செவ்வாய், 21 செப்டம்பர், 2010

உஜே

கல்வி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள

லேபிள்கள்:

கல்வி என்றால் என்ன

UJEYANTHAN.Y
B.Ed

இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். அவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்க வேண்டும்.

தரமான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து மற்றவர்களை வழி நடத்த வேண்டும், தானும் நடக்க வேண்டும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, மருத்துவம், போர்த்திறன், கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு வகைகளில் கற்றுக் கொள்பவருக்குள் நுழைகிற கருத்துருக்கள் அவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால்கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.


இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பு ஏதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.


இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களைக் கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....

கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஒன்றும் அறியாத மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.

தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டிற்காகப் பேசப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.

எனவே இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி, திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

லேபிள்கள்:

குழந்தைகளுக்கான கல்வி

UJEYANTHAN.Y
B.Ed(Reading)

‘கற்றல் என்பது ‘வெற்றி பெறுதல்’ என்று இன்று சுருங்கிப் போய்விட்டது. மெல்லக் கற்போர் தோல்வியுற்றோர் ஆகிறார். தோல்வி என்பது ஓர் அவமதிப்பு. வெற்றி மட்டுமே இலக்கு. பண்பு (Character) குறித்துப் பேசி வந்த பள்ளிகள், இன்று ஆளுமை (Personality) குறித்துப் பேசுகின்றன. ஆளுமை என்பது வெற்றி பெற்றோருக்கான குறியீடு ஆகும்.

கதைகளும், கட்டுக் கதைகளும் அதிகம் புழங்குவதும் வெற்றி பெற்றோரைப் பற்றிய பேச்சுக்களில் தான். வெற்றி பெற்றவர்கள் சொல்லப் போகும் ‘வெற்றி ரகசிய உளறல்களை’க் கேட்பதில் தான் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஆர்வம்! (டோனியின் வாழ்க்கை வரலாறு இன்று நூற்றுக்கணக்கான இந்தியப் பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது).

மிகச்சிறு பிராயத்திலேயே குழந்தைகளின் வெற்றி தோல்வி குறித்த பேச்சுகள் தொடங்கி விடுகின்றன. “எங்க அண்ணன் மகன் ஆறு மாசத்தில தவழ ஆரம்பிச்சுட்டான். இவன் இன்னும் குப்புறக் கூட விழுகல!”

குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிட எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன. ஒன்று ‘அறிவின் ஆதிக்கம்.’ மற்றொன்று ‘வயது வந்தோரின் எதிர்பார்ப்பு’.

உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றுப் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும், பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

சரி – தப்பு கண்டுபிடிக்கும் அறிவின் கர்வத்தைக் களையாமல் ஒரு குழந்தையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

ஸ்விஸ் நாட்டு உளவியல் நிபுணர் ஜீன் பியாஜெட் (Jean Piaget 1896-1980) பற்றிக் கல்வியாளர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அவசரம்… வேகம்… முந்துவது போன்ற ரேஸ் மைதானத்து வார்த்தைகள் கல்விக் கூடங்களை வந்து ஆக்கிரமித்தபோது, குழந்தை எவ்வாறு சுயமாக, படிப்படியாகக் கற்கிறது என்பதை ‘வெற்றி வெறியர்களுக்கு’ மண்டையில் அடித்து விளக்கியவர் பியாஜெட்.

பியாஜெட் ஐந்து வயதுச் சிறுமி ஜுலியாவுடன் நடத்திய சிறிய ஓர் உரையாடல் கல்வி உலகின் கவனத்தைப் பற்றிப் பிணித்தது. ‘காற்று உரையாடல்’ என அது பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

பியா: காற்று எப்படி உண்டாகுது ஜுலி?

ஜுலி: மரம்தான் காத்தை உண்டாக்குது!

பியா: அது எப்படி உனக்குத் தெரியும்?

ஜுலி: மரம் கிளைகளை ஆட்டி அசைத்துக் காத்தை உண்டாக்குவதை நான் பாத்திருக்கேன்.

பியா: அப்படியா? எனக்குச் செஞ்சு காட்டேன்!

ஜுலி: இந்தா இப்பிடித்தான்! (தன் கைகளை அசைக்கிறாள்)

பியா: காத்து வரல!…

ஜுலி: ம்ம்! மரம் பெரிசில்ல! அது கைய அசைக்கிறப்ப காத்து வந்திடும்.

பியா: அப்படீன்னா கடல்ல எப்படி ஜுலி காத்து வருது? அங்க மரங்களே இல்லையே!

ஜுலி: ம்! காத்து தரையில் இருந்து கடலுக்குப் போகுது. இல்ல! இல்ல! அது காத்து இல்ல. அலை! (ஓடிப் போகிறாள்).

பியாஜெட் ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடல் நடத்தியவர். வயது வந்தோர் உலக அறிவுச் செய்திகளை அவர் ஒருபோதும் குழந்தைகளுடனான உரையாடலில் இடைச் செருகியதில்லை.

வயது வந்தவர்களின் அறிவுலகப் பார்வையின் படி ஜுலியர் சொன்னதெல்லாம் தப்பு. ஆனால் உண்மையில் அது தப்பு அல்ல என்பது பியாஜெட்டின் கருத்து. ஒவ்வொன்றையும் குழந்தை தன் வழியில் அறியும் முயற்சி இது.

ஜுலியாவின் நம்பிக்கைகளை அங்கீகரித்து பியாஜெட் உரையாடலைத் தொடர்ந்தார். அந்த நம்பிக்கைகளைச் சரி என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை. தவறு என்று மறுக்கவும் இல்லை. குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து, இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும். வயது வந்தோரின் அவசரத்துக்குக் குழந்தையின் புரிதலைத் திருத்துவதும், சரி செய்வதும் தவறு என்பது பியாஜெட்டின் கருத்து.

தோற்கும் பின்தங்கும் தடுமாறும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள இந்தத் தெளிவும் நிதானமும் தேவை. வயது வந்தோரின் தர்க்க அறிவைக் குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் மேலும் அக் குழந்தைகளிடம் தோல்வியையே திணிக்கிறோம். குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிறோம். விம்ம வைக்கிறோம். குறுக வைக்கிறோம்; துர்காவைப் போல் சிலரை அழுது அழுது தூங்க வைக்கிறோம்…

3


குழந்தைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்க வேண்டும்?

நம்முடைய ஆசைகளுடனா? நம்முடைய எதிர்பார்ப்புகளுடனா? வெற்றி குறித்த நம் ஏக்கங்கள், பிரமைகளுடனா?

எதிர்பார்ப்பு பிரியத்தில் இருந்து எழலாம். ஆனால் எதிர்பார்ப்பின் அடுத்த அவதாரம் நிர்ப்பந்தம் தானே!

“குழந்தைகள் உங்களுடன்
இருக்கலாம்;
ஆனால் அவர்கள் உங்களுக்குச்
சொந்தமானவர்கள் அல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!
உங்கள் சிந்தனைகளைத்
தர வேண்டாம்,
அவர்களுக்கென்று சிந்தனைகள்
இருக்கவே இருக்கின்றன”

என்பது கலீல் கிப்ரான் பாட்டு.

குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது (accepting them as they are) தான் உண்மையான அன்பு. ‘இப்படி இருந்தால் நல்லது’ என்ற உங்கள் விருப்பத்துக்கும் அந்தக் குழந்தைக்கும் சம்பந்தம் என்ன?

இதைச் சொன்னவர் ஏ.எஸ்.நீல் (A.S.Neill) சொன்னவர் மட்டுமல்ல; நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். குழந்தைகளை அப்படியே விரும்பி ஏற்றுக் கொண்டவர். இவர்களை இப்படி வளைத்து நிமிர்த்த வேண்டும் என்று எவ்விதத்திலும் திட்டம் இடாதவர்.

நீல் ஸ்காட்லாந்துகாரர்(1833-1973). கோடைமலைப் பள்ளி (Summer Hill School) என்ற தனித்துவம் மிக்க சோதனைப் பள்ளியை (Experimental School) இங்கிலாந்தில் நிறுவியவர். குழந்தை உரிமைகள் குறித்துச் சிந்திக்கிறவர்கள் ஸம்மர் ஹில் அனுபவங்களை வாசித்தால் நெகிழ்ந்து போவார்கள்.

‘இதைச் செய்யாதே!’ என்று குழந்தைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்காத பள்ளி. பள்ளிக்குப் பொருந்துமாறு குழந்தைகளைத் திருத்துவதற்கு மாறாக, குழந்தைகளோடு பொருந்துமாறு தன்னைத் திருத்தித் திருத்தி அமைத்துக் கொண்ட பள்ளி. ஒவ்வொரு குழந்தையும் ஆர்வம் கொண்டு கல்வியைத் தொடரும் வரை காத்திருந்த பள்ளி. எந்தக் குழந்தைக்கும் தோல்வியுணர்வை வழங்காத பள்ளி.

ஸம்மர்ஹில் நிறுவி வரலாறு படைத்த நீல், அடிப்படையில் தோல்வியுற்ற ஓர் ஆசிரியர்தான்.

ஸ்காட்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது (1917) மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார் என்பதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

பணிநீக்கம் செய்யப்பட்டு பள்ளியை விட்டு வெளியேறுகையில் அவர் தன் சின்னஞ்சிறு மாணவர்களுடன் உரையாடுகிறார்:

“நான் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகிறேன் என்பது உங்களுக்குப் புரியுமோ என்னவோ? இருந்தாலும் புரியவைக்க முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களுடைய அம்மா அப்பாக்களூக்குப் பிடிக்காததால் நான் வேலைநீக்கம் செய்யப்பட்டேன். நான் நல்ல ஆசிரியர் இல்லையாம்! உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து விட்டேனாம். பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டுப் படம் போடவும், மீன் பிடிக்கவும், விளையாடவும் உங்களைப் பழக்குகிறேனாம். உங்களுக்குத் தேவையானதைக் கூட நான் சொல்லித் தரவில்லையாம்! பொலிவியாவின் தலைநகரம் எது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? உங்களுக்குத் தெரியாதல்லவா? இதையெல்லாம் நான் சொல்லித் தரவில்லை அல்லவா?…” இவ்வாறு நீல் பேசிக் கொண்டிருக்கையில் ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?. நீல் பதில் அளிக்கிறார்: “அது எனக்கே தெரியாது ஜிம்.”

பொய்மை கலவாத உரையாடல் இது.

எப்போதும் இப்படித்தான். பொய்மையற்ற உரையாடல்களுடனே அவர் குழந்தைகளை எதிர் கொண்டார். குழந்தைகளை நேசித்தார்.

பியாஜெட்டும், நீலும் குழந்தைகளை மதித்தவர்கள்; மதிப்பிட நினைத்தவர்கள் அல்லர்.

பியாஜெட், நீல் போன்றோரின் கண்களுக்குத் துர்கா கோமாளியல்ல, ஆர்வமுள்ளவள்; துடிப்பானவள்; பிரியத்துக்குரியவள். மனோரீதியான சில பிரச்சினைகள் அவளிடம் உண்டு. ஆனால் அவை களைய முடியாதவை அல்ல. களையலாம். எப்படி? சரி, தப்பு கண்டுபிடித்தா? இல்லை. பொறுமையும் வாஞ்சையும் கொண்டு! யாராவது ஒரே ஒருத்தராவது அவளோடு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்.

லேபிள்கள்: ,

ஆசிரியத்துவத்தின் வகிபங்கும்

ujeyanthan .y
B.Ed (reading)
final year
EASTERN UNIVERSITY SRI LANKA

--------------------------------------------------------------------------------

“If you have a lemon, Make a Lemonade” என்பது மொழி. அதாவது தங்களிடம் ஓர் எழுமிச்சம் பழம் இருப்பினும் அதிலிருந்து எழுமிச்சம்சாறு செய்யலாம் எனும் நம்பிக்கை, அவ்வாறு தொடங்கினால்தான் பின்னர் தோடம்பழச்சாறு பற்றியோ அல்லது பெரிய தொழிற்சாலை பற்றியோ சிந்திக்க முடியும் என்பது பொருள்.

இவ்வாறுதான் ஒவ்வொரு மாணவனின் கற்றவும் நம்பிக்கை சார்ந்தே அடித்தளமிடப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய நிலையில் பாடசாலைகள், பத்திரிகைகள், கல்வியியல் அமைப்புக்கள், நிறுவனங்கள், சஞ்சிகைகள், போன்றன இதற்கான உந்துதல்களையும், உறுதுனையையும், பலமான நம்பிக்கையினையும் வழங்குவதில் பாரிய முயற்சி காட்டி வருகின்றது.

உலக மாற்றங்களுக்கு ஏற்ப இயைந்து கொடுக்கக் கூடிய வகையில் கற்றல் - கற்பித்தலில் புதுப்புது திறன் விருத்திகள், கல்வியியல் முறையில் விசேட சீர்திருத்தங்கள் போன்றன உள்வாங்கப்பட்டு இயக்கத்திறன், ஆக்கத்திறன் அதிகரித்து வருகின்றமை நோக்கியறியத்தக்கது.

“இன்றைய சிறார்கள் நாளைய தலைமைகள்” என்ற ரீதியில் மாணவர் சமூதாயத்திளை கல்வி அறிவில் முன்னேற்றுதல் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆளுமையும் திறனும் கொண்டவர்களாக உருவாக்குதல், அவர்களை முழு மனிதனாக்குதல் பணிகளில் பாடசாலையானது மிகப் பெரிய வகியங்கினைக் காத்து வருகின்றது.

ஒருவனை மனிதப்பண்பாடுடையவனாக மாற்றும் வகையில் கல்வியானது “குழந்தைகளிடம் இருந்து முழு மனிதனை வெளிக் கொணர்ந்து திறன் விருத்தியின் ஆளுமையை வளர்க்கின்றது. இங்கு உடல், உள, அறிவு, ஆண்மா என்பன ஒன்றினைந்து விருத்தி செய்யப்பட்டு வெற்றி கொள்ளப்படுகின்றது”. இதனால் கல்வி சிறந்த உளத்துணையுடையதாகவும் காணப்பட வேண்டியுள்ளது.

ஆசிரியர்களின் வகிபங்கு : சமூக நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படும் பாடசாலையின் வகுப்பறையிலிருந்தே நற்பிறஜைகள் என்ற அந்தஸ்தினையுடையவர்களாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர் வகுப்பறையில் ஆசிரியர் எவ்வாறு கற்றல் கற்பித்தலினை முன்னெடுக்கின்றனர் என்பதிலேயே ஆசிரியரின் வெற்றி தங்கியுள்ளது.

“குழந்தையானது கேள்வி கேற்கும் போதுதான் மனிதன் தனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கின்றது என்பதனை உணருகின்றனர்” என Michael Block Fort என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது இன்றைய நிலையில் பிள்ளைகள் பல்வேறு கோணங்களில் திறன்படைத்தவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு ஏற்றவகையில் முகங்கொடுக்கக் கூடியவர்களாக ஆசிரியர் சமூகம் தயார் படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை வெற்றி கொள்வது என்பது ஓர் இலகுவான காரியம் எனக்கூறிவிட முடியாதுள்ளது. ஓவ்வொருவரின் சிந்தனையும், செயற்பாடும், தொனியும் வெவ்வேறு குடும்பச் சூழலிலிருந்து வரும் வகையில் பரந்து பட்டதாகக் காணப்படுகின்றது.

அதாவது தரம் 1ற்குள் நுழையும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் காலடி எடுத்துவைக்கின்றனர். சிலமாணவர்கள் இயல்பூக்கம் கொண்டவர்களாகவும், சிலர் சாதாரன நிலையில் உள்ளவராகவும், மேலும் சிலர் கூச்ச சுபாவம், அதீத அமைதி, குரும்புத்தனம், அழுகை போன்ற பல மனப்பாங்குடன் காணப்படுவர். இந்நிலையில் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவரவர் நடத்தைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அணுகி சமநிலைப்படுத்தும் திறன் ஆசிரியரிலேயே தங்கியுள்ளது.

இன்றைய நிலையில் கல்வியில் அறிவிலி, முட்டாள், என்ற சொல் வாசகம் அகற்றப்பட்டு விட்டது அதாவது ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு வகையில் விகித அடிப்படையில் திறமை கொண்டவர்களாகக் காணப்படுவர். அவ்வகையில் சீறிய வழியில் வளர்த்தெடுப்பது ஆசிரியத்துவத்தின் முக்கியபணியாகவுள்ளது. மாணவர்களின் நிலை கருதி அவர்கள் 3 நிலைகளாக வகைபடுத்தப்படுகின்றனர்.

1. மீதிறன் கொண்டமாணவன் (Gifted Child)
2. சாதாரனமானவன் (Normal Child)
3. மெல்லக்கற்கும் மாணவன் (Back Ward Child)

வகுப்பறையில் இவ் 3 விதமான மாணவர்களும் காணப்படுவர் இம் மூவினருக்கும் வெவ்வேறுவிதமான கற்பித்தல் அணுகுமுறை என்பது வித்தியாசப்பட்டுக் காணப்படவேண்டும்.

எடுத்துக்காட்டாக – ஆசிரியர் ஓர் பாடத்தினை விளங்கப்படுத்திய பின்னர் அது தொடர்பான பயிற்சியோ, விளக்கமோ கரும்பலகையில் எழுதி முடிக்கும் முன்னே மீதிறன் கொண்ட மாணவன் எழுதிமுடித்துவிடுகின்றான். ஆனால் அதே வகுப்பறையிலுள்ள மெல்லக் கற்கும் மாணவன் பாடம் முடிவடைந்த வேளையிலும் கூட ஒரு சொல்லோடு மாத்திரமே இருந்து விடும் நிலையும் காணப்படுகின்றது. இங்கு இவ்விரு வகுப்பாரும் விசேட தேவையுடைய மாணவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே இவ்விரு சாராரினதும் நிலைகுறித்து கவனித்துச் செயற்படுவதென்பது ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. இது சீர் செய்யப்படாத விடத்தே முறைசாராக் கல்வி திட்டம் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரினாலேயே வினைத்திறன, விளைதிறன் கொண்ட சிறந்த சூழல் உருவாக்கப்படுகின்றது அதேபோன்று மாணவர் மனதிலும் ஆசிரியர் தம்மீது அக்கரை கொண்டுள்ளார். தம் எதிர்கால வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பார் என்ற நம்பிக்கையும் உணர்வும் காணப்பட வேண்டும். இதனாலேயே “ஆசிரியர்கள் ஞான விளக்குகளாவர்” என்ற கருத்தினை சோக்ரடிஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது ஆசிரியர்களானவர் வெறுமனே போதிப்பவர்களாக அன்றி சகல துறைகளிலும் நின்று கற்றல் கற்பித்தல் நிபுனத்துவத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய நிலையில் கல்வி உளவியல் என்பதும் மாணவர்களின் எதிர்காலத்தினை சீராக்கும் வகையில் பல நுட்ப முறைகளை கையாளுமாறு வலியுறுத்துகின்றது அதாவது மாணவர் சமூதாயத்திற்கு முன்மாதிரியாகவும், திறமையான அணுகுமுறைகளையும் கைக்கொண்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

“ஆசிரியரானவர் உலகை விமர்சனம் செய்பவர் மட்டுமல்லாது குறைகளிலிருந்து தீர்வு வழங்கி சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியவர்கள்”

வெவ்வேறு நிலையினையுடைய மாணவர்களை இணங்கண்டு கொள்வதற்காக பல நுட்ப முறையினைக் கைக்கொள்ள வேண்டும் என கல்வி உளவியல் வெளியிட்டுள்ளது.

1. அவதானிப்பு முறை
2. அகநோக்கு முறை
3. வினாக் கொத்து மறை
4. தனியாள் முறை
5. புள்ளிவிபரவியல் முறை

போன்ற முறைகளை சுட்டிக்காட்டுகின்றது இவ் அவதானிப்புத் தொடர்பு மூலம் மாணவர்களை இலக்கு (Goal) நோக்கி வடிவமைக்கமுடியும் ஒரு பெற்றோரிலும் பார்க்க ஆசிரியரினாலேயே ஒரு மாணவனின் உளநிலையை கணிப்பிட்டுக் கொள்ள முடிகின்றது மேலும் ஆசிரிய மாணவ இடைத் தொடர்பு (Intereaction) என்பது மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

இன்று கற்பித்தல் பணியினை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு பல ஆய்வுகளும், புதுப்புது சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு கற்றல் கற்பித்தல் புத்தாக்கம் பெறுகின்றன இந்த வகையில் ஆசிரியத்துவம் கொண்டிருக்க வேண்டிய சிறப்புத் தேர்ச்சி, நற்பண்பு பற்றி கொலம்பிய பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வின் முடிவானது வெறுமனே பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் சிறந்த ஆசிரியர்களாகக் கொள்ளப்படமாட்டார்கள் மாறாக பின்வரும் அனைத்துப் பண்புகளையும் இணைத்திருக்கும் வகையிலேயே சிறந்த ஆசானாக மாறும் வகிபாகத் திணையும் பெறமுடியும்.

1. பரந்த அறிவு
2. ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன்
3. முகமலர்ச்சி
4. கவர்ச்சிகரமான குரல்
5. நல்லபிமானம்
6. நடுநிலைமை
7. சமூக இசைவு
8. தன்னம்பிக்கை
9. பல்துறை நிபுனத்துவம்
10. சுறுசுறுப்பு
11. நேரத்திற்கு தொழில் புரிதல்
12. சரியான முடிவெடுத்தல்
13. வசீகரிக்கும் தன்மை
14. நலன் விரும்பும் மனப்பான்மை
15. தன்னலமற்ற சேவை
16. ஒத்துழைப்பு
17. மன தைரியம்
18. தலைமைத்துவம்

இவ்வாறு பல நற்பண்புகள் இணைந்தே கட்டமைக்கப்பட்டதாக ஆசிரியத்துவம் காணப்படவேண்டும் என்கிறது இவ்வாறு ஆசிரியரின் பணிகளைத் தெளிவுபடுத்துவதைப் போன்று பாடசாலைக் கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இன்றைய உலக மாற்றங்களுக்கு ஏற்ப எதிர் கொள்ளக் கூடிய வகையில் 2007ம் ஆண்டு பாடவிதான மறுசீரமைப்பில் இலங்கையின் முறைசார் பாடசாலைகளில் 5E என்ற மாதிரி முறையின் அறிமுகமும் முக்கியமானது அதாவது இதுவரை காலமும் இருந்த பாடசாலைக் கலைத்திட்டங்களால் மாணவர்களின் ஆற்றல் விருத்தி செய்யப்படவில்லை. என்பதிக்கினங்க இவ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 5நு என்பதானது பின்வரும் வகையில் அமைந்துள்ளது.

1. ஈடுபடுத்தல் (Engagement)
2. கண்டறிதல் (Exploration)
3. விளக்கமளித்தல் (Expiation)
4. விரிவாக்கம் (Elaboration)
5. மதிப்பீடு (Evolution)

ஆசிரியர்களின் நிலை மாற்று வகிபங்கினை ஏற்றுச் செயற்பட வைப்பதானது இதன் நோக்கமாகும். தகவல்களை முன்னின்று ஒப்பிப்பவராக இல்லாமல் பல்வேறு பாத்திரங்களில் நின்று மாணவர்களை வழிப்படுத்துவதாகும் வசதியளிப்பவர், மாற்றுபவர், முகாமையாளர், ஆலோசகர், ஆய்வாரள், மாற்று முகவர், வளவாளர், உதவியளிப்பவர் பொன்ற பல வகிபங்கினைப் பெற்றுச் செயற்பட தொழிற்பட வைப்பதாகும்.

இதனால் மாணவ மனப்பாங்கு அறிவு திறன், போன்றன மூலைச்சலவை செய்யப்பட்டு வளப்படுத்தப்படுகின்றன இவ்வாறு கற்றல் கற்பித்தலில் அக்கரை கொண்டவர்களாகக் காணப்படும் ஆசிரியர்களுக்கு மற்றும்மொரு பாரிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கின்றது. இன்றைய கல்வியியல் நிலையில் மாணவர்களின் நடத்தைச் சீராக்கம் என்பது முக்கியம் பெறும் ஒன்றாகக்காணப்படுகின்றது. ஆயினும் இன்றைய நிலையில் ஒழுக்க விழும்மியங்கள் கடைப்பிடினக்கப்பட்டு வருகின்றனவா என்பது பெரும் குறையாகவே உள்ளது இதற்ற காரணம் இன்றைய கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மாணவன் சமூகமயமாக்கப்பட்ட விதம் மற்றும் குடும்பத்தின் சிக்கல் நிலை போன்றவாக இருக்க முடியுமாக அறியப்படுகின்றது ஆயினும் இம் நடத்தைச்சீராக்கம் பற்றி ஆய்வுக்க உற்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பல மொழியானது குறிப்பிடத்தக்கது என்னதான் கல்வியில் சிறப்பிடம் பொற்ற ஒருவராகவோ அல்லது ஆலுமையுடையவராக இருப்பினும் ஓழக்கவிலுமியம் கொண்ட ஒருவராலேயே வெற்றி கொள்ளப்படுகிறது என்பது நிதர்சனமானது இதனாலேயே அவரின் சுய கௌரவம் பாதுகாக்கப்படுகின்றது இந்த வகையில் நடத்தை சீராக்கம் ஒக்க விழுமியம் பேனல் போன்றன வகுப்பறையில் இருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டிய போறுப்பு ஆசிரியத்துவத்திற்கு இருக்கின்றது.


மாணவர்களின் உள நெருக்கீடு : இன்றைய நவீன கல்வியியல் முறையானது மாணவர்களுக்கு என விசேட செயற்திட்டங்கள் நோக்கியதான கற்றல் கற்பித்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடையக் கூடிய ஓர் நிலையினை எட்டியுள்ளோம். இன்றைய நிலையில் பன்திறன் கொண்ட மாணவர் சமூதாயம் உருவாக்கப்பட்டு வருகின்றது என்பதில் வெளிப்பாடுகள் சான்றுபகிர்கின்றன பெருபெறுகள் அடைவுமட்டச் சான்றுதல்கள் பரிசில்கள் போன்றன இதனை வெளிக்காட்டுகின்றன

ஆயினும் இன்றைய நிலையில் உள நெருக்கீட்டிற்கும் சுமைகளுக்கும் ஆளாகக் கூடியவர்களாகக் காணப்பட்டு வருகின்றன மகிழ்சி கரமாண கற்றல் விரும்பக்கற்றல் என்பது குறைந்த நிலையிலேயே உள்ளது இதற்கு அதிகூடிய காரணம் பெற்றோர்களினாலேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.

ஆரம்பக் கல்வியில் இருந்து எழுதும் திறன், படிக்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன், பேசும் திறன் போன்ற நான்கு திறன்களும் முறைமையடையும் போதே ஒரு மாணவனானவன் அம் மொழியில் புலைமை பெற முடியும் ஒரு பிள்ளையின் சொற்கள் கூடிய விதத்தில் 2000 சொற்களாகும் வரை வாக்கியங்களை சரிவர பொருள்விளங்கி வாசிக்க முடியாது இதற்காகப் பொற்றோர் தன் பிள்ளை முன்பள்ளிக்கு சென்ற உடனே வாசிப்புப் பெற்று விடவேண்டும் என்பதில் ஐயம் கொள்வது நியாயம் இல்லை மாறாக முன்பள்ளி என்பது இயைந்து மற்றவ்ரகளோடு (சகபாடிகளோடு) இடைவினை கொள்வதும் பேச்சுத்திறனை அதிகரிக்கும் ஓர் களமாகக்காணப்படுகிறது ஒரு பிள்ளை வாசிப்பு திறனை அதிகரிப்பதிலும் முன்னமே பேச்சுத்திறன் மேலாக்கம் பெற வேண்டும் தன்னுடைய பிள்ளைகள் வேகமாக, அவசரமாக முன்னேற வேண்டும் என்பதற்காக “குருவித்தலையில் பணங்காயைச் சமத்துவது போன்று” தங்கள் பிள்ளைகளின் மனதில் சுமைகளை பரப்பி விடுகின்றனர். அவரவர் கொள்தகுதிறன் (Capcity) கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக – தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் தனது பிள்ளை சித்தி எய்த வேண்டும் என்பதற்காக தரம் - 3லிருந்து விசேட பாடத்திட்டம் என்றும் மாணவர்களை பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது உதாரனம் காட்டி அவர்களின் பிள்ளை சித்திபெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தியெய்த வேண்டும் அப்படியென்றால் தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது. உதாரணம் காட்டி அவர்களின் பிள்ளை சித்தி பெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தி எய்த வேண்டும் அப்படி என்றால்தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் அதிகரித்து வருவதான அறியமுடிகின்றது.

இவ்வாறு பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானதாக அமையும் நிலையிலும் கூட அவர்களின் வயதிற்கேற்ற கல்வியின் வளர்ச்சியினைப் பெறுவதற்கும் அவர்களின் உளவிரத்தியினை மேற்கொள்வதற்கும் ஒவ்வோர் பெற்றோரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய தேவையுடையவர்களாக இன்றைய மாணவர்கள் காணப்படுகின்றனர்.

உளவிருத்தியினை ஏற்படுத்தும் ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவம் இன்று பெற்றோர்களால் 2ம் தரமாகவே நோக்கப்படுகின்றது. மாணவர்களின் சிந்தனை விருத்தி நினைவாற்றலினை அதிகரிக்கும் ஓர் முக்கிய நற்பயன் ஆன்மீகக் கல்விக்கு உண்டு என்பதையும் அது உள அமைதியினை ஏற்படுத்துகின்றது என்பதனையும் பெற்றோர்கள் சிந்திக்கத் தவருகின்றனர். இவ்வாறு ஓய்வின்றி பிள்ளையின் மனதினைக் கணமாக்கும் பெற்றோர்கள் குழந்தையின் உள விரத்தி என்பது குழந்தை முதலே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையை உணர வேண்டும்.

உதாரணத்திற்கு ஓர் மாணவனை அனுகும் சமயம் தனது பெற்றோர் என்பவர் ஓர் ஓய்வு என்ற நிலையினை தங்களுக்குத் தரத்தவருகின்றனர் என்ற கூற்று தரப்படும் நிலையினை அறியமுடியும். இவ்வாறு இன்று உளரீதியான தாக்கம் மிருந்த நிலையில் உள்ளது.

இவ்வாறு ஆர்வம் காட்டும் பொற்றோர் பிட்பட்ட காலங்களின் பிள்ளைகள் மீதான கண்காணிப்பினையும் கரிசனையினையும் காட்டத்தவருகின்றனர். ஆனால் பெற்றோர் தனது பிள்ளையில் அனைத்து வயதுப்பருவங்களிலும் அக்கரை காட்டக் கூடியவர்களாகவும் ஊக்கமூட்டக் கூடியவர்களாகவும் காணப்பட வேண்டும். இதனாலேயே “பெற்றோர்கள் பிள்ளைகளின் நிரந்தர ஆசிரியர்கள் அவர்களுக்கு ஓய்வு என்பது கிடையவே கிடையாது” என்ற கூற்று நினைவுறுத்தப்படுகின்றது.

அத்தோடு ஓர் பிள்ளையின் குடும்பச் சூழலும் உளநெருக்கீடாக அமைவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது இன்றைய நிலையில் குழந்தையானது புத்திமதிகளைக் கேட்டு நடப்பதை விட பெற்றோர்களின் நடத்தைகளைச் சுலபமாக பின்பற்றக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். இந்த வகையில் தாய் தந்தையர்களுக்கிடையிலான பழக்கவழக்கங்கள் பிள்ளையில் பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. திய நடத்தைகளும் அமைதியும் அற்ற குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் உளநெருக்கீட்டிற்கு உற்பட்டவர்களாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் பெற்றோர் பிள்ளையின் மீது திணிக்கும் செயல்ப்பண்பும் அவர்களின் உள நெருக்கடியினைத் தூண்டுவதாகவும் உள்ளது. அத்தோடு மாணவர்கள் சகபாடிகள் சம வயதுக்குழுக்கள் விளையாட்டுக் குழுக்கள் போன்றவற்றினூடாகவும் உள நெருக்கீட்டிற்கு உள்ளாக்கப்படுவதனை இன்று அவதானிக்கக் கூடிய நிலையில் உள்ளது.

இவ்வாறு பெற்றோர்கள் சமவயதுக்குழுக்கள் சூழல் போன்றவற்றினால் உள நெருக்கீட்டிற்குள்ளாகும் அதே சமயம் ஆசிரியச் சமூகத்தினாலும் உளநெருக்கீடு மாணவர்களுக்கு ஏற்படுகின்றது. அதாவது பின்தங்கிய பிரதேச மற்றும் எல்லைப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியரின் கவலயீனமும் அப் பாடசாலை மாணவர்களின் உள்ளங்களில் ஓர் விருத்தியினைப் பெறமுடியாத நிலையில் உள்ளது. அதாவது அதிக விடுமுறை மற்றும் நேரத்திற்கு தொழில் புரியாமை குறைந்த நேரக்கற்கை போன்றனவும் மாணவர்களில் பிரதிபலிக்கக் கூடியதே. மேலும் தொடரான விடுமுறையடுத்து பரீட்சைகாலங்களில் மேலும் கற்பித்தலைக் கணமாக்கும் வேளையில் மாணவனினால் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் போன்றனவும் காணப்படக்கூடியதாகவே உள்ளது. அதாவது ஒரு நிருவாகத்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒரு நாள் விடுமுறை என்றால் அவர் தனது பணியினை அடுத்தநாள் தொடரக் கூடியதாகவிருக்கும் ஆனால் ஓர் கற்றல் நாள் என்பது அவ்வாற நிலையில் அல்ல. என்பது சிந்தனைக் குறியதே.

இன்யை சூழலில் புதிய புதிய சீர்திருத்தங்கள் மாணவர்களுக்காக அறிமுகம் பெறும் வேளையிலும் அவை அனைத்தும் சகலரினாலும் ஏற்கப்பட்டு பன் விருத்தி வகிபங்கு மேற்கொள்ளப்பட வேண்டியதும். உள வளர்ச்சி மேன்மை பெறுவதும் தேவையை நோக்கியதே இந்த வகையில் மாணவர்களும் - ஆசிரியர்களும், மாணவர்களும் - பெற்றோர்களும், பெற்றோர்களும் - ஆசிரியர்களும் என்ற நிலையில் காணப்படும் இன்றைய கல்வியியல் முறையானது.

1. மாணவர்களின் தலைமை தாங்கும் பண்பு
2. ஒத்துழைப்பு
3. நேரிய கற்றல்
4. விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு
5. கீழ்ப்படிதல்
6. கட்டளைகளை ஏற்று நடத்தல்
7. சமநிலைத் தன்மை பேனல்
8. தோல்வியை ஏற்றுக் கொள்ளல்
9. ஒழுக்க வழுமியங்களில் ஈடுபடல்
10. இலக்குகளுக்கு வளப்படல்
11. ஊக்கமளிக்கப்பட்டிருத்தல்

போன்ற பண்பாட்டு பழக்கவழக்கங்களும் மாணவர் சமுதாயத்தில் விருத்தி செய்யப்படுகின்றது. இந்த வகையில் அறியாமை எனும் இருளை நீக்கி அறிவு எனும் ஒளியைப் பரப்புவது ஆசிரியரின் பிரதான கடமையாகின்றது. இவ்வாறு பல்வேறு கடமைகளைக் கொண்ட ஆசிரியர் சமுதாயம் பல்வேறு அறிவுப் பிரவாகத்தைக் கொண்டவர்களாக விளங்கப்பட வேண்டும் சமகால சூழ்நிலைக்கேற்ப பல்வேறு திறன்களையும் சுயநம்பிக்கையினையும் சுயமதிப்பீட்டினையும் பெற்றுக் கொள்ள தம்மைத் தாமே வளப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையுடையவராக ஆசிரியத்துவம் காணப்படுகின்றது. அத்தோடு மாணவர்களின் செயலாக்கத்தினை வளப்படுத்தும் வகையில் எதிர்பார்க்கப்படுவது காணக்கூடியதே.

ஆத்தோடு பெற்றோரும் தங்களது பிள்ளைகளில் சகல வகையிலும் வகனம் செலுத்தக் கூடியவர்களாகக் காணப்பட வேண்டும். ஓர் உயர்ந்த கட்டத்திற்கு அத்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல ஒரு மனிதனின் குழந்தைப்பருவமும் அவனின் குடும்பச் சூழலும் பாரிய பங்களிப்பினை கொண்டுள்ளது. அத்தோடு குழந்தையின் (மாணவனின்) அமைதியான சூழல், உடல், உள, அறிவு, ஆன்மா விருத்தி கட்டுமானம் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக மாற்றுவதில் பெற்றோரின் பங்கு முழுக்க முழுக்க அமைந்து விடுகின்றது. எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகள் தம்மிலும் பிறரிலும் கொண்டுள்ள எதிர்பார்ப்பு இழக்கப்படும் போது உள நெருக்கீட்டினையும், மன உடைவு, மன அழுத்தம், பற்றற்ற நிலை போன்ற பண்பினை வளர்த்தெடுக்கின்றனர்.

இந்த வகையில் ஆசிரியர் பெற்றோர் மாணவனின் பன்விருத்தியில் பங்கு பற்றல் சிறப்பிடம் பெறவேண்டிய வகையில் செயற்படுவது சிறந்த எதிர்கால. சமுதாயப் பரம்பலுக்கு உருதுனையாக அமையக் கூடியவர்கள். எனவே கூழந்தைகளையும் மாணவர்களையும் நேரடியாக அணுகக் கூடியவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களுமேயாகும்.

“எனவே ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்ற நியூட்டனின் விதி இன்று மாணவர்களின் செயற்பாடுகளுக்கு ஆசிரியர் சமூகமும் பெற்றோர்களும் தாக்கத்தின் மறுதாக்கமாக அமைகின்றது என்பது உண்மையான ஒன்றேயாகும்.

லேபிள்கள்:

''இயற்கை அழிக்கப்படுவதற்கு மனிதனின் சுயநலமே காரணம்''

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும்' என்ற கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசுகை‌யி‌ல், இன்றைய சென்னை மாநகரம் எப்படி உள்ளது நாளைய சென்னை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை நமக்கு அளித்த கொடைகளான நிலம், நீர், காற்று ஆகியவற்றை மனிதர்கள் அழித்து வருகிறார்கள். சென்னை மாநகரம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று மனிதன் இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழ தொடங்கியுள்ளான். உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டன. பாரம்பரியமான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை போன்ற உணவு வகைகளை யாரும் உண்பதில்லை. பொறித்த, வறுத்த, பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகளையே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதன்மூலம் மனிதன் தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொண்டுவிட்டான்.

உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல், மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்தக் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளன.

லேபிள்கள்:

குரு ஸ்தானம்! ஆசிரியர்

குரு ஸ்தானம்!
வாழ்வின் இரண்டு அதி முக்கிய அறைகள். ஒன்று கருவறை; அம்மாவுடையது. மற்றொன்று பள்ளியறை ஆசிரியருடையது! அம்மா வாழ்வை தந்து உலகத்தை அறிமுகப்படுத்துவார். ஆசிரியர் அறிவை தந்து வாழ்வை அறிமுகப்படுத்துவார். உலகின் மிக உன்னத அறைகளுக்கும், அதன் அன்பாளர்களுக்கும் மிக்க வந்தனம்!
மூன்றாமிடம்!
தலைச்சிறந்த வரிசை ஒன்று உள்ளது. அதில் ஆசிரியருக்குமான இடமும் நன்று உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் இடம் மூன்று - ஆசிரியப் பணிக்கென உள்ளது.
7-ல் 1 பங்கு / 2 பங்கு!
இன்றைய அறிவியல், மருத்துவ முன்னேற்றம் மனிதனின் வயது ஸ்கோரின் சராசரியை 70 வரை கொண்டு வந்து உள்ளது. இன்று கட்டாய கல்வி சட்டமாகிவிட்டது. ஒரு மனிதன் குறைந்தது 10 ஆம் வகுப்பு வரை படிப்பான் என்று வைத்து கொள்ளலாம். அப்படியென்றால், 10 வருடங்கள் பள்ளி. இதன்மூலம் ஒரு மனிதன் தனது வாழ்வின் 7ல் 1 பங்கை ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான். அதுவே மேல் படிப்பு, உயர் படிப்பு, சிறப்பு படிப்பு என்று மனிதன் படிப்பில் பல படிகள் ஏறினால், மேலும், 10 வருடங்கள் ஆசிரியரின் மேற்பார்வையில் அவன் வாழ்வை செலவழிப்பான். அந்த நிலையில் அவனின் வாழ்வின் பங்கில் அதாவது 7ல் இரு பங்கை, ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான்.
நோபலில் 60 சதவீதம்!
அமைதி, விஞ்ஞானம், இலக்கியம் என பல துறைகளில் உன்னதம் புரிந்தவர்களுக்கு மனிதகுலம் சூட்டும் மிகப் பெரிய மகுடம் "நோபல்' ஆகும். இதனை இன்றளவும் வென்றிட்ட மாந்தர்களில் 60 விழுக்காடு நபர்கள் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள்தான்.
இந்த பட்டியலில் முதல் இடம்!
உலகில் தவறுகள், பிழைகள், குற்றங்கள், பாவங்கள், கொடூரம் என வளர்ந்து கொண்டே இருக்கும் போது நம்பிக்கையுடன் சாய்ந்து கொள்ளும் ஒரு இடம் உண்டு. பெற்றோரும், சான்றோர்களும் அந்த இடம் ஆசிரியருடையது என இக்காலத்தில் கூறுவர். சமூகம் தீமையிலிருந்து விலகி நன்மையில் நடந்திட, அதனை நடத்திட பெரிதும் நம்புவது ஆசிரியர்களையே! அதனால், தவறே செய்யக்கூடாதோர் பட்டியலில் ஆசிரியர்கள் முதலிடம் பெறுகின்றனர். ஆசிரியரின் தவறு, மனிதனின் ஆதார நம்பிக்கை அடிப்படையையே ஆட்டம் காண செய்துவிடும். ஆசிரியர் மேல் இச்சமூகம் மிகுந்த மரியாதையை, மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதனால்தான் சமூகம் தனது சந்ததியை தனது எதிர்காலத்தையே ஆசிரியரிடம் அளித்து உள்ளது. மாணவனும், ஆசிரியரை மலை போல் நம்புகிறான் . பாதை காட்ட வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கமாய் வாழ வேண்டும். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஆசிரியரின் வாழ்வு இருந்திடல் வேண்டும்.
வெளிச்சம் தரச் செய்ய வேண்டும்!
நன்றாக படிப்பவன் கடைசியில் கவனிக்கப்பட வேண்டியவன். மோசமாய் படிப்பவன் எமர்ஜென்சி கேஸ்; உடனே கவனிக்கப்பட வேண்டியவன். படிப்பில் ஆர்வம் இல்லாதவன் பியூஸ் போன பல்பு போன்றவன். கூடு இருக்கும் ஆனால், உயிர் இராது. ஆசிரியர் விஞ்ஞானி போல ஆராய்ந்து அங்கே உயிரை ஊட்ட வேண்டும். சுமாராய் படிப்பவன் லோ வோல்டேஜில் எரியும் பல்பு. வோல்டேஜை சரி செய்தால் போதும். நன்றாய் படிப்பவன் பளிச்சென பகல் போல எரியும் பல்பு. திடீரென ஈசல்கள் மண்டாதபடி மட்டும் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒரு சினிமா ஹீரோ போல் !
ஒரு ஹீரோவிற்கு தெரியாத வேலையே இல்லை. தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல் காட்டுவார்கள். எதிலும் பூந்து புறப்பட்டு வருபவன் தானே ஹீரோ. அதுபோல ஒரு ஆசிரியர் ஏராளமாய் பாடத்தை பற்றியும், பாடத்தை ஒட்டியும், பாடத்திற்கு வெளியேயும் அறிந்து இருக்க வேண்டும். மாணவர்களின் மேல் உண்மையான அக்கறை வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தது போல புத்துணர்வுடன், புதிய புதிய விஷயங்களுடன் மாணவர்கள் முன் வர வேண்டும். படிப்போடு, நாட்டு நடப்பை, சமூக அக்கறையை, அன்பை, மனிதாபிமானத்தை, வாழும் வாழ்வில் மேன்மையை, பண்பாட்டை, கலாசாரத்தை என்று மாணவருக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
"எந்தவொரு குழந்தையையும் என்னிடம் 7 ஆண்டுகள் விட்டு வையுங்கள். அதன் பிறகு எந்த சாத்தானும், ஏன் கடவுளும் கூட அவனை அவனது குண நலன்களை மாற்ற முடியாது!'
-புகழ் பெற்ற கிரேக்க ஆசிரியரின் அனுபவ மொழி இது.
ஹேப்பி பர்த்டே டூ யு ஆல் !
மாணவர்கள் பிறந்தநாளை, பள்ளி அறிய கொண்டாடுவர். ஆசிரியரும் பரிசு தருவார். எந்த ஆசிரியராவது பிறந்தநாளை அனைவரும் அறிய கொண்டாடியது உண்டா? இல்லை. ஆசிரியர் தினத்தையே தம் ஆசிரியர்களின் பிறந்த தினமாய் மாணவர்கள் நினைத்து கொண்டாடலாமே! காசு போட்டு பெரிய பரிசாய் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆசிரியருக்கு பிடித்த பேனா, புத்தகம் என அவர் மனம் கவர்ந்தவற்றை அளிக்கலாம். படிக்காதவன் - படிக்கிறேன் என்றும், ஒழுங்கில்லாதவன் - இனி ஒழுக்கமாய் இருப்பேன் என்றும் உறுதிமொழி எழுதி தரலாம். ஒரு உண்மையான ஆசிரியருக்கு மாணாக்கரின் நலமே பெரும் பரிசு. இதுபோல உறுதிமொழி தந்து அதை அம்மாணவர்கள் கடைப்பிடிக்கவும் வேண்டும். மற்ற மாணவர்கள் கூட்டமாய் இதை செய்திடல் வேண்டும்.
மாணவர்களுக்கு சவால் !
ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பேச்சு, பாடம் நடத்தும் பாங்கு, வாகனம் என எதை வேண்டுமானாலும் எடுத்து கொண்டு கிண்டல் செய்யும் சில மாணவர்கள் உண்டு. ஆசிரியரின் மேன்மையை பற்றி தெரியாதவர்கள் அவர்கள். அவர்களை சும்மா விட்டு விட முடியாது. குரு பீடத்தின் மகிமையை எடுத்து காட்ட வேண்டும். ஆசிரியர் என்றால் பெரிய ஆளா என்ன? என கேட்கும் மாணவனுக்கு ஒரு சவால்!
ஒரு ஐந்து வயது குழந்தைக்கு பொறுமையாய், மகிழ்வாய், அன்பாய், "அ, ஆ, இ' சொல்லி கொடுங்கள் பார்க்கலாம். அப்படி நீங்கள் படிக்கும்போது ஆசிரியரின் உயர்வு விளங்கும். கண்கள் பணிக்கும்; கரங்கள் துதிக்கும்; மனம் மன்னிப்புக்கு மன்றாடும். ஆசிரியர், அம்மா, அப்பா, நண்பன் என்று எல்லாமாய் இருப்பவர் ஆசிரியர். ஆசிரிய பெருமக்களுக்கு சிறுவர்மலர் வாசக குட்டீஸ் களின் சார்பாக ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!

லேபிள்கள்:

மனித விழுமியம்

| |

ஆண்டவனின் படைப்பிலேயே அபூர்வமான படைப்பு மனிதன்தான் என்று ஆச்சர்யப்படுகிற அறிஞர்கள் போலவே காந்திஜியும் மனிதன், மற்ற படைப்புகளிலிருந்து ரொம்ப வித்தியாசமான தனிப்பிறவி என்கிறார். உடலமைப்பு, உணவுமுறை, உறக்கம் மற்றும் உடல் சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கும்போது மனிதனும் விலங்குகளை போலவே நடந்துகொண்டாலும் ஒழுக்க நெறிமுறையான தார்மீக தளத்தில் அவ்வப்போது தன்னை வைத்துக்கொள்வதுதான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆறாவது அறிவுதான் மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனிதனின் பூர்வாசிரமம் குரங்குதான் என்கிறது விஞ்ஞானம். மிருகத்தனம் என்பது மனிதனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விலக ஆரம்பத்திருக்கிறது. மனிதரில் இத்தனை குணங்களா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவதற்கு காரணம் மிருகத்தனம் சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம். அது முற்றிலுமாக விலகியிருக்கும்போது மனிதன் தன்னை படைத்த ஆண்டவனின் வசமே வந்துவிடுவான். அதற்கு காந்திஜி சொல்லும் வழிமுறை மனிதனுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் தெய்வீக சக்தி புரிந்துகொள்ள முயற்சிப்பது.

'மனிதன் என்பவன் வெறும் அறிவாற்றலோ, விலங்குகளையொத்த உடலமைப்போ, இதயம் அல்லது ஆன்மாவோ மட்டும் அல்ல. இவை அனைத்தும் ஒத்திசைவாக ஒருங்கிணைந்தவனே முழுமையான மனிதன்' (ஹரிஜன், 8.5.1937)

மனிதனின் நடவடிக்கைளுக்கும் அவனது ஆன்மாவின் குரலுக்கும் சம்பந்தமிருக்கவேண்டும். அப்போதுதான் அவனால் ஒரு முழுமையான மனிதனாக நடந்து கொள்ள முயற்சிக்க முடியும். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லவேண்டுமென்றால் பகுத்தறிவு, புலனடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கெட்டதை செய்யும் மனிதனுக்கு கூட எது நல்லது எது கெட்டது என்பது நன்றாகவே தெரிந்தபின்தான் அந்த செயலை செய்கிறான். பகுத்தறிவு மனிதனை பண்படுத்துவது உண்மைதான். ஆனால், அதுவே எல்லா மனிதனுக்கும் இருக்கவேண்டுமென்கிற கட்டாயமில்லை. ஆனால், புலனடக்கம் என்கிற விஷயம் ஒன்றில்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. காந்திஜியோ, மனிதனுக்கு என்றைக்கு பகுத்தறிவும் புலனடக்கமும் முழுமையாக கிடைக்கிறதோ அன்றுதான் மனிதனிடமிருந்து முரட்டுத்தனம் முற்றுலுமாக விலகிச்செல்கிறது. அப்போதுதான் அவன் முழுமையான மனிதனாகிறான் என்கிறார்.

'மனிதன் என்றால் மிருகத்தனத்தையும் முரட்டுத்தனத்தையும் விட்டொழிப்பதே என்பதை முழுமையாக உணரும்போதுதான் மனிதத்தன்மையே முழுமை பெறுகிறது' (ஹரிஜன், 8.10.1938)

மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்ததால் வந்த வினை, ஆண்டவனின் படைப்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படுபவன் மனிதனாகிவிட்டான். விலங்குகளை விட ஆபத்தானவன் மனிதன் என்பது உண்மைதான். மனிதனின் உணர்ச்சிகள் சில சுய கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது மனிதனும் மிருகமாகிறான். என்னதான் சொன்னாலும் பகுத்தறிவுதான் மனிதனை உயர்நிலைக்கு உயர்த்துகிறது என்கிறார் காந்திஜி.

'முன்னேற்றம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய விஷயம். பகுத்தறிவை பெற்றிருக்கும் மனிதனுக்கு உண்பதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையில்லை. மனிதன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை வழிபட ஆரம்பித்தான். கடவுளை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அதை புரிந்து கொள்வதே மனித வாழ்க்கையின் லட்சியமானது. ஆனால் விலங்குகளுக்கோ கடவுளை ஆராதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை' (யங் இந்தியா, 24.6.1926)

யானை, பூனை, நாய், குரங்கு எல்லாமே சினிமாவில் சாமி கூம்பிடுவதுகூட மனிதனின் பகுத்தறிவால் வந்த ஐடியாதானே! பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவுன் உந்துதல்தானே! உண்மையில் இது மாதிரியான ஜந்துகளுக்கு அடுத்த வேளை ஆகாரம்தான் ஆண்டவன். அதை தேடுவதில்தான் மும்முரமாக இருக்குமே தவிர ஆண்டவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்காது.

உணவு, உடையெல்லாம் கிடைத்தபின்னரும் சாந்தி கொள்ளாமல் எதையாவது தேடி அலைகிறான். சரி, மனிதன் ஒருவனே தன்னைப் படைத்தவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான் என்று சொல்லிவிடலாமா? இல்லை. அப்படியொரு ஆராய்ச்சியில் இறங்குமாறு ஆண்டவனால் படைக்கப்பட்டவனே மனிதன் என்கிறார் காந்திஜி.

'இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே தன்னை படைப்பித்த ஆண்டவனை அறிவதன் பொருட்டு உருப்பெற்றவன். நாளுக்கு நாள் தன்னை வளப்படுத்திக்கொண்டு உடைமைகளை சேர்த்துக்கொள்வது மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. தன்னை படைத்த ஆண்டவனை நோக்கி நாளுக்கு நாள் ஆத்மார்த்தமாக நெருங்கி வருவதே மனித ஜென்மத்தின் முக்கியமான பணி' (யங் இந்தியா, 27.10.1927)

லேபிள்கள்:

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தன்னம்பிக்கை

லேபிள்கள்:

வியாழன், 9 செப்டம்பர், 2010

பாலியல் கல்வி

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்களாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது சமூகம் ஆண் பெண்ணுடன் பேசுவதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாகக் கருதியது. ஆண் பெண்களுக்கென்று தனிப் பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரிவினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கி‎ன்றன. கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் ஆண் பெண் சகஜமாக வேற்றுமையின்றிப் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள், இன்டர்நெட்டின் வளர்ச்சி போன்றவையும் இருபாலர்களுக்கிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சியின் பக்க விளைவாக, இன்றைய இளைஞர்களிடையே, பல புத்தகங்களும் ஊடகங்களும் திரைப் படங்களும் பாலுறவு பற்றிய மோகத்தைப் பரப்பி வருகின்றன. இதனால், இளம் வயதிலேயே பாலுறவு பற்றி முழுமையான அறிவு இல்லாமல் நமது இளைய சமுதாயம் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பாலியல் நோய்கள், HIV/AIDS போன்ற உயிரைக் குடிக்கும் வியாதிகள் பரவத் துவங்கிவிட்டன. இளைஞர்களுக்குப் பாலுறவு பற்றி போதிய அறிவு புகட்டி அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதன் மூலமே பாலியல் நோய்களற்ற, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். பாலியல் கல்வியின் அவசியத்தைப் பலரும் உணர்ந்தாலும் இதற்கு எதிர்ப்புக்களும் இருக்கத்தான் செய்கின்றன. இது தவிர இந்த அறிவை இளைஞர்களுக்கு எவ்வாறு கொடுப்பது, எந்த வயதில் துவங்க வேண்டும், பாடத் திட்டங்கள் எப்படி இருக்கவேண்டும், இப்படிப் பல கேள்விகள். இது பற்றிய ஒரு சிந்தனைதான் இக்கட்டுரை. இது எந்த வகையிலும் முழுமையானதல்ல.

செக்ஸ் பற்றி, அதன் அடையாளம், உறவுகள், அதன் நெருக்கம் பற்றிய அறிவினைப் பெற்று அதனால் ஒரு தெளிவு பெறுவதைத்தான் பாலியல் கல்வி என்று சொல்கிறோம். இந்தக் கல்வி, இளைஞர்கள் தங்களை உணர்ந்து, தங்களது தேவைகளை அறிந்து கொள்ளவும், அந்தத் தெளிவினால் பாதை மாறாது வாழ்க்கையில் உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் உதவும் என்று சொல்லலாம்.

இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி தருவதன் மூலம் அவர்கள் பாலியல் பலாத்காரங்கள், பால் வேறுபாடுகளால் இழைக்கப்படும் அநீதிகள், தேவையில்லாத கருத்தரிப்புக்கள், தவறான உடலுறவுகளால் ஏற்படும் நோய்கள், HIV, AIDS ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். இந்தப் பாலியல் கல்வியின் உண்மையான நோக்கம், உடலுறவுகளால் வரும் அவசியமற்ற, விரும்பாத கருத்தரிப்புக்களைத் தவிர்ப்பதும், தவறான விளைவுகளைப் போக்குவதும், பாலுறவால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமல் காப்பதும்தான். ஆண் பெண் உறவை மேம்படுத்தி ஒரு உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் பாலியல் கல்வி பயன்படும். உண்மையான பாலியல் கல்வி என்பது இந்த நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றும் கல்விதான். இந்தக் கல்வி எது நல்லது, அல்லது கெட்டது என்று பகுத்தறிய உதவ வேண்டும். செக்ஸ், பாலுணர்வுகள் முதலியவற்றால் ஏற்படக்கூடிய சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் கருக்கலைப்பு, கருத்தடை போன்ற நுண்ணிய விஷயங்களையும் உணர்ந்துகொள்ளப் பயன் பட வேண்டும்.

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் விஞ்ஞான வளர்ச்சிகளால் சில பக்க விளைவுகளும் உண்டு. சில உடல்நலம் குறித்த பத்திரிகைகள் பாலியல் தொடர்புகளால் ஏற்படக் கூடிய தீங்குகளையும் ஆபத்துக்களையும் வலியுறுத்துகின்றன. வேறு சில பத்திரிகைகளோ பாலியல் நடவடிக்கைகள் ஒரு மனிதனை எப்படி முழுமை பெற்றவனாக ஆக்குகின்றன என்று சொல்கின்றன. இப்படிப்பட்ட மாறுபட்ட கருத்துக்களால் இளைஞர்களிடம் குழப்பம் ஏற்படுவது இயற்கை.

செக்ஸ¤ம், பாலுணர்வும் மிகவும் நுண்ணியமான விஷயமாகக் கருதப்படுவதால் இதைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் பல தட்டுக்களில் இருப்பவர்களிடையே வேறுபடுகின்றன. பாலுணர்வுகளைச் சுற்றியுள்ள கலாசார, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கருச்சிதைவு, திருமணத்திற்குமுன் உடலுறவு, கருத்தடை சாதனங்கள், ஓரினச் சேர்க்கை போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் பேசுவதற்கும் ஒரு களம் இவர்களுக்கு அம¨ந்தாலொழிய ஒழுக்க, மத ரீதியான கலாசாரக் கட்டுப்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இயலாமல் போகும்.

பாலியல் கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு இவைகள் பற்றித் தனிப்பட்ட கருத்துக்கள், நம்பிக்கைகள் இருக்கலாம். இந்தத் தனிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் கற்றுத்தரும் கல்வியில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் இவை இரண்டையும் பிரித்துணர வேண்டும். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், கல்யாணத்திற்கு முன்னால் உடலுறவு கூடாது என்ற கொள்கை உள்ளவராக இருக்கலாம். அவரது இந்த சொந்தக் கருத்து, ஆபத்தில்லாத பாலுறவு பற்றியும், கருத்தடைகள் பற்றியும் சொல்லிக் கொடுப்பதில் தடைக்கல்லாக இருக்கக் கூடாது. பாலுறவு பற்றிய கல்வியில் பொது ஒழுக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை மாணவர்களிடையே ஆசிரியர்கள் திணிப்பது தோல்வியையே தரும்.

படிக்கும் இளைஞர்களுக்கு உடலுறவு பற்றிய விளக்கங்களையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் எடுத்துச் சொல்லி அவர்களாகவே அது பற்றித் தெளிந்து ஒரு முடிவுக்கு வரச் சேய்வதுதான் உண்மையான பாலியல் கல்வி. உடலுறவு ஏற்படுத்தும் உணர்ச்சிகள், மற்றவரது உடல், மன உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் தர வேண்டிய மதிப்பு - இவைகள் பற்றியும் சொல்லித் தருவதாக இருக்க வேண்டும். இளைஞர்கள் பால் வேறுபாடுகள் பற்றி உணர இந்தக் கல்வி வழி செய்ய வேண்டும்.

அடுத்த படியாக, பாலியல் கல்வி, எத்தகைய உறவுகள் எண்ணங்களை பலப்படுத்தக் கூடியது என்று இளைஞர்கள் தாங்களே தீர்மானிக்கும் வகையில் அமைய வேண்டும். அவர்கள் பாலுறவில் அச்சுறுத்தல், தவறான அணுகுமுறைகள், மற்றவர்களது பலவீனத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துதல் முதலிய முறைகள் இனிமையான உறவுகளை எப்படிப் பாதிக்கும் என்பதை உணரும்படியாக அமைய வேண்டும்.
இளைஞர்கள் செக்ஸ் பற்றிப் பல்வேறு முறைகளில் தெரிந்து கொள்கிறார்கள். அவற்றில் சில சரியான தகவல்களைக் கொடுக்கும் வேளையில், சில சாதனங்கள் பாலுறவு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்புகின்றன. அதனால் செக்ஸ் பற்றிய கல்வியைக் கொடுக்குமுன்னால், மாணவர்களிடையே பாலுறவு பற்றிய தவறான கருத்து இருந்தால் முதலில் அதைப் போக்க வேண்டும். பாலியல் கல்வி படிப்பவர்கள் சிலர், கருத்தடைச் சாதனங்களால் பயனில்லை என்றோ அல்லது HIV/AIDS போன்ற நோய்கள் குணப்படுத்தக் கூடியவைதான் என்றோ தவறான கருத்துக்கள் கொண்டிருக்கலாம். இது போன்ற தவறான கருத்துக்களை முதலில் அவர்களது மனதிலிருந்து நீக்க வேண்டும். இளைஞர்கள் கீ¢ழே கொடுக்கப்பட்ட விஷயங்கள் பற்றி நன்றாக அறிந்திருப்பது அவசியம்:

பாலுணர்வு வளர்ச்சி (Sexual development)
இனப்பெருக்கம்
கருத்தடை
உறவுகள்

இளைய சமுதாயத்தினர் அவர்கள் வயதிற்கு வரும்போது உடலிலும், மன அளவிலும் ஏற்படும் மாற்றங்கள், கருத்தரித்தல், கருத்தடை, குடும்பக் கட்டுபாடு, உடலுறவு மூலமாகப் பரவும் வியாதிகள், HIV/AIDS பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த விதமான கருத்தடைச் சாதனங்கள் உள்ளன, அவை எப்படி வேலை செய்கின்றன, அவைகள் எப்படி உபயோகப் படுத்தப் படுகி‎ன்றன, எந்தக் கருத்தடைச் சாதனங்கள் சிறந்தவை, அவைகளை எப்படிப் பெற முடியும் என்பது பற்றி அறிந்திருத்தல் நலம். இவை பற்றி ஆலோசனைகளை சமுதாயத்திலும், தேசிய அளவிலும் எப்படிப் பெறலாம் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.

பாலியல் கல்வியைத் துவக்குவதற்கு எது சரியான தருணம்? சொல்லப் போனால் பாலியல் கல்வியை இளமையிலேயே, பருவமடைவதற்கு முன்பே ஆரம்பிக்க வேண்டும், சரியாக எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பது படிக்கும் இளைஞனது உடல், மன அறிவு வளர்ச்சியையும் அவர்களது புரிந்துகொள்ளும் தன்மையையும் பொறுத்தது.

என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், அதை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அதை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள், எப்போது சொல்லிக் கொடுக்கிறார்கள் எந்தச் சூழ்நிலையில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது, படிக்கும் இளைஞன் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறான் என்பதைப் பொறுத்தது. நாட்களை வீணாக்காமல் இளமையிலேயே பாலியல் கல்வியைத் துவங்குவது அவசியம். அடிப்படையான விஷயங்களை முதலில் சொல்லிக் கொடுக்கலாம். உதாரணமாக சிறு வயதில், மனிதர்கள் எப்படி நாளுக்கு நாள் குழந்தைப் பருவத்திலிருந்து காலப்போக்கில் வளர்ச்சி அடைகிறார்கள். எப்படிக் குழந்தைகளாயிருந்து பெரியவர்களாகிறார்கள் போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்துப் பாலியல் கல்வியைத் துவக்கலாம். இது பருவமெய்துவதைப் பற்றி விளக்கமாக சிறு பிராயத்திலேயே தெரிந்துகொள்ள அடிப்படையாய் இருக்கும். நம் உடலில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இது பாலுறவால் தொற்றக்கூடிய நோய்களைப் பற்றிப் பின்னர் விளக்குவதற்கு உதவி செய்யும்.

பாலியல் கல்வி இளைஞர்களிடையே தேவையற்ற ஆர்வத்தைத் தூண்டி அவர்களைப் பாலுறவுகளைப் பரிசோதனை செய்து பார்க்கத் தூண்டுகிறது என்று சிலர் வாதிடுவதுண்டு. ஆனால் இவ்வாறு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இளவயதில் சொல்லப்படும் செய்தி அவர்களது மனதில் சுலபமாகத் தங்குகிறது. குழந்தைகளிடம் எதையும் பேசக் கூடாது என்ற மனப்பான்மையுடன் இல்லாமல் குழந்தைகள் நம்மைக் கேள்வி கேட்கும்போது தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம். பெற்றோர்களும், ஆர்வலர்களும் இளைஞர்களிடம் செக்ஸ் பற்றியும் பாலியல் உறவுகள் பற்றியும் விவாதிக்கலாம். பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடம் இது மாதிரி விஷயங்கள் பற்றிப் பேசுவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இது போன்ற தயக்கங்களைக் கைவிட்டு, அதை ஒரு முக்கியத்தவம் வாய்ந்தததாக, இளைஞர்களது பார்வையை விசாலப்படுத்துவதாக, சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு கல்வியாக அணுக வேண்டும். இதற்கு இளைஞர்களிடம் ஒரு நல்ல நெருக்கம் வைத்துக்கொண்டு நம்மிடையே அவர்கள் மனதிலுள்ளதைப் பரிமாறிக் கொள்வதற்கான பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய மனப்பான்மை இளைஞர்களிடையே பாலியல் பற்றிய ஒரு ஆரோக்கியமான சிந்தனையைத் தோற்றுவித்துள்ளது. இளைஞர்களின் வயது கூடும்போது அவர்களுக்குப் பாலுறவு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்புக்கள் சமுதாயத்தின் மூலமாகவும் ஊடகங்களின் மூலமாகவும் அவர்களது பள்ளிகளின் மூலமாகவும் கிடைக்கி‎ன்றன. ஆனாலும் குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அறிவினை ஊட்டுவதில் பெற்றோர்களுக்குத்தான் பெரும் பங்கிருக்கிறது.

வீடுகளில் பெற்றோர்களிடம் இளைஞர்கள் மனம் விட்டுப்பேசித் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, கவலைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். இது ஒரு தொடர் கல்வி. பெற்றோர்களின் பங்கு அதிகமிருந்தாலும் பள்ளிகளுக்கும் மற்றும் பல சமூக நிறுவனங்களுக்கும் இந்தக் கல்வியை இளைஞர்களுக்கு அளிப்பதற்கான பெரும் பொறுப்பு இருக்கிறது.

பள்ளிகளில் ஒரு பாடத் திட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி, கல்வி தரப்படுகிறது. வேண்டிய தகவல்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்ளப் பாடத்திட்டங்கள் போதுமான வாய்ப்பளிப்பதில்லை. பாலியல் கல்வி இளைஞர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால் அவைகள் வேண்டிய தகவல்களை அனைத்து இடங்களிலிருந்தும் பெற வேண்டும். பள்ளியில் நடப்படத்தப்படும் கல்வியில் பெற்றொர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊடகங்களின் மூலமும் மற்ற சாதனங்கள் மூலமும் தாங்கள் பெறும் செய்திகளை இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். சில நாடுகளில் பாலியல் கல்வியை வலுப்படுத்துவற்கான முறைகளை இளைஞர்களிடமே கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் தேவைகளை அவர்களே உணர்வதோடு ஒரு ஈடுபாடும் ஏற்படுகிறது. பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருகிறது.
பாலியல் கல்வி பள்ளிகளில் எந்த முறையில் அமைய வேண்டும்?
அவை இளைஞர்களுக்கு முக்கியமாகக் கற்றுத்தர வேண்டியவை என்ன?

1. அது இளைஞர்கள் தவறான பாதையில் போவதைத் தடுக்க வேண்டும்.
2. மக்களிடையே உள்ள வேறுபட்ட பாலுறவு பற்றிய கருத்துக்களுக்கும் மனோபாவங்களுக்கும் எது காரணம்?
3. பாலுறவு பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றியும் தெளிவான அறிவு.
4 தவறான பாலுறவால் ஏற்படக்கூடிய பதிப்புக்கள், கருத்தடை சாதனங்கள், குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சரியான தகவல்கள்.
5 சமூகத்தினாலும், உடனிருப்பவர்களாலும் ஏற்படக்கூடிய அழுத்தங்கள்.
6. இளைஞர்களின் மனதில் பதியுமாறு பலவிதமான முறைகளைக் கையாண்டு இளைஞர்கள் பாலியல் கல்வியின் அவசியத்தை உணரச் செய்தல். இந்தக் கல்வி முறை இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், உடலுறவு கொள்ளும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ள உதவும்.
7. பாலியல் பற்றி நன்கு அறிந்த அது சார்ந்த துறையிலிருப்பவர்களுடன் கலந்துரையாடல்.

மேலே சொன்ன யாவுமே மிகவும் அவசியமானவை, ஒன்றுக்கொன்று தொடர்புடயவை. முக்கியமாக, பாலியல் கல்வி பாலியல் நல நிலையங்களுடன் நெருங்கிய தொடர்புடையவாய் இருக்கவேண்டும். இளைய சமுதாயத்திற்குப் பாலியல் கல்வி அவசியம் என்பதை நன்குணர்ந்தாலும் அதை எவ்வாறு அவர்களுக்குப் பயன் தரும் வகையில் அளிக்க முடியும் என்று ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதானதல்ல. பாலியல் கல்வி என்பது ஒரு முனைப்பட்டதல்ல. பலவேறு தனித் தனிப்பட்ட செயல்களை ஒன்று சேர்க்க வேண்டும். அது மட்டுமின்றி இது உணர்வுபூர்வமான நுண்ணிய முறையில் அணுக வேண்டிய ஒரு கல்வி. இளைஞர்களின் மனோபாவம், ஊடகங்கள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு, அவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, கற்றுக் கொள்பவரின் மனப் பக்குவம் போன்ற பல விஷயங்கள் இந்தக் கல்வியில் அடங்கியிருக்கின்றன. சமூக நல நிலையங்களும் இதில் பெரும் பங்காற்ற முடியும். அரசாங்கத்தின் உதவியுடன் ஊடகங்கள் மூலமாகப் பாலியல் கல்வியை நாட்டின் பல பாகங்களிலுமுள்ளவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க முடியும். பாலியல் கல்வியின் வளர்ச்சி மேலே சொன்னவர்களின் பங்களிப்பில்தான் இருக்கிறது. இதைத் தவிர, புதிதாகத் திருமணமான தம்பதிகள், ஒரினச் சேர்ர்க்கையினர் ஆகியோருக்கென்று தனியாக எவ்வாறு பாலுறவுகள் பற்றிய அறிவை அளிக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். அகதிகள். அனாதையாகத் தெருவில் திரிபவர்கள், சிறையிலிருக்கும் இளைஞர்கள். என்று பல விதமான பிரிவினர்களுக்கும் பாலுறவு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.

இங்கே கூறப்பட்டவை பாலியல் கல்விக்கு அடிப்படையாக இருந்தாலும் எல்லாப் பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் கல்வியைத் தயார் செய்ய வேண்டும். கொடுக்கப்படுகின்ற பாலியல் கல்வி எதிர் காலத்தில் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.

லேபிள்கள்:

திங்கள், 6 செப்டம்பர், 2010

தேசியவாதம் என்பது

நாட்டினம் ஒன்றின்மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல்,
உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள்
என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள்
காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு சமூக இயக்கம் என்ற வகையிலாவது,
தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு
என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது
என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில்
பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றிய மக்கள் இறைமைக்கான போராட்டங்கள்
போன்றவற்றோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டது. அப்போதிருந்து, உலக
வரலாற்றில் தேசியவாதம், குறிப்பிடத்தக்க அரசியல், சமூக சக்தியாக இருந்து
வந்தது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் உருவானதற்காக முக்கிய
காரணமாகவும் இது தொழிற்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.


ஒரு கருத்தியல் என்ற வகையில், தேசியவாதம், மக்கள் இறைமைக் கொள்கையின்படி
மக்கள் என்பது நாட்டினம் (nation) என்று கொள்கிறது. அத்துடன், இதன்
விளைவாக நாட்டினத் தன்னாட்சி உரிமைக் கொள்கையின் அடிப்படையில்
நிறுவப்பட்ட நாட்டின அரசுகளே ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்கிறது தேசியவாதம்.
பல நாடுகள் பல இனங்களைக் கொண்டிருக்கின்றன அல்லது நாட்டினத் தகுதி கோரும்
ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இதனால்,
தேசியவாதம் பெரும்பாலும் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதுடன், பேரரசுவாத
ஆக்கிரமிப்பு, நாட்டின விடுதலை ஆகிய சூழல்களில் போர்கள், பிரிவினை,
இனப்படுகொலை போன்றவற்றோடு தொடர்புடையதாக உள்ளது.

லேபிள்கள்:

மகாத்மா காந்தி, கல்வி சிந்தனை

குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி, செயல்வழியிலேயே (activity based) நடைபெற
வேண்டுமென்பது பல காலமாகக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
பெரும்பாலான நாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படைக் கோட்பாடாகும்.
மான்டிஸோரி முறை போன்ற புகழ்பெற்ற போதனா முறைகள் இந்தக் கோட்பாட்டையே
வலியுறுத்துகின்றன. மகாத்மா காந்தி இதற்கும் ஒரு படி மேலே போய்,
குழந்தைகள் செயல்வழி மட்டுமின்றி, உழைப்புவழிக் கற்க வேண்டுமென்றார்.
ஆனால் இந்திய அனுபவத்தில், தொலைநோக்குப் பார்வையுடைய சில கல்வியாளர்களின்
கனவில் பிறந்த சிறிய மாற்றுப் பள்ளிகளிலேயே செயல்வழிக் கற்றல்
வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய வகுப்பறைகள் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இல்லை; போதனா முறைகள்
குழந்தைகளை மையமாகக் கொண்டவையல்ல. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் முதல்
தலைமுறையாகக் கல்வி பயிலும் ஏழ்மையில் மூழ்கிய குடும்பத்துக் குழந்தைகள்
என்பதால் அவர்களது தனிப்பட்ட தேவைகளையும் அவர்களது மொழி, சமூகப்
பொருளாதாரப் பின்னணியை மனத்தில் கொண்டும் உருவாக்கப்பட்ட போதனா முறைகள்
தேவை. வகுப்பறைகள் இறுகிப்போன அதிகாரக் கலாச்சாரத்தில்
மூழ்கிக்கிடக்கின்றன. ஆசிரியர் அதிகார பீடத்தில் அமர்ந்து பிரம்பைச்
சுழற்றும் சர்வாதிகாரியாகவும் மாணவர் கைகட்டி வாய் புதைக்கும்
அடிமைகளாகவும் தோற்றமளிக்கின்றனர். மாணவர் என்ற காலிப் பாத்திரத்தில்
விவரங்களைக் கொட்டுவதே ஆசிரியரது பணி. இந்த அவல நிலை காரணமாக ஆர்.கே.
நாராயணன் நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல் புரியாமை என்ற கொடுமை இந்தியக்
கல்வி அமைப்பின் சாபக்கேடாக நிலைபெற்றுள்ளது.

அனைத்துக் குழந்தைகளும் திறம்படக் கற்க வேண்டுமென்றால் இரு தளங்களில்
உடனடியான ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். போதனா முறை குழந்தையை
மையமாகக்கொண்டதாக, குழந்தை ஆர்வத்துடன் கற்று, சுயசிந்தனையும்
படைப்பாற்றலும் மிக்க வளர்ச்சிபெற உகந்ததாக இருக்க வேண்டும். இரண்டாவதாக,
அனைத்துக் குழந்தைகளும் கற்றல் திறன்களை அடைய வேண்டும். அதாவது, போதனா
முறை (teaching process), திறனடைதல் (learning outcome) இரண்டும்
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இன்று இந்தியாவில் குழந்தைகள் கற்றல் திறன்களை அடைவதில் பெரும் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ASER
(Annual Status of Education Report) என்ற தேசிய அளவிலான ஆய்வு, பள்ளிச்
சிறார்களின் தாழ்ந்த கற்றல் திறமைகள் குறித்த அதிர்ச்சி அளிக்கும்
விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கைகளின்படி நாடு முழுவதும் உள்ள
ஐந்தாம் வகுப்பு மாணவரில் 59 சதவீதத்தினர்தாம் இரண்டாம் வகுப்பிற்குரிய
பாடத்தைத் தங்கள் தாய்மொழியில் வாசிக்கும் திறமை பெற்றவர்கள்.
தமிழ்நாட்டில் 35 சதவீத மாணவர்தாம் இத்திறமை பெற்றவர்கள். கணிதத்தில்
தேசிய அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவரில் 42 சதவீதத்தினர் மட்டுமே எளிய
கழித்தல் கணக்குச் செய்ய இயன்றவர்கள்; தமிழ்நாட்டில் 18 சதவீத மாணவரே
இந்தத் திறமை பெற்றவர்கள். கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்று
கொண்டாடிக்கொண்ட பெருமை காற்றில் பறந்து விட்டது. தமிழ்நாடு தேசிய
சராசரியைவிடவும் தாழ்ந்துகிடக்கிறது.

வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய இத்தகைய நிலை மாறக் கல்வியில் உடனடித்
தேவைப்படும் மாற்றங்களில் ஒன்றுதான் செயல்வழிக் கற்றல். இதனை ஒரு
மாநிலத்தின் பெரும்பாலான குழந்தைகள் கற்கும் அரசு-பொதுப் பள்ளிகளில்
நடைமுறைபடுத்தும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் 'நல்லி
கல்லி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் விரைவில் கைவிடப்பட்டது.
இன்று தமிழ்நாட்டின் அனைத்து அரசு-பஞ்சாயத்து, உதவி பெறும் பள்ளிகளில்
செயலில் உள்ளது. ஆங்காங்கே சிறிய அளவில் மட்டும் நடந்துகொண்டிருந்த ஒரு
சிறந்த கற்றல் முறையை 70 லட்சம் குழந்தைகள் பயனடையும் வண்ணம்
பிரம்மிக்கத்தக்க விரிவாக்கம் செய்திருக்கும் தமிழக அரசும் அனைவருக்கும்
கல்வி இயக்ககமும் (சர்வ சிக்ஷா அபியான்) பாராட்டுதலுக்கு உரியவை.

செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகரப் பள்ளிகளில்
அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு எனக் கொண்டு
செல்லப்பட்டு, 2007-2008ஆம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்து அரசு-உதவி
பெறும் பள்ளிகளுக்கும் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆந்திராவில்
புகழ்பெற்ற ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளியினால் நடத்தப்பெறும் கிராமப்புறப்
பள்ளிகள் தமிழகத்திற்கு மாதிரியாகக் கொள்ளப்பட்டன.

இம்முறை சில வகுப்பறை உத்திகள், உபகரணங்கள் மூலம் இயங்குகிறது. ஒன்றாம்
வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புவரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின்
கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அடைய வேண்டிய
திறன்கள் ஒரு ஏணி வடிவில் அமைக்கப்பட்டு, அதில் பல மைல்கற்கள்
குறிக்கப்பட்டுள்ளன. ஏணியின் ஒவ்வொரு படிக்கும் உரிய பல செயல்முறைகளும்
அவற்றிற்கான குறியீடுகளும் (logos) வகுக்கப்பட்டுள்ளன. அதனைப்
புரிந்துகொண்ட குழந்தை ஏணியில் படிப்படியாக ஏறிச் செல்கிறது.
வகுப்பறையின் நான்கு சுவரிலும் குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கரும்பலகை
அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் நான்காம் வகுப்புவரையிலான குழந்தைகள் ஒன்றாகக் கற்கிறார்கள்;
பல குழுக்களாகப் பிரிந்து வட்டமாக அமர்ந்து, ஆசிரியரின் துணையுடனோ சக
மாணவர் துணையுடனோ தாமாகவோ கற்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுக்குச்
சமமாகத் தரையில் அமர்ந்து கற்பிக்கிறார். பாடப் புத்தகத்திற்குப்
பதிலாகப் படங்களும் சொற்களும் கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

செயல்வழிக் கற்றல் வகுப்பறைச் சூழலில் மிகப் பெரும் மாற்றத்தைக்
கொணர்ந்திருக்கிறது. அடக்குமுறையின் வடிவமாக இருந்த வகுப்பறை
மறைந்துவிட்டது. இத்தனை நாட்களாகக் குழந்தைகளின் மென்மையான தோள்களின்
மீது சுமத்தப்பட்டிருந்த அச்சத்தின் சுமை அகன்றிருக்கிறது.
பிரம்பும்கூடக் காணாமல் போய் விட்டது. சலனமற்ற சவத்தன்மை கொண்ட வகுப்பறை,
குழந்தைகளின் ஆர்வக் குரல் ஒலிக்கும் உயிரோட்டம் கொண்டதாக
மாறியிருக்கிறது. ஆசிரியரின் சர்வாதி காரமும் சட்டாம்பிள்ளைத் தனமும்
மறைந்து விட்டன.

கற்றல் என்பது அச்சுறுத்தல், மூச்சுத் திணறவைத்தல், மனப்பாடம் செய்து
கொட்டுதல், ஆசிரியரின் பிரம்படிக்கு அடிபணிதல் என்ற புரிதல் மாறி, கற்றல்
என்பது குழந்தைகள் பங்கேற்கும் குழந்தைகளை மதிக்கும் இனிய அனுபவம் என்ற
புதிய பொருள் பெற்றுள்ளது. குழந்தைகள் அவர்களது இயல்புக்கு மாறாக, நாள்
முழுவதும் ஒரு இடத்தில் கட்டிப்போட்டுக் கிடக்கும் நிலை மாறி,
சுதந்திரமாக வகுப்பறை முழுதும் நடமாடுகின்றனர். குழந்தைகள் நேசிக்கும்
இடமாக வகுப்பறை மாறியிருக்கிறது. கற்றல் அட்டைகள் நிரம்பிய பெட்டிகள்,
கூரையிலிருந்தும் சுவர்களிலிருந்தும் தொங்கும் குழந்தைகள் வரைந்த படங்கள்
என வகுப்பறை வண்ணமயமாக விளங்குகிறது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருந்த தடுப்புச் சுவர்
உடைந்திருக்கிறது. ஆதிக்க பீடமான நாற்காலியிலிருந்து ஆசிரியர்கள்
இறங்கிவந்து, தரையில் குழந்தைகளுடன் அமர்ந்திருப்பதே ஒரு ஜனநாயகச் சூழலை
உருவாக்கியுள்ளது. காலங்காலமாக வகுப்பறை கட்டிக்காத்துவந்த ஆண்டான்-அடிமை
உறவை அடித்து நொறுக்கிவிட்டது. இதுவரை மாணவருக்கு மறுக்கப்பட்ட கரும்பலகை
அவர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள
சிறிய கரும்பலகை மழலை எழுத்துகளால் நிரம்பிவழிகிறது.

ஒவ்வொரு குழந்தைக்குமான வெளியும் தன் வேகத்தில் முன்னேறுவதற்குமான
சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை கற்றல் ஏணிப்படியில்
குறிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிப்பது, தன்னுடைய வேகத்தில் ஏணியில்
மேலே ஏறுவது, மைல்கற்களைத் தாண்டிச்செல்வது, ஒவ்வொரு கட்டத்திலும் தான்
கற்றுக்கொண்டதை மதிப்பிடுவது எனத் தன்னிலை விளக்கம் பெறுவதும் அதனை
ஆசிரியரும் சக மாணவரும் சகஜமாக ஏற்றுக்கொள்வதும் வியப்பிற்குரிய
மாற்றங்களாகும். மேற்கண்ட மாற்றங்களின் விளைவாகக் குழந்தை தன் சக்தியை
உணர்கிறாள். உயிர்த்துடிப்புள்ள, மகிழ்ச்சியான இடமாக வகுப்பறை
உருவெடுத்துள்ளது.

செயல்வழிக் கற்றல் பற்றி ஆய்வு மேற்கொண்ட எங்கள் குழு தமிழ்நாட்டின்
ஆரம்பக் கல்விக்கு இம்முறை ஒரு வரப்பிரசாதம் என்று கருதுகிறது. பழைய
முறைக்கு மாறிப்போய்விடா வண்ணம் இது கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும்
என்றும் வலியுறுத்துகிறது. அரசின் நிதி நிலை, அரசியல் நிர்ப்பந்தங்கள்,
அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றிற்குச் செயல்வழிக்
கற்றல் பலியாகிவிடக் கூடாது. எங்கள் வலிமையான முதல் பரிந்துரை செயல்வழிக்
கற்றல் தொடர வேண்டும்; வலிமைப்படுத்தப்பட வேண்டும்; பழமைக்குச் சரிந்து
விடாமல் காப்பாற்றப்பட வேண்டும். செயல்வழிக் கற்றல் மேலும் உயிரோட்டம்
உள்ளதாகவும் குழந்தைகளுக்குக் கூடுதல் பயனுள்ளதாகவும் சிக்கல்
குறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும். இதனை மனத்தில் கொண்டு அறிக்கை பல
பரிந்துரைகளை அளித்துள்ளது. மிகவும் முக்கியமானவை மட்டும் இங்கு
அளிக்கப்படுகின்றன.

பிரச்சினைகளும் பரிந்துரைகளும்

செயல்வழிக் கற்றல் மாற்றுப் பள்ளிகளில் சிறிய அளவில், சிறு
எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு, தீவிரக் கண்காணிப்புடன், அதன்
தத்துவார்த்த அடிப் படைகளைப் புரிந்து உள்வாங்கிய, அர்ப்பணங்கொண்ட, பல
கட்டப் பயிற்சிபெற்ற ஆசிரியராலேயே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதனை
ஒரு மாநிலம் முழுதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு, குறுகிய காலத்திற்குள்
விரிவுபடுத்துவது பெரும் சவாலுக்குரியது. சர்வ சிக்ஷா அபியானின் தலைமை
கண்ட கனவு, மாநிலத்தில் பரந்து கிடக்கும் லட்சக்கணக்கான மாணவர்களைச்
சென்றடைவதற்குள் ஏற்படும் சிதைவுகளும் திரிபுகளும் இழப்புகளும் ஏராளம்.

அத்துடன், மாநிலத்தின் பள்ளிக் கல்வியில் ஏற்கனெவே இருக்கும் பெரும்
பிரச்சினைகளைத் தொடாமல் இந்தப் புரட்சிகரத் திட்டத்தை
நடைமுறைப்படுத்தியது பிரச்சினையின் ஆழத்தை அதிகரித்துள்ளது.

இத்தகைய முன்கூட்டிய பிரச்சினைகளில் மிக முக்கியமானது ஆசிரியர்
பற்றாக்குறை. இன்று செயல் வழிக் கற்றல் வேண்டாமென எதிர்க்கும் ஆசிரியர்
சங்கங்கள் சுட்டும் முதல் காரணம் இதுதான். இன்று தமிழக ஆரம்பப் பள்ளிகள்
அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகள்ளே. ஐந்து வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள்;
பல நாட்கள் பல காரணங்களால் பெரும்பாலும் ஓராசிரியரே அனைத்து
வகுப்புகளையும் நடத்துவார். கட்டணம் வசூலிக்கும் எந்தப் பள்ளியாவது ஒரு
வகுப்பிற்கு ஒரு ஆசிரியரின்றி நடைபெற இயலுமா? கதியற்ற ஏழைக்
குழந்தைகளுக்குத்தான் இந்நிலை. செயல்வழிக் கற்றல் பற்றி ஒரு தவறான
கருத்து நிலவுகிறது. பல வகுப்பு மாணவர் ஒன்றாகக் கற்கும் Multigrade
System ஆனதால், ஒரு ஆசிரியரே போதுமானது என்பது பொய்யான வாதம்; அரசு தன்
பொறுப்பை உதறும் கண்டனத்திற்குரிய போக்கு. செயல்வழிக் கல்வியில்
ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் அவளது பலம்-பலவீனங்கள்
குறித்தும் சரியான கணிப்பு தேவை. ஆகவே இத்திட்டத்திற்குத் தேவைப்படுவது
முன்னைவிட அதிக ஆசிரியரேயன்றிக் குறைவாக அல்ல. செயல்வழிக் கற்றல் கல்வி
நடைபெறும் ரிஷி பள்ளத்தாக்கு முதலான பள்ளிகள் எதிலுமே 30 மாணவருக்கு
ஓராசிரியர் என்ற விகிதம் மீறப்படுவதில்லை. ஆகவே எங்கள் குழுவின் மிக
அழுத்தமான பரிந்துரை இத்திட்டத்தின் முதல் தேவை வகுப்பிற்கு ஓராசிரியர்,
ஓர் ஆசிரியருக்கு 30 மாணவருக்கு மிகைப்படாத விகிதம்; பள்ளி நாட்கள்
அனைத்திலும் ஆசிரியர் வகுப்பில்தான் இருக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தும் கண்காணிப்பு. கல்வி மறுக்கப்பட்ட குடும்பக் குழந்தைகளுக்கு
இது ஆதாரத் தேவை என்பதையும் இன்று அமெரிக்காவில் கறுப்பு-லத்தீன் இனக்
குழந்தைகள் கற்கும் பள்ளிகளில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற கோரிக்கை
எழுந்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.

அடுத்து, இத்திட்டம் குழந்தைகள் நான்காம் வகுப்பு முடிக்கும்போது
குறிக்கப்பட்ட திறமைகளைப் பெறுவர் என்ற உத்திரவாதம் ஏதும் அளிக்கவில்லை.
இம்முறையில் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த வேகத்திலேயே கற்க
முடியும் என்றாலும், ஒரு ஆண்டிலோ அல்லது நான்கு ஆண்டுகள் முடியும்போதோ
குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை அனைத்துக் குழந்தைகளும் அடையச்செய்ய
வேண்டும். மூன்றாம், நான்காம் வகுப்புகளிலுள்ள குழந்தைகள் சுயமாகக்
கற்கும் திறமைகளை அடைந்துவிட வேண்டுமென்று திட்டம் எதிர்பார்க்கிறது.
நாங்கள் ஆய்வுசெய்த சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இம்முறை
நான்காண்டுகளாக நடைபெறுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளின்
திறமைகளைத் தேர்வுசெய்தோம். அதிர்ச்சியே காத்திருந்தது. மூன்று அல்லது
நான்காம் வகுப்பு மாணவர்களில் பாதிக்குக் குறைவாகத்தான் ஒரு எளிய கதை
வாசிக்கும் திறமை பெற்றவர்களே; 25 சதவீத மாணவர் வார்த்தைகள் வாசிப்பதைத்
தாண்டி, அடுத்த படிக்கு முன்னேறவில்லை. கணிதத்திலும் இதே நிலைதான்.
தாழ்வுற்ற இந்தத் திறமை நிலைக்குச் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று
சொல்லவில்லை. நிலைமை குறித்த baseline study, மாற்றத்திற்கு முந்தைய நிலை
குறித்த ஆய்வு ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் செயல்வழிக்
கற்றல், கற்றல் திறமை அடைவுகளில் முன்னேற்றம் எதையும்
உண்டாக்கியிருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலை நீடிக்குமென்றால்
சமுதாயத்தின் பெரும்பாலாரான பொதுப் பள்ளி மாணவருக்குப் பெரும் அநீதி
இழைக்கப்படுகிறது என்றுதான் கூற வேண்டும். தமிழகத்தின் பள்ளிக்கல்வி
பெருமளவு தனியார்மயமாக்கப்பட்டதின் விளைவாக அரசுப் பள்ளிகள் பெரும்
புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி.

இதை ஒட்டி எழுந்திருக்கும் ஒரு விமர்சனத்தை இங்கே குறிப்பிட வேண்டும்.
செயல்வழிக் கற்றல் கல்வி அரசு-உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே ஏன்
நடைபெறுகிறது? மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை?
வசதிபடைத்த குழந்தைகள் ஏன் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்?
பெரும் பயனளிக்கும் சிறந்த திட்டமென்றால் அப்பள்ளிகள் இதனை அரசுப்
பள்ளிகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியிருப்பார்களே! இலவசப் பள்ளிகளில்
மட்டுமே இத்திட்டம் என்பது ஏற்கெனவே இருவகைப் பள்ளிகளுக்கும் உள்ள
இடைவெளியை இன்னும் அதிகரிக்குமோ? வசதியற்ற குழந்தைகள் போட்டிக் களத்தில்
முன்னைவிட வலுவிழந்தவர்களாக ஓரங்கட்டி ஒதுக்கப்படும் நிலை ஏற்படுமோ!
நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் மூர்க்கமடையச் செய்யுமோ? பல ஆசிரியர்
சங்கங்கள் இத்திட்டம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட
வேண்டுமென்று கோரிக்கைவைத்துள்ளனர். அதிலும், சமச்சீர் கல்வி குறித்துப்
பேசிவரும் தமிழக அரசு முதல் கட்டமாகத் திட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக
ஆக்கட்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும் மெதுவாகக் கற்கும் குழந்தைகள், ஒரு கட்டத்தில்
தேக்கமடைந்திருப்போர் கணிசமான எண்ணிக்கையிலுள்ளனர். இவர்கள் நிலை மிகவும்
கவலைக்கிடமானது. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் வீடுகளில் உதவிபெற
இயலாதவரானதால், மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கும் பின்தங்கிய
குழந்தைகளுக்கும் ஒரு கட்டத்தில் நீண்ட நாட்கள் தேங்கிவிடும்
குழந்தைகளுக்கும் திருத்தச் செயல்பாடுகள் (Remedial Programme),
கூடுதலாகச் சில வேறுபட்ட பயிற்சிகள் மூலம் அளிக்கப்பட வேண்டும். இதற்கான
எந்த ஏற்பாடும் இப்பொழுது செய்யப்படவில்லை. திட்டத்தின் மிகப் பெரும்
பலவீனம் இது. செயல்வழிக் கற்றல் திட்டத்தினுள்ளேயே திருத்தச்
செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது சரியல்ல.

கவலைக்குரிய மற்றொரு அம்சம் ஆசிரியரின் சுதந்திரம் தன் வகுப்பறையை
வடிவமைத்துக்கொள்ளும் உரிமை, புதிய போதனா முறைகளை மாணவருக்கு ஏற்றவண்ணம்
உருவாக்கும் பெருமை இவற்றிற்கெல்லாம் இத்திட்டத்தில் இடமிருப்பதாகத்
தெரியவில்லை. இக்குறைகளுக்கெல்லாம் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று
சொல்ல இயலாது. இந்தியக் கல்வியின் இரு பெரும் சீர்கேடுகள், சர்வநாசினிகள்
வணிகமயமான தனியார் கல்வியும், அதிகாரமய மாக்கப்பட்ட பொதுக் கல்வியும்தான்
இரண்டாவதின் காரணமாக ஆசிரியர் ஒரு அதிகார அமைப்பின் கடைநிலை ஊழியராக
மாற்றப்பட்டிருக்கிறார். தனது வகுப்பறையைத் தனக்கே உரிய பெருமைமிகு
படைப்புக்களமாக ஆசிரியர் கருத வேண்டும்; அதற்குரிய சுதந்திரம் அவருக்கு
அளிக்கப்பட வேண்டும். இந்தச் சுதந்திரத்தின் மறுபக்கம் ஆசிரியரின்
கடப்பாடும், தன் மாணவருக்கான பொறுப்புணர்வும். ஆசிரியருக்கு இத்தகைய
மதிப்பும் மரியாதையும் மறுக்கப்பட்டதன் விளைவு சமுதாயத்திலும்
ஆசிரியருக்கு இருந்த ஏற்றம் இன்று மறைந்துவிட்டது. ஆசிரியருக்குத் தன்
மாணவரின் பெற்றோருடனும் அவர் வழியே சுற்றிலுமுள்ள சமுதாயத்துடனும் இருக்க
வேண்டிய உயிர் பந்தங்கள் அறுபட்டன; அல்லது உருவாகவே இல்லை.

செயல்வழிக் கற்றல் இந்த வேதனைமிகு போக்கினை இன்னும் தீவிரப்படுத்தி,
அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக ஆசிரியரை மாற்றியிருக்கிறதோ என்ற அச்சம்
ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் செயல்வழிக் கற்றல் ஒரு நுணுக்க நிர்வாக
அமைப்பு (micro-managed system). இத்திட்டத்தின் ஒவ்வொரு ஏணியின் ஒவ்வொரு
மைல்கல்லும் ஒவ்வொரு மைல்கல்லின் ஒவ்வொரு படியும் ஒவ்வொரு படியின்
ஒவ்வொரு செயல்பாடும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இறுக்கமாக
வரையறுக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. கற்பித்தலின் ஜீவனையே இது
கொன்றுவிடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. கண்காணிப்பு அமைப்பின் ஒவ்வொரு
மட்டத்து அதிகாரியும் குறிப்பிட்ட செயல்பாடுகள் முடிக்கப்பட
வேண்டுமென்பதையே இலக்காக வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.

இத்தகு அதிகார அமைப்பின் காரணமாக ஆசிரியர் தாங்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளையும் தங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் குறித்துப்
பேசவே அஞ்சுகிறார்கள். நாங்கள் சென்ற பள்ளிகளில் எந்தப் பிரச்சினை
குறித்துப் பேசுவதற்கும் ஆசிரியர் அஞ்சியதை நன்கு உணர முடிந்தது.
பள்ளியில் பல மணி நேரம் செலவழித்த பின், மீண்டும் மீண்டும் நாங்கள்
வலியுறுத்திக் கேட்டு, விமர்சித்த ஆசிரியர் பெயரோ பள்ளியின் பெயரோ
வெளியில் சொல்லப்படாது என்ற உத்திரவாதத்தைப் பலமுறை அளித்த பிறகே வாய்
திறந்து குறைகூறத் தொடங்கினர். வேறு பணிக்காக மாநிலத்தின் பல
பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல ஆசிரியரை ஒருமுறை சந்திக்க
நேர்ந்தபோது, எடுத்துக் கொண்ட பொருளையே விட்டுவிட்டு, இரண்டு மணி நேரம்
செயல்வழிக் கற்றல் குறித்த ஆதங்கங்களை ஆசிரியர் கொட்டுவதைக் கேட்க
நேர்ந்தது. உங்களது கவலைகளையும் ஆலோசனைகளையும் தலைமை அதிகாரிகளுக்குத்
தெரிவித்தீர்களா என்று கேட்டதற்குக் கிடைத்த பதில்: "கூட்டங்களில் எங்களை
வாய் திறக்க அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. செயல்வழிக் கற்றல் குறித்துப்
புகழ வேண்டுமென்றால் பேசுங்கள்; இல்லா விட்டால் சும்மா இருங்கள்" என்று
அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறினர். இத்தகைய ஆதங்கங்களைக் கடந்த சில
மாதங்களில் பலமுறை கேட்டிருக்கிறோம். இந்நிலைக்கு ஆசிரியரும் கல்வியும்
தள்ளப்பட்டிருக்கும் அவலம் குறித்து விமர்சிக்கத் தேவையில்லையென்று
நினைக்கிறேன்.

திட்டத்தின் வடிவமைப்பில் பல குறைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிரியருடன்
கலந்து ஆலோசித்துத் திருத்திக்கொள்ளக்கூடிய குறைகள்தாம். அவற்றில் ஒரு
சில:

செயல்வழிக் கற்றல் ஏணி என்பது இம்முறையின் மிக முக்கிய வடிவமைப்பு.
சொல்லப்போனால் ஏணிப்படியின் சர்வாதிகாரம் இன்று வகுப்பறைகளில்
கோலோச்சுகிறது. ஆனால் ஏணி-திறன் சமன்பாடு தெளிவாகப் புலப்படவில்லை.
ஏணியின் எந்தப் படியை முடித்தால் குழந்தை எந்தத் திறமை அடையும் என்று
சொல்ல இயலவில்லை. ஏணியின் ஒரு கட்டம் குழந்தை கற்றுக்கொண்ட ஒரு திறமையைக்
குறிக்கிறதா அல்லது குறிப்பிட்ட சில செயல்பாடுகளைக் குறிக்கின்றதா
என்பதும் தெளிவாக இல்லை. ஏணிப்படி முறை மிகவும் சிக்கலானது; அதனைக்
குழந்தைகள் புரிந்துகொள்ள மூன்று மாத காலமாயிற்று என ஆசிரியர்கள்
கூறினர். விலை மதிப்பற்ற மூன்று மாதங்களை இதற்குச் செலவிட வேண்டுமா?
ஏணியின் படிகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது சீரமைக்கப்பட வேண்டும்.

பாடப் புத்தகத்திற்குப் பதில் படங்களும் சொற்களும்கொண்ட வண்ண அட்டைகள்
பயன்படுத்தப்படுகின்றன. அவை மாணவர் தாமாகக் கற்கும் உபகரணங்கள் என்று
சொல்லப்படுகிறது. ஆனால் பாடப் புத்தகம் அப்படியே அட்டைகளாக
மாற்றப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் சொல்கின்றனர். அட்டைகளை உருவாக்க வேறு
அணுகுமுறை பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பாடப் புத்தகங்களும்
குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. பெரும் குழப்பம் நிலவுகின்றது.
பயன்படுத்தும் உபகரணங்கள் dynamic materialஆக இல்லை; static materialஆக
இருக்கின்றன. இதனால், அட்டைகளைப் பல வகைகளில் பயன்படுத்திக்
கிடைக்கக்கூடிய நன்மையை இழக்க நேரிடுகிறது.

குழந்தைகள் குழுக்களாகப் பிரிந்து, வட்டமாக அமர்ந்து கற்பது
இத்திட்டத்தின் புதுமைகளில் ஒன்று. குழுவழிக் கற்றலில் குழந்தைகள்
குழுக்களில் இணைந்து, பகிர்ந்து, விளையாட்டுகள் போன்றவை மூலம் கற்பது
அவர்கள் ஆர்வத்துடன் எளிதாகக் கற்க ஏதுவாகிறது. ஆனால் இன்றைய செயல்வழிக்
கற்றலில் குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்து, ஆனால் அவரவர் தனித்தனியாகத்
தங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனரே அன்றி இணைந்து கற்பதில்லை.
இதுவல்ல குழுவழிக் கற்றல்.

சக மாணவரிடமிருந்து கற்றல் ஆசிரியரிடமிருந்து கற்பதைக் காட்டிலும்,
குழந்தைகள் ஆர்வமுடன், அச்சமின்றிக் கற்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது.
விரைவில் கற்கும் குழந்தைகள் மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்குக்
கற்றுத்தரல் வேண்டும். இதன் மூலம் ஆசிரியரின் சுமையும் குறையுமென்று
சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வகுப்புகளில் அத்தகைய கற்றல் நடைபெறுவதாகத்
தோன்றவில்லை. முன்னேறிய குழந்தைகள் பின்தங்கியோருக்குக் கற்றுத்தரும்
திறமையும் பொறுமையும் கொண்டவரல்ல.

இவை போன்ற திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஏராளமான
குறைகளும் குழப்பங்களும் உள்ளன. ஒரு பிரம்மாண்ட திட்டத்தை
நிறைவேற்றுவதில் தொடக்கக் காலத்தில் எதிர்பார்க்கக் கூடிய
பிரச்சினைகள்தாம் இவை. விவரங்களில் சைத்தான் ஒளிந்துகொண்டிருக்கிறது
(Devil is in the detail) என்று சொல்வார்கள். நுணுக்கங்களில் கவனம்
செலுத்தாவிட்டால் திட்டமே நொறுங்கிவிடும்.

இன்று திட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. ஒரு
ஆரோக்கியமான விவாதம் தேவை. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக்
கல்வியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற
அதன் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது
என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின்
அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் குறித்து, அறிவுபூர்வமாக,
அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க
அரசை வற்புறுத்த வேண்டும்.

திறந்த மனத்துடன், விமர்சனங்களை ஏற்று, தேவையான மாற்றங்களைச் செய்யும்
மனப்போக்கும் முதிர்ச்சியும் கல்வித் துறைக்குத் தேவை. மேலிருந்து
திணிக்கும் திட்டங்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை. அனைத்து வகைப்பட்ட
பள்ளிகளிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பெரும் ஏற்றத்தாழ்வுகள்
மிகுந்த அமைப்பில், வசதியற்ற குழந்தைகளைக் கொடுமையான புறக்கணிப்புக்கு
உள்ளாக்கியிருக்கும் அமைப்பில், இதன் மூலம் இடைவெளிகள் இன்னும்
அதிகரிக்கும் என்ற அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். நீண்ட காலமாகக் கல்வி
அமைப்பைச் சீரழித்துக்கொண்டிருக்கும் பல்வகைப் பள்ளிகள், ஆசிரியர்
பற்றாக்குறை, சமுதாயப் பங்கேற்பின்மை போன்ற பிரச்சினைகளைத் தொடாமல்
போதனாமுறை மாற்றத்தினால் மட்டும் முன்னேற்றம் காண இயலாது.

அனைத்திற்கும் மேலாக போதனாமுறையும் வகுப்பறைக் கலாச்சாரமும் ஆசிரியரின்
சுதந்திரத்தில், திறமையில், படைப்பாற்றலில், அனுபவ முதிர்ச்சியில்,
பொறுப்புணர்வில் வேர் கொண்டவை. இவை அனைத்தும் மதிக்கப்படும் சூழலில்
ஆசிரியர் தம் வகுப்பறை தமக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாடித் தனது
மாணவரின் திறமையில் தன் வாழ்வின் அர்த்தத்தைக் காண்பார். அந்தச் சூழலை
உருவாக்கக் கல்வித் துறை முயல வேண்டும்.

இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நாட்டின் அனைத்துக்
குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று, கற்றல் திறன்களை அடைவார்கள். அனைத்துப்
பயனாளிகளும் பங்கும் பொறுப்பும் ஏற்கும் அற்புதமான மாற்றம் உருவாகும்
என்று நம்பலாம்.

லேபிள்கள்:

கல்வி என்பது

இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே
கல்வி எனப்படும். அவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும்
அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி
அமைக்க வேண்டும்.

தரமான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக,
மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து மற்றவர்களை வழி
நடத்த வேண்டும், தானும் நடக்க வேண்டும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத்
தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்.
எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, மருத்துவம், போர்த்திறன், கை
வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு வகைகளில் கற்றுக்
கொள்பவருக்குள் நுழைகிற கருத்துருக்கள் அவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி
அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால்கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு
மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார்.
பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு
அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக
ஆசிரியர் இருந்தார்.


இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன
ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பு ஏதும் கூறாமல்
வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ
மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள்
இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல்
காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து
கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை
உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு
எட்டாக் கனி ஆனது.


இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம்,
பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை
வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த
நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக
மாறியுள்ளன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது
வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி
மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை
செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களைக்
கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....

கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும்
மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும்
விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும்,
கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம்
கூறுகிறது.

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய
வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக
மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின்
எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை
நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக
மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற
பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய
போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஒன்றும் அறியாத
மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.

தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே
சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற
கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து
செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு,
நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப்
பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச
கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி,
செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில்
கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில்
பயன்பாட்டிற்காகப் பேசப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப்
பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை
வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள்
புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும்
முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. மாணவர்களின்
வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து
பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15
விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு
வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.

எனவே இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும்,
கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி, திட்டமிட்டு
செயற்படுத்த வேண்டும்.

லேபிள்கள்:

உன்னை காதலி

உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே
என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம்
அதில் தென்றல் தொழிசாலை
இதுவரைச் சொன்னது கவிதையல்ல
இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல
(உன்னை காதலி..)

அன்பே உந்தன் பார்வை ஏதோ சொல்ல
கட்டி அணைத்தால் என்ன
எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல
பெண்ணே நீயும் ஒரு கனவல்ல
ஒரு போராட்டம் தான்
எந்தன் நெஞ்சுக்குள்ளே
நானும் சொல்ல
அண்ணாந்து பார்க்கும் போது
ஆகாயம் நீல நிறம்
மண் மீது பார்க்கும் போது
என் வாசல் கோலம் நீதான்
விரல் நகத்தை கண்டால் கூட
முன் நின்று ரசிப்பேனே
உந்தன் நெஞ்சை கண்டால்
சொர்க்கம் என்றே போவேன் நானே

(உன்னை..)

சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன்
என்னை நீ தொட்டதால்
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு
கண்ணாடி சிற்பம் போல
உன்னைக் கண்டேனே
இவள் முன்னாடி நான் நின்று
என்னை நானே காதல் கொண்டேன்
தீமூட்டும் ஆசையாலே
தினந்தோறும் நின்றுபோனேன்
தாய் வீட்டை நான் மறந்து
உன்னோடு ஓடிவந்தேன்
ஆகாயம் பூமியெல்லாம்
ஆண்டாண்டு காலமடி
ஆனாலும் என் காதல்
அதைத்தாண்டி வாழுமடி

லேபிள்கள்:

மனித விழுமியங்கள்

நம் முன்னோர்கள் விழுவியம் காப்போம் என அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் விழுவியங்கள் என்றால் என்னவென்பது இன்று வரை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதும் இல்லை ஏனென்றால் நாம் அனைவரும் அப்படியான ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டவர்களாகவும், நேரமின்மையில் அவதிப்படுபவர்களாகவும் காணப்படுகின்றோம்.

இனி விழுமியங்கள் சார்ந்த சில தகவல்களை பார்ப்போம். மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்களை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான அன்பு, நாணயம், இரக்கம், நீதி, நேர்மை, நம்பிக்கை, கருத்து, எண்ணம், பக்தி என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம். இவ்வாறான கருத்துருக்களை வாழ்க்கையில் முதன்மையாக கொண்டு செயற்படும், முன்னகர்த்தப்படும் ஒரு தனி நபருடைய வாழ்க்கை அமைதியே வடிவானதாக காணப்படும்.

மேலும் விழுமியங்கள், கலாச்சார கருத்துக்களில் நம்பிக்கையில்லாதவர்களும், பொய்யென உரைப்பவர்களும் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் அனைவரும் தப்பான எண்ணம் கொண்டவர்கள் என்றோ, தப்பானவர்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை. முன் வைக்கப்படும் ஒரு விடயமானது அதன் கருத்து தெளிவுடனும், உண்மையானதாகவும், நன்மை பயக்கும் வகையினதாகவும் காணப்படும் பட்சத்தில் அவற்றினை பின்பற்றுவதில் தவறில்லை என்பதனையே சொல்ல வருகின்றேன்.

விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம்.
தனி மனித விழுமியங்கள்
பண்பாட்டு விழுமியங்கள்
தனி மனித விழுமியங்கள்
தனி மனிதருடைய வாழ்க்கையை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.
பண்பாட்டு விழுமியங்கள்

ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றது.
ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. மனித விழுமியங்களை ஒழுங்கு படுத்துவதற்கும், மனித நாகரிகத்தை பிறழ்வின்றி வைத்திருப்பதற்கும் இறை நம்பிக்கை மிக அவசியமானதாகும். இறை நம்பிக்கை எனும் போது அவரவர் இஸ்ட தெய்வங்களை வழிபட்டு வரலாம் மேலும் எம்மிடம் காணப்படும் சிறந்த பண்புகளை ஏனையவர்களுக்கும், சிறுவர்கள் மத்தியில் விழுமியங்கள் சார்ந்த நல் கருத்துக்களை சேர்ப்பித்தலும் ஒவ்வொருவருடையதும் முக்கியமான கடமையாகும்

லேபிள்கள்: