புதன், 24 நவம்பர், 2010

பெற்றோர் பங்கு கல்வியில்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. ஒரு குழந்தையைச் சிறந்த சிற்பமாகச் செதுக்கும் பொறுப்பும் வாய்ப்பும் பெற்றொருக்குக் கிட்டுகிறது. பெற்றோர் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
எந்தப் பாதையில் உங்கள் குழந்தை பயணம் செய்ய விரும்புகிறதோ அதில் பயணம் செய்யப் பழக்கினால் இறுதி வரை பயணம் திசைமாறாது. பெற்றோர் தமது குழந்தைகள் தமக்குச் சொந்தம் என்று செயல்படாமல் பாதுகாவலர்களாகச் செயல்படவேண்டும். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வின்படி விமானப் படையில் பணியாற்றும் பல இளைஞர்கள் அதைத் தேர்வு செய்ததற்குக் காரணம் அவர்கள் விமானப் படையில் பணியாற்றும் பெற்றோர்களின் குழந்தைகளாக இருப்பதே என்று தெரிய வந்துள்ளது. ராணுவக் குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு அத்தகைய சூழல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். வணிகம் அல்லது தொழிலை நடத்தும் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவை சார்ந்த தகவலை பெறுவது, உயர்கல்வி கற்பது ஆகியவற்றில் பெற்றோர்களின் தாக்கத்தைக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பொறுப்பைக் கொடுத்து உற்சாகப்படுத்தி, தவறுகள் நிகழ்ந்தாலும் மீண்டும் ஊக்கப்படுத்தி வளர்ப்பர். வினோத் என்பவனின் தந்தை கார்களை வாங்கி விற்கும் தொழிலைக் கொண்டவர். ஒருமுறை அவர் தனது சொந்த காரை, அப்போதுதான் ஓட்டுனர் உரிமம் பெற்ற தனது மகனிடம் கொடுத்து பெட்ரோல் போட்டு வரும்படி கூறினார். அவரது மகனுக்கு கார் ஓட்டுவது விருப்பமான ஒன்று. திரும்பி வரும் வழியில் காரின் பின்பகுதி சுவரொன்றில் இடித்துச் சேதமாகிவிட்டது. வினோத்துக்குத் தன் தந்தை திட்டுவார் என்ற பயம். ஆனால் அவரது தந்தை மீண்டும் ஒருமுறை பணம் கொடுத்து பெட்ரோல் நிரப்பி வரக் கூறினார். தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளாரே அப்பா என்று வினோத் அதிக கவனத்துடன், பொறுப்புடன் செயல்படத் துவங்கினான்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம்?

1. உங்கள் குழந்தைகளின் இயல்பான விருப்பத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் விரும்புவதைத்தான் அவர்களும் விரும்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுதந்திரமாக முடிவெடுத்துச் செயல்பட உதவுங்கள்.

2. நல்லொழுக்கம், நற்பழக்கங்கள், சுயகட்டுப்பாடு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் ஆகிய குணங்களை குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும்.

3. உங்கம் குழந்தைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கும். உருவத்தில் உங்களை ஒத்திருக்கலாம். ஆனால் சிந்தனை, செயல்பாடுகளில் வித்தியாசப்படலாம். உங்கள் குழந்தைகள் அவர்களது இயல்பான திறமையை வெளிப்படுத்தி அவர்கம் தங்களைத் தாங்களே அறிய ஊக்கப்படுத்துங்கள்.

4. வேலை செய்வது என்பது திறமையையும் அன்பையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் என்று உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கம். சிறிய அளவில் அவ்வப்போது பொறுப்புகளைக் கொடுத்து குழந்தைகள் அவரவரின் சிறப்புத் திறன்களை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.

5. குழந்தைகள் குழந்தைகள்தான். அந்தந்த வயதில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருக்கும். உங்களுடைய எதிர்பார்ப்பு யதார்த்தமாக இருக்கவேண்டும். பெரியவர்கள் சிந்திப்பதுபோல் இளம் வயதிலேயே உங்கள் குழந்தைகளும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

6. உங்கள் குழந்தைகள் எத்தகைய பொழுதுபோக்கை விரும்புகிறார்கள்? அவர்களது விருப்பம், திறமை ஆகியவற்றை இயல்பாகக் கவனித்து அவற்றை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

7. வேலை உலகத்தை அறிமுகப்படுத்துங்கள். பல்வேறு பணிச்சூழல்களை பார்க்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அவர்கள் விசாலப் பார்வையுடன் பலவற்றை தெரிந்து கொண்டு பின்னர் முடிவெடுக்க முடியும்.

8. பகுதி நேர வேலை, கோடைகாலத்தில் ஏதாவது ஒரு பணியாற்றுவது என்று பழக்கினால்தான் உங்கள் குழந்தைகள் அனுபவம் சார்ந்த அறிவைப் பெற முடியும். சிலநேரங்களில் அவர்கள் விரும்பாத, கடினமான பணியை மேற்கொள்ள வேண்டிய வாய்ப்பும் ஏற்படலாம். அனுபவ அறிவைப் பெறும்போதுதான் எவ்வாறு இடர்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்று அறியும் வாய்ப்புக் கிட்டும்.

9. ஒரு குறிப்பிட்ட வயதைக் கடக்கும்போது உங்கம் குழந்தைகள் உங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து தாங்களாகவே செயல்பட வேண்டும் என்று எண்ணுவது இயல்பே. அத்தகைய சூழலில் எதையும் வலியுறுத்திக் கூறாமல் அவர்களாகவே அறிந்துகொண்டு செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

10. பல வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தி பின்னர் அவற்றில் எந்த வாய்ப்பை உங்கள் மகன் அல்லது மகள் பெரிதும் விரும்புகின்றார் என்பதை அறிந்து அந்தத் துறையில் சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் அவர்கள் தேர்வு செய்த துறையின் நுணுக்கங்களை அறிந்து மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

11. கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்வதற்கான திட்டத்தை உங்களது பிள்ளையே உருவாக்க உதவுங்கள். படிப்புக்கு ஆகும் செலவு, அதை எவ்வாறு ஏற்பாடு செய்யப் போகின்றீர்கள் என்பதை உங்களது குழந்தைகள் அறிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியும் அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்கின்றதா என்பதை குழந்தைகள் அறிந்துகொள்ளப் பழக்க வேண்டும். கல்லூரியில் பயிலும்போது உங்கள் பிள்ளைகளை நண்பர்களைப் போல் நடத்துங்கள்.

12. உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்துக்கு நீங்கள் முழுமையாகப் பொறுப்பேற்க முடியாது. உங்கள் பிள்ளை தனது எதிர்கால வாழ்க்கைக்குத் தானே பொறுப்பேற்கப் பழக்க வேண்டும். இந்தவிதத்தில்தான் உங்கள் குழந்தையின் தனித்தன்மையை நீங்கள் அங்கீகரிக்க முடியும்.

உங்கள் குழந்தைகளிடம் நிர்ப்பந்தம் இல்லாமல் அன்பு காட்டுங்கள். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும். அன்பு அனைத்தையும் நம்பும். உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள்.

ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைப் பார்த்து, ``நீங்கள் எப்போது உங்களைப் பெரியவர்களாக நினைப்பீர்கள்?'' என்று கேட்டார். ஒரு குழந்தை, ``எறும்பைப் பார்க்கும்போது நான் பெரியவனாக நினைப்பேன்'' என்றது. கொசுவைப் பார்க்கும்போது என்னைப் பெரியவளாக நினைப்பேன் என்றது மற்றொரு குழந்தை. ஆசிரியர் அந்தப் பதில்களில் திருப்தி அடையாமல் ஒரு குழந்தையிடம், ``நீ எப்போது உன்னைப் பெரியவளாக நினைப்பாய்?'' என்று கேட்டார். உடனே அந்தக் குழந்தை, தனது பெற்றோரின் அரவணைப்பில் தன்னைப் பெரியவளாக நினைப்பேன் என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது. பெற்றோரின் அரவணைப்பு என்பது ஆக்கிரமிப்பு அல்ல, அது ஒருவகை பாதுகாப்பு உணர்வே.
அந்த வகையில் உங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாவலர்களாக இருந்து, அவர்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது வளர்ச்சியில் உங்களை அடையாளம் காணுங்கள்

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு