம்பியூட்டர் ஒருகோடியே 60 இலட்சம் கணக்குகளைப் போட்டு முடித்துவிடுகிறது. இனிமேல் எந்த ஒரு நேர அளவீட்டையும் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க நாம் கற்றுக்கொண்டுவிட்டால் நம்மை மிஞ்ச வேறு ஆள் கிடையாது.

லேபிள்கள்:

டீன் ஏஜ் பிரச்சினை

பெரும்பாலும் நான் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன.

நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள்.

இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.]

இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்கள்-சிறியவர்கள், பெண்கள்-ஆண்கள், திருமணம் ஆனவர்கள் - ஆகாதவர்கள், ஏழைகள் - பணக்காரர்கள், படித்தவர்கள் - படிக்காதவர்கள், வேலைக்கு செல்பவர்கள் -சுயதொழில் செய்பவர்கள் என எல்லோரையும் இந்த பிரச்சினை என்னும் பெரும்பூதம் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.

இதில் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே! அதிலும் குறிப்பாக விடலைப்பருவம் என்று சொல்லக்கூடிய பருவ வயதுகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லி மாளாதவை.

விடலைப்பருவம் என்பது மகிழ்ச்சியும், பரவசமும் கலந்த உன்னதமான பருவம் என்றாலும், உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இந்தக் காலத்தில் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் என எல்லாவற்றிலுமே மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு கூச்சமடைவதுடன், ஒருவிதமான பயமும், தயக்கமும் அவர்களை ஆட்கொள்கின்றன.

பூப்படைதல், முகப்பரு, மாதவிடாய் பிரச்சினைகள், களைப்பு, உடல் பருமன் போன்ற உடலியல் ரீதியான மாற்றங்களில் ஏராளமான சந்தேகங்கள் வந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கம் இல்லாமல் பேச, ஒரு விசேஷ வழிகாட்டி தேவைப்படும் பருவமிது. இந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

இந்த நிலையில்தான் தீய நண்பர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்களின் தவறான விளம்பரங்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.

பெரும்பாலும் நான் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன.

நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள். இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

இந்தப் பருவத்தில் தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொண்டாலே போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத் தப்பிக்கலாம்.

பெரும்பாலான பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. அதிலும் குறிப்பாக டீன்ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் ‘ஸ்லிம்‘மாக இருந்தால்தான் அழகு என நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை, அதிகப்படியான சோர்வு போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக படிப்பில் நாட்டம் குறைவதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. தொடர்ச்சியான இந்த தாழ்வு மனப்பான்மையால் மன அழுத்தம் உண்டாகி தனிமையை நாடுகின்றனர். எனவே சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு அழகாய்த் தோன்றும் ஒன்று, மற்றவருக்கு அழகற்றதாய் தெரியலாம். எனவே அழகு என்பது நம்மிடம் இல்லை, பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை இவர்களே தானாக வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு ஹார்மோன் கோளாறு, உணவுப்பற்றாக்குறை... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

சிலருக்கு வளர்ச்சி தள்ளிப் போவதும் உண்டு. இவர்கள் சில வருடங்கள் சென்றபின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி உயரத்தை அடைவர். இது தெரியாமல் அவர்கள் மனக்குழப்பங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை வீணாக்குகின்றனர். எனவே ஒருவருக்கு அழகு மட்டும் முக்கியமல்ல. அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என்பதை உணர வைக்க வேண்டும்.

பருவ வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள் அது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம்.

உடல் மாற்றங்கள், பழக்க வழக்கங்கள், சமூக, கலாச்சார மாறுதல்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுதந்திரமாக பேச வேண்டும். இவ்வாறு பேசுவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தயங்குகிறார்கள்.

நாமும் பருவ வயதுகளில் கண்ணாடி முன்னால் நின்று நம்மை ரசிப்பதிலேயே பாதி நேரத்தை செலவிட்டவர்கள் தானே! என்பதை நினைத்துப் பாருங்கள். தயக்கம் தானாகவே ஓடிவிடும்.

லேபிள்கள்:

குறைவாகப் பேசுபவர்கள்

குறைவாகப் பேசுபவர்கள் மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். மூடிமறைத்தாற்போல் உரையாடினால்தான் உங்கள்மேல் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். அதிகமாகப் பேசப்பேச, ஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும்.
"உன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாயைத் திறக்குமுன் நீ வாயைத்திறவாதே. நீ எவ்வளவு நேரம் உன் உதடுகளையும் நாவையும் கட்டி வைத்திருக்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் மற்றவர்கள் தம் வாயைத் திறந்து பேசத் தொடங்கி விடுவர். பிறகு அவர்களின் மனத்தை நீங்கள் முழுமையாகப் படித்து அறியலாம். ஆள்பவன் எப்பொதும் ஒரு புரியாத புதிராகவே இருக்க வேண்டும்." - சீன அறிஞர் ஹன் ஃபை சூ]

நான் பிறருடன் உரையாடும்போது அளவுக்கதிகமாகப் பேசுகிறேனோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், "இனிமேல் குறைவாகப் பேசவேண்டும்" என்று முடிவு செய்து கொண்டாலும், அடுத்த முறை என்னையறியாமல் நிறையப் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறு செய்வதாக என் உள்மனம் உறுத்துகிறது. இது ஒரு குறையா? அப்படியானால் இதனைப் போக்க என்ன செய்வது?

நம்மில் பலர் உரையாடும்போது அநாவசியமாக நீண்ட நெடிய விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள்தான். அடிக்கடி எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்ற உந்துதலும் இதனால் ஏற்படுகின்றது என்பர் (நீரிழிவு தவிர இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்).


அளவுக்கதிகமாகப் பேசுவது கண்டிப்பாக ஒரு குறைதான். ஆனால் எது அளவு? எந்த அளவுகோலைக் கொண்டு அதை நிர்ணயிப்பது என்ற கேள்வி நியாயமானது. மேடைப் பேச்சென்றால் "இன்னும் கொஞ்சம் பேசமாட்டானா" என்று பிறர் நினைக்கும் நேரத்தில் முடிக்க வேண்டும் என்பர். அதுபோல் பொதுவாக எப்போதுமே நிறையப் பேசினால் நம் கூற்று மட்டுமில்லாது நம் ஆளுமையும் நீர்த்துப் போகும் அபாயம் இருக்கிறது. நம் இமேஜ் மிகச் சாதாரணத் தோற்றம் கொண்டுவிடும்.

இதுதவிர, நம் பேச்சு செல்லும் திசையும் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஏதேதோ பேசி வம்பில் கொண்டுவிடும் ஆபத்தும் இருக்கிறது. சூழ்நிலையும் நம் கையின் ஆளுமையில் நிற்காது. நாம் சொல்வது மிகச் சாதாரணமானதாக, எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக, ஊடகங்களில் அடிக்கடி தென்படுவதாக இருந்தாலும் கூட, அதனை நீங்கள் பூடகமாக, "எல்லாம் தெரிந்த தோரணையில்", மிகக் குறைந்த சொற்களில், அர்த்தம் தொக்கி நிற்கும்படியாக உரைத்தீர்களானால், அது மிக முக்கியத்துடன் பிறரால் உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

குறைவாகப் பேசுபவர்கள் மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். மூடிமறைத்தாற்போல் உரையாடினால்தான் உங்கள்மேல் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். அதிகமாகப் பேசப்பேச, ஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும். ஒவ்வொரு சொல்லும் நம் முழுக் கட்டுப்பாட்டுடனும், நம் சிந்தனை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டும் வந்து விழவேண்டும். அது பாட்டுக்கு லீக்கான குழாய்போல கொட்டக் கூடாது. நாம் சொல்வது சரிதான் என்கிற நம்பிக்கை நமக்கு முழுமையாக இருக்கும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் நிரூபணங்கள் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

நீங்கள் எப்போதும் ஒரு "மூடிய கை" யாகத் தோன்றவேண்டும். எல்லாவற்றையும் எல்லோருக்கும் உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அத்தியாவசியத் தேவையிருந்தாலொழிய விளக்கங்கள் அளிக்கக் கூடாது. திரு. எஸ்.எஸ். இராஜேந்திரன் ஒரு திரைப்படத்தில் "நான் எல்லாத்தையும் ஒடைச்சுத்தான் சொல்லுவேன்" என்று பேசும் ஒரு யதார்த்தவாதியாக வந்து மிகுந்த அல்லல் படுவார். அதற்கு அவருடைய மனைவி, "ஒடைச்சு சொல்லுங்க.பரவாயில்லை. அதுக்காக இப்படி சுக்குநூறா ஒடைக்கணுமா" என்பார்.

நாம் உரையாடும்போது அடுத்தவர் நம்மை எப்போதும் அளவெடுத்துக் கொண்டேயிருப்பர். நம் மனத்தினுள்ளே புகுந்து நம் எண்ணங்களை அகழ்வாராய்ச்சி செய்ய முற்படுவர். நம் எண்ண ஓட்டங்கள் பிறரால் முழுமையாகக் கணிக்கப்படுமேயானால், நம் மேல் அவர்களின் ஆதிக்கம் ஏற்படும். பவர் அவர்கள் கைக்கு ஏறிவிடும். அதனால் பொருள்பொதிந்த சொற்கள் சிலவற்றைப் பேசிவிட்டு நிறுத்திவிட வேண்டும்.

"இந்த ஆள் என்ன நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்கிறானோ தெரியவில்லையே" என்று அவனவன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும். நாம் கூறிய ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் நினைத்து ஆராய்ச்சி செய்யச் செய்ய நம் ஆளுமை கூடிக் கொண்டே போகும். சொற்கள் குறைவாகவும் மௌனம் அதிகமாகவும் இருந்தால் பிறரை ஒரு தடுமாற்ற நிலையிலேயே வைக்கலாம். அப்போதுதான் நம் வேலைகளை சுலபமாக சாதித்துக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு நன்மையும் உள்ளது. நாம் குறைவாகப் பேசி மௌனத்தைக் கடைப்பிடிக்கும்போது ஏனையோர் தங்கள் பேச்சினால் இட்டு நிரப்பத்தலைப்படுவர். இன்னும் சிலர் தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க இன்னும் அதிகமாகப் பேசுவர். அவர்கள் அந்தத் தவற்றை செய்யச் செய்ய அவர்கள்பால் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.

இதுபோல் உங்களால் பேசப்பட்ட (சிறிது மர்மம் கலந்த) "தொக்கி நிற்கும்" சொற்கள் பலரால் "பாஷ்யம்" எழுதப் பட்டு, பலரால் அவை சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் மக்கள் மனதில் உங்களப் பற்றிய ஒரு மரியாதை கூடும். பிகாஸோவின் ஓவியங்கள்போல் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலாதவைகளுக்குத்தான் மனித குலம் மதிப்புக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன அறிஞர் ஹன் ஃபை சூ இவ்வாறு கூறுகிறார்:

"உன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாயைத் திறக்குமுன் நீ வாயைத்திறவாதே. நீ எவ்வளவு நேரம் உன் உதடுகளையும் நாவையும் கட்டி வைத்திருக்கிறாயோ, அவ்வளவு சீக்கிறம் மற்றவர்கள் தம் வாயைத் திறந்து பேசத் தொடங்கி விடுவர். பிறகு அவர்களின் மனத்தை நீங்கள் முழுமையாகப் படித்து அறியலாம். ஆள்பவன் எப்பொதும் ஒரு புரியாத புதிராகவே இருக்க வேண்டும்."

மோனாலிஸா புன்னகை இவ்வளவு தூரம் எல்லோராலும் பேசப்படும் காரணம் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். முன்பு சீனத்தின் சர்வாதிகாரியாக இருந்த மாவோ இந்திய தூதரைப் பார்த்து ஒரு அரை மில்லி மீட்டர் சிரிப்பதுபோல் உதட்டைச் சுழித்தார் என்று பத்திரிகைகள் பக்கம்பக்கமாக "இதன் பொருள் மற்றும் வீச்சு சர்வதேச அரசியலில் என்னவாயிருக்கும்" என்று ஹேஷ்யங்களை வெளியிட்டவண்ணம் இருந்தது பலருக்கு நினைவிருக்கும்.

முழுநிலவன்று சிப்பிகள் தங்கள் வாயை அகலத் திறக்கும். அச்சமயம் பார்த்து பெரு நண்டுகள் அவற்றின் வாய்க்குள் ஒரு கல்லைப் போட்டுவிடும். பிறகென்ன? சிப்பியால் தன் வாயை மூட முடியாது. அது அந்த நண்டின் டைனிங் டேபிளுக்கு செல்ல வேண்டியதுதான்!

மனிதர்கள் தன் வாயைத் திறந்து பேசிக் கொண்டேயிருந்தால், வாயில் அல்ல, அவர்தம் தலையில் கல்லைப் போட பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, பொருக்கியெடுத்த முத்துக்களாக நம் சொற்கள் வெளிப்பட நாம் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறர் நம் மனத்தை ஆள்வதிலிருந்துதப்பிக்கலாம். நாமும் இவ்வகிலத்தை ஆளலாம்

லேபிள்கள்:

வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்

வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்; உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு. மனிதன் மகத்தானவனாகாக ஆக்கும் முயற்சி தான் வாழ்க்கை!

o மனித வாழ்வில் ஏராளமான பிரச்னைகள் நம்மை தினந்தோறும் மோதுகின்றன. நாம் வாழ்வில் நமக்கு நிகழும் சோதனைகளையும், நம் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களையும் யோசித்துப் பார்த்தோமானால், பல சமயம் நமக்குத் தோல்வியும், ஏமாற்றமும், துன்பங்களும் தான் வருகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் நாம் எடுத்த முடிவுதான் என்பது புரியவரும்.

o சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி வாழ்வில் தான் எத்தனை, எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன!

o நமது குழந்தைகளுடனும், மனைவியுடனும் பெற்றோருடனும் இசைபட வாழ்தல், இணைந்து அனுசரித்து பெருமையுடன் வாழ்வது இருக்கிறதே... அதுவும் ஊருக்கு உதவியாக இருப்பதும்தான் பெரிய பாக்கியம்"


o இல்லாதவர்களுக்கு கொடுப்பதில், உதவுவதில் தான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. உலகுடனும், இந்த பிரபஞ்சத்துடனும் இசைபட வாழ்வது இருக்கிறதே... அது, எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆனந்தம்.

o பிறர் பாராட்டையும், ஆமோதிப்பையும், அங்கீகாரத்தையும் பற்றி லட்சியம் செய்யாமல் நாம் நம் பணியில், கொள்கையில் ஈடுபடுவோமானால், பாராட்டும், புகழும் பூனை வால் போல் நம்மைத் தொடர்ந்து வரும்.


o வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு முக்கியமான குணம் - அதிகம் அலசி ஆராயப்படாதது ஒன்று இருக்கிறதென்றால் அது சுயகட்டுப்பாடு தான். வாழ்வில் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் தான் வெற்றி அடைகின்றனர். நம்மை நாமே ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், புற சூழ்நிலையையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.

o பலகீன மனம் மனிதர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது; ‘ வாழ்க்கையே வேண்டாம், உலகமே வேண்டாம்!’ என்று தீர்மானிக்கச் செய்து உயிரையே போக்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது. பிரச்னைகள் நமக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுக்கக்கூடும். நாம் அவதிப்படுவோம். இது உலகில் நிரந்தரமானது.

இதை எப்படி சமாளிக்கலாம் என்று தீர்மானிக்கத் துவங்கினோமானால் நிச்சயமாக நமது மனமே நமக்கு ஒரு வழியைக் காட்டும்.

o பயம், கோபம், பொறாமை, குற்ற உணர்வு, கவலை இவற்றைத் தாழ்த்தும் உணர்ச்சிகள் என்று கூறுகின்றனர். இந்தக் கீழ் உணர்வுகள் மனிதனது சிந்திக்கும் திறனை, சிந்திக்கும் அமைப்பை முடக்கி விடுகிறது என்று கூறு கின்றனர் மன சிகிச்சை மருத்துவர்கள். முடக்கப்பட்ட மனம் செயலற்றுப் போகிறது. முடக்கப் படுவது மட்டுமல்ல; நமக்கு நல்ல யோசனைகளையும், நம்பிக்கையையும் கொண்டு தந்து உதவக் கூடிய நமது மனதின் வாயிற்கதவை இவை சாத்திவிடுகின்றன.

o நாம் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காகச் சில திறமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறோம். நமது திறமைகளைத் தெரிந்து கொள்வோம். இந்த உலகம் முன்புபோல் இல்லை. வெகுவேகமாக மாறி வருகிறது. அதை உணர்ந்து அதற்கு ஈடு கொடுக்க நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் அது நம்மை விட்டு விட்டு, நம்மைப் பழங்குடி மக்களாக்கி விட்டுப் போய் விடும்.

o உண்மையில் சொல்லப் போனால், மாறுபட்ட மனோபாவம் கொண்டவர்களாலே தான் உலகம் முன்னேறியிருக்கிறது. உலக முன்னேற்றமே சமுதாயத்தையும், நிகழ் உலகத்தையும் எதிர்த்துப் போராடியவர் களாலேயே உருவாகி இருக்கிறது. ஏற்றுக் கொண்டவர்களால் அல்ல. இருக்கிறதை இருக்கிறபடி ஏற்றுக் கொண்டவர்கள் ஆட்டு மந்தைக் கூட்டம். சாய்கிற பக்கமே சாயும் செம்மறியாடுகள். எதிர்ப்பவர்களும், புது வழி கண்டு பிடிப்பவர்களுமே முன்னோடிகள்.

o கட்டுப்பாடு இல்லாத, நெறியில்லாத, நிதானமில்லாத வாழ்க்கை, தறிகெட்டு ஓடும் கொம்புக் காளைக்குச் சமம். அது பிறரைப் புண்படுத்துவதுடன் தன் வாழ்விற்கும் ஊறு விளைவித்துக் கொள்கிறது.

o தோல்வி வந்ததென்றால் கலங்காதீர்கள். நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்; ஆனால், தோல்விகளைத் தாண்டித்தான் போக வேண்டும், வெற்றி பெற.

o முதல் வெற்றி சிலநேரம் நமக்கு ஒரு அசாதாரண நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. " எடுத்ததெல்லாம் வெற்றியடையும் " என்ற ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. நமது ஆணவத்தை வளர்த்து விடுகிறது.

o தோல்வி ஏற்பட்டிருந்தால் ஒரு நிதானம் இருந்திருக்கும்; ஒரு பயம் - ஒரு கவனம் இருந்திருக்கும். ஒரு அடக்கம் ஏற்பட்டிருக்கும். அடக்கம், கவனம், நிதானம் - இவற்றை எல்லாம் தோல்விதான் தருகிறது. எனவேதான், தோல்வி ஒரு பாடம் என்று சொல்கின்றனர். தோல்வி நமக்கு பாடம் புகட்டுகிறது. மாறாக, வெற்றியில் நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை - சரியான பாதையில் சென்றிருக்கிறோம் என்பதைத் தவிர அந்த உண்மைகூட வெற்றி பற்றி சிந்திக்கும்போது தான் புலப்படுகிறது. நீங்கள் ஒரு எழுத்தாளர். உங்கள் கதையோ திரும்பத் திரும்பத் திருப்பி அனுப்பப்படுகிறது.


o "தோல்வியே வெற்றிக்கு முதல்படி! " என்று சொல்லும்போது, " தோல்வியைத் தழுவுங்கள்! தோல்வியை வரவேற்று மகிழுங்கள்! " என்று சொல்கிறோமா அல்லது வெற்றி பெறுவதற்கு தோல்வி அடைந்துதான் ஆக வேண்டும். எனவே, தோல்வியை எதிர் பாருங்கள்! என்று சொல்கிறோமா? இல்லை! இல்லவே இல்லை! தயவு செய்து, அப்படி எண்ணி விடாதீர்கள்!

லேபிள்கள்:

கல்வியின் தேவை

அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை.
அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்

கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி! ]

கல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்த பின் பல விவாதங்கள் உருவாகியுள்ளன. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவை இல்லை எனும் அதிரடி அறிவிப்பு முதல் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்கள் குறித்த யஷ்பால் கமிட்டி அறிக்கையின் பல பரிந்துரைகள்வரை பல முக்கியமான முடிவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

ஒரு தேசத்தின் நலன் அதன் பொருளாதார முன்னேற்றத்திலும், அவ்வாறான முன்னேற்றத்தினால் கிடைக்கும் அபரிமிதமான தேச வருமானம் எல்லா மக்களுக்கும் சென்றடையச் செய்வதிலும், அவ்வாறு வருமானம் பெற்ற மக்கள் வளமுடனும் எல்லா வசதிகளுடனும் வாழ்க்கையை நடத்திச் செல்வதிலும் அடங்கும்.

ஆனால், தேசநலன் என்பதே கல்வியினால்தான் உருவாக்கப்பட முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியுடன்கூடிய உயர்கல்வி, திறமையான பொறியாளர்கள், நிதித்துறை மற்றும் நிர்வாகத்திறன் பெற்ற மேலாளர்கள் முதல் கணினிப் பொறியாளர்கள்வரை கல்வி நிலையங்களிலிருந்து உருவாகி வரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளிகளின் உற்பத்தியை பல பள்ளிகளும், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி நிலையங்களும் செய்கின்றன

வேலைவாய்ப்புப் பெருகி மக்களிடம் வருமானம் அதிகரிக்கும்போது வளமான வாழ்க்கைத் தரம் உருவாக சுகாதாரமும் சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் மருந்தாளுநர்கள் வரை சுகாதாரக் கல்வியினால் பெற முடிகிறது.
ஒரு நாட்டின் சமூக அமைப்பும் அரசும் இரண்டறக் கலந்து கல்விக் கட்டமைப்பை உருவாக்கி மூன்று தேவைகளை எதிர்கொள்ளும்.

ஒன்று, நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் கல்வியின் பங்கேற்பு எத்தகையது என்பது பற்றியது. இந்தியா காலனி அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது பொருளாதார நடவடிக்கை என்பது நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி இங்கிலாந்திற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து, அங்கே பல பொருள்கள் பெரிய தொழிற்சாலைகளில் உருவாகி பின் அவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில் நமது மக்கள் கல்வி கற்று பெரிய தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. எனவே நிறையப் பேர் கல்வி கற்க வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. அதனால் அதிக கல்வி நிலையங்களும் கிடையாது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பென்சில்கள், அழிப்பான்கள்வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட காலம் அது. மேலும் இங்கு கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகி இந்தியர்களின் கல்வியறிவு பெருகி அறிவு முதிர்ச்சியின் காரணமாக நம் நாடு ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் கல்வி வளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது அன்னியர் ஆட்சி. உலகின் வேறு பல அடிமை நாடுகளிலும் இதுதான் நிலைமை.

இரண்டாவதாக, கல்வியின் மூலம் ஏற்படும் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்களின் தன்மையைப் பொருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உதாரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளத்திற்கு வித்திட்ட பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது நாட்டிலேயே கனரக தொழிற்சாலைகளை அரசுத் துறையில் நிறுவி பல பெரிய இயந்திரங்கள், ரயில் எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், லாரிகள், பஸ்கள், லேத் மிஷின்கள், நூற்பாலை இயந்திரங்கள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் என நூற்றுக்கணக்கான முதலீட்டு இயந்திரங்களை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தினார். இதன் விளைவு வேலைவாய்ப்பும், சிறுதொழிலும், நம் நாட்டில் பல்கிப் பெருகி உற்பத்தி வருமானம் வெளியே சென்று விடாமல் அதன் முழுப்பலனும் நம் தேசத்திற்கே கிடைத்தது.

இதுபோன்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அகில உலகிலும் வளர்ச்சி பெறாத ஏழை நாடுகளுக்கும் முன்மாதிரியாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஐ.ஐ.டி. முதல் பல தொழிற்கல்வி நிலையங்களும், பல கல்லூரிகளும் பள்ளிகளுமே ஆகும். தொழில் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்துத்தான் நமது கல்வி வளர்ச்சியின் பலன் நம்மாலேயே உருவாக்கி உபயோகப்படுத்த முடிந்தது.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக நீதி அடிப்படையில் கல்வியும் அரசின் வேலைவாய்ப்பும் சமூகத்தில் எல்லா பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் உருவாயின. பெருவாரியான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் கல்வி நிலையங்களை நாடும் சூழ்நிலை உருவாகி கிராமங்கள்தோறும் பள்ளிகளும் சிறு நகரங்களில் கல்லூரிகளும் உருவாயின.

மேலே கூறப்பட்ட மூன்று நிலைப்பாடுகளுக்கும் வித்திட்ட காலம் நேரு சகாப்தம் என மேலைநாட்டு பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் ஹடேகர், டோங்க்ரே ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நேரு சகாப்தம் எனக் கூறும் காலம் 1950 முதல் 1964 வரை. அதாவது இந்திய திட்டக்கமிஷன் உருவாகியதிலிருந்து நேரு மறைந்தது வரை. அப்போது இடப்பட்ட அடித்தளத்தில் உருவான கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு நமது நாட்டை இன்றுவரை உலகப் பொருளாதாரப் பின்னடைவு தாக்காத வகையில் பாதுகாக்கிறது எனலாம்.

இதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் கனரக இயந்திரங்களின் தயாரிப்பில் ஈடுபடாமல் பெரிய தொழிற்சாலைகளை நிறுவாமல் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தன. இதனால் இந்தியாவிற்கு கிடைத்தது போன்ற பரவலான பொருளாதார வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிரிமிதமான வளர்ச்சியும் அந்நாடுகளுக்குக் கிடைக்காமல் போயிற்று. இந்தச் சாதனையை இன்றளவும் நாம் பெருமையுடன் பேசிக்கொள்வதுடன் அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம்.

கல்வியின் முக்கியமான இரண்டு அம்சங்கள் எல்லோருக்கும் கல்வி என்பதும், தரம் வாய்ந்த கல்வி என்பதுவுமாகும். நிறைய பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்போது கல்வி விரிவாக்கம் உருவாகிறது. ஆனால், பாடத்திட்டங்களிலும், பயிற்சி முறையிலும் தரம் உயரும்போதுதான் நமது கல்வி தனது சீரிய பணியை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்க முடியும். தரமான கல்வியில் அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள நடைமுறை. ஆனால் நமது நாட்டில் அறிவும் புத்திசாலித்தனமும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.

இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நான் கலந்துகொண்டபோது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசிய ஞாபகம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் போதனை முறைகள், பரீட்சை ஆகியன அறிவு வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்வியை எடுத்து விவாதித்தோம்.

உதாரணமாக, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் விலங்கியல் பாடத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கிறான். அவனுக்கு ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் போதிக்கும் பாடங்களை மூன்று மணி நேரத்தில் ஒரு பரீட்சையில் அவன் கேள்விகளுக்கு எழுதும் விடையை வைத்து அவனைச் சோதிக்கிறது இன்றைய பரீட்சை முறை.

அதிலும் பாடம் போதித்த ஆசிரியர்கள் வேறு, பரீட்சைக்கு கேள்விகளை உருவாக்கும் ஆசிரியர் வேறு. மாணவன் பரீட்சையில் எழுதிய விடைகளைத் திருத்துபவர் வேறொரு ஆசிரியர். கண்ணுக்குத் தெரிந்த ஆசிரியர் போதித்த பாடங்களைக் கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் உருவாக்கிய கேள்வித்தாள்கள் மூலம் விடையளித்து, அவ்விடைகளை கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் மதிப்பீடு செய்யும் இன்றைய பரீட்சை முறையில் ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியுமா? மாணவனின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை வேண்டுமானால் மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த விவாதத்தில் கண்டறிந்த முடிவு.

அடுத்து, நாம் பாடங்களைப் போதிக்கும்போது முழுமையாக எல்லா விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா அல்லது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் தன்மையில் பாடபோதனைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்தது.

அதுசமயம், ஒரு அறிவியல் ஆசிரியர் நல்லமுறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன எனப் பதில் அளிக்க, அவரிடம், "ஐயா, நீங்கள் எம்.எஸ்ஸி. படித்தவர். அந்தப் பட்டமாகிய, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்பதில் உள்ள சயின்ஸ் (விஞ்ஞானம்) என்றால் என்ன என்பதைக் கூற முடியுமா?'' எனக் கேட்க, அவர் கொஞ்சம் தயங்கினார்.

''பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டக்கூடிய பல விஷயங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியது சயின்ஸ்'' எனும் கிரேக்கர் காலத்து கூற்றினை நான் கூறியபோது உள்ளபடியே அந்தக் கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் நமது கல்வி முறையில் ஆழமான, விரிவான போதனைகள் இல்லை என்ற ஆதங்கம் உருவானது. எல்லா பொருளையும் முழுமையாகக் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வேண்டும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.
அடுத்து, அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதே கருத்தரங்கில், புத்திசாலித்தனம் எனும் வார்த்தைக்கு என்ன விளக்கம் எனக் கேட்க, பலரும் தயங்க, "அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்'' எனக் கூறினோம். புத்திசாலித்தனத்திற்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஆனால் வெகுவாக உதவி செய்யலாம் என விவாதம் தொடர்ந்தது.

அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் அறிவு அதற்குமேல் வளர்வதில்லை என்பதை ஹஸ்லிட் எனும் அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: "இவர்கள் இறந்தபின் இவர்களது கல்லறையில் நான் எழுத விரும்புவது - 30 வயதில் இறந்த இவரை 60 வயதில் இங்கே அடக்கம் செய்துள்ளோம்''.

இதுபோன்ற அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கி கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? அப்படி ஒரு கல்விக் கொள்கை தீர ஆலோசித்தும் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்டால் மட்டுமே, நாம் எதிர்பார்ப்பதுபோல, உலக அரங்கில் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போலத் தரமான கல்வியை அளிக்கும் நாடு என்கிற பெயர் பெற முடியும். கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி

லேபிள்கள்:

குழந்தைகளைவளர்ப்பதில் பெற்றோரின் பங்கு

குழந்தைகள் பெற்றோருக்குக் கண்குளிர்ச்சியாவார்கள். குடும்ப அமைப்பைத் தழைக்கச் செய்யும் குலக்கொழுந்துகள் ஆவார்கள். குடும்பக் கட்டுமானத்தின் வாரிசுகள் மட்டுமின்றி, சமுதாய, தேச சீரமைப்புகளுடைய வருங்காலச் சந்ததிகளாகத் திகழ்கின்றனர். அவர்களால்தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமும் அவர்களுக்கு ஊட்டப் படும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வி மூலமும் தான் சாத்தியமாகும்
குழந்தைகளை நல்லொழுக்கமுடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும். குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியளித்து, உயர் பட்டதாரிகளாக அவர்களை உருவாக்கி மகிழ்வதற்காகப் பெற்றோர் காலமெல்லாம் படாதபாடு படுகின்றனர். செல்வமும் கல்வியும் சேர்த்துக் கொடுத்தாலுங்கூட நல்லொழுக்கமில்லாவிட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லொழுக்கம் என்னும் அடித்தளத்தின் மீது, கல்வி, செல்வம் முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பமும் சமுதாயமும் பெரும் பயன் பெறும்
ஒரு குழந்தை வளரும் சூழல், அதன் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கும் விளைவுகளுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ, அதே போன்று ஒருவன் மாணவனாக இருந்து பெறும் அறிவும் அவனது வாழ்க்கையில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்த வல்லது. எனவே, மாணவப் பருவத்தின் போது அவர்களிடம் நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் கல்வி மூலம் ஏற்படுத்தினால் அவர்களது ஆளுமையை நெறிப்படுத்த முடியும்.

லேபிள்கள்:

வறிய நாடுகளின் இன்றயநிலை

அந்நிய நாடுகளுக்குப் படையெடுப்பது மட்டுமின்றி, உள்நாட்டிலும் ஏற்றுமதிக்கான உணவு தானிய உற்பத்திக்காக இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆங்காங்கே நிலங்களை வளைத்துப் போட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ரேஞ்சர் ஃபார்ம்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதிக்கான மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. டாடா நிறுவனமும் தன்பங்கிற்கு 60,000 ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது. ]
ஆறுகளும் பசுமையான வயல்களும், மலைகளும் நீர்வீழ்ச்சியும், காடுகளும் விலங்குகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் குலுங்கியது. "ஒருபிடி மண்ணைக்கூட அந்நியனுக்குத் தரமாட்டோம்!; தென்கொரிய டேவூ நிறுவனமே, நாட்டை விட்டு வெளியேறு!; நாட்டைத் தாரைவார்க்கும் சர்வாதிகார அதிபர் ஒழிக!'' என்ற முழக்கங்களுடன் அந்நாட்டு விவசாயிகள் அணிதிரண்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

போராட்டத்தை ஒடுக்க சர்வாதிகார அதிபர் மார்க் ரவலோமானனா கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத அடக்குமுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். இப்போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, தலைநகர மேயரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆண்ரி ரஜேவினா சர்வாதிகார அதிபருக்கெதிரான நாட்டு மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவரைச் சர்வாதிகார அதிபர் பதவி நீக்கம் செய்ததும், நாடெங்கும் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் மார்க் அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போன நிலையில், இராணுவம் மற்றும் சட்டவாத நீதித்துறையின் ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவரான ஆண்ரி, சர்வாதிகார அதிபரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு கடந்த மார்ச் மூன்றாம் வாரத்தில் புதிய அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கே, இந்தியப் பெருங்கடலில் இயற்கை வளமும் தாது வளமும் கனிம வளமும் நிறைந்த மிகப் பெரிய தீவு நாடாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியச் சூறையாடலால் மடகாஸ்கர் இன்னமும் ஏழை நாடாகவே இருக்கிறது. வறுமையும் வேலையின்மையும் அந்நாட்டைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டு விவசாயிகளைப் போலவே மடகாஸ்கர் விவசாயிகளும் தாராளமயஉலகமயமாக்கத்தால் ஓட்டாண்டிகளாகி நிற்கிறார்கள். ஏறத்தாழ 70% மக்கள் உலக உணவுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அரைகுறை உணவைக் கொண்டு வாழ்க்கையை நரக வேதனையுடன் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவும் திட்டத்தைக் கொண்டு வந்தார், அதிபர் மார்க். இதன்படி, தென்கொரிய தேசங்கடந்த ஏகபோக தொழிற்கழகமான டேவூ நிறுவனத்திற்கு 13 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் 99 வருடக் குத்தகைக்கு விடப்பட்டன. இது, அந்நாட்டின் மொத்த விளைநிலப் பரப்பில் ஏறத்தாழ பாதிக்கும் மேலானதாகும். பா.ம.க. தலைவர் ராமதாசு அடிக்கடி கோரிவருகிறாரே, அத்தகைய சிறப்பு விவசாய மண்டலத் திட்டம்தான் அங்கே செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், அந்நியச் செலாவணி பெருகும் என்றும், இது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என்றும் ஆட்சியாளர்கள் கதையளந்தனர்.

ஆனால் மடகாஸ்கர் விவசாயிகள், விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கும் இம்மோசடித் திட்டத்தை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. இது, நாட்டை அடிமைப்படுத்தும் நவீன காலனியாதிக்கம் என்று மிகச் சரியாக வரையறுத்த அவர்கள், தலைநகரை முற்றுகையிட்டு போராட்டங்களைத் தொடந்தனர். அவர்களது போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியைப் பிடித்துள்ள புதிய அதிபரான ஆண்ரி, டேவூ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது, மடகாஸ்கர் விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி.

தனது 34வது வயதில் மடகாஸ்கரின் அதிபராகியுள்ள ஆண்ரி, உலகின் முதலாவது இளம் அதிபர் என்று ஊடகங்களால் போற்றப்படுகிறார். எனினும் அவர் இடதுசாரியோ, சீர்திருத்தவாதியோ அல்ல; விவசாயிகளின் போராட்டத்துக்கு வடிகால் வெட்டும் வேலையைச் செய்துள்ள ஆளும் வர்க்கங்களின் எதிர்த்தரப்பு அரசியல் தலைவர்தான் அவர். எனவேதான், ''உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் எமது திட்டங்களுக்குத் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; புதிய அதிபருடன் நாங்கள் புதிய ஒப்பந்தம் போட்டு எமது திட்டத்தைச் செயல்படுத்துவோம்'' என்று நம்பிக்கையோடு அறிவிக்கிறது டேவூ நிறுவனம். இதே மடகாஸ்கரில் ஏறத்தாழ 4 லட்சம் ஹெக்டேர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள இந்தியாவின் வருண் நிறுவனம், ''நாங்கள் டேவூ நிறுவனத்திடமிருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ளோம்; நாங்கள் விவசாயிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் ஒப்பந்த விவசாயம் மூலம் திட்டத்தை நிறைவேற்றப் போகிறோம்'' என்கிறது.

மடகாஸ்கரில் நடந்த ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது, விவசாயிகளின் எழுச்சி. இந்த எழுச்சிக்குக் காரணம், அந்நியக் கம்பெனிகளின் நிலப்பறிப்பு. இது ஏதோ, மடகாஸ்கரில் மட்டும் நடந்த விதிவிலக்கான நிகழ்வு அல்ல. உலகெங்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும், நிதியாதிக்கக் கும்பல்களும், அவற்றின் பங்காளிகளான வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசுகளும் போட்டிபோட்டுக் கொண்டு ஏழை நாடுகளின் விளைநிலங்களைக் கபளீகரம் செய்து வருகின்றன. இந்நிலங்களில் தமது நாட்டின் தேவைக்கான உணவு தானியங்களைப் பயிரிட்டுக் கொள்வது, உலகச் சந்தையில் விற்று ஆதாயமடைவது என்ற நோக்கத்துடன் இந்நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.

இதனை "உணவு உற்பத்தியில் அவுட் சோர்சிங்'' என்று குறிப்பிடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குத் தேவையான உணவு தானியங்களை அல்லது உயிர்ம எரிபொருள் தேவைக்கான பயிர்களை அதன் எல்லைக்கு அப்பால் உற்பத்தி செய்வதையே ''உணவு உற்பத்தியில் அவுட்சோர்சிங்'' என்கின்றனர். அன்று வெள்ளைக்காரன் இந்தியாவைக் காலனியாக்கி, தனது நாட்டின் துணிகளுக்குச் சாயம் போடுவதற்காக, இந்திய விளைநிலங்களில் அவுரிச் செடியைக் கட்டாயமாகப் பயிரிட வைத்தான். இக்காலனியாதிக்க வழியில், இன்று பல்வேறு ஏகபோக நிறுவனங்களும் அரசுகளும் நிதியாதிக்கக் கும்பல்களும் ஏழை நாடுகளின் நிலங்களைக் கைப்பற்றி தமது தேவைக்காகப் பயிரிட்டு அள்ளிச் செல்வதுதான் உணவு உற்பத்தியில் அவுட்சோர்சிங் என்பதாகும்.

வெளிநாடுகளில் உணவு உற்பத்தியை மேற்கொண்டு அதன் மூலம் ஆதிக்கம் செய்யத் துடிக்கும் சௌதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபுக் குடியரசு முதலான எண்ணெய் வளமிக்க நாடுகள், "வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு (எஇஇ)'' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் அபரிமிதமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வெளிநாடுகளில் உணவு உற்பத்தியை இவை நடத்தி வருகின்றன. சூடான், பாகிஸ்தான், மியான்மர் (பர்மா), கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கசகஸ்தான், உகாண்டா, பிரேசில் முதலான நாடுகளில் இக்கூட்டமைப்பு லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை வாங்கிக் குவித்துக் கொண்டேயிருக்கின்றன. கடந்த ஓராண்டு காலமாக இக்கூட்டமைப்பு பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் முதலானவற்றை உற்பத்தி செய்து தமது நாடுகளுக்கு அள்ளிச் சென்றுள்ளன.

இக்கூட்டமைப்பிலுள்ள ஒரு நாடான கத்தார், பாகிஸ்தானின் வளமிக்க பஞ்சாப் மாநிலத்தில் ஏறத்தாழ 25,000 கிராமங்களை அழித்துவிட்டு பெரும்பண்ணை விவசாயத்தை நடத்த ஒப்பந்தம் போட்டுள்ளது. இதேபோல, சௌதி அரேபியா ஆட்சியாளர்கள் இந்தோனேசியாவில் ஏறத்தாழ 160 லட்சம் ஹெக்டேர் நிலங்களை வாங்கி உணவு உற்பத்தி செய்து தங்கள் நாட்டுக்கு அள்ளிக்கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளனர். எகிப்து நாட்டின் அரசு, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள உகாண்டாவில் ஏறத்தாழ 8 லட்சம் ஹெக்டேர் நிலங்களை வாங்கி, தங்களுக்குத் தேவையான கோதுமை மற்றும் மக்காசோளம் உற்பத்தி செய்யக்கோரி அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள், கூட்டமைப்பின் மூலமாக மட்டுமின்றி, தனியாகவும் ஏழைநாடுகளின் நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. எத்தியோப்பியா, கசகஸ்தானில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களை சௌதி அரேபியா வளைத்துப் போட்டுள்ளது. ஐக்கிய அரபுக் குடியரசு, சூடானில் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது. பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் தொடரும் எத்தியோப்பியாவில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களை ஜெர்மானிய பெருந்தொழில் நிறுவனங்கள் வாங் கிக் குவித்துள்ளன. உணவு உற்பத்தி மட்டுமின்றி உயிர்ம எரிபொருள் உற்பத்திக்காகவும் ஆப்பிரிக்க கண்டத்தின் பல ஏழை நாடுகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆப்பிரிக்கக் கண்டத்தைப் போலவே, ஆசிய நாடுகளிலும் நிலப்பறிப்பு வேகமாக நடந்து வருகிறது. கம்போடியாவில் பழங்கள்காய்கறிகள் பயிரிட்டு அள்ளிச் செல்ல பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களை இஸ்ரேல் வாங்கிக் குவித்துள்ளது. குவைத் அரசு, தனது உயிர்ம எரிபொருள் தேவைக்காக மக்காச்சோளம் பயிரிட லாவோசில் நிலங்களை வாங்கிக் குவிக்கிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடான வியட்நாமில் கிடைபோடுவதற்காக ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வந்திறங்குகின்றன.

சீன முதலாளித்துவ அரசு பல்வேறு ஏழை நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பணிகளில் உதவி செய்ய ஒப்பந்தங்கள் போட்டு வருகிறது. இந்த ஒப்பந்தங்களின்படி, பயனடையக்கூடிய ஏழை நாடுகள் தம்முடைய விளைநிலங்களில் ஒரு பகுதியை சீன அரசுக்குக் குத்தகைக்குக் கொடுக்க வேண்டும். இப்படி பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ஏறத்தாழ 20 லட்சம் ஹெக்டேர் நிலங்களை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசுகள் மட்டுமல்ல; விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், நிதியாதிக்கக் கும்பல்கள், நிதி முதலீட்டு வங்கிகள் முதலானவையும் ஏழை நாடுகளில் விவசாய நிலங்களைக் கைப்பற்றி வருகின்றன. உணவு பதப்படுத்தல் மற்றும் தானிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய கம்பெனிகள் 120 லட்சம் ஹெக்டேர் நிலங்களைப் பல நாடுகளில் வாங்கியுள்ளன. 2007ஆம் ஆண்டில் மிட்சூயி என்ற நிறுவனம், பிரேசிலில் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தை, உயிர்ம எரிபொருள் தேவைக்கான சோயாவை உற்பத்தி செய்வதற்காக வாங்கியுள்ளது.

முதலீட்டு வங்கிகளான டாட்ஷே, கோல்டுமேன்சாக்ஸ் ஆகியன சீனாவின் ஒட்டுமொத்த கால்நடைத் தொழிற்துறையை — அதாவது, சீனாவின் மிகப்பெரும் வெண்பன்றிப் பண்ணைகள், கோழிப்பண்ணைகள், இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் அவற்றின் நிலங்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளன. பெரும் முதலீட்டு வங்கியான பிளாக்ராக், உலகெங்கும் நிலங்களை வளைத்துப் போடுவதற்காக பலகோடி டாலர்களை ஒதுக்கியுள்ளது. அண்மையில் திவாலாகி அமெரிக்க அரசால் மீட்கப்பட்ட முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டேன்லி, உலகின் கோதுமைக் களஞ்சியம் என்றழைக்கப்படும் உக்ரைன் நாட்டில் 40,000 ஹெக்டேர் விவசாய நிலங்களைக் கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் ரினைசன்ஸ் கேபிடல் என்ற முதலீட்டு நிறுவனம் 3 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களை உக்ரைனில் வளைத்துப் போட்டுள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிளாக் எர்த் பார்மிங், அல்ப்காட் அக்ரோ முதலான நிறுவனங்கள் ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளன.

இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் இத்தகைய நிலப்பறி வேட்டையில் இறங்கியுள்ளனர். அரசுத்துறை நிறுவனமான இந்திய வர்த்தகக் கழகம் மற்றும் குஜராத் அம்புஜா, ருசிசோயா, சுன்ஷன்வாலா வனஸ்பதி முதலானவை உள்ளடங்கிய 15 தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் குழுமமும் சோயா மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்காக பாரகுவே, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகளில் பத்தாயிரம் ஹெக்டேர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. "காருட்டுரி குளோபல்'' என்ற ரோஜா மலர் உற்பத்தி நிறுவனம் எத்தியோப்பியாவில் மக்காச்சோளம், நெல், காய்கறி மற்றும் இதர பணப்பயிர்களை உற்பத்தி செய்ய பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. டாடாவின் கண்ணன் தேயிலை நிறுவனமும் எத்தியோப்பியாவில் காலூன்றியுள்ளது. இவை தவிர, இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய பர்மாவையும் பாமாயிலுக்காக இந்தோனேசியாவையும் முற்றுகையிட்டுள்ளனர்.

அந்நிய நாடுகளுக்குப் படையெடுப்பது மட்டுமின்றி, உள்நாட்டிலும் ஏற்றுமதிக்கான உணவு தானிய உற்பத்திக்காக இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆங்காங்கே நிலங்களை வளைத்துப் போட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ரேஞ்சர் ஃபார்ம்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதிக்கான மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. டாடா நிறுவனமும் தன்பங்கிற்கு 60,000 ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது.

இப்படி உலகெங்கும் குறுக்கும் நெடுக்குமாக ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்களும் அந்நிய செலாவணி இருப்பை அபரிமிதமாகக் கொண்டுள்ள எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏழை நாடுகளின் நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. எதிர்காலத்தில் பெட்ரோலிய எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு மாற்று எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும்போது, உயிர்ம எரிபொருள் மூலம் கொள்ளை இலாபமீட்டும் நோக்கத்துடன் மக்காச்சோளம், சோயா, காட்டாமணக்கு முதலானவற்றை உற்பத்தி செய்வதற்காக அவை பெருமளவில் நிலத்தை வளைத்துப் போட்டு வருகின்றன. இதுதவிர, பெரும் பண்ணைகளை உருவாக்கி உணவு தானியங்களை உற்பத்தி செய்து, உணவை ஒரு ஆயுதமாகக் கொண்டு ஏழை நாடுகளை ஆதிக்கம் செய்யும் நோக்கத்துடன் இப்படி விளைநிலங்களைக் கைப்பற்றி வருகின்றன.

இச்சூறையாடலுக்குச் சாதகமாக ஏற்கெனவே உலக வங்கியும், ஏகாதிபத்திய நாடுகளும் தாராளமயம் உலகமயமாக்கத்தின் மூலம் தமது விவசாய உற்பத்திப் பொருட்களை மலிவான விலையில் கொட்டி, ஏழை நாடுகளின் விவசாயத்தையே காலாவதியாக்கி விட்டன. பன்னாட்டு நிறுவனங்களோ ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாயிகளைப் போண்டியாக்கி வருகின்றன. ஏற்றுமதிக்கான விவசாயத்தை மேற்கொண்டு, உலகமயத்தால் போட்டி போட முடியாமல் விவசாயிகள் திவாலாகி வருகிறார்கள். உள்நாட்டுச் சந்தையிலும் வாய்ப்பில்லாமல், உலகச் சந்தையிலும் விற்க முடியாமல் விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி வருகிறார்கள். மாற்றுத் தொழில் கிடைத்தால் விவசாயத்தை விட்டே வெளியேறிவிடும் நிலையில் ஏழை நாடுகளின் விவசாயிகள் தத்தளிக்கிறார்கள். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, நவீன காலனியாதிக்க முறையிலான நிலப்பறிப்பை ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்கள் புதிய உத்தியாகச் செயல்படுத்தி வருகின்றன.

இதற்கேற்ப பன்னாட்டு நிறுவனங்கள் வலுவான சட்டரீதியான ஏற்பாட்டையும் உருவாக்கி வருகின்றன. உலக வங்கியும் மறுசீரமைப்பு வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியும், நிலவுரிமை தொடர்பான சட்டங்களை பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு ஏற்பத் திருத்துமாறு ஏழை நாடுகளை நிர்பந்தித்து வருகின்றன. உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 120 கோடி அமெரிக்க டாலர்களைக் கடனாகக் கொடுக்க உடன்பட்ட உலக வங்கி, அதற்குக் கைமாறாக ஆப்பிரிக்க நாடுகளின் நிலவுரிமை தொடர்பான சட்டங்களைத் திருத்தக் கோரியது. ஏறத்தாழ இதே வழியில், ஐரோப்பிய வங்கியும் மத்திய ஆசிய நாடுகளின் சட்டங்களைத் திருத்தக் கோரியுள்ளது. இவற்றை ஏற்று அர்ஜெண்டினா, மங்கோலியா, சிரியா, லெபனான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுரிமைச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், இந்துவெறி கும்பல் ஆளும் கர்நாடக மாநிலத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின் நிலக் கொள்ளைக்கு ஆதரவாக சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரிலும் ஆலைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியமைப்பது என்ற பெயரிலும், அந்நிய நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை அபகரித்து வருவதைப் போல, இப்போது "உணவு உற்பத்தியில் அவுட்சோர்சிங்'' என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது!!

லேபிள்கள்:

பெற்றோர் பங்கு கல்வியில்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. ஒரு குழந்தையைச் சிறந்த சிற்பமாகச் செதுக்கும் பொறுப்பும் வாய்ப்பும் பெற்றொருக்குக் கிட்டுகிறது. பெற்றோர் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
எந்தப் பாதையில் உங்கள் குழந்தை பயணம் செய்ய விரும்புகிறதோ அதில் பயணம் செய்யப் பழக்கினால் இறுதி வரை பயணம் திசைமாறாது. பெற்றோர் தமது குழந்தைகள் தமக்குச் சொந்தம் என்று செயல்படாமல் பாதுகாவலர்களாகச் செயல்படவேண்டும். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வின்படி விமானப் படையில் பணியாற்றும் பல இளைஞர்கள் அதைத் தேர்வு செய்ததற்குக் காரணம் அவர்கள் விமானப் படையில் பணியாற்றும் பெற்றோர்களின் குழந்தைகளாக இருப்பதே என்று தெரிய வந்துள்ளது. ராணுவக் குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு அத்தகைய சூழல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். வணிகம் அல்லது தொழிலை நடத்தும் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவை சார்ந்த தகவலை பெறுவது, உயர்கல்வி கற்பது ஆகியவற்றில் பெற்றோர்களின் தாக்கத்தைக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பொறுப்பைக் கொடுத்து உற்சாகப்படுத்தி, தவறுகள் நிகழ்ந்தாலும் மீண்டும் ஊக்கப்படுத்தி வளர்ப்பர். வினோத் என்பவனின் தந்தை கார்களை வாங்கி விற்கும் தொழிலைக் கொண்டவர். ஒருமுறை அவர் தனது சொந்த காரை, அப்போதுதான் ஓட்டுனர் உரிமம் பெற்ற தனது மகனிடம் கொடுத்து பெட்ரோல் போட்டு வரும்படி கூறினார். அவரது மகனுக்கு கார் ஓட்டுவது விருப்பமான ஒன்று. திரும்பி வரும் வழியில் காரின் பின்பகுதி சுவரொன்றில் இடித்துச் சேதமாகிவிட்டது. வினோத்துக்குத் தன் தந்தை திட்டுவார் என்ற பயம். ஆனால் அவரது தந்தை மீண்டும் ஒருமுறை பணம் கொடுத்து பெட்ரோல் நிரப்பி வரக் கூறினார். தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளாரே அப்பா என்று வினோத் அதிக கவனத்துடன், பொறுப்புடன் செயல்படத் துவங்கினான்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம்?

1. உங்கள் குழந்தைகளின் இயல்பான விருப்பத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் விரும்புவதைத்தான் அவர்களும் விரும்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுதந்திரமாக முடிவெடுத்துச் செயல்பட உதவுங்கள்.

2. நல்லொழுக்கம், நற்பழக்கங்கள், சுயகட்டுப்பாடு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் ஆகிய குணங்களை குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும்.

3. உங்கம் குழந்தைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கும். உருவத்தில் உங்களை ஒத்திருக்கலாம். ஆனால் சிந்தனை, செயல்பாடுகளில் வித்தியாசப்படலாம். உங்கள் குழந்தைகள் அவர்களது இயல்பான திறமையை வெளிப்படுத்தி அவர்கம் தங்களைத் தாங்களே அறிய ஊக்கப்படுத்துங்கள்.

4. வேலை செய்வது என்பது திறமையையும் அன்பையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் என்று உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கம். சிறிய அளவில் அவ்வப்போது பொறுப்புகளைக் கொடுத்து குழந்தைகள் அவரவரின் சிறப்புத் திறன்களை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.

5. குழந்தைகள் குழந்தைகள்தான். அந்தந்த வயதில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருக்கும். உங்களுடைய எதிர்பார்ப்பு யதார்த்தமாக இருக்கவேண்டும். பெரியவர்கள் சிந்திப்பதுபோல் இளம் வயதிலேயே உங்கள் குழந்தைகளும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

6. உங்கள் குழந்தைகள் எத்தகைய பொழுதுபோக்கை விரும்புகிறார்கள்? அவர்களது விருப்பம், திறமை ஆகியவற்றை இயல்பாகக் கவனித்து அவற்றை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

7. வேலை உலகத்தை அறிமுகப்படுத்துங்கள். பல்வேறு பணிச்சூழல்களை பார்க்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அவர்கள் விசாலப் பார்வையுடன் பலவற்றை தெரிந்து கொண்டு பின்னர் முடிவெடுக்க முடியும்.

8. பகுதி நேர வேலை, கோடைகாலத்தில் ஏதாவது ஒரு பணியாற்றுவது என்று பழக்கினால்தான் உங்கள் குழந்தைகள் அனுபவம் சார்ந்த அறிவைப் பெற முடியும். சிலநேரங்களில் அவர்கள் விரும்பாத, கடினமான பணியை மேற்கொள்ள வேண்டிய வாய்ப்பும் ஏற்படலாம். அனுபவ அறிவைப் பெறும்போதுதான் எவ்வாறு இடர்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்று அறியும் வாய்ப்புக் கிட்டும்.

9. ஒரு குறிப்பிட்ட வயதைக் கடக்கும்போது உங்கம் குழந்தைகள் உங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து தாங்களாகவே செயல்பட வேண்டும் என்று எண்ணுவது இயல்பே. அத்தகைய சூழலில் எதையும் வலியுறுத்திக் கூறாமல் அவர்களாகவே அறிந்துகொண்டு செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

10. பல வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தி பின்னர் அவற்றில் எந்த வாய்ப்பை உங்கள் மகன் அல்லது மகள் பெரிதும் விரும்புகின்றார் என்பதை அறிந்து அந்தத் துறையில் சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் அவர்கள் தேர்வு செய்த துறையின் நுணுக்கங்களை அறிந்து மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

11. கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்வதற்கான திட்டத்தை உங்களது பிள்ளையே உருவாக்க உதவுங்கள். படிப்புக்கு ஆகும் செலவு, அதை எவ்வாறு ஏற்பாடு செய்யப் போகின்றீர்கள் என்பதை உங்களது குழந்தைகள் அறிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியும் அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்கின்றதா என்பதை குழந்தைகள் அறிந்துகொள்ளப் பழக்க வேண்டும். கல்லூரியில் பயிலும்போது உங்கள் பிள்ளைகளை நண்பர்களைப் போல் நடத்துங்கள்.

12. உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்துக்கு நீங்கள் முழுமையாகப் பொறுப்பேற்க முடியாது. உங்கள் பிள்ளை தனது எதிர்கால வாழ்க்கைக்குத் தானே பொறுப்பேற்கப் பழக்க வேண்டும். இந்தவிதத்தில்தான் உங்கள் குழந்தையின் தனித்தன்மையை நீங்கள் அங்கீகரிக்க முடியும்.

உங்கள் குழந்தைகளிடம் நிர்ப்பந்தம் இல்லாமல் அன்பு காட்டுங்கள். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும். அன்பு அனைத்தையும் நம்பும். உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள்.

ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைப் பார்த்து, ``நீங்கள் எப்போது உங்களைப் பெரியவர்களாக நினைப்பீர்கள்?'' என்று கேட்டார். ஒரு குழந்தை, ``எறும்பைப் பார்க்கும்போது நான் பெரியவனாக நினைப்பேன்'' என்றது. கொசுவைப் பார்க்கும்போது என்னைப் பெரியவளாக நினைப்பேன் என்றது மற்றொரு குழந்தை. ஆசிரியர் அந்தப் பதில்களில் திருப்தி அடையாமல் ஒரு குழந்தையிடம், ``நீ எப்போது உன்னைப் பெரியவளாக நினைப்பாய்?'' என்று கேட்டார். உடனே அந்தக் குழந்தை, தனது பெற்றோரின் அரவணைப்பில் தன்னைப் பெரியவளாக நினைப்பேன் என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது. பெற்றோரின் அரவணைப்பு என்பது ஆக்கிரமிப்பு அல்ல, அது ஒருவகை பாதுகாப்பு உணர்வே.
அந்த வகையில் உங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாவலர்களாக இருந்து, அவர்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது வளர்ச்சியில் உங்களை அடையாளம் காணுங்கள்

லேபிள்கள்:

பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது

பல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல.
எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும்
நானே வளர்ந்திருப்பேன்” என்ற நிலைதான். மாரல் ஸ்டடி வகுப்புக்களும்
இல்லை, வீட்டிலும் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை எனும்
நிலையில் ஒரு தலைமுறையே முறையாக வளர்க்கப்படாமல்
போய்விட்டது.

நாம் செய்யக்கூடாதவை என்னென்ன என்று தெரிந்து விட்டால்
செய்யக்கூடியவை புரிந்துவிடும். பெற்றோர்கள் நல்ல பிள்ளைகளை
வளர்க்க இது உதவும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.


1.குழந்தை ஆசையா சொல்லணும்னோ, பேசனும்னோ
வந்தா ”நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசலாம்”!,
மேல விழுந்து கொஞ்சனமாக்கும் தள்ளி நின்னு அப்படின்னுல்லாம்
பேசக்கூடாது. அம்மா, அப்பா, தன்னை தவிர்க்கிறார்கள்,
உதாசினப்படுத்துகிறார்கள் எனும் எண்ணம் விதைக்கப்படுகிறது.


2. பெல்டால அடி, குட்டு, கிள்ளுவது, கைல கிடைச்சதால அடி
இவை physica abuse வகை. இவை தரும் நேர்மறை விளைவுகள்.


3. அடிப்பது குத்தம். வாய்க்கு வந்தபடி திட்டுவது மஹா கொடுமை.
நம் நாட்டில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது இன்னமும் குற்றமாக
இல்லை. மேலை நாடுகளில் எங்கப்பா அடிச்சார், அம்மா திட்டினாங்கன்னு
போலிஸ்ல கேஸ் போட முடியும். நம்ம நாட்டுல அந்த வசதி
இல்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் திட்டுவது
“தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்டவடு”ஆகிப்போகும்னு
வள்ளுவர் சொல்லி வெச்சிருக்கார்.

4.” நான் பெத்தது சரியில்லீங்க!!!” ”இதெல்லாம் நாளைக்கு
எனக்கு சோறா போடப்போகுது!!” இதெல்லாம் தன் மனக்குறையை
அடுத்தவங்க கிட்ட சொல்லிக்கிறா மாதிரி பெத்தவங்க பேசுவது.
ஆனா இது தவறு. நம்ம பிள்ளையை பத்தி நாமே குறையா
அடுத்தவங்க கிட்ட சொல்லக்கூடாது. அதே சமயம் ரொம்பவும்
புகழ்ந்தும் சொல்லக்கூடாது.

“தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்”
என்பதையும் மறக்கக்கூடாது.



5. இந்த உலகத்துல ஒண்ணு கூட சரியில்லை, “உங்கம்மா
ஒரு உதவாக்கரை!!” உங்கப்பனுக்கு மூளையே வேலை செய்யாது”
”நீ பைசா ப்ரோயஜன்ம் இல்லாதவன்” இப்படி அடுத்தவர்
பற்றியோ பிள்ளைகள் பற்றி பிள்ளைகளிடமோ குறை சொல்வதும்
ஆகாது.

6. அடுத்தவங்களைப் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சா போதும் மக்களுக்கு.
இதுல எதுத்து பேச முடியாத பிள்ளைகளை பத்தி விமர்சனம்
செய்ய தயங்கவும் மாட்டாங்க. அந்த விமர்சனங்கள் அவர்களின்
வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

7. நம் கனவுகளை சுமக்க பிறந்தவங்க இல்லை பிள்ளைகள்.
அவர்கள் விரும்பும் படிப்பு,வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாம் சொல்லுவதை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கக்கூடாது.

8. அம்மா, அப்பா சண்டை போட்டுக்கொள்ளும் சூழ்நிலையில் வளரும்
குழந்தை பாதுக்காப்பின்மையாக உணர்ந்து கூனிக்குறுகி முன்னேர
முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் முரட்டுத்தனமாக
மாறிவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.



9. பசங்க சின்னவங்க என்பதால் அவங்க செய்வது எல்லாமே
தவறா இருக்கணும்னு சட்டமில்லை. அவர்களின் செயல்கள்,
பேச்சுக்கள், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் தவறாகவே
புரிந்துக்கொள்ளக் கூடாது.

10. ”என் பையன் எதிர்காலம் என்னாகுமோ!!”
“நாளைக்கு அவங்க என்ன ஆவாங்களோ!!”
“எஞ்சினியரிங், டாக்டர் படிகாட்டி கை நிறைய்ய
சம்பாதிக்க முடியாதே” போன்ற தேவையில்லாத வருத்தங்கள்
பட வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

11. பிள்ளைகள் விரும்பியதை அவர்கள் அடைந்தே தீர்வார்கள்
எனும் நம்பிக்கை நமக்கு முதலில் இருக்க வேண்டும்.

12. பிள்ளையின் கனவை நனவாக்க நமது தூண்டுகோல்(சுடர்
விளைக்கைத் தூண்டும் தூண்டுகோல் போல)இருக்க வேண்டும்.
அவர்கள் சோர்வுறும் தருணத்தில் ஆதரித்து, பேசி
முன்னேற்றப்பாதையில் நடக்க வைக்க வேண்டும்.

13. ”வயசாகிடுச்சு இன்னும் என்ன அம்மாவை கட்டிகிட்டு”
”வயசு வந்த பொண்ணு அப்பனை கட்டிக்கிறது எல்லாம்
எங்க காலத்துல இல்லை” எனும் பேச்சுக்களை கேட்டிருப்போம்.
நம் பிள்ளைகளை நாம் கட்டியணைத்து, பேசினால் அவர்களின்
தன்னம்பிக்கை வளரும். வசூல் ராஜா எம்பீபீ எஸ் பரிந்துரைத்த
”கட்டிப்பிடி வைத்தியம்” ரொம்ப முக்கியம். நம் குழ்ந்தைகளிடம்
மட்டும்.

14. அன்றாட வாழ்க்கையில் பசங்களின் நடவடிக்கை, பேச்சு,
ஆகியவைகளை கண்காணிப்பது அவசியம். ஏதும் மாறுதல் இருந்தால்
அட்வைஸ் மழை பொழியாமல் நட்புடன் பேசுவது போல பேசி
கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

15. ”உபகாரம் செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா
போதும்னு!!” பெரியவங்க சொல்லியிருக்காங்க. பசங்களின்
வளர்ச்சிக்கு உதவும் வார்த்தைகள் சொல்லாட்டியும் அவர்களை
Demotivate செய்யும் வார்த்தைகளை பேசாமல் இருப்பது உசிதம்.


16. பெரிய தவறுகள் செய்தால் தண்டனை அவசியம்.
சின்ன சின்ன தவறுகளுக்கும் பெரிய பெரிய தண்டனை கொடுத்தால்
தண்டனையில் தன் தவறை புரிந்து கொள்வது போய் பிள்ளை
முரடாக தயாராக வாய்ப்பிருக்கிறது. தண்டனை தவறாக புரிந்து
கொள்ளப்படும்.

நாம் தவறு செய்திருக்கிறோம், அதை மறுமுறை
செய்யக்கூடாது என அறிவுறுத்தத்தான் தண்டனை.
அந்த பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டால் நமக்கு
பிரச்சினையே இல்லை.

செய்யக்கூடாதது தெரிந்து கொண்டதால், நாம் செய்ய வேண்டியது
தெளிவாக புரிந்து கொள்ள வசதி. நல்ல பெற்றோராக
பிள்ளையின் வளர்ச்சிக்கு உதவுவோம்.

லேபிள்கள்:

பொது அ‌‌றிவு துணு‌க்குக‌ள்

குழ‌ந்தைகளே உ‌ங்களு‌க்கு பொது அ‌றிவு வள‌ர்‌க்கு‌ம் ‌விதமாக ‌சில துணு‌க்கு‌ச் செ‌ய்‌திகளை இ‌ங்கே அ‌ளி‌த்து‌ள்ளோ‌ம். படி‌த்து பய‌ன்பெறு‌ங்க‌ள்.

அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.

மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

லேபிள்கள்:

செவ்வாய், 16 நவம்பர், 2010










கனவிலும் உன் ஜாபகம் கொல்லைகொல்லுதடி பெண்ணே

லேபிள்கள்:




மாணவன் மனித நேயத்தை மதிக்க கூடிய கல்வியை பெறவேண்டும்

லேபிள்கள்:



அன்பு கொண்ட நெஞ்சம் என்றும் அமைதியின் இருப்பிடம்தான்

லேபிள்கள்:

ஜப்பானிய ஆரம்பக்கல்வி

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து வைத்துக் (Ability groupng) கற்பிப்பது பல உலகநாடுகளில் பின்பற்றப்படும் ஒரு ஏற்பாடு. மேலைநாடுகள் இதனைப் பெரிதும் விரும்பித் தமது நாடுகளில் தற்போது அறிமுகம் செய்து வருகின்றன.
ஆற்றல் மிக்க மாணவர்களை இனங்கண்டு, அவர்களைத் தனியாக ஒருவகுப்பில் வைத்துக் கற்பிப்பதைப் பலரும் விரும்புவர். பல்வகை ஆற்றல் உள்ளவர்களை ஒரே வகுப்பில் வைத்துக் கற்பிப்பது ஆசிரியர்களுக்குச் சிரமமானது; அவர்களுடைய பணி சுமை நிறைந்ததாகிவிடும் என்பதால் அதனைப் பலரும் விரும்புவதில்லை.
பின்லாந்து நாட்டில் மாணவர்களை ஒன்றாக வைத்துக் கற்பிக்கும் முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்லாந்துப் பிள்ளைகள் அண்மைக்காலங்களில் அடைந்துள்ள உயர்ந்த கல்வித் தேர்ச்சிகளுக்கு இந்த ஜப்பானிய முறைமையே காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் காலங்காலமாக மாணவர்கள் பிரித்து வைத்தே கற்பிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அங்கும் இம்முறையைக் கைவிடும் போக்கு தென்படுகின்றது. மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிப்பதால், அவர்களுடைய கல்விச் சித்திகளில் பல வேறுபாடுகளை அவதானிக்க முடிந்தது. ஐக்கிய அமெரிக்காவில் எந்தப் பிள்ளையையும் பின்தங்கிவிட இடமளிக்கப்படக்கூடாது’ என்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இந்த இலக்கினை அடைய, மாணவர்களின் ஆற்றலைக் கருத்திற் கொள்ளாது, அவர்களை ஒன்றாக வைத்துக் கற்பிக்கும் ஜப்பானிய கல்வி ஏற்பாடு இன்று பெரிதும் விரும்பப்படுகிறது.
ஆற்றலில் வேறுபட்ட மாணவர்களை ஒன்றாக வைத்துக் கற்பிப்பதால், ஜப்பானியக் கல்விமுறை அதிக அளவில் சமத்துவத்தை நிலைநாட்டுகின்றது. அந்நாட்டில் பெற்றோர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்து பிள்ளைகளின் கல்வித்தேர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமைக்கும் இந்த ஏற்பாடே காரணம் என்பது ஆய்வாளர் கருத்து.
ஜப்பானிய கல்வி முறை உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட மற்றொரு காரணம் அங்கு மாணவர்களின் முழுமையான (dall- round) கல்வியில் அக்கறை செலுத்தப்படுவதாகும். அத்தகைய முறையில் பாட ஏற்பாடு அங்கு தயாரிக்கப்பட்டுள்ளது. உணவருந்தும் வேளையின் போது கூட மாணவர்கள் ஆரோக்கியமான முறையில் தமக்குள் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் பயிற்சி வழங்கப்படுகின்றது. செல்வந்த நாடுகளில் மனிதத் தொடர்புகள் குறைந்து விட்டன; குடும்பங்கள் சிறுத்து விட்டன; சமூக மாற்றங்களின் காரணமாக இவ்வாறான நிலை தோன்றிவிட்டது. பெரும்பாலான பிள்ளைகள் குடும்பத்தின் கவனிப்பின்றி தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாகி விட்டனர்.
பிள்ளைகளின் நடத்தைகள் எல்லை மீறிச் சென்றுள்ளது. வன்செயல், பாலியல் நடத்தைகள் என்பன சீர்கெட்டுள்ளன. பாடசாலைகளில் (AIDS) தொடர்பான விடயங்களைக் கற்பிக்க வேண்டியுள்ளது. (HIV -AIDS) என்பவற்றைப் பாடசாலைகளில் தவிர்ப்பது பற்றி ஆசிரியர்களுக்கான ஏராளமான கையேடுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன; தவிர்ப்பதற்கான சகல வழிமுறைகளும் இருபால் மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டிய நிலை மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலை நாட்டுப் பாடசாலைகள் விஞ்ஞானக் கல்வி, கணிதக் கல்வி என்பவற்றில் தமது முழுக்கவனத்தையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பின் புலத்தில் ஆளிடைத் தொடர்புகளைப் பெரிதும் வலியுறுத்தும் ஜப்பானியக் கல்வி ஏற்பாடுகள் மேலை நாடுகளில் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ஜப்பானிய ஆசிரியர்கள் மத்தியில் இன்று வளர்ச்சியடைந்துள்ள பாட அவதான முறையும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறையின் படி ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலை மற்ற ஆசிரியர்கள் வகுப்பறையில் அமர்ந்து அவதானிப்பர். இதனை Lesson Study Method என்பர். ஒரு ஆசிரியரின் கற்பித்தல் முறையை அவதானித்து யாவரும் அது பற்றிய ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆசிரியர்களின் கற்பித்தற் திறன் முன்னேற்றம் அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. ஜப்பான் நாட்டின் சகல அரசாங்க ஆரம்ப பாடசாலைகளிலும் இம்முறை பின்பற்றப்படுகின்றது. மேலை நாடுகளும் இவ்வாறான ஏற்பாட்டை ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கல்வித் தேர்ச்சிக்கான சர்வதேச மதிப்பீட்டுச் சபையானது விஞ்ஞான, கணித கல்வியில் மாணவர் தேர்ச்சி பற்றிச் செய்த மதிப்பீட்டில் ஜப்பானிய மாணவர்கள் மிக உயர்ந்த புள்ளிகளைப் பெற்றனர். இதன் காரணமாகவே மேலை நாடுகள் ஹபாட அவதான’ முறையில் கூடிய அக்கறை செலுத்தத் தொடங்கின.
1995 இல் ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கணிதபாட வகுப்புகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டன. கலிபோனியாவில் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் இவ்வாய்வில் ஈடுபட்டார். ஜப்பானிய வகுப்பறையில் ஆசிரியர்கள் நீண்ட விரிவுரையாற்றவில்லை. அவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தவில்லை. அவருடைய வழிகாட்டலில் மாணவர்கள் சுயமாக சிந்தித்துச் செயற்பட்டனர். தாமாகவே செயற்பட்ட உயர்தரமான எண்ணக்கருக்களைப் புரிந்துகொண்டனர். பேராசிரியர் ளுவபைடநச இவ்வாறான கற்பித்தல் முறை பாட அவதான முறைமையினூடாகவே வளர்ச்சி கண்டது எனக் கண்டறிந்தார். இப்பாட அவதான முறை பற்றிய அவரது பல நூல்கள் என்பன பெரிய அளவில் வாசிக்கப்பட்டன. அந்தஸ்தையும் பெற்றன.
இப் பின்புலத்தில் பாட அவதான முறை இன்று ஐக்கிய அமெரிக்கா, ஹொங்கொங், ஈரான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பாட அவதான முறை ஜப்பானில் தோற்றமுற ஒரு முக்கிய சமூகவியல் காரணி உண்டு. மேலைநாட்டவர் தனித்தே செயற்படுவர் என்றால் ஜப்பானியர்கள் எப்போதுமே குழுவாகச் செயற்படுகின்றவர்கள். மேலைநாடுகளில் ஆசிரியர்கள் குழுவாகச் செயற்படுவதில்லை. ஆனால் ஜப்பானியப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் பெரிய ஆசிரியர் ஓய்வறைகள் உண்டு. இதனால் பாட அவதானம் போன்ற புதிய முறைகளை அங்கு ஏற்படுத்த முடிகின்றது.

லேபிள்கள்: