இல்லறம் எனும் இனிய பந்தத்திலே இணைந்து வாழ மனப் பொருத்தம், ஜோடிப் பொருத்தம், அந்தஸ்துப் பொருத்தம் இவற்றை எல்லாம் புறம் தள்ளி இறுதி வரை வாழ்வை செப்பனிட்டு செல்வது இருவரது ஜாதகப் பொருத்தங்களே.
இன்றைய கால கட்டத்திலே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் வெளிநாடுகளிலேயே இருப்பதால் பெண்ணை கொடுக்கும் பெற்றோர் ஜாதகப் பொருத்தங்களையே பெரிதும் நம்பி செயற்படுகின்றனர். அதில் சிலர் இன்று ஜாதகப் பொருத்த நிச்சயங்களை சரியான ஆய்வு செய்யாமல் பொருத்தம் அற்ற ஜாதகங்களையும் பொருத்தம் என்று குறிப்பிட்டு விடுகின்றனர். அதைப் பின்பற்றி திருமணத்தை செய்து விட்டு பின் அவஸ்தை நிலை பெறுகின்றனர். எப்போதும் திருமணப் பொருத்தம் என்பது குறைந்தது மூன்று ஜோதிடர்களிடம் என்றாலும் காண்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் பொருத்தத் தன்மையை நாம் ஓரளவிற்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியும். கிரக நிலைப் பொருத்தங்களில் பெண்ணின் ஜனன லக்னத்திற்கு ஆண் ஜனன லக்னம் வசியமாக அமைந்தால் கிரக நிலை லக்ன வசியம் அமைகின்றது. இந்த நிலை கிரஹ நிலையில் உள்ள மற்றைய தோஷ நிலைகளை நிவர்த்தி செய்து விடுகின்றன. பெண் ஆண் ஜாதக லக்னங்கள் நேர்கோட்டு நிலைகளில் அமைந்தாலும் கிரக நிலையில் அனுகூலமான பொருத்த நிலைகள் அமையும்.
பொதுவாக குடும்பஸ்தான அதிபதி களத்திரஸ்தான அதிபதி கிரகங்கள் மறைவு நிலை நீச நிலைகள் பெற்று அமைந்தால் அதேபோல் அதற்கு ஈடான சமதோஷ நிலை மற்றைய ஜாதகத்திலும் அமைந்து இருப்பதே மிகவும் விசேடமாகும். ஒரே நட்சத்திரம் என அமையும் போது ஆண், பெண் இருவரும் ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், அத்தம், திருவோணம், உத்தரட்டாதி, ரேவதி இந்த எட்டு நட்சத்திரங்களும் மிக உத்தமமான நட்சத்திரம். அடுத்து அமைகின்ற அஸ்வினி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், பூரம், உத்தரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்தராடம் இந்த பத்து நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாயின் மத்திமமான பொருத்தமே. மற்றைய நட்சத்திரங்கள் சிறப்பானதாக எடுக்கக் கூடிய நிலை இல்லை. இதிலே மிருக சீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களில் ஒன்று பெண், ஆண் யாருக்கு அமைந்தாலும் பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்யலாம் என்கின்ற ஒரு விதியை ஜோதிட நூல்கள் கூறி நிற்கின்றன.
இருப்பினும் இந்த நான்கு நட்சத்திரம் கொண்டவர்களில் வாழ்வியல் அனுபவ ரீதியில் போராட்டம் கொண்ட நிலையிலேயே அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நட்சத்திரப் பொருத்தங்களில் இவைகளை மிகவும் முக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும். பெண் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் எனப்படும் 2 ஆம் இடமும் களத்திரஸ்தானம் எனும் 7 ஆம் இடமும் மாங்கல்ய ஸ்தானம் எனப்படும் 8 ஆம் இடமும் மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.
திருமணப் பொருத்தங்கள் மொத்தம் 14 உண்டு. இவற்றில் மிக முக்கியமான பொருத்தங்களாக கருதப்படுபவை கிரகம், நட்சத்திரம், கணம், யோனி, ராசி, வசியம், ராசியதிபதி, தாலி, புத்திரர், ஆயுள். இதிலே யோனி அல்லது வசியம் ராசி அல்லது ராசியதிபதி ஏதேனும் ஒன்று பொருந்தி இருந்தால் போதுமானது. யோனி, வசியம் இவை இரண்டும் பொருத்தமே இல்லாமல் அமைகின்ற நிலையில் அத்திருமணத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு சில ஜாதகங்களில் கிரக நிலைப் பொருத்தம் குறைவாக அமைந்து மற்றைய பஞ்சாங்கப் பொருத்தம் அனைத்தும் மிகவும் சிறப்பாக பொருந்தி இருந்தால் கிரக நிலை பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை இல்லை. அதே நேரம் கிரக நிலையில் செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது தோஷ நிலைகள் ஒருவருக்கு அமைந்து மற்றையவருக்கு அமையாது விடும் நிலையில் அந்த நிலையிலுள்ள ஜாதகம் தவிர்க்கப்பட வேண்டியதாகும். அதேநேரம் இருவருக்கும் செவ்வாய் தோஷம் மற்றைய தோஷங்கள் சமனாக அமைகின்ற நிலை ஏற்பட்டால் பாதிப்புக்கள் அமையாது. முக்கியமாக ரச்சு எனப்படும் தாலிப் பொருத்தம் மிக முக்கியமானதாக கருதப்படுவதாகும். ஒரு பெண் தன் வாழ்நாளில் பலவித பிரச்சினைகள், சஞ்சலங்கள், துன்பங்கள் என தொடர்ந்தாலும் அப் பெண்ணின் அந்தஸ்து மேன்மை சமூக மரியாதை என்பனவற்றை நிலை நிறுத்தும் ஒரே விடயம் சுமங்கலி என்கின்ற நிலையாகும். தாலிப் பொருத்த நிலையில் ஐந்து விதமான ரச்சு அமைகின்றது. சிரோ ரச்சு, கண்ட ரச்சு, நாபி ரச்சு, ஊரு ரச்சு, பாதரச்சு என்கின்ற இந்த ஐந்து ரச்சு வரிசைகளில் அமைகின்ற நட்சத்திரத்திலேயே பெண் ஆண் நட்சத்திரம் அமைந்தால் தாலிப் பொருத்தம் அற்ற நிலையாகின்றது. ஒரு சில ஜோதிட நூல்கள் ஆரோகண அவரோகண கதியில் அமைந்தால் தாலிப் பொருத்தம் உண்டு என்று கூறினாலும் கிரக நிலையில் உள்ள பெண் ஆண் ஆயுள் பாவமும் பெண்ணின் மாங்கல்ய ஸ்தான கிரகத்தின் நிலையும் நன்கு ஆய்வு செய்தே இந்த தாலிப் பொருத்த நிலை முடிவு செய்யப்பட வேண்டும். மாங்கல்ய தோஷ நிலை தரும் கிரக அமைப்புக்கள் சில பெண்கள் ஜாதகத்தில் 8 ஆம் இடம் பாவக் கிரகங்கள் அமைவதும் செவ்வாய் சனி பார்வை 8ஆம் இடத்தை நோக்குவதும் பாவக் கிரகபார்வை 8 ஆம் இடம் அமைவது 7 ஆம், 8 ஆம் இடம் சூரியன் சுக்கிரன், சேர்க்கை அமைவது சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று எந்தஸ்தானம் அமைவதும் சந்திரன் பலம் குன்றி பாவக் கிரக சேர்க்கையுடன் 8 ஆம் இடம் அமைவது குரு சுக்கிரன் 12 ஆம் இடம் அமைவது 9 ஆம் இடத்திற்குரிய கிரகம் சூரியனுடன் சேர்க்கை பெற்று 6 ,8, 12 ஆம் இடம் அமைவதும் அந்த ஸ்தான அதிபதிக் கிரகங்களும் 6ஆம், 8ஆம், 12ஆம் இடம் அமைவது என்பன பெண்களுக்கு மாங்கல்ய தோஷ நிலையைக் கொடுக்கும். திருமணம் எனும் பந்தம் அமைய திருமணப் பொருத்தத்தின் சூட்சும விடயங்கள் பல உண்டு.
லேபிள்கள்: யோ உஜேயந்தன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு