சனி, 22 மார்ச், 2014

பெற்றோருக்கு பக்குவமான பத்து

பெற்றோருக்கு பக்குவமான பத்து * ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும். * அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது. * மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும். * அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும். * குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும். * குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம். * குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும். * பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? - இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். * குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது. * கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது. மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு - இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே" எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ.... வீட்டில் குழந்தைகள்: * எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. * சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். * குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும். * எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும். * குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது. * எல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது. * குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும். * பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும். * குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும். * ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது. பள்ளியில் பிள்ளைகள் * குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள, குறும்புகள் அதிகம் செய்யும் குழந்தையிடம், "ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், ராகினி மிஸ்கிட்டே நல்லா நாலு அடி கொடுக்கச் சொல்றேன்" என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும். அதற்குப் பதில் "நீ படிச்சு பெரிய ஆளாகணும், டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பானவங்க, மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க. குருனா அது உன் டீச்சர் தான், உன்னைப் பெரிய ஆளாக்குறதுல அவங்க பங்கு தான் அதிகம்" என்று பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் இனிமையானவர்களாகக் காட்ட வேண்டும். * பிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். மிரட்டக்கூடாது. * பிள்ளைகள் தங்களைத் தவிர வேற்று மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தர வேண்டும். * பிள்ளைகள் மற்ற சக மாணவர்களுடன் போட்டி போடும் போது அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். * பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். * குழந்தையின் பள்ளிப் பையில் நம் வீட்டு விலாசம், தொலைபேசி எண் அடங்கிய கார்டை வைத்து விட வேண்டும். ஒருவேளை குழந்தைகள் காணாமல் போனாலும் விலாசம் இருப்பதால் குழந்தை பத்திரமாக வந்து சேரும். * பெற்றோரைத் தவிர வேறு முகம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும். * பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தங்க நகைகள் அணிவித்து அனுப்பக் கூடாது. * பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளும் கல்வியும் * பிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. * பிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் கவனமும் சிதறாது. படிக்கும் ஆர்வமும் அதிகமாகும். * பிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடக் கூடாது. அதற்குப் பதில் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். * கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் கராத்தே, பாட்டு, நடனம், யோகா என்று பலவித வகுப்புகளுக்கு அனுப்பும் போது குழந்தைகள் எதிலும் ஜொலிக்காமல் சோர்வடையக் கூடும். எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு சில வகுப்புகளில் மட்டும் சேர்த்து விடலாம். * "காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப மாலை வேளைகளிலே குழந்தைகளை விளையாடவும் விட வேண்டும். * அழகான ரோஜாவில் முட்களா? என்று சிந்திப்பது எதிர்மறை சிந்தனை, முட்களில் இத்தனை அழகான ரோஜாவா? என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். * பிள்ளைகளை ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கப் பழக்க வேண்டும். காலை நேரப் பரபரப்பில், "சீ எங்கே பாக்ஸ்" என்று பதட்டப்படத் தேவையில்லை. * மனிதாபிமானம், அடுத்தவருக்கு உதவும் குணம் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும். * நம் கோபம், அவசரம், பதட்டம் என்று எதனையும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது. * குழந்தைகளிடம் பொறுமையும் கனிவும் மிகவும் முக்கியம். குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்: * சுத்தம், சுகாதாரம், சத்துள்ள ஆகாரம் ஆகிய மூன்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். * பிள்ளைகள் தங்கள் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழக்க வேண்டும். * சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கத்தியோ துன்புறுத்தியோ உண்ண வைக்காமல் சிறிது விட்டுப் பிடிக்கலாம். * ஒரே மாதிரி சமைக்காமல் குழந்தைகளுக்கு கேரட், பீட்ரூட் போன்ற விதவித வண்ண உணவுகளைச் சமைத்துத் தர வேண்டும். உணவை அவர்களுக்குப் பிடித்ததாக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏ, பி, சி போன்ற வடிவங்களில் தோசை வார்த்துத் தரலாம். * பாதாம்பருப்பைப் பொடித்து பாலில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை பிள்ளைகளுக்குக் கொடுத்து வர, அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். கேரட்டைத் துருவி தேனில் கலந்து கொடுத்தாலும் புத்திக்கூர்மை ஏற்படும். * தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும். * கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது. * தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகள் உணவு உண்ணும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது. * உணவின் அருமையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களைக் கண்டிப்பாகத் தர வேண்டும். உண்ண மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும். * குழந்தைகளுக்கு எந்த விதமான உடல்-மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளும் சேமிப்புப்பழக்கமும் * பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும். * பிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும். * பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம். அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும். * குழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது. குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும். * செலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது. குழந்தைகளின் வெற்றி-தோல்வி * பிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள். * பிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பல்வேறு போட்டிகளில் சேரச் சொல்லுங்கள். * பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஒவ்வொரு முறை பாராட்டு வாங்குவதற்காகவே நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள். * வெற்றியானாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, எல்லாமே வாழ்க்கையின் அங்கங்கள் என்பதைப் புரிய வையுங்கள். * பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும், போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். * பிள்ளைகள் எந்த விஷயத்திலாவது தோல்வியடைந்தால் திட்டாமலும் சோகத்தை வெளிக்காட்டாமலும் அடுத்த முறை வெல்லலாம் என்று ஊக்கப்படுத்துங்கள். * குழந்தைகளைப் பெருமையாக மற்றவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும். * ஆண் என்றால் உயர்ந்தவர், பெண் என்றால் தாழ்ந்தவர் என்ற பேதத்தையோ சாதியையோ பிள்ளைகள் மனதில் விதைக்கக் கூடாது. * நாம் எப்படி நடக்கிறோமோ அது போலவே தான் பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகள் எதிரில் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். * குழந்தை வளர்ப்பில் தந்தை-தாய் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் பெருமையில்லை. இளமையிலே அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும் தர வேண்டு.. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்ததும் உறவினர்கள் பார்க்க வந்து தாய் மற்றும் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்காமல் சில நாட்கள் கழித்து குழந்தையை பார்த்து கொஞ்சுவதே மிகவும் நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு மற்றவர்கள் தூக்கி கொஞ்சாமல் இருப்பது சுத்தமானது... சுகாதாரமானது! குழந்தைக்கு ரோல்மாடலே பெற்றோர்கள்தான். அவர்கள் தங்கள் கடமைகளை சரியான நேரத்தில், ஒழுங்காக செய்தாலே குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 12 மணி வரை டிவி பார்ப்பது, காலையில் தாமதமாக எழுவது, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது போன்ற பெற்றோரின் பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பதையோ, வெளியே செல்வதையோ அல்லது யாரிடமாவது ஜாலியாக பேசுவதையோ தவிர்ப்பது நல்லது. குழந்தைக்கு சேலை மற்றும் இதர துணிகளால் தொட்டில் கட்டுவது கூடாது. இதனால் குழந்தைக்கு பல தீமைகள் ஏற்படும். குழந்தை தன் விருப்பத்திற்கு கை, கால்களை ஆட்டவும், புரண்டு படுக்கவும் முடியாது. தன் நெஞ்சு மற்றும் உடம்பை குறுக்கிக் கொண்டு தூங்க வேண்டிய சூழல் ஏற்படும். காற்றோட்டமும் குறையும். இதனால் குழந்தைக்கு மார்பில் மூக்கடைப்பும், சளியும் ஏற்படும். மேலும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் அடிக்கடி விழித்துக் கொள்ளும். இதனால் தாய்க்கும் தூக்கம் கெடும். 'ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது' என்பது பழமொழி. சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம் பிடித்தால் ஊட்டுவதை நிறுத்துங்கள். சாப்பாட்டைக் கண்டால் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டாம். சாப்பாடு வேண்டும் என்று குழந்தை கேட்கும் வரை கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருக்கவும். வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடும் போது குழந்தைக்கும் சாப்பாடு வைத்து மற்றவர்களை பார்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். நாளடைவில் குழந்தைக்கு நல்ல சாப்பாட்டு பழக்கத்தை இது உருவாக்கும். குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு செய்வது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தையை மிஞ்சித் தான் இருப்பார்கள். பெற்றோர்களின் ஊக்குவிப்பினால் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகமாக வேண்டும், மேலும் நீங்கள் கொடுக்கும் பயிற்சியால் குழந்தை மிகவும் திறமைசாலியாக மாறும் சூழல் ஏற்படும். ஆரம்பத்தில் தோல்வி கண்டாலும் ஊக்குவித்தால் குழந்தைகள் முயற்சி செய்து வெற்றி அடைவார்கள். குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பது தவறு. கண்டிப்பு இல்லாமல் மிகுந்த செல்லத்துடன் வளர்ப்பதும் தவறு. குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிக்காமல் பயப்படுவார்கள். கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வளர்த்தால், குழந்தை பெற்றோரை தாம் நினைத்ததைச் செய்யும் அடிமை என்று நினைத்து விடுவார்கள். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும். அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் அடிபணியக் கூடாது. தொடர்ந்து குழந்தை அடம் செய்ய ஆரம்பித்தால், அலறினால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம். இது கஷ்டம்தான் என்றாலும் பொறுமையாக பெற்றோர் இருந்தாலே, அடம் செய்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். பின்னர் அமைதியாக இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாயின் பொறுப்பு மிக முக்கியம், அவசியமானதும்கூட. கர்ப்பிணித் தாயின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் அமையும் என்பதால், பேறுகாலத்தின் போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். * குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். * வழக்கத்தை விட, ஒன்று அல்லது இரண்டு முறை கூடுதலாக சாப்பிட வேண்டும். * பழங்கள், கீரைகள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். * உங்கள் குழந்தைக்கு பாலூட்ட ஆயத்தாமாகுங்கள்; அதற்கு தடையாக ஏதேனும் பிரச்சினை இருக்குமென்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். தாய்ப்பால்: * உங்கள் குழந்தைக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியது தாய்ப்பால்தான்; அது கடவுள் உங்கள் குழந்தைக்கு வழங்கியது. * குறித்த கால அளவுக்கு முன்னர் பிரசவித்த தாயின் பால், குறித்த காலம் நிறைவடைந்த தாயின் பால், இவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் வித்தியாசப்படும். * தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக புத்திசாலித்தனமும் மூளை வளர்ச்சியும் உடையவர்களாக இருப்பர். * வயிற்றுப்போக்கு, மூச்சுப் பிரச்சினைகள், காதில் வரும் நோய்களின் தொற்று போன்றவற்றை எதிர்க்கக்கூடிய சக்தி பெற்றிருப்பர். * ஒவ்வாமை என்ற அலர்ஜி ஏற்பட வாய்ப்பு குறைவு. * வளரும்போது அதிக எடை மற்றும் இரத்த திசுக்களில் பாதிப்பு (Arteries) ஏற்பட வாய்ப்பு குறைவு. * தாய்ப்பால் அளிப்பது பாலூட்டும் தாய்க்கும் நன்மை பயக்கும். பிள்ளை பேற்றுக்குப் பின்னர் கருப்பை பழைய அளவை பெறவும், கருக்குழாய் மற்றும் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பைத் தடுக்கவும், உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது உதவும். பாலூட்டுவதே உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நெருக்கமான உறவை வளர்க்க உதவும் முதல் காரணி. தாய்ப்பால் ஊட்டும் முறைகள்: * பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை மட்டுமே அளிக்க வேண்டும். அதனுடன் வேறு எந்த உணவையும் கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. தண்¬ரும் கொடுக்கக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும், மருந்து அல்லது வைட்டமின் சத்து மருந்து ஆகியவற்றை கொடுக்கலாம். * சுகப்பிரசவம் அடைந்தோர் அடுத்த அரைமணி நேரம் கழித்தும், அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடந்தால், நான்கு மணி நேரம் கழித்தும் பாலூட்ட ஆரம்பிக்கலாம். அதற்கு முன் குழந்தைக்கு சர்க்கரை தண்ணீ¬ர், கழுதைப்பால் இவற்றை கொடுக்கக்கூடாது. பிரசவத்திற்குப் பின் முதல் இரண்டு முதல் நான்கு நாட்களில் வரும் தாய்ப்பால் அடர்த்தியாக இருக்கும். இது புரதச்சத்தும், நோய்த் தொற்றை தடுக்கும் சத்தும் நிறைந்தது. ஆகவே, அதை குழந்தைக்கு கொடுக்கத் தவறக்கூடாது. * தேவைப்படும்போதெல்லாம் பாலூட்டலாம். தாய்ப்பாலிலேயே தேவையான சக்தி, ஊட்டச்சத்து மற்றும் நீர் இருப்பதால், வெப்பமான காலநிலைகளிலும் இவ்வாறே செய்யலாம். * பாலூட்டும் தாய், வேலைக்குச் செல்பவராக இருந்தால், அலுவலகம் செல்லும் முன்னரும், வந்த பின்னரும், இரவில் தேவைப்படும்போதும் மற்றும் விடுமுறை நாட்களிலும் தவறாது பாலூட்ட வேண்டும். வேலைக்குச் செல்லும்போது சுத்தமான கலன் ஒன்றில் தாய்ப்பாலை சேகரித்து, கிண்ணம், கரண்டி மற்றும் சங்கு (Paladai) மூலம் குழந்தைக்குக் கொடுக்கலாம். புட்டி மூலம் ஊட்டுவதைத் தவிர்க்கவும். * குழந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள்: ஆறாம் மாதத்திலிருந்து திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதனுடன், குழந்தை விரும்பும்போதெல்லாம் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். ரவை, மசித்த சாதம், பாயாசம், தானியங்களின் கஞ்சி இவற்றை சர்க்கரை, வெல்லம் மற்றும் எண்ணெய், நெய் சேர்த்து சமைத்துக் கொடுக்கலாம். காய்கறிகளை சமைத்து கொடுக்கலாம். முதலில் ஒன்று அல்லது இரண்டு மேசை கரண்டிகளில் ஆரம்பித்து, ஒன்று முதல் மூன்று சிறு கிண்ண அளவு வரைக்கும் ஊட்டலாம். ஏழு முதல் ஒன்பது மாதங்கள்: வீட்டில் சாப்பிடும் சாதாரண உணவு வகைகளை சற்று மசித்து கொடுக்கலாம். அவற்றுடன் வகைக்கு ஏற்ப சர்க்கரை, வெல்லம், எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை ஊட்டலாம். பின்னர் வெள்ளை கருவையும் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள்: வீட்டில் சமைக்கும் உணவுகளை கொடுக்கலாம். ஒன்று முதல் இரண்டு வயது வரை: குழந்தை விரும்பும் பொழுது தாய், பாலூட்டலாம். மற்றபடி, வீட்டில் சமைக்கும் உணவை ஒன்றரை கிண்ணம் அளவில் ஒரு நாளில் ஐந்து முறை கொடுக்கலாம். குழந்தை சாப்பிட தனி தட்டு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். சாப்பிடும் முன்னர், சோப் உபயோகித்து நன்றாக நீரினால் கழுவ வேண்டும். குழந்தை சாப்பிடும்போது, பக்கத்தில் உட்கார்ந்து, ஊக்குவியுங்கள். இரண்டு வயதுக்கு மேல்: வீட்டில் சமைக்கும் உணவினை மூன்று வேளைக்குக் கொடுங்கள். அதனுடன் இருவேளைகளுக்கு வாழைப்பழம், பிஸ்கட் போன்ற சத்துள்ள சிறுஉணவுகளை கொடுக்கலாம். குழந்தைக்கு உணவு பரிமாறும் முன்னர் உங்கள் கைகளை சோப் உபயோகித்து கழுவுங்கள். உணவு உண்ணும் முன்னர், கைகளை சோப் உபயோகித்து நன்றாக நீரினால் கழுவ வேண்டும் என்பதை குழந்தைக்கு கற்று கொடுங்கள். குழந்தை நோய்வாய்ப்பட்டு குணமானதும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கூடுதலாக உணவு கொடுங்கள். நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது, திரவ உணவுகளை அதிகமாகக் கொடுங்கள். மருத்துவர் அறிவுறுத்தும் கால அட்டவணைப்படி, தடுப்பு ஊசிகளைப் போடுங்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால்: தொடர்ந்து பாலூட்ட வேண்டும். வீட்டில் கிடைக்கும் திரவ உணவுகளை கூடுதலாக வழங்கலாம். உடலின் நீர் இழப்பை சரிக்கட்டும் கரைசலை (Oral Rehydration Solution) தயாரித்துக் கொடுக்க வேண்டும். கரைசலை (ORS) தயாரிக்கும் முறை: கைகளை நன்கு கழுவிய பின்னர், இதற்கான பொடி அடங்கிய பொட்டலத்தைப் பிரித்து, அனைத்தையும் சுத்தமான பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ளவும். காய்ச்சி, ஆறிய நீரை 1 லிட்டர் எடுத்து, அதை பாத்திரத்தில் ஊற்றி, அனைத்து பொடியும் கரையும்படி நன்கு கலக்கவும். இப்படி தயாரித்த கரைசலை 24 மணி நேரத்துக்குள் உபயோகித்துக் கொள்ளவும். மறுநாளுக்கு புதிதாகத் தயாரிக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குப் பின்னர் மீதியாகும் கரைசலை திரும்ப உபயோகிக்கக்கூடாது. * இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைக்கு, ஒவ்வொரு முறை வயிறு கழிந்த பின்னரும் 50 முதல் 100 மி.லி. அளவு கரைசலை மேசை கரண்டி மூலம் ஊட்டலாம். * இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 100 முதல் 200 மி.லி. கரைசலைக் கொடுக்கலாம். * பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும் போதெல்லாம் கொடுக்கலாம். * வயிற்றோட்டம் நின்றவுடனேயே, இந்தக் கரைசலை கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும். வீட்டில் தயாரிக்கக்கூடிய திரவக்கரைசல்கள்: * ஒரு லிட்டர் நீரில் எட்டு மேசைக் கரண்டி அளவு சர்க்கரை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி அளவு உப்பை கரைத்து கிடைக்கும் கரைசல். * சாதம் வடித்த நீரில் உப்பை கரைத்து கிடைக்கும் கரைசல், உப்பு கலந்த லஸ்ஸி, தேங்காய் தண்ணீ¬ர், சூப், பருப்பு நீர். * வயிற்றோட்டத்தின்போது, உப்பு கலக்காத குளுக்கோஸ் தண்ணீ¬ர், சர்க்கரை கலந்த பழச்சாறு, சோடா மற்றும் புட்டிகளில் கிடைக்கும் குளிர்பானங்கள், தேநீர் போன்றவற்றை குழந்தைக்குத் தரக்கூடாது. * குழந்தை தொடர்ந்து பால் அருந்த மறுத்தால் அல்லது மிகக்குறைவாக அருந்துவதோடு, இரத்தமாக வயிறு கழிதல், காய்ச்சல் இவற்றால் அவதிப்பட்டால், மருத்துவரை அணுகவும். தடுப்பூசிகள் போட்ட பின்னர் கவனிக்க வேண்டியவை: * BCG தடுப்பூசி போடப்பட்ட பின்னர், இரண்டு வார காலத்துக்குள் சிறிய வீக்கமும் புண்ணும் ஏற்படலாம். இதற்குச் சிகிச்சை தேவையில்லை. தானாகவே சரியாகி விடும். * DPT ஊசிக்குப் பின்னர், காய்ச்சலும், வலியும் வரலாம். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து (Paracetamol) கொடுத்தால் போதும். * சின்னம்மை (Measles) தடுப்பு ஊசிக்குப் பின்னர், காய்ச்சலும், மிகச் சிறிய தடுப்புகளும் உருவாகலாம். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து கொடுத்தால் போதும் * DT ஊசிக்குப் பின்னர், காய்ச்சல் வரக்கூடும். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து கொடுத்தால் போதும். கோடை விடுமுறையில் வீட்டில் எங்கு பார்த்தாலும் குழந்தைகளின் ராஜ்ஜியம்தான்! அவர்கள் விளையாடும் விளையாட்டுகளும், கூச்சலும், கும்மாளமும் பரவலாக எதிரொலிக்கும். பெற்றோர்கள் தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்து கொண்டு ரிமோட்டை சுழற்றியபடி, டிவி பார்க்காதே... விளையாடாதே என்று கூறினால் எப்படி கேட்பார்கள்? நம் குழந்தைகளுக்கு நல்ல குண நலன்களையும், ஒழுக்கத்தையும், பழக்க வழக்கங்களையும் நாம்தான் கற்றுத்தர வேண்டும். அவர்கள் படிப்பில்... தொழிலில்... வேலையில் வெற்றி பெற வேண்டுமென்றால், அதை நாம் கற்றுத் தந்துவிட்டால், வாழ்க்கையில் அவர்கள் பிரகாசிப்பது ரொம்ப சுலபம். படிப்பும், வேலையும் அவரவர்களுக்கு இருக்கும் திறமைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப அவர்கள் தேர்ச்சி பெற்று விடுவார்கள். படிப்பிலும், தொழிலிலும் கிடைக்கும் வெற்றி நிலைக்க வேண்டும் என்றால், அது நாம் கற்றுத்தரும் பண்புகளால்தான் முடியும். நல்ல விஷயங்களை போதனையாக... அறிவுரையாக சொல்லி திருத்துவதை விட கதைகள், உதாரணங்கள் மூலம் எடுத்துக் கூறினால் அவர்களை எளிதாக சென்றடையும். குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமாக சொல்லிக் கொடுக்க வேண்டியது, * வெற்றியை அடைய குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்வது... * அம்மாவிடமிருந்து உறுதியான மறுப்பு வரும்போது அதை செய்யக்கூடாது... * ஏதாவது கலை அல்லது விளையாட்டில் சிறப்பு கவனம்... * அனுபவத்தால் உணரக்கூடிய சிறிய வயது விஷமங்களை கண்டித்துக் கொண்டே இருக்காமல், அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளவிடுவது. * ஒரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது. * தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை... நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான். உங்களுடைய குழந்தைகளுக்கு சம்பாதிக்கவோ அல்லது பணத்தை சேர்த்து வைக்கவோ கற்றுத் தர வேண்டாம். நல்ல குணங்களை... வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள். சம்பாதிக்கவும், சேமிக்கவும் அவர்களே கற்றுக் கொள்வார்கள் பெற்றோர் ஊருக்குப் போய்விட்டால், சில குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். சிலர் லைட் வெளிச்சமில்லாத தெருவைக் கடந்து, கடைக்குச் செல்ல அண்ணனின் துணையைத் தேடுவார்கள். இன்னும் சில பிள்ளைகள் வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால், ஹால் பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்கள். வேறு சில குழந்தைகளுக்கு இரவில் பாத்ரூமுக்குச் செல்வது வாழ்க்கையின் மிகப் பெரிய சவால். பெற்றோர் மனம் நொந்துகொள்ளும் அளவுக்கு விதவிதமான பயங்களோடு இந்தக் குழந்தைகள் அல்லாடுவதற்கு என்ன காரணம்? குழந்தைகள் நல நிபுணரும் வளர் இளம் பருவ சிறப்பு மருத்துவருமான டாக்டர் யமுனா அக்கறையுடன் கூறிய தகவல்கள் இவை: "குழந்தைகள் பிறந்த 2, 3 மாதங்களிலேயே அம்மாவின் நடவடிக்கைகளையும் சுற்றுப்புற அசைவுகளையும் கவனிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவற்றை அப்படியே பிரதிபலிக்கவும் செய்வார்கள். ஆறேழு மாதங்கள் ஆன நிலையில், குழந்தையை இரவில் உறங்க வைப்பதற்குப் பெற்றோர் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். ஓரளவுக்கு மேல் கண்விழிக்க முடியாத பெற்றோர் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம், குழந்தைகளைப் பயமுறுத்துவதுதான். "பூச்சாண்டி வந்து உன்னைத் தூக்கிட்டுப் போயிருவான்!" என்று டென்ஷனை உருவாக்குவார்கள். இதற்கெல்லாம் மசியாமல், "நானாவது, தூங்குறதாவது?" என்று கேட்பது போல குழந்தை நக்கலாகச் சிரிக்கும். ஆனால், அப்போது குழந்தையின் மனசில் பயம் தூண்டிவிடப்படுகிறது என்பதுதான் உண்மை. எட்டாவது மாதத்தில் குழந்தை குப்புற விழுந்து நகரத்தொடங்கும். அதன் பார்வையில் இருளென்றும் வெளிச்சமென்றும் பேதம் கிடையாது. தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும் தயங்காமல் வாயில் வைத்து ருசி பார்க்கும். பெற்றோரால் தொடர்ந்து குழந்தையைக் கண்காணிக்க முடியாது. அதனால் குழந்தையின் நகர்வைக் கட்டுப்படுத்தவே முயல்வார்கள். "அங்கே இருட்டு. போகாதே. உள்ளே பூதம் இருக்கு!" என கட்டுக்கதைகளைச் சொல்லி, குழந்தையை ஒரே இடத்தில் இருக்கச் செய்ய முயற்சி நடக்கும். இதோ, குழந்தைக்கு இன்னொரு டோஸ் பயம் ஏற்றியாச்சு! சோறு ஊட்டும் பருவத்திலும் குழந்தையைப் பயங்கள் தொடர்கின்றன. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையிடம் அபார்ட்மென்ட் செக்யூரிட்டியையோ, பெரிய மீசை வைத்த எதிர்வீட்டு மாமாவையோ காட்டி பயமுறுத்தாத பெற்றோர் இல்லை. யூ.கே.ஜி. படிக்கும் குழந்தை சேட்டை செய்தால், அதைக் கட்டுப்படுத்த ஸ்கூல் டீச்சரின் பேரை மந்திரம் போல உச்சரிக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குழந்தை விளையாடக் கிளம்பினால், "கீழே விழுந்துரப் போறே!", "தலையில அடிபட்டுரும்!" "எப்ப பார்த்தாலும் விளையாட்டுதானா?" என்று நெகட்டிவ் பேச்சுகளால் குழப்புவதும் நடக்கும். பஸ் பயணங்களின்போது ஆர்ப்பரிக்கும் குழந்தையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் பெற்றோர் நாடுவது, சின்னச் சின்ன பொய்களையும் பயங்களையும்தான். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் அலுப்புத் தாங்காமல் குழந்தை அழும்போது, "அழுதால் பஸ்லருந்து இறக்கி விட்டுருவாங்க!" என்று சொல்வது தவறான அணுகுமுறை. கவனத்தைத் திசை திருப்புவதுபோல பொருட்களைக் கொடுத்தும் அழகான கதைகள் சொல்லியும் அந்த இடத்தில் சாத்தியமான விளையாட்டுகளில் ஈடுபட்டும் குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதுதான் சரி. எனினும் பொறுமையும் கற்பனைத்திறனும் தேவைப்படுகிற இந்த வேலைகளுக்கு ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேல் ஆகும். ஆனால் பயமுறுத்தி அடக்குவதற்கு ஓரிரு நிமிஷங்கள் போதும். அதனால்தான் பெரும்பாலான பெற்றோர், பயமுறுத்தும் டெக்னிக்கைப் பின்பற்றுகிறார்கள். பல குழந்தைகளுக்குப் படிப்பும் பரீட்சையும் அச்சமூட்டும் விஷயங்கள் ஆனதற்குக்கூட இந்த டெக்னிக்தான் காரணம். தேர்வில் எழுதத் தேவையான அளவுக்குப் படித்துவிட்டதாக ஒரு யூ.கே.ஜி. பையன் சொல்லும்போது, பெற்றோர்கள் அதை நம்புவதே இல்லை. அவன் அவர்களுக்கு முன்னால் கர்மசிரத்தையுடன் படித்துக் காட்ட வேண்டும். தேர்வுக்குப் புறப்படுவதற்கு முன்னால், இரண்டு மூன்று முறை அதை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகுதான் பெற்றோருக்கு நம்பிக்கை வரும். இங்கே பையனின் நம்பிக்கைக்கு இடம் கிடையாது. இந்த அணுகுமுறையால் குழந்தையின் சுய மதிப்பீட்டுத் திறன் குறைந்துவிடுகிறது. மழலைப் பருவத்தில் குழந்தைக்குள் ஊடுருவும் பயம், அவன் வளர்ந்த பிறகு பல விஷயங்களைத் தவறான திசையில் தீர்மானிக்கிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே குறைந்தபட்சம் 25 வருட வித்தியாசம் இருக்கிறது. பெற்றோர் தங்கள் காலத்துக்குப் பிறகு வாழ்வின் நெருக்கடிகளைத் தைரியமாக எதிர்கொள்ளும்படி தயார்படுத்துவதுதான் பாசிட்டிவ் வளர்ப்பு முறை." இருட்டைக் காட்டி பயமுறுத்தக் கூடாது. இருட்டான அறையை வெளிச்சமாக்கக் கற்றுக் கொடுப்போம். மரணம் குழந்தைகளுக்குப் பெரும் புதிர். மரண ஊர்வலம் அவர்களுக்குப் பீதியைக் கிளப்பும் சம்பவம். இவற்றை முடிந்தவரை அறிவியல் பூர்வமாகப் பேசிப் புரிய வையுங்கள். இயற்கையைக் குழந்தைகள் ரசிப்பதில் பயம் ஒரு தடையாக இருக்க வேண்டாமே. நெகட்டிவ் அறிவுரை தவறான அணுகுமுறை. குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது என்பது ஒரு கலை. அவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே கவனித்து, அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம், புரியும் வண்ணம் சொல்லிக் கொடுத்தால் மட்டுமே காது கொடுத்து கேட்பார்கள், அதை மனதில் வைத்து நடந்து கொள்வார்கள்! எந்த குழந்தையும் ஒரு வயதிலிருந்து 12 வயது வரைதான், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். 12 வயதுக்கு மேல் "டீன் ஏஜ் பருவம்" தொடங்கி விடுவதால் எதையும் கேட்காமல், அவர்களுக்குள்ளேயே கேள்வியும், பதிலுமாய் திரிவார்கள். அப்போது நீங்கள் அறிவுரை சொல்வதை குறைத்துக் கொள்ளவேண்டும். இந்த காலக்கட்டத்தில் யார் எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக நடந்து கொள்ள மனம் துடிக்கும். இந்த சமயத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு நல்ல நண்பனாக இருந்தால் போதும். அப்போது அவர்களை அதட்டுவதோ, மிரட்டுவதோ அவர்களை முரடர்களாக்கி விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 19 வயதுக்கு பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் வழிக்கு மாற ஆரம்பிப்பார்கள். 19 வயதுக்கு மேல் அவர்களை எளிதாக வளைக்க முடியும். இந்த சமயத்தில் நீங்கள் கற்றுக் கொடுக்க நினைக்கும் விஷயங்களை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுக்கலாம். என்ன கற்றுக் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் விருப்பமான படிப்பை படிக்க அனுமதித்தால் கண்டிப்பாக பெற்றோர் சொல்வதை கேட்பார்கள். "என் அனுபவத்தில் இதுதான் உன் எதிர்காலத்துக்கு உகந்த படிப்பாக இருக்கும்" என்று நீங்களாக உங்களுக்கு பிடித்த கல்வியை உங்கள் பிள்ளைகள் மேல் திணிக்கக்கூடாது. உங்களுடைய வாரிசுகள் செய்ய விரும்பும் தொழிலில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதாலோ, அல்லது அதுபற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதாலோ அவர்களின் முடிவு தவறு என்று ஒதுக்கி விட முடியாது. மேலும், பிடிக்காத விஷயத்தை செய்யச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தினால் பாதகமான விளைவுகளே ஏற்படும். ஒருவேளை உங்களுக்கு சொந்தமாய் நிறுவனம் இருந்து அதில் உங்கள் வாரிசை அமரவைக்க விருப்பப்பட்டால் எடுத்த உடனேயே தலைமை பதவியைத் தர வேண்டாம். ஒரு தலைவனாக இருப்பதற்கு முன்பாக, ஓர் ஊழியனாக இருப்பதே சிறந்த அனுபவத்தை தரும். "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது" என்ற கதையாக... வெறும் படிப்பு மட்டுமே முழு அனுபவத்தை தராது. பயிற்சி என்று வரும்போது அதை உங்கள் நிறுவனத்தில் கொடுக்க வேண்டாம். அப்படியே வேறு வழியின்றி உங்களுடைய நிறுவனத்திலேயே பயிற்சி கொடுத்தால், "நம்ம நிறுவனம்தானே... இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... கேள்வி கேட்க ஆளில்லை" என்ற நினைப்பு வரும். மேலும் மற்றவர்களும், "நாளைய முதலாளி" என்ற நினைப்பில் தவறை தட்டிக் கேட்கத் தயங்குவார்கள். இதனால் உங்களுடைய வாரிசுக்கு முழுமையான பயிற்சி கிடைக்காது. இந்த பிரச்சினைகளைத் தவிர்க்க, வேறு நிறுவனத்தில் பயிற்சி என்பதே சிறந்த வழி. அப்படி வேறு நிறுவனத்தில் பயிற்சி கொடுக்க விரும்பாதபட்சத்தில், உங்கள் நிறுவனத்தில் பயிற்சி கொடுக்கும்போது, நீங்களே நேரடியாக பயிற்சி கொடுக்க வேண்டாம். வேறு ஒரு அதிகாரியின் கீழ் வேலை பார்க்கச் சொல்லி பயிற்சி கொடுங்கள். அந்த அதிகாரியிடம், "முதலாளியின் மகன் என்று எந்த சலுகையும் காட்ட வேண்டாம்" என்பதையும், "சாதாரணமாக ஒரு ஊழியரை எப்படி நடத்துவீர்களோ... அப்படி நடத்தினால் போதும்" என்பதையும் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். இப்படி நடத்துவதைக் கண்டு, உங்கள் வாரிசுகள் அப்போது மனம் நொந்து போனாலும், பின்னாளில் இதை மிகவும் பெருமையாக நினைப்பார்கள்! இப்படித்தான் நீங்களும் இருந்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை எப்படி... எப்போது சொன்னால் கேட்பார்கள் என்பதையும் அறிந்து, உங்களுடைய எண்ணங்களை, விருப்பங்களை அவர்களுக்கு புரிய வைத்தால், கண்டிப்பாக அவர்கள் உங்களைப் போல் பெரிய ஆளாக வருவார்கள். குழந்தை வளர்ப்பு:குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது... குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன? கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே" என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்" என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே" என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாகிட்ட சொல்லிடுவேன்" என்று மிரட்டும். குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும். குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்கும் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்" என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர். குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும். படிப்பு விஷயத்தில் குழந்தைகளை கண்டிக்கும்போது, "பாசிடிவ் அப்ரோச்" இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்" என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்" என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக்கூடாது. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். எதற்கெடுத்தாலும் குழந்தையை அடிக்காதீர்கள். அன்பாக சொல்லி திருத்துங்கள். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். ஆக குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கீடுதான் அதிகமாக இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள். வீட்டிலிருந்து உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தால், நடந்து செல்லுங்கள். அல்லது சைக்கிளில் செல்லுங்கள். தூரம் அதிகமிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் ஆட்டோ, வேன் போன்றவற்றை நாடுவதற்கு முன் அதில் எத்தனை குழந்தைகளை அதிகப்பட்சம் ஏற்றுகிறார்கள் என்பதையெல்லாம் தீர விசாரியுங்கள். உங்கள் குழந்தைகள் அதில் சௌகரியமாக, பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வழி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டபின், குழந்தைகளை வண்டியில் ஏற்றுங்கள். தொடக்கத்திலேயே இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி முடிவெடுப்பது, பல அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு உதவும். புதிய பள்ளி, புதிய வகுப்பு, புதிய மாணவர்கள், புதிய ஆசிரியர்கள் குறித்த லேசான தயக்கம், பயம் இரண்டாவது படிக்கும் மாணவனுக்கும் இருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் இருக்கும். இது இயல்பு. சில மாணவர்களுக்கு அவர்களுடைய பழைய வகுப்பு நண்பர்களை, ஆசிரியர்களைப் பிரிய மனம் வராது. இந்த மாற்றங்களை எல்லாம் அவர்களின் மனம் நோகாமல் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் புதிய வகுப்புகளில் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும். எல்லா பள்ளிகளிலும் அனேகமாக விடுமுறை நாளிலேயே புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் தந்துவிடுவார்கள். அந்தப் புத்தகங்களுக்கு அட்டை போடும்போது உங்கள் குழந்தைகளிடம், "அடுத்த வருஷம் வரைக்கும் இந்த அட்டையை கிழிக்காமல், பக்கங்களை மடிக்காமல் வைத்திருக்கவேண்டும்... நாங்கள்லாம் அந்தக் காலத்திலே ஸ்கூலுக்குப் போகும்போது, அவ்வளவு ஒழுங்காக புத்தகங்களை டைம்-டேபிள் பிரகாரம் எடுத்துட்டுப் போய், கொஞ்சம் கூட கிழிக்காமல் எடுத்து வருவோம். இப்படி எந்தத் தொணதொணப்பும் இல்லாமல் அட்டையைப் போட்டுக் கொடுங்கள். நீங்கள் வெளியில் நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால், திரையுலக நட்சத்திரங்களின் படங்களை அட்டையில் போட்ட நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். இரண்டாம் வகுப்பு போகும் குழந்தையாக இருந்தாலும் சரி, பிளஸ் டூ படிக்க இருக்கும் வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் சரி, விடுமுறை நாளில் கொட்ட கொட்ட முழித்திருந்து எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை திகட்டத் திகட்ட பார்த்துவிட்டு, மறுநாள் காலையில் 8, 9 மணிக்கு எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். விடுமுறை கழித்து பள்ளிகள் திறக்கும் நாளில், இந்த வழக்கத்தை திடீரென்று மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வதற்கு உங்களின் குழந்தைகளுக்கு பயிற்சி அளியுங்கள். இத்தனை நேரத்திற்கு மேல் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று நினைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, நீங்களும் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும். வளர் இளம்பருவத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பருவம். வீரதீரச் செயல்களுக்கும், இனக் கவர்ச்சிக்கும் ஆளாகும் பருவம். அவர்களின் நட்பு வட்டத்தை கவனியுங்கள்.... அவர்கள் கூடுமிடும்... அவர்களின் பேச்சு... அவர்களின் ரசனை போன்றவற்றை உற்றுக் கவனியுங்கள். படிப்பில் அவர்களின் முன்னேற்றம், விளையாட்டில் மற்ற கலை வடிவங்களில் அவர்களுக்கிருக்கும் ஆர்வம் போன்றவற்றுக்கான பாராட்டை உங்களிடம் அவர்கள் நிச்சயமாக எதிர்பார்க்கும் பருவம். - by.ujeyanthan.B.Ed(Hons)

லேபிள்கள்:

குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவது

குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவது பெரும்பாலான வீடுகளில் தங்களது குழந்தைகளை அவர்களது உடன் பிறந்தவர்களுடனோ அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடனோ ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாகிவிட்டது. இப்படி குழந்தைகளை கம்பேர் செய்வது நல்லதா? முன்பெல்லாம் நம்முடைய வீடுகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு குழந்தைகளாவது இருக்கும். அவர்களை வளர்ப்பது குறித்து யாரும் பெரிதாக எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அதோடு அவர்களுக்கு அடுத்த குழந்தையின் தேவைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ அதிகம் இருக்காது. ஒவ்வொரு குழந்தையும் இன்னொரு குழந்தையின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றோ நம்முடைய வீடுகளில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். அவர்களை சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு என்று நம் குழந்தைகளை கம்பேர் செய்கிறோம். ஆனால் அதுவே அவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. குழந்தைகளை ஒருவரோடு ஒருவரை கம்பேர் பண்ணாமல் எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவது இரண்டு என்று இல்லை; ஒரு குழந்தை இருக்கும் வீடுகளிலும் இந்த கம்பேர் செய்து பார்ப்பது இருக்கிறது. இன்றைய பெற்றோர்கள் இப்படி கம்பேர் பண்ணுவதற்கு காரணம் அவர்களுக்கு வேறு குழந்தைகளைப் பற்றி தெரியாது. அதோடு கூட்டு குடும்பமும் கிடையாது. அதனால் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவர்கள்தான் அவர்களுடன் இருக்கிறார்கள். நமக்குப் பிறந்த குழந்தை கட்டாயம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இவர்கள் இப்படி செய்யும் அப்ஸர்வேஷன் குழந்தைகள் மனதில் அப்படியே பதிந்துவிடும். குழந்தைகளிடம் கம்பேர் செய்வது என்பது இரண்டாவது குழந்தை பிறந்த நிமிடத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. குழந்தையின் ஒவ்வொரு பருவத்தின் வளர்ச்சியிலும் இந்த ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது பெரியவர்கள் தங்களையும் அறியாமல் செய்கிற விஷயம். இரண்டாவது குழந்தை கவிழ்ந்துகொள்ளும் போது, நடக்கும் போது, ஆட்களை கவனிக்கும்போது, சாப்பிடும்போது, உடம்பு சரியில்லாமல் போகும்போது, அழும்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பீடு நடக்கிறது. இவ, அவனைவிட வேகமா செய்யறா. அவன் உன்னை மாதிரி இல்ல என்று சொல்வார்கள். இதுபோன்ற ஒப்பீடுகள் ஒரு குழந்தையின் மனதில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும். ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய இயல்பின் அடிப்படையில் வளரும். விஷயங்களை பொறுமையாக அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் விதம் அவர்களை கம்பேர் செய்வது போல இருக்கக் கூடாது. தொடர்ந்து கம்பேர் செய்து காண்பிக்கும்போது குழந்தைகள் மனதில் விரக்தி வந்து விடும். ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் உன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன? என்று கேட்டால் நான் என் அக்காவைவிட அழகு குறைவு. நான் அவளைவிட குறைவான வேகத்தில் எல்லாவற்றையும் செய்வேன் என்றுதான் சொல்லும். தன்னுடன் பிறந்தவர்களைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் அவர்களால் யோசிக்க முடியாது. தன்னுடைய தனித்திறமை என்னவென்றும் அவர்களுக்கு தெரியாமலே போய்விடும். அவர்களுடைய இலக்கு என்ன என்பது தெரியாது. அந்த இலக்கை அடைவதற்கான எந்தவிதமான முயற்சியும் அவர்களால் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் பெற்றோர்கள்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நான் எந்தக் காரணத்திற்காகவும் என்னுடைய குழந்தையை யாருடனும் ஒப்பிட மாட்டேன் என்று முடிவு எடுக்க வேண்டும். தினமும் குழந்தைகள் செய்யும் நல்ல காரியங்களை, அன்று இரவு துங்குவதற்கு முன்பு, நீ இன்று இதை எல்லாம் சிறப்பாக செய்தாய்? என்று அனைவரின் முன்பும் சொல்ல வேண்டும். அதோடு ஒப்பிடுதல் என்பது அவனுக்கு நிகர் அவனே என்ற அடிப்படையில்தான் இருக்க வேண்டும். அதாவது இந்த முறை நீ குறைவாக மார்க் வாங்கி இருக்கிறாய். ஆனால் போன முறை இதைவிட அதிகமாக வாங்கி இருந்தாய். இதற்காக நீ வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை இதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக நிறைய மார்க் வாங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும். இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக்கொண்டால் அதைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர இடையில் புகுந்து பஞ்சாயத்து பண்ணக் கூடாது. நீ பெரியவன் அதனால் அவனுக்கு இதை விட்டுக் கொடு என்று சொல்லும் போது பெரிய குழந்தைக்கு அடுத்த குழந்தையின் மீது வெறுப்புதான் வரும். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் யாருக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லித் தர தேவையில்லை. நாம் இன்று மின்னணு யுகத்தில் வாழ்கிறோம். நம் நாடு முன்னேறி வருகிறது. எனவே தாயின் பொறுப்பும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. தந்தைகூட தன் குழந்தையின் வளர்ச்சியில் சிறந்த பொறுப்பு ஏற்க வேண்டும். தாயாரும்கூட தற்காலத்தில் பணிக்குச் செல்பவராக இருக்கிறார். மின்னணு கழகம் மற்றும் மென்பொருள் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு வேலைக்குச் செல்கிறார்கள். பல தாயார்கள் தங்கள் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணிசெய்யும் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு குழந்தைக்கு தாய் பாலூட்டல், விளையாட வசதிகள் முதலியன செய்து தரப்படுகின்றன. குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் புதியனவற்றையும் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு வசதிகள் செய்து தர வேண்டும். தங்கள் குழந்தைகள் எந்த வேலையையும் செய்யும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கட்டும். அவர்களுக்கு துணையாகவும் பாதுகாவலர்களாகவும், அவர்களது புதிய முயற்சியில் உடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்ய வேண்டாம். அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று எண்ண வேண்டாம். இது அப்படியல்ல. அவர்களை கட்டுப்படுத்தினால் அவர்கள் அடம்பிடிப்பார்கள். தாய்-குழந்தை சொந்தம் கருவறையிலேயே தொடங்கி விடுகிறது. இங்கு நல்ல அரவணைப்பு அன்பு நிலவும். உண்மையில் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதால் குழந்தைகள் கெட்டுவிடலாம் என்ற பொருள் இல்லை. கெட்ட குழந்தை தாயைப் போல செயல்படும் என்பதும் உண்மையன்று. சிறு குழந்தைகளின் வளர்ச்சியில் வீடு பெரும் பங்கு வகிக்கிறது. வீட்டிற்கு அடுத்த நிலையில் வருவது பள்ளியாகும். வீடு என்பது ஒரு பரிசாகும். ஆனால் பள்ளி என்பது அவ்வாறு அமையாது. பள்ளி என்பது நாம் தேர்வு செய்த இடம். உறுதியாக, பள்ளியில்தான் குழந்தைகள் தங்கள் திறமைகளைக் கண்டு விருத்தி செய்யவும் வெளிக்காட்டவும் முடியும். குழந்தைகளுக்கு தாய்மார்கள், பெரியவர்களுக்கு மரியாதை தர கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பொதுவான இடங்களில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் பற்றியும் கற்றுத் தர வேண்டும். உதாரணம் தயவுசெய்து, மன்னிக்கவும், மிக்க நன்றி முதலியன. உங்கள் குழந்தை காலையில் பிறரைப் பார்க்கும்போதும் நல்ல காலை வணக்கம் என்றும், தூங்கச் செல்லுமுன் நல்ல இரவு வணக்கமும் சொல்லட்டும். குழந்தைகள் கொள்ளை அழகு. ஆனால் குழந்தைகளை எழில் குறையாமலும், மனம் வாடாமலும் வளர்ப்பது எளிதானதல்ல. குழந்தைகளுக்கு இந்த உலகமே புதியதாகத் தெரிவதால் ஆர்வம் மிகுந்த பார்வையால் எப்போதும் துறுதுறுவென பார்த்துக் கொண்டிருப்பார்கள். எதையும் தொட்டுப் பார்க்க விரும்புவார்கள். நெருப்பு சுடுமென்று அறியாமலே அதைத் தொட்டுப் பார்க்க விரும்புவதும், உடைகள் தொல்லை தருவதாக எண்ணி களைந்து எறிய விரும்புவதும், பிறப்புறுப்புகளை வினோதமானதென்று எண்ணி தொட்டுப் பார்க்கும் விஷயங்களும் அவர்கள் அறியாமல் செய்பவை. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது சில விஷயங்கள் குழந்தைகளுக்கு பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிடும். உதாரணமாக குழந்தைகள் செய்யக் கூடாத விஷயத்தை செய்வதைப் பார்த்து நீங்கள் காட்டுக்கூச்சல் போட்டால் அது என்னவோ ஏதோவென்று அரண்டுவிடும். முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பும்போது ஆசிரியரைக் கண்டு பயப்படலாம், பாடம் படிப்பதை சுமையாக கருதலாம், சக மாணவர்களோடு பழக கூச்சம் கொண்டு பதட்டம் அடையலாம். முதலில் குழந்தைகள் எதற்காக பீதி, பயம்கொள்கிறார்கள் என்று கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அமைதியான சூழலில் அவர்களை அமர வைத்து அதற்கான காரணங்களை புரியும்படியாக விளக்க வேண்டும். அத்தகைய பீதி எண்ணங்கள் தேவையற்றது என்பதை புரிய வைக்க வேண்டும். பயத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படக் கூடாது. உதாரணமாக குழந்தைகள் பொருட்களுக்கு தீ வைத்து விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு தீயின் குணங்களையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரியும்படியாக விளக்க வேண்டும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டால் மீண்டும் தீ வைத்து விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள். பயம் காரணமாக பள்ளிக்கு செல்ல அடம்பிடித்தால் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். "அப்பா எப்படி என்ஜினீயரானார், நீ அக்காவைப் போல நன்றாகப் படிக்க வேண்டாமா" என்று அவர்களின் எண்ணங்களை படிப்பை நோக்கி திசைமாற்ற வேண்டும். பள்ளியில் பிரச்சினை என்றால் ஒரு சிலமுறை அவர்களுடன் பள்ளிக்குச் சென்று அவர்கள் பயம்கொள்ளும் சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். குழந்தை நாய்களுக்குப் பயப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நாய்கள் திரியும் வழியாக அழைத்துச் சென்று இதற்குப் பயப்படத் தேவையில்லை என்று விளக்கலாம். இருட்டான பகுதியைக் கண்டு பயந்தாலோ, தனிமையில் இருக்க அச்சம் அடைந்தாலோ, பேய்க்கதைகள் போன்றவற்றைக் கேட்டு மிரண்டு போயிருந்தாலோ அதுபோன்ற சூழலை உருவாக்கி "இங்கு (இருட்டிற்குள்) பயப்படும் விதத்தில் ஒன்றும் இல்லை, டி.வி.யில் வருவது கதைதான், அதற்காக பயப்படக்கூடாது" என்று விளக்கி மாற்றம் ஏற்படச் செய்யலாம். குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியமானது. ஆனால் குழந்தைக்கு பள்ளிக்குச் செல்ல ஆசை இருந்தும் மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு அஞ்சி பள்ளிக்கு போக மறுத்தால், அந்தக் காரணத்தை அறிந்து அதை களைய முயல வேண்டும். வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளை யாரும் பின் தொடர்வதாலோ, கிண்டல் செய்வதாலோ குழந்தைகள் அந்தச் சூழலை வெறுக்கலாம். பள்ளி செல்லவும் மறுக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பது, குழந்தைகளை மாற்றுவழியில் செல்ல வைப்பது, தாமே பள்ளி வரை அழைத்துச் செல்வது போன்றவை சரியான வழிமுறைகளாகும். குழந்தைகள் விரக்தி, கோபம் அல்லது ஏமாற்றம், எரிச்சல் இவற்றை அனுபவிக்கும்போது அவர்கள் அழுதல், கத்துதல், பொருட்களை உடைத்தல், தரையில் உருளுதல், சிணுங்குதல், மூச்சைப் பிடித்துக்கொள்ளுதல், உதைத்தல், அடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இந்த நடத்தையைக் கண்டு பெற்றோர் கோபம், இயலாமை அல்லது சங்கட உணர்வுக்கு ஆளாவார்கள். சுயகட்டுப்பாட்டைக் குழந்தைக் கற்கும் நேரத்தில் இத்தகைய அடம்பிடிக்கும் நடத்தை (temper tantrums) இயல்பானது. உண்மையில் 1-3 வயதில் எல்லா குழந்தைகளும் இப்படிச் செய்வதுண்டு. பொதுவாக 4 வயதில் அடம்பிடித்தல் நிற்கும். இதற்குக் காரணம் என்ன? அடம்பிடித்தல் உடல்ரீதியாகவோ அல்லது பரம்பரையாக வருவதோ அல்ல; அதிக செல்லம் கொடுத்து அல்லது தன் இஷ்டப்படி நடந்துகொள்ள விடப்பட்ட குழந்தைகளிடம்தான் இப்பழக்கம் அதிகம் காணப்படும். சில சமயங்களில் குழந்தையுடன் விளையாட நேரம் இல்லாத பெற்றோர், அதை சரிக்கட்ட விளையாட்டுப் பொருட்களையும், பரிசுகளையும் தருவார்கள். குறிப்பாக ஒரே குழந்தை இருக்கும் குடும்பங்களில் இது இன்னும் பொருந்தும். குழந்தை மனம் கலங்கி இருக்கும்போது தன் உணர்ச்சிகளை வெளியிட அடம்பிடிப்பதும் ஒரு வழியாகும். இதர காரணங்கள்: * அடம்பிடிப்பதன் மூலம் கவனத்தை இழுக்க முயற்சி செய்தல். * பெற்றோர் என்ன சொல்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் என்று புரியாததால் குழப்பம். * தான் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ளாத போது. * தன் உணர்வுகள் மற்றும் தேவைகளைச் சொல்ல வார்த்தை கிடைக்காதபோது. * உடல் நலமின்மை அல்லது இதர உடல்ரீதியான பிரச்சினைகளால் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதபோது. * பசி இருக்கும். ஆனால் அது பசிதான் என்று அறியாதபோது. * களைப்பு அல்லது போதிய உறக்கம் இல்லாதபோது. * பதற்றமும் அசௌகரியமும் இருக்கும்போது. * நடத்தல், ஓடுதல், படிகளில் அல்லது நாற்காலியில் ஏறுதல் இறங்குதல், வரைதல், விளையாட்டுப் பொருட்களை இயங்கச் செய்தல் போன்ற வேலைகளை இன்னும் செய்ய முடியாதபோது. * தான் செய்ய விரும்புவதைச் செய்ய அனுமதிக்கப்படாத போது எரிச்சல் அடைதல். இத்தகைய அடம் பிடிக்கும் செயல்களை எவ்வாறு தடுக்கலாம்? * தாம் நம்பக்கூடிய நபர்களிடம்தான் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்று பொதுவாக குழந்தைகள் நினைப்பதால், தம் பெற்றோரிடம்தான் அதிகமாக அடம் பிடிப்பார்கள். கீழ்க்கண்ட குறிப்புகள் அடம்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க உதவும். * நியாயமான எல்லைகளை நிர்ணயுங்கள். குழந்தைகள் குறைபாடே இல்லாதவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் விதிகளுக்கான காரணங்களை எளிமையாகக் கூறுங்கள்; அந்த விதிகளை மாற்றாதீர்கள். * இயன்றவரையில் தினசரி வழக்கங்களை முடிவு செய்து வைத்திருங்கள். இதனால் எதை எதிர்பார்க்கலாம் என்று குழந்தைக்குத் தெரியும். * குழந்தைக்கு எரிச்சலூட்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். உதாரணமாக, குழந்தையின் திறமைக்கும் மேற்பட்ட விளையாட்டு பொருள்களைத் தருவது அல்லது பெரிய குழந்தைகளிடம் விளையாட விடுவது. * குழந்தை அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய, அல்லது விளையாட முடியாத இடங்களுக்கு பொழுதுபோக்குக்காகச் செல்வதைத் தவிர்க்கவும். * உடலளவில் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். போதிய கவனம் செலுத்துங்கள். * மன அழுத்தம் தரக்கூடிய வேலைக்கு அல்லது அதிக செயல்பாடு இருக்கும் தினத்திற்கு முன்தினம் குழந்தைக்குப் போதிய ஓய்வு கிடைப்பதை உறுதி செய்யுங்கள். * அடம்பிடிக்க வழி செய்யும் செயல்களிலிருந்து கவனத்தை திசை திருப்புங்கள். வேறு செயல்பாடுகளை அறிமுகப்படுத்துங்கள். குழந்தை இருக்கும் இடத்தை மாற்றுதல் போன்ற சிறிய மாற்றம்கூட சில நேரங்களில் கவனத்தைத் திருப்பி அடம்பிடித்தலைத் தடுக்கும். * நல்ல முன்மாதிரிகளைக் காட்டுங்கள். குழந்தையின் முன்னிலையில், விவாதம் செய்தல், கத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதில் குழந்தைக்கு எடுத்துக்காட்டாக இருங்கள். * அளவுக்கதிக எதிர்பார்ப்புகள் அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும். அடம்பிடித்தலைச் சமாளித்தல்: குழந்தை எப்போது அடம்பிடிக்கும் என்பதை சில சமயங்களில் பெற்றோரால் சொல்ல முடியும். குழந்தை மனம்வெதும்பியோ, எரிச்சலடைந்தோ, அல்லது பிடிவாதமாகவோ இருக்கும். அவன் அழத் தொடங்கலாம். காலை உதைத்து அழலாம். தரையில் விழுந்து அல்லது மூச்சைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கலாம். சில சமயங்களில் தெளிவான எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென அடம்பிடிக்கலாம். குழந்தை அடம்பிடிக்கும் போது கீழ்கண்ட ஆலோசனைகளில் ஒன்றைப் பின்பற்றுவது குழந்தைக்கும் பெற்றோர்க்கும் உதவக்கூடும். 1. குழந்தையின் கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள் - உதாரணமாக, புதிய செயல்பாடு, புத்தகம் அல்லது விளையாட்டுப் பொருளுக்குத் திருப்பவும். சில சமயங்களில் குழந்தையைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தாலே குழந்தை அமைதியாகி விடும். நீங்கள் மென்மையாக குழந்தையை அணைத்து கட்டுப்படுத்த வேண்டும். வெளியே நாய் இருக்கிறது பார் என்பது போன்று ஏதாவது பேசி கவனத்தைத் திருப்பலாம். நகைச்சுவை அல்லது சிரிப்பூட்டும் வகையில் முகத்தைக் காட்டுதல் உதவலாம். 2. அமைதியாக இருங்கள். நீங்கள் கோபப்பட்டால், அல்லது கத்தினால் நிலைமை இன்னும் மோசமாகும். அவனுடைய நடத்தைக்கு எவ்வளவு கவனம் தருகிறீர்களோ அவ்வளவு முறை அடம்பிடித்தல் திரும்பவும் ஏற்படும் என்பதை நினைவில் வைக்கவும். 3, அழுவது, கத்துவது அல்லது உதைப்பது போன்ற சிறிய அளவிலான கோப வெளிப்பாடுகளைப் பொருட்படுத்த வேண்டாம். அவன் அமைதியடையும் வரை எதையும் பேசாமல் பக்கத்திலேயே இருங்கள். 4. சிலவிதமான அடம்பிடிக்கும் செயல்களை பொருட்படுத்தாமல் விடக்கூடாது. பின்வரும் நடத்தையை புறக்கணிப்பதோ, ஏற்பதோ கூடவே கூடாது. பெற்றோரை அல்லது மற்றவர்களை அடிப்பது அல்லது உதைப்பது. அபாயகரமான முறையில் பொருட்களைத் தூக்கி எறிவது. தொடர்ந்து கத்துவது அல்லது கூச்சல் போடுவது. 5. உங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை என்றால் அறையை விட்டுச் செல்லவும். சில நிமிடங்கள் வரை, அல்லது அழுகை நிற்கும் வரை காத்திருந்து பிறகு உள்ளே போகவும். அதன்பின் வேறு வேலையில் குழந்தையின் கவனத்தைத் திருப்பவும். புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு குழந்தைக்கு முதிர்ச்சி இருந்தால் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் அடுத்த முறை அதை எவ்வாறு கையாள முடியும் என்பதைப் பற்றியும் பேசுங்கள். அடம்பிடிப்பதற்காக குழந்தையை எப்போதும் தண்டிக்கக்கூடாது. அதனால் குழந்தை தன் கோபத்தையும் எரிச்சலையும் உள்ளேயே அடக்கி வைத்திருக்கும். அது நல்லது அல்ல. நீங்கள் அமைதியாகவும், புரிதலுடனும் அடத்தைக் கையாள வேண்டும். அடம் பிடிப்பதை நிறுத்தியதற்காக பரிசு ஏதும் தரவேண்டாம். அடம்பிடித்தால் வெகுமதி கிடைக்கும் என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டு விடும். அடம்பிடிப்பதால் எதுவும் கிடைக்காது என்று தெரிந்தால், அப்பழக்கம் தொடர்வது குறையக்கூடும். அழுகை தீவிரமாகவும் அடிக்கடியும் ஏற்பட்டால் அது உணர்வுரீதியான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். அடம் பிடிக்கும்போது குழந்தை தனக்குத் தானே அல்லது மற்றவர்க்கு தீங்கு ஏற்படுத்தி விட்டால் - உதாரணமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு மயங்குதல் அல்லது 4 வயதில் அடம் மிகவும் மோசமானால் - குழந்தை நல மருத்துவரிடம் பேசவும். இந்த அடத்திற்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஏதாவது காரணமும் உள்ளதா என்பதை குழந்தை நல மருத்துவர் கூறுவார். அதைக் கையாள நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் தருவார். குழந்தையின் வளர்ச்சியில் அடம்பிடிப்பதும் இயற்கையான பகுதிதான் என்பதை உணரவேண்டும். அடம்பிடிக்கும் குழந்தையைக் கையாளுவது எளிதல்லதான். ஆனால் அன்பு, புரிதல் மற்றும் மாறாமல் காட்டும் கவனம் இந்த வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து செல்ல குழந்தைக்கு உதவும் Y.Ujeyanthan.B.Ed(Hons)

லேபிள்கள்:

குழந்தையின் நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்

குழந்தையின் நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள் எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.* முழு கவனம் மிக அவசியம்.* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.உதாரணம்: news - north, east, west, south படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும் நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. குழந்தைகளின் திறமையை எப்படி கண்டுபிடிப்பது "என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி." என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு.திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந்த துறையைப் பற்றிய தகவல்களை விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும். குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்படி கண்டு பிடிப்பது சில குழந்தைகள் கையில் பேனா, குச்சி போன்ற ஏதாவது ஒரு எழுதுபொருள் கிடைத்துவிட்டால் சிலேட்டிலோ அல்லது தாளிலோ கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அவர்களது பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அந்த துறையில் அவர்களை ஊக்கப்படுத்தலாம். கிறுக்கிக் கிறுக்கி வரையும் போது ஓவியத்திறமை வெளிப்படும். இதைத்தான் 'சித்திரமும் கைப்பழக்கம்' என்று கூறுவர்.அதேபோல் சிலருக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு பிடித்த பாடல் எங்கேயாவது கேட்டுவிட்டால், அதே ராகத்துடனே இவர்களும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவர்.மிமிக்ரி, நடனம், நடிப்பு, இசை, தையல், விளையாட்டு, பேச்சுக்கலை, விண்வெளி ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி, சமூக சேவை என்று அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அவர்களது செயல்பாடுகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே உணர்ந்தாலும்கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.எந்தவிதக் கட்டாயத்தின் பேரிலும், மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளின் திறமையை ஒப்பிட்டு அவர்கள் முன் குறை சொல்லி விடாதீர்கள்.பக்கத்து வீட்டு குழந்தைகள் பாடுவதில் கில்லாடியாக இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு பாடுவது சிரமமான காரியமாக இருக்கும். அதற்காக அந்த குழந்தையைப் போல் உங்கள் குழந்தையையும் பாட்டு கிளாசில் சேர்த்து அவர்களை சிரமப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் துறையில் சேர்த்து விடுங்கள்.உங்கள் குழந்தை திறமையை வெளிப்படுத்தி பரிசு வாங்கி வரும்போது அவர்களை பாராட்டத் தயங்காதீர்கள். அதேபோல் தோல்வியடைந்தாலும் தட்டிக்கொடுத்து அடுத்த முறை நீதான் வெற்றி பெறுவாய் என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறி உற்சாகப்படுத்துங்கள். * 'வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு' என்று அவ்வப்போது உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். 'தோல்விகள்தான் வெற்றியின் படிக்கற்கள்'. 'தோல்வியில் இருந்துதான் வெற்றிக்கான பாடம் கற்க முடியும்' என்றும் எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை இளமையிலேயே திடப்படுத்துங்கள். தன்னம்பிக்கையையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்கும் விதத்தில், ஜான்சி ராணி லெட்சுமிபாய், வீரசிவாஜி, நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் போன்றவர்களின் வீரத்தைச் சுட்டிக்காட்டும் சம்பவங்களை கூறுங்கள்.உங்கள் குழந்தைகளிடம் உள்ள திறமை சார்ந்த தகவல்களையும், அந்த துறையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும் அவ்வப்போது எடுத்துக் கூறுங்க. By.Ujeyanthan.B.Ed(Hons)

லேபிள்கள்:

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை ஒருவருக்கு தப்பாக தெரிவது, இன்னொருவருக்கு சரியானதாகவும் ஆகியிருக்கிறது. அதனால் குழந்தைகள் விஷயத்தில் தப்பு, சரி இரண்டையும் போட்டு ரொம்ப குழப்பாதீர்கள்.குழந்தை செய்யும் ஒரு விஷயம், உங்கள் பார்வையில் தப்பாக தெரியும்போது, "அந்த செயல் என் பார்வையில் இதனால்... இப்படி... தப்பாகத் தெரிகிறது. சமூகமும் இதனால்.. இப்படி.. இதனை.. தப்பாகத்தான் எடுத்துக்கொள்ளும். தப்பாக உணரப்படும் ஒரு விஷயம் இப்படிப்பட்ட எதிர்விளைவுகளை உருவாக்கும்` என்பதை குழந்தைகளிடம் விளக்குங்கள். அதை அவர்கள் புரிந்துகொண்டு, அதைச் செய்யக்கூடாது என்று முடிவு செய்யட்டும். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. ஆனால் ரசித்து, அனுபவித்து குழந்தைகள் வளர்க்கப்படாமல், முரண்பாட்டோடு வளர்க்கப்படுகிறார்கள். பொய் சொல்லாதே என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு பெற்றோர் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களைப் பற்றிய நிறைகளைத்தான் பேசவேண்டும் என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு, மற்றவர்களைப் பற்றிய குறைகளை பெற்றோர் பேசிக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டு குழந்தையிடம் இருக்கும் கலைத் திறனை பாராட்டிவிட்டு, தன் குழந்தை அதுபோன்ற கலைச் செயலில் ஈடுபடும்போது, 'வேலை மெனக்கெட்டு அதைப் போய் செய்கிறாயே' என்று முளையிலே கிள்ளி எறிவார்கள். தனக்கு படித்து தந்த ஆசிரியர்களை கண்டபடி விமர்சித்துவிட்டு, தன் குழந்தையிடம் 'நீ உன் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்' என்று உபதேசிப்பார்கள். இப்படி குழந்தை வளர்ப்புக்கலை பெரும்பாலான பெற்றோரால் முரண்பாடாக கையாளப்படுகிறது. இன்று வீட்டுக்கு ஒரு குழந்தை. பெற்றோர் இருவரும் சம்பாதிக்கிறார்கள். இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதபோது உணர்வுரீதியாக ஒற்றைக் குழந்தையை தனிமைப்படுத்தி விடுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் குழந்தையோடு அதிக நேரத்தை செலவிட்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் பல பெற்றோர் அதிக நேரம் உழைத்து, குழந்தையின் தனிமையை அதிகப்படுத்திவிடுகிறார்கள். குழந்தை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போது, 'உனக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நான்கு வீடு.. இரண்டு கார்.. வங்கியில் சில லட்சம்... பங்குச் சந்தையில் பல லட்சம் சேர்த்துவைத்திருக்கிறேன்' என்பார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'அப்பா எனக்கு நான்கு வீடு வாங்கி வையுங்கள்' என்று கேட்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'தனக்கு எத்தனை கார்கள் வாங்கி வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்கிறது. எந்த குழந்தையும் எப்போதும் அவைகளை கேட்டதில்லை. அன்பையும், பாசத்தையும், அவைகளை வெளிப்படுத்த தேவையான நேரத்தையும், அதற்குரிய அமைதியான சூழ்நிலையையும்தானே எல்லா குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கின்றன. இந்த பூமி சுழன்று கொண்டே இருக்கிறது. அது இயற்கை. அதுபோல் உங்கள் குழந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது. பள்ளிக்கு சென்றது. பின்பு கல்லூரிக்குச் செல்லும். அடுத்து வேலை பார்க்கும். அப்போது அதன் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மகள் மாணவி ஆவாள். அதிகாரி ஆவாள். காதலி ஆவாள். மனைவி ஆவாள். அப்போது அவள் உறவுகளாலும், கிளைகளாலும் பரந்து விரிந்துகொண்டிருப்பாள். அந்த நேரத்தில் முதுமையால் நீங்கள் உங்களை சுருக்கிக்கொண்டிருப்பீர்கள். இந்த உண்மையை இன்றே உணருங்கள். காலம் மாறும். உறவுகள் மாறும். காட்சிகள் மாறும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இன்றே இப்போதே நீங்கள் தயாராகிவிட்டால் உங்களுக்குள் ஒரு பக்குவம் வந்துவிடும். குழந்தைகள் மீது உங்கள் வேகமும், எதிர்பார்ப்பும் மிதமாகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை மதித்து நீங்கள் அவர்களை வளர்த்தால், உங்கள் மகள் திருமண வயதில் 'என் அப்பாவைப்போல் கணவர் அமையவேண்டும்' என்பாள். உங்கள் மகன், 'என் அம்மாவைப் போன்ற குணாதிசயங்கள் கொண்ட மனைவி வேண்டும்' என்பான். அதுவே உங்களின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வாசகம். இதில் உண்மை இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.15 மாத குழந்தைக்கு நல்லது எது, கெட்டது எது, தனக்கு (உதாரணமாக- பிஸ்கட்) குறைவாக கொடுத்து இருக்கிறார்களா? அதிகமாக கொடுத்து இருக்கிறார்களா? என்று ஒப்பிட்டு பார்த்து அறிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உள்ளது என்கிறது இந்த ஆய்வு.வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த பேராசிரியர் ஜெஸ்சிகா சோமர்வில்லி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதன்படி குழந்தைகளை ஒரு குழுவாக வைத்து அவர்களில் சிலருக்கு அதிகமாக தின்பண்டங்களும், சிலருக்கு குறைவாகவும் கொடுத்தனர். இதில் குறைவாக தின்பண்டம் பெற்ற குழந்தைகள் முரண்டு பிடித்தன. அதிகமாக தின்பண்டம் வைத்திருந்த குழந்தையின் கையில் இருந்து அதை பிடுங்க முயற்சி செய்தன. சில குழந்தைகள் இதை ஏற்க மறுத்து அழுது அடம்பிடித்தன. சில குழந்தைகள் தங்கள் கையில் கொடுத்ததை வீசி எறிந்து, அதிகமாக வைத்திருந்த குழந்தையிடம் இருந்து உணவுப்பண்டங்களை பிடுங்கி ரகளை செய்தன.உணவுப்பண்டங்கள் மட்டுமல்ல, பொம்மைகள் விஷயத்தில் இந்த அடம்பிடித்தல் மிக அதிகமாக இருந்தது.இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறும்போது, "நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே 'ஷார்ப்' ஆக உள்ளனர். எல்லோருக்கும் சரி சமமாகவே கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். மற்றவர்களை விட தங்களுக்கு குறைவாக கிடைக்கும் போது அதை ஏற்க மறுப்பதோடு, கூடுதலாக கிடைக்கும் வரை போராடவும் (அழுது ஆர்ப்பாட்டம் செய்யவும்) அவர்கள் தயாராக இருந்தனர்", என்று தெரிவித்தனர். ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும். ஞாபகம் குறித்து சில தகவல்கள்:நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும்.ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத் திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும். எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு: ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல்.மேலும் நாள் பட்ட ஞாபகம்கூட மறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்: explicit & implicit explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.நினைவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்:மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்.யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரித்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரிதயவே இல்லாமல் ஓட்டுவது - லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது): By.Ujeyanthan.B.Ed(Hons)

லேபிள்கள்:

வீடுதான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம்

வீடுதான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் பள்ளி படிப்பு என்பது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. சூடாரத்னா என்ற கன்னட கவி கூற்றுப்படி ஒரு தகப்பன் தன் குழந்தையைப் படிக்க வைக்கவில்லை என்றால், அக் குழந்தையை அவர் கொலை செய்வதாக ஆகும். தந்தை தன் குழந்தையை குறிப்பிட்ட வயதிற்குப் பின் பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் சரியாகச் சொல்லவேண்டுமாயின் வீடுதான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் எனலாம்.கடவுள் ஒவ்வொருவருக்காகவும் வந்து நம்மை காப்பார் என்று எண்ணக்கூடாது. கடவுள் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயைக் கொடுத்துள்ளார். பெண்கள்தான் கடவுளின் முழுப் படைப்பு என்று சொல்லலாம். தாய்தான் பொறுமையின் பிறப்பிடம். அவளது தியாகம் பூமாதேவியின் தியாகத்திற்கு ஒப்பானதாகும். தாய்தான் வீட்டை உருவாக்குபவள். தாயின் முயற்சிதான் மனிதனை முழு ஆளுமை உடையவனாகவும் தனித்தன்மை பெற்றவனாகவும் மாற்றிவிடுகிறது. "நீங்கள் ஒரு தாயைப் பற்றி தெரிந்துகொள்ள, அவளது குழந்தைகளைப் பாருங்கள்" என்பது பழமொழி. தாயானவள் குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு அடிக்கல் நடுபவர் எனலாம். சத்ரபதி சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க அவர் தாயார் ஜீஜாபாயின் ஊக்கம்தான் ஒரு காரணம் ஆகும். ஒரு பெண்ணின் (மகளின்) நல்ல நண்பர் என்பவர் அவரது தாயார் மட்டுமே என்றால் மிகையாகாது. ஒரு மிருதுவான தாயார் கடினமான மகளை உருவாக்க முடியும். "தாய் எப்படியோ அப்படியே மகள்", மனிதர்கள் என்பவர்கள் அவர்களின் தாயார்களால் உருவாக்கப்படுபவர்கள். தாய் தன் கண்களை இழந்தாலும், அவள் தனது அழகிய மனக் கண்பார்வையை இழக்க மாட்டாள். "தாயை விட சிறந்ததொரு கோவில் இல்லை" என்பது தமிழ்ப் பழமொழியாகும். தாயின் நல்ல உள்ளம் கடலின் ஆழத்தை விட அதிகமானது. குழந்தையின் சுற்றுப்புற சூழலின் முதல் எதிர்வினை அதன் தாயாரிடம் இருந்துதான் தொடங்குகிறது. தாய்தான் குழந்தைகளின் மனதில் என்றும் அழியாத எண்ணங்களை உருவாக்குகிறார். தனது குழந்தைகளை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து வருகிறாள். வித்யாவதி தேவி பிரிட்டீஷாரை எதிர்த்து தன் மகன் பகத்சிங் போராட எண்ணினாள். அதன்படி நடந்தது. தனது மகன் ஒரு கதாநாயகனாக வர வேண்டும்; வாழ வேண்டும் என்று எண்ணினாள். கோழை போல் நடக்கக் கூடாது என்று விரும்பினாள். அது நடந்தது. தாய் ஸ்தானம் என்பது அவளது குணங்களை கொண்டதுதான். இது ஒரு கலை. இதில் எல்லா பெண்களும் சிறந்து விளங்க வேண்டும். தாயும் தாய்மை ஸ்தானமும் பெண்களுக்கான ஆடல் சார்ந்த பாடலாகும். தாய் என்பவள் சுயநலம் கொண்டவள் அல்ல. அவள் தன் குழந்தைகள் யாவரும் தனது உரிமைக்குரியவர் என்று நினைப்பதில்லை. தன் குழந்தைகளை அன்புடன் நேசிக்கிறாள். ஆனால் அவர்கள் தனது உரிமை என்று எப்போதும் சொன்னதில்லை.குழந்தையை சொந்தம் கொண்டாடுவது தன் தற்காப்பிற்கில்லை. குழந்தைகளை உலகிற்கு கொண்டு வர பெண்களுக்கு கடவுள் சந்தர்ப்பமளித்தார். கலீல் ஜிப்ரான் என்ற பெரிய மதத் தலைவர் கூற்றுப்படி உங்களது குழந்தைகள் உங்களுடையதல்ல. மனிதப் பிறவி எடுத்து வாழ விரும்பிய ஜீவன்களின் மறு உருவம்தான் அவை. தாய் தன் குழந்தை மீது அபரிமிதமான அன்பைப் பொழிகிறாள். எனவே, வீடுதான் குழந்தையின் முதல் பள்ளியாகும். வீட்டை நிர்வகிப்பவர்தான் குழந்தையின் முதல் ஆசிரியர். By. y.ujeyanthan.B.Ed(Hons)

லேபிள்கள்: ,