புதன், 4 மே, 2011

பாலர் கல்வியில் கதைகளின் முக்கியத்துவம்

பாலர் கல்வியில் மிகவும் வலிமைமிக்க சாதனமாகக் கதைகள் விளங்குவதற்குக் காரணம், அவற்றின் வாயிலாகத் தூண்டப்பெறும் மனவெழுச்சிகளும் எதிர்பார்ப்பு இன்பமும் ஆகும். கதை அசைவுகளி னூடாகக் குழந்தைகள் உள அசைவுகளை அனுபவிக்கின்றனர். பாத்திரங்களுடன் ஒன்றிணைத்துக் கற்பனை இன்பத்தையும் எளிமை யான சீராக்கத்தையும் அனுபவிக்கின்றனர். சமூக மயமாக்கற் செயற் பாட்டிலும் அறிகைக் கோலங்களின் வளர்ச்சியிலும் கதைகள் நேர் விசைகளை ஏற்படுத்துகின்றன.
பாலர் கதைகளுக்குரிய பலமும், வலிமையும் கொண்ட தளம் நாட்டார் மரபுகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றது. நாட்டார் கதைகளில் இடம்பெறும் எண்ணக்கருக்கள் காட்சி வடிவிலிருந்து கருத்துவடிவை நோக்கிப் பெயர்வதாக காணப்படும். பலம்மிக்க வாய்மொழி ஊடகப் பண்பு மேலோங்கி உள்ளமையால், கேட்டல் என்ற இலகு கவனத்தின் வழியாக கதைக் காட்சிகளை உள்ளத்திலே அமைத்துக்கொள்ள முடியும்.
இக்கதைகளிலே காணப்படும் மிகப் பலம்பொருந்திய பரி மாணம், விலங்குகளும், பறவைகளும், மரங்களும், செடிகளும் பேசுதலாகும். தமது இயல்புகளைக் கொண்டே குழற்தைகள் சூழலை மதிப்பிட முயலும் செயற்பாடுகளில் இவ்வகையான “பேச்சு” ஆழ்ந்த உள ஈடுபாட்டை ஏற்படுத்தும்.
கதைப் புலத்தில் நிகழும் ஒரு சிறிய நிகழ்ச்சி குழந்தைகளிடத்துப் பெரிய குதூகலத்தைத் தூண்டும் “சிறிய” உள்ளீடுடன் “பெரிய” துலங் கலை ஏற்படுத்தும் உளநடவடிக்கையாக இது அமையும். ஆனால் வளர்ந்தோரிடத்து பல்வேறு செறிவுள்ள தூண்டிகளை உள்ளீடாகப்; பெய்தால் மட்டுமே பெரிய துலங்கலை ஏற்படுத்தலாம்.
பாலர் கதைகள் அதிக நெகிழ்ச்சிப் பாங்கானதாக இருக்கும். கதை கூறிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுவர்கள் எழுப்பும் வினாக் களுக்குரிய விடைகளும் விளக்கங்களும் சேர்க்கப்படவேண்டி யிருப்பதால் பாலர் கதைகளில் இரண்டு அடிப்படைப் பண்புகள் காணப்படும். அவையாவன:
1. கதைத்தளம்
2. நெகிழும் இணைப்புக்கள்.
வளர்ந்தோருக்குரிய கதைகளில் நெகிழா இணைப்புக்களே காணப் படும். அதாவது கதையின் வசனங்களிலோ, சொற்களிலோ எந்தவிதமான மாற்றங்களும் புகுத்தப்படாது “கறாராகப்” பின்பற்றப் படும் அமைப்பே நெகிழா இணைப்பாகும். ஆனால் பாலர் கதைகளி லும், நாட்டார் கதைகளிலும் வாய்மொழித் தொடர்பாடலின் அழுத்தங்கள் காரணமாக “நெகிழும் இணைப்புக்களே” கதைத் தளத்தைப் பற்றிப் பிடித்த வண்ணமிருக்கும்.
பின்வரும் குழந்தைக் கதையை அமைப்பியல் ஆய்வுக்காக எடுத் துக் கொள்ளலாம்.ஒரு கொக்கு இருந்தது. குளக்கரையில் அமைதி யாக இருந்தது. அதற்கு நல்ல பசி. காலையில் சாப்பிடவில்லை. பாவம் பசியோடு பேசாமல் இருந்தது. அப்போது குளத்தில் தண்ணீர் ஆடியது. ஒரு சிறிய மீன் குஞ்சு வந்தது. கொக்குப்பிள்ளை அதைக் கண்டுவிட்டார். “எனக்கு நல்ல பசியாக இருக்கிறது” என்று கொக்கு மீன் குஞ்சிடம் சொன்னது. “அப்படியா! எனக்கும் நல்ல பசியாக இருக்கிறது. நான் அம்மாவிடம் போகின்றேன்” என்று மீன்குஞ்சு ஓடிவிட்டது.
இக்கதையைக் குழந்தைகளுக்குச் சமர்ப்பிக்கும் பொழுது ஆசிரி யர் நடிப்புடன் உரையை இணைத்தல் வேண்டும். “பாவம் பசியுடன் பேசாமல் இருந்தது” என்ற வசனம் ஒன்றே குழந்தைகளின் ஆழ்ந்த மனவெழுச் சியைத் தூண்டப் போதுமானது. கொக்கு மீன் குஞ்சைப் பிடித்திருந்தால் கொக்கின் மீது குழந்தைகள் கொண்ட பரிவும் அனுதாபமும் உடைந்து போயிருக்கும். பசிக்கும்போது குழந்தைகள் என்ன செய்யலாம் என்ற பிரச்சினை இக்கதையின் நடுவிற் குழந்தை களுக்கு முன் வைக்கப்படுகின்றது. இந்த பிரச்சினைக்குரிய தீர்வு தாயாரை நாடுதல் என்பது கதையினூடாகக் குழந்தைகளுக்குத் தரப் படுகின்றது. அத்தோடு ஓர் எதிர் பார்ப்பு ஆவலும் குழந்தை களிடத்தே தூண்டப்படுகின்றது. மீன் குஞ்சு போய்விட்டது. கொக்கு என்ன செய்தது என்பதுதான் எதிர்பார்ப்பு ஆவல்.
குழந்தைகளுக்குரிய கதைகள் சிறியனவாயும், எளிதானவையா யும், சிந்திக்கத் தூண்டுவனவாயும், ஒழுக்கம் உரைப்பதாயும் இருத்தல் வேண்டும்.
இன்னொரு பாலர் கதையையும் அமைப்பியல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பெரிய நாவல்மரம் இருந்தது. அதில் பழங்கள் அதிகமாக இருந்தன. நன்றாகப் பழுத்த பழங்கள். மரத்தின் மீது ஓர் அணிற் பிள்ளை இருந்தது. கிளைகளில் தாவித்தாவிப் பாய்ந்தது. பழங் களைப் பிடுங்கிச் சாபபிட்டது. அங்கே கண்ணன் வந்தான். அணிற் பிள்ளையைக் கண்டான். பழங்களையும் கண்;டான். உயரமான மரம். பழங்களைப் பறிக்க முடியாது. “அணிலே எனக்குப் பழங்களைப் பறித்துத் தருகின்றாயா?” என்று கேட்டான். அணில் “ஆம்” என்றது. அதிகமான பழங்களைப் பறித்தது. மெதுவாகக் கீழே போட்டது. கண்ணன் பழங்களைப் பக்குவமாக எடுத்தான், கழுவினான். நண்பர்கள் வந்தார்கள் எல்லாரும் பகிர்ந்து பழங்களை உண்டனர்.
இந்தக் கதையில் பாலர்களுக்குச் சில அடிப்படை விழுமியங்கள் கற்பிக்கப்படுகின்றன. “அன்பு” என்ற விழுமியம் வளர்த்தெடுக்கப்படு கின்றது. அணிலின் மீது அன்பு, நண்பர்கள் மீது அன்பு கட்டியெழுப் பப்படுகின்றது. அணில் பிள்ளையின் தாவிய பாய்ச்சல் நடிப்பு முறையிலே பாலர்களுக்குக் குதூகலத்தை வருவிக்கும். இசைவாக்கச் செயல்முறையில் சாதுவான விலங்குகள் மனிதருக்கு ஒத்துழைப்புத் தரும் என்ற எண்ணக்கரு அணில் பழங்களைப் பறித்துத் தருவதன் வாயிலாக வலியுறுத்தப் படுகின்றது. பாலர்கள் பிறரிடம் உதவியைக் கோருதலும், அதற்குத் துலங்கல் கிடைத்தலும் அணிலின் செயல் களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. “பகுத்து உண்ணல்” , “கழுவி உண்ணல்” என்ற விழுமியங்கள் கதையின் நிறைவுப் பகுதியிலே உருவாக்கப்படுகின்றது.
பாட்டி கதைகள், நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் முதலியவற்றைப் பகுப்பாய்வு செய்து பார்க்கும் பொழுது, பல்வேறு மனித விழுமியங்கள் அவற்றினூடாகக் கையளிக்கப்பட்டு வருதலைக் காணலாம். பாலர்கள் வளர வளர அவர்தம் வயதுத் தராதரங்களுக் கேற்றவாறு கற்பிக்கக்கூடிய பல்வேறு கதைகள் காணப்படுகின்றன. வகைமாதிரியாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். தென்னாலி இராமன் கதை, மரியாதை இராமன் கதை, சிறுவர்க்கான சாயி கதைகள், ஈசாப் கதைகள், அரபுக் கதைகள், விக்கிரமாதித்தன் கதை, கண்டர்பரிக் கதைகள், ரொபின்சன் குருசோ கதை, கலிவரது பிரயாணங்கள், தேவதைக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், அவிவேக பூரண குருவின் கதைகள் முதலியவற்றை இவ்வகையிலே குறிப்பிடலாம்.
நவீன விஞ்ஞான, தொழில் நுட்பவியல் எண்ணக் கருக்களை அறிமுகம் செய்யக்கூடிய கதைகளும் குழந்தைகளின் உளமேம் பாட்டுக்கு அடிப்படையானவை. சில்லின் கதை, காற்றாடியின் கதை, கடதாசியின் கதை, புயலின் கதை போன்றவை தமிழ் மொழியில் ஆக்கப்பட்டு வருதல் நவீன கதை பயில்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு