சனி, 22 மார்ச், 2014

குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவது

குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவது பெரும்பாலான வீடுகளில் தங்களது குழந்தைகளை அவர்களது உடன் பிறந்தவர்களுடனோ அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடனோ ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாகிவிட்டது. இப்படி குழந்தைகளை கம்பேர் செய்வது நல்லதா? முன்பெல்லாம் நம்முடைய வீடுகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு குழந்தைகளாவது இருக்கும். அவர்களை வளர்ப்பது குறித்து யாரும் பெரிதாக எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அதோடு அவர்களுக்கு அடுத்த குழந்தையின் தேவைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ அதிகம் இருக்காது. ஒவ்வொரு குழந்தையும் இன்னொரு குழந்தையின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றோ நம்முடைய வீடுகளில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். அவர்களை சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு என்று நம் குழந்தைகளை கம்பேர் செய்கிறோம். ஆனால் அதுவே அவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. குழந்தைகளை ஒருவரோடு ஒருவரை கம்பேர் பண்ணாமல் எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவது இரண்டு என்று இல்லை; ஒரு குழந்தை இருக்கும் வீடுகளிலும் இந்த கம்பேர் செய்து பார்ப்பது இருக்கிறது. இன்றைய பெற்றோர்கள் இப்படி கம்பேர் பண்ணுவதற்கு காரணம் அவர்களுக்கு வேறு குழந்தைகளைப் பற்றி தெரியாது. அதோடு கூட்டு குடும்பமும் கிடையாது. அதனால் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவர்கள்தான் அவர்களுடன் இருக்கிறார்கள். நமக்குப் பிறந்த குழந்தை கட்டாயம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இவர்கள் இப்படி செய்யும் அப்ஸர்வேஷன் குழந்தைகள் மனதில் அப்படியே பதிந்துவிடும். குழந்தைகளிடம் கம்பேர் செய்வது என்பது இரண்டாவது குழந்தை பிறந்த நிமிடத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. குழந்தையின் ஒவ்வொரு பருவத்தின் வளர்ச்சியிலும் இந்த ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது பெரியவர்கள் தங்களையும் அறியாமல் செய்கிற விஷயம். இரண்டாவது குழந்தை கவிழ்ந்துகொள்ளும் போது, நடக்கும் போது, ஆட்களை கவனிக்கும்போது, சாப்பிடும்போது, உடம்பு சரியில்லாமல் போகும்போது, அழும்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பீடு நடக்கிறது. இவ, அவனைவிட வேகமா செய்யறா. அவன் உன்னை மாதிரி இல்ல என்று சொல்வார்கள். இதுபோன்ற ஒப்பீடுகள் ஒரு குழந்தையின் மனதில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும். ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய இயல்பின் அடிப்படையில் வளரும். விஷயங்களை பொறுமையாக அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் விதம் அவர்களை கம்பேர் செய்வது போல இருக்கக் கூடாது. தொடர்ந்து கம்பேர் செய்து காண்பிக்கும்போது குழந்தைகள் மனதில் விரக்தி வந்து விடும். ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் உன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன? என்று கேட்டால் நான் என் அக்காவைவிட அழகு குறைவு. நான் அவளைவிட குறைவான வேகத்தில் எல்லாவற்றையும் செய்வேன் என்றுதான் சொல்லும். தன்னுடன் பிறந்தவர்களைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் அவர்களால் யோசிக்க முடியாது. தன்னுடைய தனித்திறமை என்னவென்றும் அவர்களுக்கு தெரியாமலே போய்விடும். அவர்களுடைய இலக்கு என்ன என்பது தெரியாது. அந்த இலக்கை அடைவதற்கான எந்தவிதமான முயற்சியும் அவர்களால் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் பெற்றோர்கள்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நான் எந்தக் காரணத்திற்காகவும் என்னுடைய குழந்தையை யாருடனும் ஒப்பிட மாட்டேன் என்று முடிவு எடுக்க வேண்டும். தினமும் குழந்தைகள் செய்யும் நல்ல காரியங்களை, அன்று இரவு துங்குவதற்கு முன்பு, நீ இன்று இதை எல்லாம் சிறப்பாக செய்தாய்? என்று அனைவரின் முன்பும் சொல்ல வேண்டும். அதோடு ஒப்பிடுதல் என்பது அவனுக்கு நிகர் அவனே என்ற அடிப்படையில்தான் இருக்க வேண்டும். அதாவது இந்த முறை நீ குறைவாக மார்க் வாங்கி இருக்கிறாய். ஆனால் போன முறை இதைவிட அதிகமாக வாங்கி இருந்தாய். இதற்காக நீ வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை இதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக நிறைய மார்க் வாங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும். இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக்கொண்டால் அதைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர இடையில் புகுந்து பஞ்சாயத்து பண்ணக் கூடாது. நீ பெரியவன் அதனால் அவனுக்கு இதை விட்டுக் கொடு என்று சொல்லும் போது பெரிய குழந்தைக்கு அடுத்த குழந்தையின் மீது வெறுப்புதான் வரும். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் யாருக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லித் தர தேவையில்லை. நாம் இன்று மின்னணு யுகத்தில் வாழ்கிறோம். நம் நாடு முன்னேறி வருகிறது. எனவே தாயின் பொறுப்பும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. தந்தைகூட தன் குழந்தையின் வளர்ச்சியில் சிறந்த பொறுப்பு ஏற்க வேண்டும். தாயாரும்கூட தற்காலத்தில் பணிக்குச் செல்பவராக இருக்கிறார். மின்னணு கழகம் மற்றும் மென்பொருள் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு வேலைக்குச் செல்கிறார்கள். பல தாயார்கள் தங்கள் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணிசெய்யும் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு குழந்தைக்கு தாய் பாலூட்டல், விளையாட வசதிகள் முதலியன செய்து தரப்படுகின்றன. குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் புதியனவற்றையும் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு வசதிகள் செய்து தர வேண்டும். தங்கள் குழந்தைகள் எந்த வேலையையும் செய்யும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கட்டும். அவர்களுக்கு துணையாகவும் பாதுகாவலர்களாகவும், அவர்களது புதிய முயற்சியில் உடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்ய வேண்டாம். அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று எண்ண வேண்டாம். இது அப்படியல்ல. அவர்களை கட்டுப்படுத்தினால் அவர்கள் அடம்பிடிப்பார்கள். தாய்-குழந்தை சொந்தம் கருவறையிலேயே தொடங்கி விடுகிறது. இங்கு நல்ல அரவணைப்பு அன்பு நிலவும். உண்மையில் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதால் குழந்தைகள் கெட்டுவிடலாம் என்ற பொருள் இல்லை. கெட்ட குழந்தை தாயைப் போல செயல்படும் என்பதும் உண்மையன்று. சிறு குழந்தைகளின் வளர்ச்சியில் வீடு பெரும் பங்கு வகிக்கிறது. வீட்டிற்கு அடுத்த நிலையில் வருவது பள்ளியாகும். வீடு என்பது ஒரு பரிசாகும். ஆனால் பள்ளி என்பது அவ்வாறு அமையாது. பள்ளி என்பது நாம் தேர்வு செய்த இடம். உறுதியாக, பள்ளியில்தான் குழந்தைகள் தங்கள் திறமைகளைக் கண்டு விருத்தி செய்யவும் வெளிக்காட்டவும் முடியும். குழந்தைகளுக்கு தாய்மார்கள், பெரியவர்களுக்கு மரியாதை தர கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பொதுவான இடங்களில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் பற்றியும் கற்றுத் தர வேண்டும். உதாரணம் தயவுசெய்து, மன்னிக்கவும், மிக்க நன்றி முதலியன. உங்கள் குழந்தை காலையில் பிறரைப் பார்க்கும்போதும் நல்ல காலை வணக்கம் என்றும், தூங்கச் செல்லுமுன் நல்ல இரவு வணக்கமும் சொல்லட்டும். குழந்தைகள் கொள்ளை அழகு. ஆனால் குழந்தைகளை எழில் குறையாமலும், மனம் வாடாமலும் வளர்ப்பது எளிதானதல்ல. குழந்தைகளுக்கு இந்த உலகமே புதியதாகத் தெரிவதால் ஆர்வம் மிகுந்த பார்வையால் எப்போதும் துறுதுறுவென பார்த்துக் கொண்டிருப்பார்கள். எதையும் தொட்டுப் பார்க்க விரும்புவார்கள். நெருப்பு சுடுமென்று அறியாமலே அதைத் தொட்டுப் பார்க்க விரும்புவதும், உடைகள் தொல்லை தருவதாக எண்ணி களைந்து எறிய விரும்புவதும், பிறப்புறுப்புகளை வினோதமானதென்று எண்ணி தொட்டுப் பார்க்கும் விஷயங்களும் அவர்கள் அறியாமல் செய்பவை. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது சில விஷயங்கள் குழந்தைகளுக்கு பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிடும். உதாரணமாக குழந்தைகள் செய்யக் கூடாத விஷயத்தை செய்வதைப் பார்த்து நீங்கள் காட்டுக்கூச்சல் போட்டால் அது என்னவோ ஏதோவென்று அரண்டுவிடும். முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பும்போது ஆசிரியரைக் கண்டு பயப்படலாம், பாடம் படிப்பதை சுமையாக கருதலாம், சக மாணவர்களோடு பழக கூச்சம் கொண்டு பதட்டம் அடையலாம். முதலில் குழந்தைகள் எதற்காக பீதி, பயம்கொள்கிறார்கள் என்று கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அமைதியான சூழலில் அவர்களை அமர வைத்து அதற்கான காரணங்களை புரியும்படியாக விளக்க வேண்டும். அத்தகைய பீதி எண்ணங்கள் தேவையற்றது என்பதை புரிய வைக்க வேண்டும். பயத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படக் கூடாது. உதாரணமாக குழந்தைகள் பொருட்களுக்கு தீ வைத்து விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு தீயின் குணங்களையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரியும்படியாக விளக்க வேண்டும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டால் மீண்டும் தீ வைத்து விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள். பயம் காரணமாக பள்ளிக்கு செல்ல அடம்பிடித்தால் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். "அப்பா எப்படி என்ஜினீயரானார், நீ அக்காவைப் போல நன்றாகப் படிக்க வேண்டாமா" என்று அவர்களின் எண்ணங்களை படிப்பை நோக்கி திசைமாற்ற வேண்டும். பள்ளியில் பிரச்சினை என்றால் ஒரு சிலமுறை அவர்களுடன் பள்ளிக்குச் சென்று அவர்கள் பயம்கொள்ளும் சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். குழந்தை நாய்களுக்குப் பயப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நாய்கள் திரியும் வழியாக அழைத்துச் சென்று இதற்குப் பயப்படத் தேவையில்லை என்று விளக்கலாம். இருட்டான பகுதியைக் கண்டு பயந்தாலோ, தனிமையில் இருக்க அச்சம் அடைந்தாலோ, பேய்க்கதைகள் போன்றவற்றைக் கேட்டு மிரண்டு போயிருந்தாலோ அதுபோன்ற சூழலை உருவாக்கி "இங்கு (இருட்டிற்குள்) பயப்படும் விதத்தில் ஒன்றும் இல்லை, டி.வி.யில் வருவது கதைதான், அதற்காக பயப்படக்கூடாது" என்று விளக்கி மாற்றம் ஏற்படச் செய்யலாம். குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியமானது. ஆனால் குழந்தைக்கு பள்ளிக்குச் செல்ல ஆசை இருந்தும் மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு அஞ்சி பள்ளிக்கு போக மறுத்தால், அந்தக் காரணத்தை அறிந்து அதை களைய முயல வேண்டும். வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளை யாரும் பின் தொடர்வதாலோ, கிண்டல் செய்வதாலோ குழந்தைகள் அந்தச் சூழலை வெறுக்கலாம். பள்ளி செல்லவும் மறுக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பது, குழந்தைகளை மாற்றுவழியில் செல்ல வைப்பது, தாமே பள்ளி வரை அழைத்துச் செல்வது போன்றவை சரியான வழிமுறைகளாகும். குழந்தைகள் விரக்தி, கோபம் அல்லது ஏமாற்றம், எரிச்சல் இவற்றை அனுபவிக்கும்போது அவர்கள் அழுதல், கத்துதல், பொருட்களை உடைத்தல், தரையில் உருளுதல், சிணுங்குதல், மூச்சைப் பிடித்துக்கொள்ளுதல், உதைத்தல், அடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இந்த நடத்தையைக் கண்டு பெற்றோர் கோபம், இயலாமை அல்லது சங்கட உணர்வுக்கு ஆளாவார்கள். சுயகட்டுப்பாட்டைக் குழந்தைக் கற்கும் நேரத்தில் இத்தகைய அடம்பிடிக்கும் நடத்தை (temper tantrums) இயல்பானது. உண்மையில் 1-3 வயதில் எல்லா குழந்தைகளும் இப்படிச் செய்வதுண்டு. பொதுவாக 4 வயதில் அடம்பிடித்தல் நிற்கும். இதற்குக் காரணம் என்ன? அடம்பிடித்தல் உடல்ரீதியாகவோ அல்லது பரம்பரையாக வருவதோ அல்ல; அதிக செல்லம் கொடுத்து அல்லது தன் இஷ்டப்படி நடந்துகொள்ள விடப்பட்ட குழந்தைகளிடம்தான் இப்பழக்கம் அதிகம் காணப்படும். சில சமயங்களில் குழந்தையுடன் விளையாட நேரம் இல்லாத பெற்றோர், அதை சரிக்கட்ட விளையாட்டுப் பொருட்களையும், பரிசுகளையும் தருவார்கள். குறிப்பாக ஒரே குழந்தை இருக்கும் குடும்பங்களில் இது இன்னும் பொருந்தும். குழந்தை மனம் கலங்கி இருக்கும்போது தன் உணர்ச்சிகளை வெளியிட அடம்பிடிப்பதும் ஒரு வழியாகும். இதர காரணங்கள்: * அடம்பிடிப்பதன் மூலம் கவனத்தை இழுக்க முயற்சி செய்தல். * பெற்றோர் என்ன சொல்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் என்று புரியாததால் குழப்பம். * தான் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ளாத போது. * தன் உணர்வுகள் மற்றும் தேவைகளைச் சொல்ல வார்த்தை கிடைக்காதபோது. * உடல் நலமின்மை அல்லது இதர உடல்ரீதியான பிரச்சினைகளால் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதபோது. * பசி இருக்கும். ஆனால் அது பசிதான் என்று அறியாதபோது. * களைப்பு அல்லது போதிய உறக்கம் இல்லாதபோது. * பதற்றமும் அசௌகரியமும் இருக்கும்போது. * நடத்தல், ஓடுதல், படிகளில் அல்லது நாற்காலியில் ஏறுதல் இறங்குதல், வரைதல், விளையாட்டுப் பொருட்களை இயங்கச் செய்தல் போன்ற வேலைகளை இன்னும் செய்ய முடியாதபோது. * தான் செய்ய விரும்புவதைச் செய்ய அனுமதிக்கப்படாத போது எரிச்சல் அடைதல். இத்தகைய அடம் பிடிக்கும் செயல்களை எவ்வாறு தடுக்கலாம்? * தாம் நம்பக்கூடிய நபர்களிடம்தான் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்று பொதுவாக குழந்தைகள் நினைப்பதால், தம் பெற்றோரிடம்தான் அதிகமாக அடம் பிடிப்பார்கள். கீழ்க்கண்ட குறிப்புகள் அடம்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க உதவும். * நியாயமான எல்லைகளை நிர்ணயுங்கள். குழந்தைகள் குறைபாடே இல்லாதவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் விதிகளுக்கான காரணங்களை எளிமையாகக் கூறுங்கள்; அந்த விதிகளை மாற்றாதீர்கள். * இயன்றவரையில் தினசரி வழக்கங்களை முடிவு செய்து வைத்திருங்கள். இதனால் எதை எதிர்பார்க்கலாம் என்று குழந்தைக்குத் தெரியும். * குழந்தைக்கு எரிச்சலூட்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். உதாரணமாக, குழந்தையின் திறமைக்கும் மேற்பட்ட விளையாட்டு பொருள்களைத் தருவது அல்லது பெரிய குழந்தைகளிடம் விளையாட விடுவது. * குழந்தை அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய, அல்லது விளையாட முடியாத இடங்களுக்கு பொழுதுபோக்குக்காகச் செல்வதைத் தவிர்க்கவும். * உடலளவில் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். போதிய கவனம் செலுத்துங்கள். * மன அழுத்தம் தரக்கூடிய வேலைக்கு அல்லது அதிக செயல்பாடு இருக்கும் தினத்திற்கு முன்தினம் குழந்தைக்குப் போதிய ஓய்வு கிடைப்பதை உறுதி செய்யுங்கள். * அடம்பிடிக்க வழி செய்யும் செயல்களிலிருந்து கவனத்தை திசை திருப்புங்கள். வேறு செயல்பாடுகளை அறிமுகப்படுத்துங்கள். குழந்தை இருக்கும் இடத்தை மாற்றுதல் போன்ற சிறிய மாற்றம்கூட சில நேரங்களில் கவனத்தைத் திருப்பி அடம்பிடித்தலைத் தடுக்கும். * நல்ல முன்மாதிரிகளைக் காட்டுங்கள். குழந்தையின் முன்னிலையில், விவாதம் செய்தல், கத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதில் குழந்தைக்கு எடுத்துக்காட்டாக இருங்கள். * அளவுக்கதிக எதிர்பார்ப்புகள் அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும். அடம்பிடித்தலைச் சமாளித்தல்: குழந்தை எப்போது அடம்பிடிக்கும் என்பதை சில சமயங்களில் பெற்றோரால் சொல்ல முடியும். குழந்தை மனம்வெதும்பியோ, எரிச்சலடைந்தோ, அல்லது பிடிவாதமாகவோ இருக்கும். அவன் அழத் தொடங்கலாம். காலை உதைத்து அழலாம். தரையில் விழுந்து அல்லது மூச்சைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கலாம். சில சமயங்களில் தெளிவான எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென அடம்பிடிக்கலாம். குழந்தை அடம்பிடிக்கும் போது கீழ்கண்ட ஆலோசனைகளில் ஒன்றைப் பின்பற்றுவது குழந்தைக்கும் பெற்றோர்க்கும் உதவக்கூடும். 1. குழந்தையின் கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள் - உதாரணமாக, புதிய செயல்பாடு, புத்தகம் அல்லது விளையாட்டுப் பொருளுக்குத் திருப்பவும். சில சமயங்களில் குழந்தையைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தாலே குழந்தை அமைதியாகி விடும். நீங்கள் மென்மையாக குழந்தையை அணைத்து கட்டுப்படுத்த வேண்டும். வெளியே நாய் இருக்கிறது பார் என்பது போன்று ஏதாவது பேசி கவனத்தைத் திருப்பலாம். நகைச்சுவை அல்லது சிரிப்பூட்டும் வகையில் முகத்தைக் காட்டுதல் உதவலாம். 2. அமைதியாக இருங்கள். நீங்கள் கோபப்பட்டால், அல்லது கத்தினால் நிலைமை இன்னும் மோசமாகும். அவனுடைய நடத்தைக்கு எவ்வளவு கவனம் தருகிறீர்களோ அவ்வளவு முறை அடம்பிடித்தல் திரும்பவும் ஏற்படும் என்பதை நினைவில் வைக்கவும். 3, அழுவது, கத்துவது அல்லது உதைப்பது போன்ற சிறிய அளவிலான கோப வெளிப்பாடுகளைப் பொருட்படுத்த வேண்டாம். அவன் அமைதியடையும் வரை எதையும் பேசாமல் பக்கத்திலேயே இருங்கள். 4. சிலவிதமான அடம்பிடிக்கும் செயல்களை பொருட்படுத்தாமல் விடக்கூடாது. பின்வரும் நடத்தையை புறக்கணிப்பதோ, ஏற்பதோ கூடவே கூடாது. பெற்றோரை அல்லது மற்றவர்களை அடிப்பது அல்லது உதைப்பது. அபாயகரமான முறையில் பொருட்களைத் தூக்கி எறிவது. தொடர்ந்து கத்துவது அல்லது கூச்சல் போடுவது. 5. உங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை என்றால் அறையை விட்டுச் செல்லவும். சில நிமிடங்கள் வரை, அல்லது அழுகை நிற்கும் வரை காத்திருந்து பிறகு உள்ளே போகவும். அதன்பின் வேறு வேலையில் குழந்தையின் கவனத்தைத் திருப்பவும். புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு குழந்தைக்கு முதிர்ச்சி இருந்தால் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் அடுத்த முறை அதை எவ்வாறு கையாள முடியும் என்பதைப் பற்றியும் பேசுங்கள். அடம்பிடிப்பதற்காக குழந்தையை எப்போதும் தண்டிக்கக்கூடாது. அதனால் குழந்தை தன் கோபத்தையும் எரிச்சலையும் உள்ளேயே அடக்கி வைத்திருக்கும். அது நல்லது அல்ல. நீங்கள் அமைதியாகவும், புரிதலுடனும் அடத்தைக் கையாள வேண்டும். அடம் பிடிப்பதை நிறுத்தியதற்காக பரிசு ஏதும் தரவேண்டாம். அடம்பிடித்தால் வெகுமதி கிடைக்கும் என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்பட்டு விடும். அடம்பிடிப்பதால் எதுவும் கிடைக்காது என்று தெரிந்தால், அப்பழக்கம் தொடர்வது குறையக்கூடும். அழுகை தீவிரமாகவும் அடிக்கடியும் ஏற்பட்டால் அது உணர்வுரீதியான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். அடம் பிடிக்கும்போது குழந்தை தனக்குத் தானே அல்லது மற்றவர்க்கு தீங்கு ஏற்படுத்தி விட்டால் - உதாரணமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு மயங்குதல் அல்லது 4 வயதில் அடம் மிகவும் மோசமானால் - குழந்தை நல மருத்துவரிடம் பேசவும். இந்த அடத்திற்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஏதாவது காரணமும் உள்ளதா என்பதை குழந்தை நல மருத்துவர் கூறுவார். அதைக் கையாள நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் தருவார். குழந்தையின் வளர்ச்சியில் அடம்பிடிப்பதும் இயற்கையான பகுதிதான் என்பதை உணரவேண்டும். அடம்பிடிக்கும் குழந்தையைக் கையாளுவது எளிதல்லதான். ஆனால் அன்பு, புரிதல் மற்றும் மாறாமல் காட்டும் கவனம் இந்த வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து செல்ல குழந்தைக்கு உதவும் Y.Ujeyanthan.B.Ed(Hons)

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு