புதன், 24 நவம்பர், 2010

வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்

வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்; உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு. மனிதன் மகத்தானவனாகாக ஆக்கும் முயற்சி தான் வாழ்க்கை!

o மனித வாழ்வில் ஏராளமான பிரச்னைகள் நம்மை தினந்தோறும் மோதுகின்றன. நாம் வாழ்வில் நமக்கு நிகழும் சோதனைகளையும், நம் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களையும் யோசித்துப் பார்த்தோமானால், பல சமயம் நமக்குத் தோல்வியும், ஏமாற்றமும், துன்பங்களும் தான் வருகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் நாம் எடுத்த முடிவுதான் என்பது புரியவரும்.

o சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி வாழ்வில் தான் எத்தனை, எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன!

o நமது குழந்தைகளுடனும், மனைவியுடனும் பெற்றோருடனும் இசைபட வாழ்தல், இணைந்து அனுசரித்து பெருமையுடன் வாழ்வது இருக்கிறதே... அதுவும் ஊருக்கு உதவியாக இருப்பதும்தான் பெரிய பாக்கியம்"


o இல்லாதவர்களுக்கு கொடுப்பதில், உதவுவதில் தான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. உலகுடனும், இந்த பிரபஞ்சத்துடனும் இசைபட வாழ்வது இருக்கிறதே... அது, எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆனந்தம்.

o பிறர் பாராட்டையும், ஆமோதிப்பையும், அங்கீகாரத்தையும் பற்றி லட்சியம் செய்யாமல் நாம் நம் பணியில், கொள்கையில் ஈடுபடுவோமானால், பாராட்டும், புகழும் பூனை வால் போல் நம்மைத் தொடர்ந்து வரும்.


o வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு முக்கியமான குணம் - அதிகம் அலசி ஆராயப்படாதது ஒன்று இருக்கிறதென்றால் அது சுயகட்டுப்பாடு தான். வாழ்வில் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் தான் வெற்றி அடைகின்றனர். நம்மை நாமே ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், புற சூழ்நிலையையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.

o பலகீன மனம் மனிதர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது; ‘ வாழ்க்கையே வேண்டாம், உலகமே வேண்டாம்!’ என்று தீர்மானிக்கச் செய்து உயிரையே போக்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது. பிரச்னைகள் நமக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுக்கக்கூடும். நாம் அவதிப்படுவோம். இது உலகில் நிரந்தரமானது.

இதை எப்படி சமாளிக்கலாம் என்று தீர்மானிக்கத் துவங்கினோமானால் நிச்சயமாக நமது மனமே நமக்கு ஒரு வழியைக் காட்டும்.

o பயம், கோபம், பொறாமை, குற்ற உணர்வு, கவலை இவற்றைத் தாழ்த்தும் உணர்ச்சிகள் என்று கூறுகின்றனர். இந்தக் கீழ் உணர்வுகள் மனிதனது சிந்திக்கும் திறனை, சிந்திக்கும் அமைப்பை முடக்கி விடுகிறது என்று கூறு கின்றனர் மன சிகிச்சை மருத்துவர்கள். முடக்கப்பட்ட மனம் செயலற்றுப் போகிறது. முடக்கப் படுவது மட்டுமல்ல; நமக்கு நல்ல யோசனைகளையும், நம்பிக்கையையும் கொண்டு தந்து உதவக் கூடிய நமது மனதின் வாயிற்கதவை இவை சாத்திவிடுகின்றன.

o நாம் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காகச் சில திறமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறோம். நமது திறமைகளைத் தெரிந்து கொள்வோம். இந்த உலகம் முன்புபோல் இல்லை. வெகுவேகமாக மாறி வருகிறது. அதை உணர்ந்து அதற்கு ஈடு கொடுக்க நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் அது நம்மை விட்டு விட்டு, நம்மைப் பழங்குடி மக்களாக்கி விட்டுப் போய் விடும்.

o உண்மையில் சொல்லப் போனால், மாறுபட்ட மனோபாவம் கொண்டவர்களாலே தான் உலகம் முன்னேறியிருக்கிறது. உலக முன்னேற்றமே சமுதாயத்தையும், நிகழ் உலகத்தையும் எதிர்த்துப் போராடியவர் களாலேயே உருவாகி இருக்கிறது. ஏற்றுக் கொண்டவர்களால் அல்ல. இருக்கிறதை இருக்கிறபடி ஏற்றுக் கொண்டவர்கள் ஆட்டு மந்தைக் கூட்டம். சாய்கிற பக்கமே சாயும் செம்மறியாடுகள். எதிர்ப்பவர்களும், புது வழி கண்டு பிடிப்பவர்களுமே முன்னோடிகள்.

o கட்டுப்பாடு இல்லாத, நெறியில்லாத, நிதானமில்லாத வாழ்க்கை, தறிகெட்டு ஓடும் கொம்புக் காளைக்குச் சமம். அது பிறரைப் புண்படுத்துவதுடன் தன் வாழ்விற்கும் ஊறு விளைவித்துக் கொள்கிறது.

o தோல்வி வந்ததென்றால் கலங்காதீர்கள். நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்; ஆனால், தோல்விகளைத் தாண்டித்தான் போக வேண்டும், வெற்றி பெற.

o முதல் வெற்றி சிலநேரம் நமக்கு ஒரு அசாதாரண நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. " எடுத்ததெல்லாம் வெற்றியடையும் " என்ற ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. நமது ஆணவத்தை வளர்த்து விடுகிறது.

o தோல்வி ஏற்பட்டிருந்தால் ஒரு நிதானம் இருந்திருக்கும்; ஒரு பயம் - ஒரு கவனம் இருந்திருக்கும். ஒரு அடக்கம் ஏற்பட்டிருக்கும். அடக்கம், கவனம், நிதானம் - இவற்றை எல்லாம் தோல்விதான் தருகிறது. எனவேதான், தோல்வி ஒரு பாடம் என்று சொல்கின்றனர். தோல்வி நமக்கு பாடம் புகட்டுகிறது. மாறாக, வெற்றியில் நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை - சரியான பாதையில் சென்றிருக்கிறோம் என்பதைத் தவிர அந்த உண்மைகூட வெற்றி பற்றி சிந்திக்கும்போது தான் புலப்படுகிறது. நீங்கள் ஒரு எழுத்தாளர். உங்கள் கதையோ திரும்பத் திரும்பத் திருப்பி அனுப்பப்படுகிறது.


o "தோல்வியே வெற்றிக்கு முதல்படி! " என்று சொல்லும்போது, " தோல்வியைத் தழுவுங்கள்! தோல்வியை வரவேற்று மகிழுங்கள்! " என்று சொல்கிறோமா அல்லது வெற்றி பெறுவதற்கு தோல்வி அடைந்துதான் ஆக வேண்டும். எனவே, தோல்வியை எதிர் பாருங்கள்! என்று சொல்கிறோமா? இல்லை! இல்லவே இல்லை! தயவு செய்து, அப்படி எண்ணி விடாதீர்கள்!

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு