புதன், 4 மே, 2011

மரிய மொன்ரிசோரி அம்மையார்

மரிய மொன்ரிசோரி அம்மையார்

குழந்தைகளுக்கான உளவியல் மயப்பட்ட கல்வி இயக்கத்தின் நவீன சிற்பிகளுள் ஒருவராக மொன்ரிசோரி அம்மையார் (1870-1952) விளங்குகின்றார். இத்தாலியில் பிறந்த இந்த அம்மையார் ரோமாபுரிப் பல்கலைக்கழகத்திலே மருத்துவத்துறையிற் பெற்ற பட்டமும், உளநலம் குறைந்த குழந்தைகளின் பராமரிப்பிலும், கல்வியிலும் ஈடுபட்டமையாற் கிடைக்கப்பெற்ற பட்டறிவும், அவரது கல்விச்;சிந்தனைகளுக்கு வளமும் வலுவும் தந்தன.
குழந்தைகளை நடுநாயகப்படுத்திய கல்விமுறையில், புலன்களுக் கான பயிற்சியின் முக்கியத்துவத்தை அம்மையார் வலியுறுத்தினார். அதா வது பொருத்தமான முறையில் குழந்தைகளின் புலன்களுக்குப் பயிற்சி தந்தால் அவர்கள் அறிவில் மேம்பாடு அடைந்து கொண்டு செல்வார்கள் என்பதை அவர் கண்டறிந்தார். அவர் நடத்திய பரிசோதனைகள் இந்த முடிவுக்கு மேலும் வலுவூட்டின.
குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை பொருந்தியவர்கள். இந்நிலையில் எல்லாக் குழந்தைகளையும் ஒரே வகுப்பில் இருத்தி ஒன்றாகக் கற்பிக்கும் பொழுது அவர்களின் தனித்தன்மைகள் நசுக்கப் பட்டு விடலாம் என்ற அச்சம் அம்மையாருக்கு எழுந்தது. ஒவ்வொரு குழந்தையும் தத்தமது இயல்புக்கு ஏற்பவும், தன் வேகத்துக்கேற்பவும் கற்பதற்கு வழியமைத்துக் கொடுத்தல் வேண்டும்.
குழந்தைகளின் தனித்துவம், குழந்தைகளுக்குரிய புலன் பயிற்சி, மற்றும் கற்பித்தல் சாதனங்கள் முதலியற்றை முதன்மைப்படுத்திய அம்மையாரின் குழந்தைக் கல்விக் கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
1) குழந்தைகளது தனித்துவத்தையும் தனியாள் இயல்புகளை யும் மலர்ச்சியடையச் செய்யும் வண்ணம் கற்பித்தலை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
2) அறிவின் நுழைவாயில்களாக அமையும் புலன்களுக்குப் பல வகையாகவும் பல நிலைகளிலும் பயிற்சி தருதலே சிறந்த கற்பித்தல் முறையாகும். மூன்று வயது முதல் ஏழு வயதுவரையான வீச்சில் உள்ள மாணவர்ள் தீவிரமான புலன் செயற்பாடுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
3) புலன்களுக்குப் பயிற்சிதரும் விளையாட்டுக்களுக்கும், செயற்பாடுகளும் கற்பித்தலிலே சிநப்பிடம் பெற வேண்டி யுள்ளன.
4) தாமே முயன்று கற்கும் செயற்பாட்டைக் குழந்தைகளிட த்து வளர்த்தல் வேண்டும். அதற்குரிய பொருத்தமான கற்பித்தற் கருவிகளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்கமைத்தலே சிறந்தது.
5) குழந்தைக் கல்வியில் குழந்தைகளின் தன்னுரிமைக்கும், சுயாதீனமான செயற்பாடுகளுக்கும் இடமளித்தல் வேண்டும்.
6) பொருத்தமான நிலையில் வழங்கப்படும் கற்பித்தற் கருவிகள் வாயிலாக சுயாதீனமான கற்றலும். குழந்தைகள் தம்மைத் தாமே திருத்தியமைத்துக் கொள்ளலும் இடம் பெறுகின்றன.
7) சிறுவர்க்குரிய பள்ளிக்கூடம் வீட்டுச் சூழலைப் பிரதி பலிப்பதாய் அமைக்கப்படுமதே சிறந்தது. குழந்தைகள் படிக்க, உணவு உண்ண, விளையாட, ஓய்வெடுக்க, உடல் உழைப்புடன் இணைந்து விளையாட, தனித்தனி அறைகள் இருத்தல் விருப்பத்தக்கது. திட்டவட்டமான நேர சூசிகை இன்றி ஒவ்வொரு குழந்தையும் தத்தமது விருப்பத்துக் கேற்ற செயல்களில் ஈடுபடுவர்.
8) சிறார்களுக்குரிய கல்வி எப்பொழுதும் நடைமுறை வாழ்க் கையைத் தழுவிச் செல்லுதல் வேண்டும். தங்களுக்குரிய பொருள்களைத் துடைத்து அழகாக வைத்திருத்தல், பல்துலக்குதல், நகங்களைச் சுத்தப்படுத்தல், கைகழுவுதல் போன்ற நாளாந்த செயற்பாடுகள் அவர்களுக்குக் கற்பிக் கப்படுதல் வேண்டும்.
9) உடல் ஒத்திசைவையும், இயக்கத்தையும் மேம்படுத்தும் உடற் பயிற்சிகளும் குழந்தைகளுக்கு வேண்டப்படு கின்றன.
10) பல்வேறு வடிவங்களைக் கொண்ட மரக்கட்டைகள், வண்ணத் தாள்கள், நாணயங்கள், மணிகள், கம்பளி நூல் கள், பெட்டிகள், வெப்ப வேறுபாடுகள் கொண்ட நீர்ப் போத்தல் முதலியவற்றைக் கொண்டு சிறந்த புலப்பயிற் சியை மாணவர்களுக்கு வழங்கலாம்.
11) அவற்றைத் தொடர்ந்து வண்ணங்களை இனங்காணல், வடிவங்களை இனங்காணல், ஒலிகளை இனங்காணல், எடை வேறுபாடுகளை அறிதல் முதலாம் செயற்பாடுகளை வழங்கலாம்.
12) அவற்றைத் தொடர்ந்து எழுதுதல், படித்தல், கணித்தல் முதலியவற்றைச் செயற்பாடுகளுடன் இணைத்துக் கற்பித் தல் வேண்டும்.
13) எழுத்துக் கற்பித்தலில் மூன்று நடைமுறைகள் பின்பற்றப்ப பட வேண்டியுள்ளன. அவையாவன:
அ) எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பை அறிதல்.
ஆ) எழுத்துக்கள் குறிக்கும் ஒலியை அறிந்து கொள்ளல்.
இ) எழுதுகோலைக் கையாளும் திறனறிதல்.
14) சொற்களையும், சொற்றொடர்களையும் கற்பிப்பதற்கு எழுத்துப் பளிச்சீட்டு அட்டைகளைப் பயன்படுத்துதல்.
கற்பித்தலில் குழந்தை உளவியலின் பிரயோகத்தை முன்னெ டுத்த கல்வியியலாளர்களுள் அம்மையார் தனித்துவம் பெறுகின்றார். அவர் கண்ட ஆசிரியத்துவமும் உளவியல் மயப்பட்டதாக அமைந்து. ஆசிரியர் “ நெறியாளராக” இருக்க வேண்டும் என அம்மையார் வலியுறுத்தினார். குழந்தைகளின் தொழிற்பாடுகளில் தேவையற்ற வகையில் ஆசிரியர் குறுக்கீடு செய்யலாகாது. சிறந்த முறையில் குழந்தைகளை உற்றுநோக்கி அவர்கள் தனித்துவத்தைக் கண்டறிந்து ஊக்குவித்தல் வேண்டும். ஆசிரியர்களுக்குப் பாட அறிவு, மருத்துவ அறிவு, ஒழுக்கம் முதலியவை கட்டாயமாக வேண்டப்படுகின்றன.
மறைபொருளாய் அகத்தே மலர்ந்துள்ள குழந்தையின் உள்ளத்தை வளம்படுத்தும் ஆற்றல்மிக்க கருத்துக்களை அம்மையார் முன்மொழிந்தார். அவரின் குழந்தைக் கல்வி இயக்கம் ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் விரைந்து பரவலாயிற்று.
இலங்கையிலும் இக்கருத்துக்கள் படிப்படியாகப் பரவலாயின. யாழ்ப்பாணத்தில் வேம்பஸ்தானில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும், பின்னர் றிம்மர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும் அம்மையாரின் குழந்தைக் கல்விக் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அக்கருத்துக்களை இங்கு பரப்புவதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக விருந்த கலாநிதி வண.டி.ரி. நைல்ஸ் சிறப்பார்ந்த பங்கு வகித்தார்.

லேபிள்கள்:

1 கருத்துகள்:

Blogger Unknown கூறியது…

Nice k up

18 நவம்பர், 2016 அன்று AM 5:46  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு