திங்கள், 6 ஜூன், 2011

இலங்கையில் கல்வி முறையின் பிரச்சினைகள்

இலங்கையில் கல்வி

இலங்கையின் கல்வியே ஆசியாவில் முதன்மையான இடத்தை வகிப்பதாக கூறும் வாதங்களைத் தாண்டி, உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. இங்கு பரந்தளவில் கல்வி மறுப்பக்குள்ளாகும் நிலைமையே விரிந்த அளவில் காணப்படுகின்றது.

1.வறுமையால் குழந்தைகள் சொந்த உழைப்பில் வாழ வேண்டிய சமூக பொருளாதார நிலைமை.

2.சாதிய ஒடுக்கு முறையால் கல்வி மறுக்கப்படும் நிலைமை.

3.இனஒடுக்கு முறையால் கல்வி மறுக்கப்படும் நிலமை.

4.தவறான கல்விக் கொள்கையால் கல்வியைத் தொடர முடியாது கல்வியை பாதியில் விடும் அவலநிலமை

5.எமது பண்பாட்டு, கலாச்சாரத்தின் தவாறான பார்வை மற்றும் கோளறுகளால் கல்வியை இடையில் கைவிடும் அவலம்.

6. உயர்தரக் கல்வி தொடருவதை மறுக்கும் அரசு.


இப்படி பட்டியல் நீண்டு செல்லுகின்றது. இங்கு சமூகத்தின் அடிப்படைப் போக்கில் ஒரு முரண்நிலையாக, கல்வி மறுப்பு சாதிய ஒழுக்கு முறையால் எழுகின்றது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த சாதியம், கல்வியில் ஒரு பகுதி மக்களை உரிமையற்றவராக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் நுழையவே தடை எமது சமூகம் கடைப்பித்து வருகின்றது. ஊருக்குள் நுழைந்தால் அதுவே ஊரைத் தீட்டாக்கிவிடும் என்ற எமது சமூக அமைப்பில், ஊருக்குள் உள்ள பாடசாலை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அந்த மக்களை கீழான நிலையில் வாழவைத்தனர். அந்த மக்களுக்கான கல்வி மறுப்பு என்பது, எமது சிந்தனை மற்றும் கல்வி முறையில் சாதியப் போக்கில் ஊறிக்கிடக்கின்றது.

சாதியம் சார்ந்து மறுக்கும் கல்விக்கான அடிப்படை குறிப்பாக இந்தியாவில் இருந்து இந்து மதம் சார்ந்து உருவாகின்றது. இது வேறு எந்த நாட்டிலும் கிடையாது. சாதி அமைப்புக்கு முன்பு வர்ணங்கள் இருந்த போது, குருகுலக் கல்வி முறை இருந்தது. இங்கு கல்வி என்பது ஆசிரியா கற்றுக் கொடுத்த போது, எந்த பகுபாடும் யாருக்கும் இருக்கவில்லை. கல்வி கற்ற பின்பு ஆசிரியர் தான் மாணவரின் திறமைக்கும் ஆற்றலுக்கும் எற்ப வர்ணங்களை பிரித்து தொழிலை வகைப்படுத்தினார். இதுவே பின்னால் தந்தை வழியாக தொழில் மற்றும் வர்ணம் நிர்ணயமான போது அதுவே சாதியானது. வர்ணம் கடந்த திருமணம் மற்றும் கலந்த உண்ணலும் தடைசெய்யப்ட்டது. தந்தையே கல்விக்கான குருவானாh. பின்னால் குருகுலங்களுக்கு மாணவர்கள் அனுப்பபட்ட போது, முன் கூட்டியே வர்ணமும் தொழிலும் தந்தையால் நிர்ணயம் செய்யப்ட்ட குறித்த தொழில் மட்டும் கற்றுத் தரப்பட்டது. இந்த வர்ணத்தில் இருந்து சாதியாக பரிணமித்த பொது, கல்வியில் எற்பட்ட முக்கியமாற்ற இதுவாகும்.


1.இது மாணவன் எதைக் கற்பது என்ற சுதந்திரத் தெரிவை மறுத்தது.

2.கல்வியை பரம்பரை ரீதியாக வகைப்படுத்தியதால், கல்வி அனைவருக்கும் கற்றுக் கொடுப்பது மறுப்புக்குள்ளாகியது

இது இன்றுவரை பல மற்றங்களுடாக அடிப்படையான நோக்கம் மாறமல் நீடிக்கின்றது. கல்வியை பிறப்பை அடிப்படையாக கொண்டு பிரிந்ததுடன், அதனால் எறப்பட்ட முரண்பாடுகள் போராட்டங்கள் சாதியத் தீட்டாக நியாப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கல்வி மறுப்பு ஒரு நிகழ்ச்சி நிரலாகியது. இதை விரிவாக நான் சாதிய அமைப்பு பற்றி எழுதும் எனது நூலில் காணமுடியும்.

இந்த தீட்டு கல்வி மறுப்பாக நவீன கல்வி முறையில் தொடருகின்றது. இன்றைய எமது கல்வி பற்றிய அடிப்படையான மாறுதாலாக, நிச்சயமாக கல்வி மறுக்கப்பட்ட சதிகளுக்கு கல்வியை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இது சார்ந்த பண்பாட்டு கலாச்சார அனைத்து சமூகப் பிளவுகளையும் நீக்கவும், அதை கல்வியில் கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும். அதாவது கல்வி மறுக்கப்படும் அனைத்து இளம் குழந்தைகளில் கல்விக்கான உரிமையை உறுதி செய்யும் வகையில், நாம் நிச்சயமாக போராட வேண்டியவராக உள்ளோம். இதற்கு தடை எந்த வகையில் இருந்தாலும், அதற்கான சமூக காரணத்தை மாற்ற நாம் போராட வேண்டியவராக உள்ளோம்.

இன்று இலங்கையில் மொத்தமாக 10590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10042 ஆகும்;. இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும்;. மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர். இலங்கையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 180000 யாகும். 1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவர்கள் பாடசாலையை எட்டிப் பார்ப்பதில்லை. பாடசாலை செல்வோரில்; 1 முதல் 5ம் வகுப்புவரை 19 லட்சம் மாணவர்கள் கற்கின்றனர். 6 முதல் 11 வரை 21 லட்சமும், 12 முதல் 13 வரை 2 லட்சம் மணவர்களும் கற்கின்றனர். ஆரம்ப பாடசாலையில் (கல்வி (1-5)) 8 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. இடைநிலைக் கல்வியில் (6 முதல்11) 25 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. உயர் கல்வி வயது எல்லையில் மூன்று சதவீதமான மாணவர்களே கல்வியை தொடாகின்றனர். 97 சதவீதமானவர்களுக்கு உயர்தரக் கல்வி மறுக்கப்படுகின்ற நிலையில், எமது கல்விக் கொள்கை சரியானதா?

இன்றைய எமது கல்விக் கொள்கை

பொதுவாகவும் மேலேந்த வாரியாக பேசும் பொருளாக, இதுவே வெற்று அரட்டையாக விடும் இந்த விடையம், மிகவும் விசனத்துக்குரியதாகும். லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வை அன்றாடம் சிதைத்துவிடுகின்ற இன்றைய கல்விக் கொள்கை, ஒட்டுமொத்தமாகவே ஒரு சிலரை உருவாக்கி காட்டும் அடிப்படைக் கண்ணோட்டத்துடன் பின்னப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு தனிமனிதனின் சுயநலன் என்ற எல்லையில் தொடங்கும், லட்சியக் கனவுடன் இது நியாப்படுத்தப்படுகின்றது. லட்சக்கணக்கான மாணவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தெரிந்து எடுக்கும் முடிவில், மனித அவலம் தொடங்குகின்றது.

இலங்கையில் கல்வி கற்போரில் பல்கலைக்கழக அனுமதி பெறுவேர் அண்ணளவாக 0.82 சதவீதத்தினர் மட்டுமேயாகும். இதில் "எஞ்சினியர்கள், டாக்டர்கள்"" மிகச் சிறிய அளவே. அண்ணளவாக 0.12 சதவீதமாகும். இன்று பல்கலைக்கழகத்துக்கு செல்லும் உயர்தர பரிட்சை எழுதுவோரில் அண்ணளவாக 41 சதவீதம் பேர் சித்தி பெற்று, செல்லும் தகுதியைப் பெறுகின்றனர். ஆனால் பரீட்சை எழுதுவோரில் அண்ணளவாக வெறும் 4.7 சதவிதம் பேர் தான் அனுமதி பெறுகின்றனர். உண்மையில் உயர்தர வகுப்புக்கு நுழைய முடியாதவர்கள், இடை நடுவில் கல்வியை கைவிடுபவர்கள், கல்வியை கற்ற முடியாத சமூக பொருளாதார வாழ்வைக் கொண்டவாகள் என்ற விரிந்த தளத்தில் ஆராய்ந்தால், இலங்கையின் கல்வி முறையின் வெட்க கேடான பரிதபாம் நிர்வாணமாகும்; இதலும் "எஞ்சினியர்கள், டாக்டர்கள்"" என்ற கனவுடன் கல்வியின் வெற்றியை பறைசாற்றும் எமது சமூக மனநிலை, உண்மையில் இலங்கை கல்வியின் தோல்வியை மட்டுமல்ல அதன் போலித்தனமும் வெட்வெளிச்சமாவது தவிர்க்க முடியாது. இதை சற்று விரிவாக ஆராய்வோம்.

அனைவருக்கும் கல்வி மறுக்கப்படுவதே, எமது கல்விக் கொள்கை

உயர் கல்வி வயது எல்லையான 19-23 வயதுடையவர்களில் 2 சதவீதமானவர்களே உயர் கல்வியைப் பெறுகின்றனர். இது தென்னாசியாவில் 5 சதவீதமாகவும், தூரகிழக்கு நாடுகளில் 8 சதவீதமாகவும், மேற்கில் 20 முதல் 30 சதவீதமாகவும் உள்ளது. 40 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் 1.2 கோடி மாணவர்கள் பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்றனர். 2000ம் ஆண்டில் 30 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களிடையே 22 சதவீதமானவர்கள் உயர்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். லுக்சம்பேர்க்கை எடுத்தால் 80 சதவீதமானவர்கள் பட்டப்படிப்பை முடிக்கின்றனர். இது உங்களுக்கு ஆச்சரியமான விடையமாக இருக்கலாம். ஆனால் எதார்த்தம் அதை மீறியது அல்ல. ஆனால் அதை நாம் கண்டு கொள்வதில்லை. எமது போலித்தனமான வீம்பு வம்பு பேச்சுகளால் உண்மைகளை குழி தோண்டி புதைக்கின்றோம்.

இலங்கையில் 1995 இல் உயர்கல்வி 100 மாணவருக்கு 2 முதல் 5 மாணவருக்கே ஒட்டு மொத்தமாக கிடைத்தது. மிகுதி மாணவர்களுக்கு அது திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றது. ஒவ்வொரு 100 மாணவனும் இந்த எல்லைக்குள் தான் போராடுகின்றான். 2 முதல் 5 மாணவன் இறுதியாக உயர் கல்வியைத் தொடர, மிகுதியானவர்கள் எந்த விதமான சமூக வழிகாட்டுதலும் அற்ற, வெற்று சமூகத்தில் விசப்படுகின்றான். அவனின் கடந்த கால கல்வியுடன் தொடர்பற்ற வகையில் வாழ்க்கையில் அல்லாடுகின்றான். அவனின் இளைமைக் கால கல்வி வாழ்வுடன் தொடர்பற்ற வகையில் இருப்பது, எமது கல்விக் கொள்கையின் அடிப்படையான தாவறாக உள்ளது. வாழ்வுடன் சம்பந்தமல்லாத கல்வி, விரையமானது, அர்த்தமற்றது அல்லவா! 100 மாணவனுக்கு 2 முதல் 5 மாணவனின் உயர் கல்வியை எடுத்தால், இங்கும் கூட கடுமையான தவறான கல்விக் கொள்கை காணப்படுகின்றது. இது பல்கலைக்கழகம் முதல் மற்றைய அனைத்து உயர்கல்வி வரை காணப்படுகின்றது. இந்தக் கல்வி என்பது 95 சதவீதமானவர்கள் மேல் எப்படி ஒரு அடக்குமுறையை அடிமைத்தனத்தையும் நிலை நாட்டுவது பற்றியதாக அமைகின்றது. அதாவது இலங்கையை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மையமாக வைத்து, மற்றவர்களுக்கு கல்வியை எப்படி மறுப்பது என்ற உள்ளடகத்தில் கல்வி போதிக்கப்படுகின்றது. உயர் கல்வி அதிகார வர்க்கத்தையும், சமூகத்தை பொய்களும் போலியான மனப்பங்களை எற்படுத்தும் கௌவுரவ பிரஜைகளையும் உருவாக்கின்றது. சமூக நலன் சார்ந்த வழிகாட்டிகளை உருவாக்குவதில்லை.

14 சதவீதமான இலங்கைக் குழந்தைகள் பாடசாலைக்கே செல்வதில்லை

அண்ணளவாக இலங்கையில் 14 சதவீதமான குழந்தைகள் பாடசாலை செல்லும் வயதில் சேரிகளிலும் தொழில் நிலையங்களிலும், விபச்சார விடுதிகளிலும் அடிமைகளாக வாழ்கின்றனர். அடிப்படையான சமூகத் தேவையை நிறைவு செய்யும் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழல் இன்மையால், கல்வி கற்போரும் தமது கல்வியை தொடரமுடியாத சூழலில் சிதிலமடைகின்றனர். இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில்; 14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர். உடல் உழைப்பு பொதுவான தலைவிதியாகின்றது. உழைத்தே தன் அரை வயிற்றுக்கு கஞ்சியைத் தன்னும் குடிக்க முடியும் என்ற மனித அவலம். இதற்கு வெளியில் உல்லாச வாழ்வை வாழ விரும்பம் வெள்ளைப் பன்றிகளுக்கு, உள்நாட்டு பாலியல் வக்கிரங்களுக்கு வக்கிரத்தைத் தீர்க்கவும் குழந்தை விபச்சாரம் சந்தையில் கொடி கட்டிப்பறக்கின்றது. பிஞ்சியில் அப் பச்சிளம் குழந்தைகளை கருக்கி, அவர்களின் மென்மையிலும் இனிமையிலும் எமது தேசமும் எமது கல்வியும் வளர்ச்சியுறுகின்றது.

கல்வி கற்போரை எடுத்தால் அங்கும் இந்த அவலம் பகுதியாகி ப+ரணமடைகின்றது. கல்வி கற்போரில் பெரும்பான்மையான குழந்தைகள் கல்வி அல்லாத நேரத்தில் உடல் உழைப்பில் பெற்றோருடன் பங்கு கொள்கின்றனர். சிந்திக்கவும், செய்படவும், உற்சாகமாக விளையாடவும் வேண்டிய குழந்தைப் பருவம், கடுமையான வறுமையுடன் கூடய உடல் உழைப்பில் வதைக்கப் படுகின்றது. இது உயர் கல்வியை நோக்கிச் செல்லும் பொது, அங்கும் இது ஒரு தலைவிதியாகின்றது. இவற்றை சில புள்ளிவிபரங்கள் மூலம் ஆராய்வோம்.

எமது கல்வியில் வடித்தெடுத்த உருவான "கௌவுரவமான" குடும்பங்களில், 1.5 லட்சம் சிறார்கள் இலங்கையில் வீட்டு வேலைகளில் வேலைக்காரராக நசிகின்றனர். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் 2.2 லட்சம் சிறுவர்கள் வீதியில் வாழ்கின்றனர். "கௌவுரவமான" குடும்பங்கள் அணியும் தங்க ஆபரணங்களின் பின்னால், நெஞ்சை பிழியும் குழந்தை உழைப்பு அகோரமாக உள்ளது. இந்த உழைப்பில் உள்ள 7 வயது முதல் 14 வயதுடைய 90 சதவீதமான குழந்தைகள் தமது கல்வியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மட்டுமே கல்வி கற்றவராக உள்ளனர். "கௌவுரவமான" குடும்ப ஆண்களுக்கு அழகுபடுத்தி காட்டும் பெண்கள் அணியும் தங்க ஆபரணத் தொழிலில் இருக்கும் குழந்தைகள், எழுத வாசிக்க தெரியாத இயந்திர பேச்சு மொழியுள்ள நடைப்பிணங்களாகும். 20000 ஆயிரம் தொழிலாளரைக் கொண்ட இந்த பணக்கார செட்டியார் தெருவில், 40 சதவீதம் உழைப்பு பச்சிளம் பாலகர்களின் கைகளை ஆதாரமாக கொண்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 11, 12 மணி வரை உழைக்க வேண்டிய இவர்கள், இலங்கை ஜனநாயகத்தினதும் கல்வி பற்றிய வெற்று அரட்டைக்கும் ஒரு மாதிரியாகும்.
எத்தனை சதவிகிதம் பேர் கவ்வியைப பெறுகின்றனர், எத்தனை சதவீதம் பேர் கல்வியை பெற முடியாதவர்கள் உள்ளனர்.
1971 1971 1981 1981
கல்வி மட்டம் ஆண் பெண் ஆண் பெண்
பாடசாலை செல்லாதோர் 12.1 12.4 6.0 4.2
1 முதல் 5 வரை சித்தியடைந்தோர் 15.6 10.4 9.4 4.9
6 முதல் 10 வரை சித்தியடைந்தோர். 61.4 58.0 72.7 67.6
க.பொ.த சாதாரண வரை சித்தியடைந்தோர். 9.9 18.0 9.8 19.6
க.பொ.த உயர்தரம் வரை சித்தியடைந்தோர். 0.7 1.0 1.7 3.3
பட்டப்படிப்பும் அதற்கு மேலும் 0.3 0.6 0.1 0.4

கல்வி தரத்த்தில் வீழ்ச்சியுடன், தொடர்ச்சியாக கல்வி முடக்கப்படுகின்றது. க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் சித்தி பெறுவதில்லை. 20 சதவீதமான மாணவர்களே அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றுகின்றனர். அனைத்து மாணவர்களில் 12 சதவீதமானவர்கள் மொத்தத்தில் அதே வகுப்பை மீண்டும் படிக்கின்றனர். உண்மையில் இலங்கையில் மாணவர்களின் கல்வி என்பது, 99 சதவீதம் மறுக்கப்படுகின்றது. மறுபக்கம் கல்வியை ஆளும் வர்க்கங்கள் மோசடியாக்கினர். 1985 களின் கல்வி தரத்தை வீழ்ச்சியுற வைத்து சித்தியை அடைய வைத்தனர். இதன் மூலம் அரசு வேலை வாய்ப்பு சார்ந்து நெருக்கடிகளை ஒரு சில ஆண்டு பின்தள்ளி வைத்தனர்.

1991, 1992, 1993 இல் இல் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையை ஆராயின் எமது கல்வியின் அவலத்தைக் நாம் காணமுடியம். 10 முதல் 17 சதவீதமானோர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 23 முதல் 42 சதவீதமானவர்கள் 20க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர் 53 முதல் 73 சதவீதமான மாணவர்கள் 40 க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர். அதாவது 1991 இல் 38000 பேர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 86000 பேர் 100 க்கு 20 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 150 000 பேர் 100 க்கு 40 குறைவான புள்ளிகளையே பெற்றனர். கல்வி கற்க்கும் மாணவனின் கல்வி தரம் மிகவும் ஒரு கீழான நிலையில் காணப்படுகின்றது. இதை உன்னதமான கல்வி என்று சொல்ல எமது நாட்டில் பலர் இருக்கின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் எமது மலட்டுக் கல்வியின் அவலம் பரீட்சையின் பெறுபெறுகள் மூலம் பிரதிபலிக்கின்றது. பரீட்சைக்காக கற்கும் கல்வியிலேயே இந்த அவலம் என்றால், கல்வியின் வீழ்ச்சி பிரமாண்டமானது. எமது சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற கல்வி, வகுப்பறைகளின் திணிக்கப்படும் பொது குழந்தை திணறுகின்றது. இந்த திணிப்பு அதிகாரம், அடக்குமுறை, பணிவு என்ற வடிவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. குழந்தையின் இயல்பான உற்சகமாக அறிவதில் உள்ள ஆர்வத்துக்கு புறம்பாக, மூளையில் புகுத்த முயற்சிக்கப்படும் போது அவலம் தவிர்க்க முடியாது. ஆனால் இதை ப+சிமொழுகி கவர்ச்சி காட்டுவதில் நாம் எம்மையே ஏமாற்றுவதை தவிர, எதுவும் இருப்பதில்லை. பொதுவாகவும் பெரும்பாலும் இந்தக் கல்வி பாடமாக்கும் முறையில் மனப்பாடம் செய்யபடும் கல்வியாகிவிடுகின்றது. கல்வியின் சரியானதும் உண்மையனதுமான சிறப்பு இயல்பாகவும், ஆர்வாமாகவும் சமூக வாழ்வுடன் கூடிய உணர்வுபூர்வமாக உள்வாங்குவது தான்;. ஆனால் இது எமது கல்விக் கொள்கையில் ஒரு அடிப்படை விடையம் என்பதை, எற்றுக் கொள்வதே இல்லை.

உயர் வாகுப்பை நோக்கிச் செல்லும் போதும் இதுவே நிகழ்கின்றது. 1990 தொடங்கிய தொடர் பத்து ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் 10 சதவீதமானவர்கள் (1995 இல் 55000 பேர்) ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. அதாவது முழுமையாக அனைத்த பாடத்திலும் சித்தி பெறவில்லை. 70 சதவீதமானவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் சித்தியடையவில்லை. 1995 இல் 15 சதவீதமானவர்கள் மட்டுமே க.பொ.த உயர்தர வகுப்புக்கு செல்லும் தகுதியை அடைந்தனர். 1995 இல் 12000 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. 1987 இல் 389,577 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை. அவர்களை எந்த விதமான கல்வி தொடர்ச்சியுமின்றி வீதியில் வீசியெறியப்பட்டனர். இதே ஆண்டில் 112,577 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றிய போது 6143 மாணவருக்கு மட்டுமே பல்கலைக்கழக அனுமதிகிடைத்தது. மிகுதியானவர்கள் சமூக வெற்றிடத்தில் தள்ளப்பட்டனர். க.பொ.த உயர்தர பரீட்சைக்கு பங்கு கொள்ளும் 170,000 மாணவர்களில் 8 முதல் 9 ஆயிரம் பேர் வேலையற்றவராக மாறுகின்றனர். இலங்கையின் சமூகப் பொருளாதார பண்பாட்டு நிலமை மக்களிடையில் பிளவுபட்டு இருப்பதால், ஒட்டு மொத்த மாணவர் சமூகமே பாதிக்கப்படுகின்றது.

க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தர வகுப்பில் மாணவர்கள் அடையும் பாதிப்பு கடுமையானதும், உளவியல் ரீதியனதுமாகும். க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர் சமுதாயத்தில் இருந்து வடிகட்டப்பட்டு அண்ணளவாக 1.2 சதவீதமான மாணவர்களே பல்கலைக் கழக அனுமதியைப் பெறுகின்றனர். அதாவது 100 மாணவன் உயா வகுப்புக்குச் செல்லும் போது, 1 அல்லது 2 மாணவன் இந்த சமுதாயத்தின் உயர் கல்வியை பெறும் கல்வி முறையை தான் நாம் பாதுகாத்து வைத்துள்ளோம். ஒரு பாடசாலையில் 1500 மாணவர்கள் படிக்கும் போது அண்ணளவாக 18 மாணவன் தான் பல்கலைக் கழகத்தை நோக்கிச் செல்லும் எல்லையில் தான், பாடசாலைகளின் ஒட்டு மொத்த நலனும் சங்கமிக்கின்றது. அதாவது ஒரு மாணவனின் கல்வி ஆயுள் 10 வருடம் எனின் 180 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கால் எடுத்து வைக்கின்றனர். ஆனால் மிகுதி 1320 பேர் அந்த பாடாசாலைக்கு வெளியில் மலட்டுக் கல்விக்கு எந்த சம்பந்தமில்லாத வாழ்வில், புதிதாக எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் அவலத்தில் காலடி எடுத்து வைக்கின்றனர். இவர்களைப் பற்றி இந்த பாடசாலைகள் சிந்திப்பதற்கு கூட தயார் அற்ற பொதுவான சமூக கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றனர். அந்த நிலையில் இக்கட்டுரை இந்த அடிப்படை விடையத்தில் சிந்திக்க துண்டுவது அடிப்படை நோக்கமாகும். பல்கலைக்கழகம் செல்வோரும் கூட பின்னால் தமது வாழ்வுக்கு தொடர்பற்ற வகையில் மிளவும் சிதைக்கப்படுகின்றனர் என்பது மற்றொரு உண்மையும் கூட.

பல்கலைக்கழக கல்வியை நோக்கிய எமது கனவுக் கல்வி

எமது மலட்டுக் கல்வியில் தகுதி பெறும் ஒருவருக்கும் கூட கல்வி முழுமையாக கிடைப்பதில்லை. இது மிகக் குறைந்த எண்ணிக்கையனவர்களை தேர்ந்து எடுப்பதன் மூலம் அதாவது அதி திறமைசாலி என்ற வரையறை கையாளப்படுகின்றது. இது பிரதேச வேறுபாடு, இனப் பாகுபாடு, மதப்பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை, வறுமை என்று வௌ;வேறு சமூக் பொருளாதார காரணங்களுக்கும் உள்ளாகி, மறைமுகமாகவும் நேரடியாகவும் கல்வி மறுப்புக்கு உள்ளாகின்றது. இதன் விளைவு நேரடியானது. 1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுதியில 73 சதவீதமானவர்கள் தனியார் அல்லது உயாதர பாடசாலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 18 சதவீதமானவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர். இவர்களும் கூட உயாந்தர பாடசாலைகளின்; பழைய மாணவர்களாவர். 1983 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயும் போது, 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து, பல்கலைக்கழகம் தெரிவனோர் 39.2 சதவீதமட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படுவதைக் இத நிறுவியுள்ளது. 17.6 சதவீதமான மேட்டுக் குடியில் இருந்து 60.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வது, இந்த சமூக அமைப்பின் ஜனநாயக விரோதப் போக்கையும் உழைக்கும் மக்களின் கல்வி மறுப்புக்கு உள்ளாவதையும் நிறுவுகின்றது. இந்த மலட்டுக் கல்வி உயர்குடிகளின் பிடியில் இருப்பதையும், இதற்குள் தான் தேசிய இனப் போராட்டங்கள் நிகழ்வதையும் காட்டுகின்றது இப்படி உயர் கல்வி மறப்புக்குள்ளவோர் தொகை கணிசமானது. பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தொடர்ந்து உயர் கல்வி கற்பதை உறுதி செய்ய இந்த கல்வி மறுப்பதைக் கூட, இந்த சமூக அமைப்பு கண்டு கொள்வதில்லை. இதை நோக்கி எமது சிந்தனை துண்டுடப்படுவது அவசியமானது.

இதை மேலும் நாம்புரிந்து கொள்ள சில அடிப்படையான தரவுகளை ஆராய்வோம். 1942 இல் பல்கலைக்கழகத்தில் ஒட்டு மொத்தமாக கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கை 904யாக இருந்தது. இது 1988-89 இல் 29781 யாக மாறியது. 1998 இல் இது 32000 மாக உயர்ந்தது. ஆனால் பல்கலைகழக அனுமதி கோரி 1960 இல் 5277 பேர் விண்ணப்பித்தனர். 1969-70 இல் 30445 பேர் விண்ணப்பித்தனர். இது 1995 இல் 70 000 மாக மாறியது. ஆனால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தோர் 1960 இல் 1812 பேரும், 1969-70 இல் 3451 பேரும், 1995 இல் 8000 பேருமாகும். அதாவது பல்கலைக்கழக செல்லும் பரீட்ச்சையில் சித்திய அடைந்தவர்களில் அண்ணளவாக, இன்று 10 சதவீதம் பேருக்கே தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடாந்த கல்வி கற்க அனுமதிப்பது படிப்படியாக குறைந்து வருகின்றது. இதை பற்றிய பிரச்சனைக்கு குறைந்த பட்சம் இந்த கல்வி முறைக்குள் கூட தீர்வு காணப்பட வேண்டம். ஆனால் நாம் இதைப்பற்றி சிறிதும் கூட அக்கறை காட்டுவதில்லை. பல்கலைக்கழக தகுதியுடைவர்களில் கிடைக்கும் எண்ணிக்கை ஆழமாகவும் வெகமாகவும் குறைந்து வந்துள்ளது. பல்கலைக்கழகம் செல்லும் தகுதி உடையவர்களில் பல்கலைக்கழகம் செல்வது 1970 இல் 34 சதவீதமும், 1975 இல் 26 சதவீதமும், 1980 இல்12 சதவீதமும், 1991 இல் 15.5 சதவீதமும், 1993 இல் 14.6 சதவீதமாகவும், 1995 இல் 11.4 சதவீதமாகவும் குறைந்து வந்துள்ளது. பல்கலைக்கழகம் செல்ல தகுதி உடையவர்கள் கல்வி மறுக்கப்;பட்டு, கற்ற கல்விமுறைக்கு சம்பந்தம் இல்லாத சமூக உழைப்புடன் தொடர்பற்ற வகையில் சமுகத்தில் வீசப்படுகின்றார்கள். கல்வி அமைப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள், சமுகம் பற்றி அக்கறை கொள்ளாத வரை இந்தக் கல்வி சார்ந்த மலட்டுத் தனம், ஒட்டு மொத்த சமூகத்தையும் ஆழமான படுகுழிக்குள் தள்ளிச் செல்வது ஒரு விதியாக நீடிக்கின்றது. கல்வி கிடைத்தவர்கள் அவலம் மறுபுறத்தில் பெருகி வருகின்றது. 1960 தொடங்கிய வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் எமது மலட்டுக் கல்வி அமைப்பு, இன்று 16 முதல் 17 ஆயிரம் பட்டதாரிகளை வேலையற்றவராக்கி விடுகின்றது. மலட்டுக் கல்வியின் இறுதி முடிவு இவ்வளவு அசிங்கமாகி அவலமாகிவிடுகின்றது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு