வெள்ளி, 25 மார்ச், 2011

டென்மார்க்கின் கல்வி

டென்மார்க்கின் கல்வ
டென்மார்க், இயற்கை வளம் மிகக் குறைவாக உள்ள நாடு. அதனால் இங்கு நாம் நமது மனித வளத்தை அதிகமாகச் சார்ந்துள்ளோம். அதாவது மக்களுடைய கல்வி, பயிற்சி இவற்றின் மூலம் இந்த வளத்தை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. வேகமான தொழில் நுட்ப வளர்ச்சியும், சமீப நிகழ்வான உலகமயமாக்கலும் இதற்கு காரணங்கள். இல்லாவிடில் நாம் அனைத்து நாட்டுப் போட்டிகளில் பின்தங்க நேரிடும். டென்மார்க் பொது நல அரசாட்சியை பராமரித்தும் வளர்ப்பதும் மென்மேலும் கடினமாகிவிடும்.


கல்வி அல்லது பயிற்சி இல்லாத மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு
கல்வியும் பயிற்சியும் கூட, தனி நபருக்கு முக்கியமானவை. நவீன சமூகத்தில் தேர்ச்சியற்ற மக்களுக்கு அதிக வேலைகள் இருப்பதில்லை. சுமை அகற்றும் பணியாளர் தான் முதுகில் சுமப்பதற்கு மாறாக, பளு தூக்கும் சாதன இயக்கம் பற்றி அறிகிறார். சுத்தம் செய்யும் உதவியாளர் சுத்திகரிப்புப் பொருள்களைத் தக்கவாறு பயன்படுத்தும் வழிமுறைகளைப் படித்தறிந்து செய்வது அவர் கொண்டிருக்கும் கல்விப் பேற்றால்தான். ஒரு பெட்டிக் கடைக்காரரும், மதிப்புக் கூட்டு வரி, வரிக்கணக்கு இவற்றை மேற்கொள்ளும் அறிவுத் திறன் கொண்டுள்ளார்.
ஆகையால், கல்வி, திறன்களின் மேம்பாடு, தனிப்பட்ட வளர்ச்சி இவற்றுக்கு பல் வகையான வாய்ப்புகளை அனைத்து டென்மார்க் மக்களும் ஏற்க இயலும்.
அறிவுத்திறன் படைத்த மக்கள் ஜனநாயகத்திற்கு அவசியம்
மக்கள் ஆதரவுக் கல்விக்கான* நாட்டின் மரபு, நமது ஜனநாயகத்தைப் போன்று பழமையானது. கல்வி அறிவு படைத்த மக்கள், நன்கு செயல்படும் ஜனநாயகத்திற்கு ஒரு முக்கிய முன் தேவை என்ற நம்பிக்கை அதன் அடிப்படையாகும்.
ஆயுட்காலம் முழுவதும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதே நடைமுறையில் இதன் பொருள். உதாரணமாக நாட்டு மரபு உயர்நிலை பள்ளி* அல்லது மாலை நேர வகுப்புகளுக்கு* போவதன் மூலமும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் அல்லது தங்கள் வேலை இடங்களில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கட்டாயக் கல்வி
டென்மார்க்கில் ஒன்பது ஆண்டுகள் கட்டாயக் கல்வி அளிக்கப்படுகிறது. எனினும் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் அறிமுகப் பள்ளிக் காலத்தை* ஏற்கனவே ஆறு வயதில் பள்ளிக்கு முந்தைய வகுப்பிலேயே தொடங்கி விடுகின்றனர்.
பல மக்கள் கட்டாயக் கல்விக்கு பிந்தைய கல்வி அல்லது பயிற்சி பெறுகிறார்கள்
ஒன்பது ஆண்டுகள் கட்டாய பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, மேலும் கல்வி பயில்வது விருப்பத்தைப் பொறுத்தது. பல இளைஞர்களும், தங்கள் கல்வியை தொழில் அல்லது மேல்நிலை செகன்டரிப் பள்ளியில் தொடர்கிறார்கள் அல்லது உயர் ஆயத்தத் தேர்வு* என்று அழைக்கப்படும் தேர்வுக்கு படிக்கிறார்கள். பலரும், கட்டாயக் கல்விக்குப் பிந்தைய, ஒருவித குறுகிய கால, நடுக்கால, நெடுங்கால கல்வியை விரும்புகிறார்கள்.
பங்கேற்பும் ஒத்துழைப்பும்
சுதந்திரமும் பங்கேற்பும்
டென்மார்க் கல்வி முறை பெருமளவுக்கு சுதந்திரம் மற்றும் செயல் மிக பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. பள்ளியின் தொடக்க ஆண்டுகள் முதல் பல்கலைக் கழக நிலை வரை கற்போருக்கும், மாணவர்களுக்கும், பள்ளி மற்றும் கல்வி திட்டம் குறித்து சொந்தமாக முடிவெடுக்க உரிமை உண்டு. அவர்கள் இந்த உரிமையை பயன்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.
ஒத்துழைப்பும் சமுதாய உணர்வும்
பாடத்திட்டத்தின் முக்கியமான அம்சங்களில் அடிப்படை அறிவு பெறுதல், உரையாடல் திறன்கள், பிறருடன் ஒத்துழைத்தல் ஆகியவை அடங்கியிருக்கும். 1-ஆம் வகுப்பிலிருந்தே குழந்தைகள் குழுக்களாக வேலை செய்யவும், கொடுக்கப்பட்ட பயிற்சிகளை சேர்ந்து செய்யவும் கற்றுக் கொள்கிறார்கள்.
பெரிய வகுப்புகளில், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யலாம். குழுக்களாக தேர்வு எழுதலாம். பல்கலைக் கழகத் துறைகளின் உயர்கல்விக் கழகங்களில் மாணவர்கள் பல சமயம் படிப்புக் குழுக்கலாகப் பிரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தனியாகவோ வளாகத்திலோ சந்தித்து கொடுக்கப்பட்ட பயிற்சி பாடங்களில் ஒத்துழைப்பார்கள்.

பள்ளிக்கு முன், துவக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளி
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளியும் (Folkeskole) அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான அடிப்படையில் இலவசக் கல்வி அளிக்கும். இதில் ஓராண்டு பள்ளிக்கு முந்தைய கல்வியும் அதை அடுத்து ஒன்பது ஆண்டுகள் கட்டாய அடிப்படைக் கல்வி மற்றும் விரும்பினால் ஓராண்டு 10-வது வகுப்பையும் அடங்கும்.
பள்ளிக்கு-முந்தைய வகுப்பு
கட்டாயக் கல்வி 1 முதல் 9 வரை வகுப்புகள் அடங்கும். எனினும், பல குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு வயதில் பள்ளிக்கு முந்தைய வகுப்புக்குப் போகத் தொடங்கி விடுகிறார்கள்.
விளையாட்டுடன் கூடிய பள்ளி வாழ்க்கை
பள்ளிக்கு முந்தைய வகுப்பு, விளையாட்டையும் கல்வியையும் கலந்தளிக்கிறது. குழந்தைகள் அங்கு எழுத்துகள், பாடுதல், விளையாட்டு, ஆட்டம் – பாட்டம் போன்றவற்றைக் கற்கிறார்கள்.
பள்ளிக்கு முந்தைய வகுப்பின் நோக்கம் மாணவர்களை பள்ளியின் அன்றாட வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவதாகும். பள்ளிக்கு முந்தைய வகுப்பில் சந்திக்கும் சில குழந்தைகள் 1-வது வகுப்பில் சக மாணவர்களாகலாம்.
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள்
அனைத்து மாணவர்களுக்குமான ஒரே வகுப்பு
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளிகள் பொது பாடத் திட்டப் பள்ளிகள். அனைத்து மாணவகர்களும் ஒரே குழுவாகி அனைத்து வகுப்புகளிலும் கற்பிக்கப்படுகின்றார்கள் என்பதே இதன் பொருளாகும். அதாவது கல்வித்துறையில் வேறுபாடு என்பது இப்போது இல்லை.
பள்ளி அடிப்படை அறிவைத் தருகிறது
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள், கணிதம், மொழிகள், சமூகவியல், அறிவியல் இவற்றில் அடிப்படைகளைக் கற்பிக்கின்றன. டென்மார்க் பண்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகமானதாகச் செய்வதும், பிற பண்பாடுகளைப் புரிந்துகொள்ளச் செய்வதும் பள்ளியின் நோக்கங்கள்.
தொடக்க மற்றும் கீழ் நிலை செகன்டரி பள்ளி முறையின் மற்ற இலக்குகளில் குழந்தைகளின் தனி ஆளுமை வளர்ச்சியும் அவர்களது கற்பனை மற்றும் கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவதும் அடங்கும்.
மாணவர்கள் செயல் நிறைந்த பங்கேற்பு, கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை கற்கிறார்கள்
சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் வாழ்க்கை அமைய, குழந்தைகளை பள்ளிகள் ஆயத்தப்படுத்த வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கையும் கொடுப்பதன் மூலமும், உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி அவர்களுக்கு கற்பிப்பதன் மூலமும் இது எய்தப்படுகிறது.
மாணவர் மன்றங்கள் செவிமடுக்கப்படுகின்றன
மாணவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் மாணவர்களின் மன்றங்களை அமைக்கலாம். பள்ளியில் முக்கிய தீர்மானங்கள் செய்கையில் அவற்றின் ஆலோசனைக்கு இடமுண்டு.
8-வது வகுப்புக்கு முன்னர் மதிப்பெண்கள் கிடையாது
தொடக்கப் பள்ளியின் முதல் சில ஆண்டுகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்த ஆலோசனை மூலம் மாணவரின் படிப்புத் திறன் மதிப்பிடப்படுகிறது. தரம் பிரிப்பதோ, அல்லது சிறு தேர்வோ 8-வது வகுப்பை அடையும் வரை கிடையாது.


டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளி முறையின் நோக்கங்கள் (போக்கெஸ்கோலன் - Folkeskolen) டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளி முறை ''ஃபோக்கெஸ்கோலன் மீதான சட்டம்'' என்பதை அடிப்படையாகக் கொண்டது. டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகண்டரி கல்விக்கு, பின்வரும் குறிக்கோள்களை இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. ''(1) ' ஃபோக்கெஸ்கோல் ' – பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் அறிவு திறன்கள், வேலை முறைகள், தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கான வழிகள் முதலானவற்றை மாணவர்கள் பெறுவதை வளர்த்து, தனிப்பட்ட மாணவரின் அனைத்து ஆளுமை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். (2) மாணவர்கள் விழிப்புணர்வு, கற்பனை மற்றும் கற்கும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு அனுபவம், உழைப்பு, கிரகிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்புகளை தோற்றுவிக்க ஃபோக்கெஸ்கோல் முயல வேண்டும். இதனால், மாணவர்கள் தம் வழிகளில் தன்னம்பிக்கை பெறுவர். தவிரவும், சுதந்திரமாக முடிவுகள் எடுக்கவும் சொந்த விஷயங்களில் நடவடிக்கை கொள்ளவும் திடம் பெறுவர். (3) ஃபோகெஸ்கோல் டென்மார்க் பணிபாட்டை மாணவர்களுக்கு பழக்கப்படுத்தும், புரிந்துகொள்ள உதவும்; மனிதன் இயற்கையுடன் உறவாடுவதைப் புரிந்துகொள்ள உதவும். சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில், செயல் நிறைந்த பங்கேற்பு, கூட்டுப் பொறுப்பு, உரிமைகள் மற்றும் கடமைகள் இவற்றுக்கு மாணவர்களை பள்ளிகள் ஆயத்தப்படுத்தும். எனவே, அறிவு சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் இவ்வடிப்படைகளைக் கொண்டு, பள்ளியின் கற்பித்தலும் அன்றாட வாழ்வும் அமைக்கப்பட வேண்டும்."
தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி தனியார் சுயாட்சி பள்ளிகள்
பொதுமக்கள் தொடக்க மற்றும் செகன்டரிப் பள்ளிகள் அளிக்கும் கல்விக்குப் பதிலாக வேறு விதமான பள்ளிப் படிப்பை பெற்றோர் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, தனியார் சுயாட்சிப் பள்ளி ஒன்றில் தங்கள் குழந்தையைச் சேர்க்கலாம். இங்கே பள்ளி நடத்துவதற்கான செலவின் ஒரு பகுதிக்கென பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள்.
மற்ற கருத்துகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில்
சில பள்ளிகள் நகராட்சிகளின் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகளிலிருந்து வேறுபட்ட கருத்துகள் மற்றும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். உதாரணமாக, தத்துவங்கள் அல்லது மத வழிகள் பற்றி குறிப்பிட்ட விஷயங்களைக் கற்பித்தல், பொது மக்கள் பள்ளி முறையில் இடம் பெறாத விஷயங்களை, சில பள்ளிகள் கற்றுக் கொடுக்கின்றன.
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள் போன்றே கல்வி நிலை இருக்க வேண்டும்
எனினும் டென்மார்க் சட்டப்படி, தனியார் சுயாட்சிப் பள்ளிகளில் தொடக்க மற்றும் செகன்டரி நிலையில் தரப்படும் கல்வி, பொது மக்கள் பள்ளி முறையின் நிலைக்கு ஒத்திருக்க வேண்டும். உதாரணமாக அவையும் மாணவர்களுக்கு பொது மக்கள் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள் வழங்கும் டேனிஷ் மொழித் திறன், கல்வி அறிவு, சமூகப் புரிந்துணர்வு போன்றே வழங்க வேண்டும்.
கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிகள்
மாணவர்கள் பள்ளியில் தங்குகிறார்கள்
ஒன்று அல்லது இரண்டாண்டுகளுக்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிக்கு, 8-வது, 9-வது அல்லது 10-வது வகுப்பிற்கு அனுப்பலாம். கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிகள், ஒருவித தங்கும் வசதி/ உணவு வசதிப் பள்ளிகள். அங்கு படிப்புக் காலம் முழுவதும் தங்கிப் படிக்க வேண்டும். அங்கு சுத்தம் செய்தல், சமையல் போன்ற அன்றாடப் பணிகளுக்கு உதவியை, மாணவர்கள் முறை வைத்துக் கொண்டு செய்வார்கள்.
சாதாரணமாக, இளம் வயதினர் கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளியை விரும்புவார்கள். ஏனெனில், பொதுப் பள்ளிக்கு ஒரு மாற்றைத் தேடுவார்கள் அல்லது தங்கள் குடும்பத்திலிருந்து சில காலம் தள்ளியிருக்க விரும்புவார்கள்.
தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம்
பொதுக் கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி, மனப்பக்குவம் ஆகியவற்றில் பாடத் திட்டம் கவனம் செலுத்துகிறது. ஆகையால், பல கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிகள் நாடகம், இசை, விளையாட்டு, புகைப்படம், வேளாண்மை, கைவினைத் தொழில்கள் போன்ற படைப்பு மற்றும் நடைமுறை விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

பள்ளியில் சேர்தல்
பெற்றோர் பள்ளிக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்
பெயர் பதிவான மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகள் தானாகவே சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். குழந்தை பள்ளிக்கு முந்தைய வகுப்பில் சேர்வதற்கு வெகுநாள் முன்னரே பெற்றோர்கள் பள்ளியைப் பார்க்கவும் ஆசிரியருடன் பேசவும் அழைக்கப்படுகிறார்கள்.
பள்ளி தொடங்கும் முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
பள்ளி தொடங்குவதற்கு முன் நடைமுறைத் தகவல்களுடன் கடிதம் ஒன்று பெற்றோர்களுக்கு வரும். உதாரணமாக பை, பென்சில் உறை, பகலுணவு முதலானவற்றை குழந்தை முதல் நாள் கொண்டு வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருக்கும். சாதாரணமாக மாணவர்கள் அன்றாட பகலுணவு கொண்டு வருவது வழக்கம். ஒரு சில பள்ளிகள் பகலுணவுத் திட்டம் ஒன்றை நடத்துகின்றன. வேறு பள்ளிகள் உணவகம் நடத்துகின்றன. அங்கு மாணவர்கள் குறைந்த விலையில் உணவு வாங்கலாம்.
தனியார் பள்ளிகளை பெற்றோர்கள் தாங்களேதான் தொடர்பு கொள்ள வேண்டும்
தனியார் சுயாட்சிப் பள்ளி ஒன்றில் தங்கள் குழந்தையைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் தாங்களேதான் பள்ளியுடன் தொடர்பு கொண்டு, தங்கள் குழந்தையின் பெயரை காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் நீண்ட காத்திருப்போர் பட்டியல் இருக்கும். ஆகையால், உங்கள் உழந்தை பள்ளியில் சேருவதற்கு பல ஆண்டுகள் முன்னரே குழந்தையின் பெயரை பதிவு செய்ய வேண்டியது அவசியமாயிருக்கும். குழந்தை பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதா என்பதை, பள்ளி தொடங்குவதற்கு வெகு காலம் முன்னதாகவே பள்ளிகள் பெற்றோருக்குத் தெரிவிக்கும்.
பள்ளிக் கல்வியின் குறிக்கோள்களும் பொருளடக்கமும்
கற்பிக்க வேண்டிய பாடங்களுக்கு சில குறைந்த பட்சத் தேவைகளை டென்மார்க் சட்டம் நிர்ணயித்துள்ளது. இந்தத் தேவைகள் தவிர மற்றபடி ஒவ்வொரு பள்ளியும் அதன் கல்வித் திட்டத்தை எப்படி வகுத்துக் கொள்வது என்பதை விருப்பப்படி தீர்மானிக்கலாம்.
சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் ஒரே பாடங்கள்தாம் கற்றுக் கொடுக்கப்படுகின்றன
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகளில் சிறுமிகள் சிறுவர்களுக்கு ஒரே பாடங்கள் தான் கற்பிக்கப்படுகின்றன. இது டேனிஷ், ஆங்கிலம், சமூகவியல், கணிதம் போன்ற கல்விப் பாடங்களும், படைப்பாற்றல் சம்பந்தப்பட்டவைகளுக்கும் பொருந்தும். இருபாலாரும் தையல், சமையல் மற்றும் கருவிகள் பயன்பாடு அனைத்தும் கற்கிறார்கள். மிகக் கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்ந்து நீச்சல் மற்றும் விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் சிறுவர், சிறுமியருக்குத் தனித்தனி குளியல் வசதிகள் இருக்கும்.
கிறித்துவமும் பிற மதங்களும்
சிறித்துவப் படிப்புகள்/மதக் கல்வி என்பது பொதுவாக மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பற்றி அமையும். அவற்றை எடுத்துரைப்பதும் விவாதிப்பதும், கிறித்துவ மற்றும் பிற மத வழிமுறைகள் தத்துவங்கள் இவற்றின் பின்னணியில் இருக்கும்.
கல்வி மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. கல்வியின் ஒரே நோக்கம் தகவல் தருவதுதான். இதனால் இக்கல்வி, பல நவீன சமூகங்களின் வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த பின்னணிகளை மாணவர்கள் புரிந்து கொள்ளுவதை மேம்படுத்த உதவுகிறது.
மதக் கல்வி வகுப்புகளிலிருந்து குழந்தைக்கு விலக்களிக்க பெற்றோர்கள் கோரலாம். குழந்தைகளுக்குத் தாங்களே கற்றுக் கொடுக்க விரும்புவதாக ஒரு கடிதம் கொடுத்து விலக்கு வாங்கிக் கொள்ளலாம்.
பாடங்களை சமாளிப்பதில் சிரமப்படும் குழந்தைகள்
வகுப்பில் ஏனைய மாணவர்களுக்கு சமமாக பாடங்களைக் கற்பதில் பெரும் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு, சிறப்பு கவனம் கிடைக்கும். உதாரணமாக, இது டிஸ்லெக்சியா (எழுதும் மற்றும் படிக்கும் திறத்தில் குறைபாடு) குழந்தைகளுக்குப் பொருந்தும்.

பாலியல் கல்வி: உடலும் மன உணர்ச்சிகளும்
பள்ளி பாலியல் கல்வி பாடங்களும் கற்பிக்கிறது. உடல் எப்படி வேலை செய்கிறது என்று மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. காதல் பற்றியும், கலவி, கருத்தரித்தல் மற்றும் கருத்தடை பற்றியும் விவரிக்கப்படுகிறது.
பாலியல் கல்வி பாடத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் அல்ல. பாடத்தின்போது இயல்பாக எழும் சந்தர்ப்பங்களில் ஆசிரியர் இத்தலைப்பின் விஷயங்களைச் சுட்டிக் காட்டுவார்.
இரண்டாம் மொழியாக டேனிஷ் மற்றும் தாய்மொழிப் பயிற்சி
இருமொழி பேசுபவர்
டேனிஷ் மொழி தவிர தாய்மொழி பேசும் குழந்தைகள் இரு மொழி பேசும் குழந்தைகள் ஆவர். இவர்கள் சுற்றியுள்ள மக்களுடன் தொடர்பு கொண்ட பிறகு தான் டேனிஷ் மொழியை கற்கத் தொடங்குகின்றார்கள் – உதாரணமாக பள்ளியில்.
பள்ளிக்கு முந்தைய வகுப்புக் குழந்தைகளுக்கான மொழி உணர்வைத் தூண்டுதல்
இரு மொழி பேசும் பள்ளிக்கு முந்தைய வகுப்புக் குழந்தைகளுக்குத் தேவையான உதவியை நகராட்சி அளித்தாக வேண்டும். அவர்கள் மேலும் விரைவாக டேனிஷ் மொழியைக் கற்பதற்கு அவர்களுடைய மொழி ஆற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் மொழி ஆற்றலை தூண்டக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் அந்த உதவியில் அடங்கியிருக்க வேண்டும்.
இரண்டாம் மொழியாக டேனிஷ் பாடங்கள்
இருமொழி மாணவர்கள் நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகளில் சேரும்போது, மாணவர்களின் தேவைகளை தலைமை ஆசிரியர் மதிப்பீடு செய்வார். குழந்தையை, இரண்டாம் மொழியாக டேனிஷ் மொழியைக் கற்க சிறப்பு வகுப்பிற்கு அனுப்ப வேண்டுமா என்பதை அவர் தீர்மானிப்பார். இரண்டாம் மொழியாக இருக்கையில், டேனிஷ் மொழியிலான அறிவைத் திருத்திக் கொள்ள மாணவர்களுக்குப் பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவை பள்ளிக்கு முந்தைய வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கிடைக்கும்.
தாய் மொழிப் பயிற்சி
ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகள், ஈ.ஈ.ஏ. நாடுகள் – நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லீச்டென்ஸ்டைன். ஃபாரோ தீவுகள், கிரீன்லாந்து இவற்றிலிருந்து வந்த குழந்தைகளுக்கு தாய் மொழியை நகராட்சிகள் கற்றுத் தர வகை செய்ய வேண்டும். எனினும் பாடங்கள், தனிப்பட்ட பள்ளி அல்லது நகராட்சி பள்ளியில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தான் கற்பிக்கப்படும். உதாரணமாக தகுதியான மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் சேர வேண்டும்.
பிற நாடுகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் தாய்மொழி பயிற்சியை நகராட்சிகள் வழங்க முன் வரலாம். இத்தகைய பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கவும் அவற்றுக்கு உரிமை உண்டு.
பள்ளி நேரத்திற்குப் பிந்தைய பொழுது போக்கு மையங்களும் பள்ளி நேரத்திற்குப் பிந்தைய கவனமும்
4-வது வகுப்பு வரையிலும் பள்ளி நேரத்திற்குப் பிறகு பகல் வேளை கவனிப்பு
பள்ளி நேரத்திற்குப் பிறகு பொழுது போக்கு மையம் அல்லது கவன ஏற்பாட்டிற்கோ (SFO) குழந்தைகள் செல்லலாம். 4-வது வகுப்பு தொடங்கும் வரை அவர்கள் அங்கு போகலாம். அங்கு நண்பர்களுடன் விளையாடலாம். வீட்டுப் பாடங்களைச் செய்யலாம். அல்லது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். பள்ளி நேரத்திற்குப் பிறகு பொழுதுபோக்கு மையம் மாலை 5 மணி 6 மணி அளவில் மூடப்படும்.
இந்த வசதிகளுக்கான செலவில் ஒரு பகுதியை இலவச அனுமதி இல்லாத பெற்றோர்கள் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகை பெற்றோர்களின் குடும்ப வருமானத்தைப் பொறுத்திருக்கும்.
வயதான குழந்தைகளுக்கு கிளப் வசதிகள்
சில நகராட்சிகள் இளைஞர்களுக்கு கிளப் வசதிகள் அளிக்கின்றன. பள்ளிக்கு பிறகான பொழுதுபோக்கு மையம் அதிக வயதினருக்குப் பொருந்தாது என்பதால் இளைஞர் கிளப் ஏற்பாடு உள்ளது.
பள்ளி முகாம்
வகுப்பின் சமூக வாழ்க்கைக்கு முக்கியமானது
பள்ளி முகாம் பாடதிட்டத்தின் ஒரு பகுதி, சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவதிலும் மாணவர்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதிலும் அது முக்கியமான பங்காற்றுகிறது. பள்ளி முகாம், பள்ளி ஆண்டில் மிக முக்கியமானதொரு நிகழ்ச்சியென பல மாணவர்கள் கருதுகிறார்கள்.
பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டும் விளக்கங்களை எழுதியும் மாணவர்கள் பள்ளி முகாமுக்கு ஆயத்தம் செய்து கொள்கிறார்கள்.
முகாமில் மாணவர்கள் தங்கள் உணவைத் தாங்களே சமைத்துக் கொள்கிறார்கள். மீன் பிடிக்கச் செல்கிறார்கள், அல்லது மிதி வண்டி ஓட்டுகிறார்கள். தீ மூட்டி சுற்றி அமர்ந்து கேளிக்கையில் ஈடுபடுகிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது கடலில் நீந்தப் போகிறார்கள். சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் தனித்தனி வசதிகள் இருக்கின்றன.


பாதுகாப்பான சூழலில் பள்ளி முகாம் பாடத் திட்டத்தின் பகுதியான பள்ளி முகாம் நேர்முக மற்றும் ஆக்கபூர்வமான அனுபவத்தை மாணவர்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் ஒரு பாதுகாப்பான சூழலில் மாணவர்கள் பயில்கிறார்கள். தங்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் அனுப்பலாம் என்று பெற்றோர் உணரும் வகையில் உணவு, தங்குமிடம் போன்ற நடைமுறை விஷயங்கள் அவர்களுடன் முன் கூட்டியே விவாதிக்கப்படுகின்றன.
பள்ளி முகாமுக்கு பணம் சேமிக்க மாணவர்கள் உதவுகிறார்கள்
குழந்தைகள் எத்தனை தடவை மற்றும் எவ்வளவு காலத்திற்கு முகாமுக்கு போகலாம் என்பது பள்ளியைப் பொறுத்தது. குறைந்த பட்சம் இரண்டு இரவுகள் தங்கும் வண்ணம், டென்மார்க்கில் எங்காவதோ, அல்லது வெளிநாட்டிலும் ஏற்பாடு அமையும்.
வெளிநாட்டில் பள்ளி முகாமை நடத்துவதற்கு நிதி திரட்டி பள்ளிக்கு உதவ, உயர் வகுப்பு மாணவர்கள் ஓய்வு நேரத்தில் வேலை செய்வதும் நிறையவே உண்டு.
பெற்றோர் பங்கேற்பு
டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளி (Folkeskole-loven) சட்டத்தின்படி, பள்ளித் தொடர்பான விஷயங்களில் பெற்றோருக்கு செல்வாக்கு உண்டு. பள்ளி நிர்வாகக் குழு இந்த உரிமையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நிர்வாகக் குழுவில் பள்ளிப் பிரதிநிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.


பள்ளி நிகழ்ச்சிகளில் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள் பள்ளி வாழ்க்கையில் அக்கறை செலுத்தவும், தேவையான மாற்றத்தைத் தோற்றுவிக்கவும், பெற்றோருக்கு பள்ளிகள் பல வாய்ப்புகள் அளிக்கின்றன. பல பெற்றோர்களும், பெற்றோர் கூட்டங்கள், விழாக்கள் மற்றும் இதர பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். பள்ளியில் பாடங்களும் அன்றாட வாழ்க்கையும் எப்படியிருக்கும் என்பதை உணரவும், குழந்தை என்ன செய்கிறது என்பதை அறியவும் இது ஒரு நல்ல வழி. அதே சமயம் மற்ற பெற்றோர்களை சந்திக்கவும் வாய்ப்பளிக்கும்.
மேல்நிலை செகன்டரிப் பள்ளி
தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி கல்வி முறையின் 9-வது அல்லது 10-வது வகுப்பு நிலையை முடித்த மாணவர்களுக்கு, பல கல்வி திட்டங்களையும் பயிற்சி முறைகளையும் டென்மார்க் கல்வி முறை கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் பலவும் இளம் வயதினருக்கு மட்டுமே. மற்ற திட்டங்கள் வயது அதிகமுள்ளவர்களுக்கும் இடமளிக்கும்.
மேல்நிலை செகன்டரி கல்வி
பொது மற்றும் தொழில் மேல்நிலை செகன்டரி கல்வி வகுப்புகள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கொண்டவை. மேல்நிலை செகன்டரி பள்ளித் தேர்வில் தேர்வது, செகன்டரி கல்விக்குப் பிந்தைய படிப்பில் சேரத் தகுதியளிக்கிறது. டென்மார்க் மேல்நிலை செகன்டரிக் கல்வியில் அடங்கியவை. இவை:
• மேல்நிலை செகன்டரி பள்ளிகள் (Gymnasium) – இதற்கு மூன்று ஆண்டுகளும், வயது வந்தோர் மேல்நிலை செகன்டரி நிலை (Studenterkursus) படிப்புக்கு மேலும் 2 அல்லது 3 ஆண்டுகளும் ஆகும். இவ்விரு படிப்பிற்கு பிறகு மாணவர்கள் மேல் நிலை செகன்டரி பள்ளி தேர்வை (Studentereksamen) எழுதுகிறார்கள்.
• மேல்நிலைக் கல்விக்கு (HF) ஆயத்தம் செய்யும் 2 ஆண்டு கல்விப் படிப்பு
• மேல்நிலை செகன்டரி மட்டத்தில் 2 ஆண்டு அல்லது 3 ஆண்டு தொழில் பயிற்சி திட்டங்கள். இந்தத் திட்டங்களில் அடங்கியவை இவை. உயர் தொழில் நுட்ப இயல் தேர்வு (HTX) மற்றும் உயர் வணிக இயல் தேர்வு (HTX) திட்டங்கள். அவை மாணவர்களை தொழிற்துறைக்கும் மேல்படிப்பு மற்றும் உயர் கல்விக்கும் தகுதியாக்குகின்றன.

தொழிற்கல்வி, கட்டாயக் கல்விக்குப் பிந்தைய கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள்
தொடக்க மற்றும் கீழ்நிலை கல்வியில் 9-வது அல்லது 10-வது வகுப்பிற்குப் பிறகு இறுதித் தேர்வில், தேரிய இளம் மற்றும் அதிக வயது மக்கள், பல வேறு பொது மற்றும் தொழிற்கல்வி, மேல்நிலை செகன்டரிக் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
3 ஆண்டு 4 ஆண்டு தொழிற்கல்வி, பயிற்சித் திட்டங்கள்
3 ஆண்டு 4 ஆண்டு தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் தெரிவு செய்ய, சுமார் 100 வெவ்வேறான வகைகள் இருக்கின்றன. அவற்றில் பணியிடத்திற்குரிய விளக்கம் மற்றும் செயல்முறை பயிற்சி அடங்கும். இதனால் வணிகம், நிர்வாகம், நிதி, கட்டுமானத் தொழில், இரும்பு மற்றும் உலோகத் தொழில்கள், வரைகலை, போக்குவரத்து, வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் ஆகிய துறைகளில் பல வேலைகளில் சேரத் தகுதி கிடைக்கிறது.
2 ஆண்டு சமூகவியல் மற்றும் சுகாதார கல்வித் திட்டங்கள்
மற்றொரு சாத்தியக் கூறு 2 ஆண்டு சமூகவியல் மற்றும் சுகாதார பயிற்சித் திட்டம். இந்தத் திட்டம் சமூக வியல் மற்றும் சுகாதார உதவியாளர் அல்லது பணியாளராக வேலை பெற மாணவர்களை தகுதியாக்குகிறது.
உற்பத்தி பள்ளிகள்
டென்மார்க்கெங்கும் காணப்படும் 100 உற்பத்தி பள்ளிகளில் ஒன்றில் 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் சேரலாம். இந்த வகை பள்ளி பாட விளக்கத்தையும், செயல்முறை பயிற்சியையும் இணைந்து வழங்குகிறது. அங்கு பல்வேறு பொருட்களின் உற்பத்தியில் மாணவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
செயல்முறை பயிற்சி
பயிற்சித் தகுதி இடத்தை மாணவர்கள் தாங்களே தேடிக் கொள்ள வேண்டும்
கட்டாயக் கல்விக்குப் பிந்தைய கல்வி திட்டங்கள் பலவும் பணியிடம் பற்றிய பாட விளக்கங்களையும் செயல்முறை பயிற்சியையும் ஒரு பயிற்சித் தகுதியை இணைந்து வழங்குகின்றன.
நீங்களேதான் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை பயிற்சியிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அது சிரமமாக இருக்கலாம். பயிற்சித் தகுதி ஒன்றைப் பெறுவதற்கு தங்கள் முயற்சிகளில் பல இளம் வயதினர் மீண்டும் மீண்டும் ஏமாற்றமடைவதும் உண்டு.
பள்ளியில் செயல்முறை பயிற்சி
பள்ளியின் ஆண்டின் முதல் பகுதிக்குப் பிறகு உங்களுக்கு பயிற்சி தகுதிக்கான இடத்தைப் பெற முடியவில்லையானால், உங்கள் செயல்முறை பயிற்சியை பள்ளியிலேயே செய்யலாம். இதனால் உங்களுக்கு பள்ளியில் தொழிற்சாலைப் பயிற்சியும், உண்மையான ஒரு பணியிடத்திலேயே பயிற்சித் தகுதி பயிற்சியும் இணைந்து கிடைக்கும்.
இப்போதும் நீங்கள் பயிற்சித் தகுதி இடத்தை தேடியாக வேண்டும். ஆனால் பாதி நேரத்திற்கு மட்டுமே.
பயிலுநர் ஊதியம்
நீங்கள் செயல்முறைப் பயிற்சியில் இருக்கும் வரை உங்களுக்கு பயிலுநர் ஊதியம் ஒன்று கிடைக்கும். அது அரசு கல்வி உதவித் தொகையை விட அதிகம். ஆனால் முறையான ஊதியங்களை விடக் குறைவு.


மாணவர்-ஆலோசகரை தொடர்பு கொள்ளவும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும், மாணவர்க்கு ஆலோசகர் ஒருவர் உண்டு. அவர் சிறப்பாகப் பொருந்தும் கல்வித் திட்ட வகையை தெரிவு செய்வதில் மாணவர்களுக்கு உதவுகிறார்.
செகன்டரிக்குப் பிந்தைய கல்வி
நீங்கள் மேல்நிலை செகன்டரி கல்வித் திட்டத்தை முடித்திருந்தால், செகன்டரிக்குப் பிந்தைய கல்விக்குப் போகலாம். இதில் மூன்று வகையில் உள்ளன.
• 2 ஆண்டு குறுகிய கால செகன்டரிக்குப் பிந்தைய கல்வித் திட்டம். இந்த படிப்புகள் மாணவர்களை, உதாரணாக ஒரு சோதனைக்கூட தொழில் நுட்பமறிந்தோராக, ஒரு சந்தை பொருளாதார நிபுணராக, ஒரு மின்சாரத் தொழிலாளராக அல்லது ஒரு பொறியியல் நுட்பமறிந்தவராக ஆவதற்கு தகுதியுள்ளவர்களாக்குகின்றன.
• 3 ஆண்டு அல்லது 4 ஆண்டு மத்திய காலத் திட்டங்கள். இவை ஒரு வேலைக்கு தகுதியாக்குகின்றன. உதாரணமாக, ஒரு ஆசிரியர், பள்ளிக்கு முந்தைய கல்வி ஆசிரியர், ஒரு மருத்துவப் பணியாளர் அல்லது சமூகப் பணியாளர்.
• நீண்ட காலத் திட்டங்கள் – இவை பல்கலைக் கழகங்கள் அல்லது நிகரான தகுதியுடைய கழகங்களில் கிடைப்பன. ஒரு மருத்துவர், பொறியியல் முதுநிலைப் பட்டம் அல்லது மேல்நிலை செகன்டரி நிலை ஆசிரியர் போன்ற தகுதிகளுக்கு அவை வகை செய்கின்றன. ஒரு பல்கலைக் கழகப் படிப்பிற்கு பிற்சேர்க்கையாக முனைவர் படிப்பும் (Ph.D) மேற்கொள்ளலாம். இதற்கு சுமார் 3 ஆண்டுகள் ஆகலாம். அந்த கால கட்டத்தில் நீங்கள் சம்பளம் பெறும் ஆராய்ச்சியாளராகவும் கற்பிப்பவராகவும் வேலை செய்வீர்கள்.
சேர்வதற்கான தகுதிகள்
மாணவர் எண்ணிக்கை அளவு மற்றும் சேர்வதற்கான தகுதிகள்
ஒவ்வோர் ஆண்டும், டென்மார்க் கல்வி அமைச்சகம், மாணவர் கல்வித் திட்டத்திற்கான எண்ணிக்கையை நிர்ணயம் செய்கிறது. மாணவர் எண்ணிக்கை நிலை, தனிப்பட்ட திட்டங்களுக்கு மாணவர் சேர்க்கையின் தேவைகளை தீர்மானிக்கிறது.
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், முந்தைய நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டும் மாணவர்கள் சேர்க்கப்படலாம்.
நுழைவுத் தேர்வு
இந்த கல்விகள் சிலவற்றில் சேர்வது நுழைவுத் தேர்வினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது நடிப்பு, திரைப்பட இயக்கம், இதழியல் மற்றும் வடிவமைப்பு போன்ற கலை மற்றும் படைப்பாற்றல் துறைகளுக்கு வழக்கமாகப் பொருந்துகிறது.
கல்வித் திட்டத்திற்கு மற்றும் சக மாணவர்களுக்கு உங்கள் அறிமுகம் பல பல்கலைக் கழகங்களும் மற்ற உயர் கல்விக் கழகங்களும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு அறிமுகத் திட்டத்தை ஏற்பாடு செய்கின்றன. புதிய மாணவர்கள் கல்வித் திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், எழுத்துரை சமர்ப்பித்தல், விவாதங்கள், மற்றும் விருந்துகள் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். பல சமயங்களில், இந்தத் திட்டத்தில் ஓர் இடத்திற்கு சில நாள்கள் சுற்றுலா செல்வதும் அடங்கும்.
மன்றங்களும் சமூக சங்கங்களும்
மாணவர்கள் பாட அடக்கத்தை உருவாக்க உதவலாம்
அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் கல்வி மன்றங்கள் அதாவது பாட விஷயம் தொடர்பான மன்றங்களை, மாணவர் கல்விப் பிரிவு மன்றங்களை அல்லது மாணவர்களின் மன்றங்களை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த மன்றங்கல் பொதுவாக மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதுடன் கல்வியின் அடக்கப் பொருள்கள் மற்றும் தரம் தொடர்பாக கோரிக்கைகளை சமர்ப்பிக்கும். மாணவர் கல்விப் பிரிவிற்கு போட்டியிடுவதன் மூலம் எவரும் கல்வியின் அடக்கத்தை உருவாக்கலாம்.
சங்கங்கள்
பல கல்வி நிறுவனங்களில் பல சமூக நல சங்கங்களும் இருக்கின்றன. அவை பல்வேறு மாணவர் பிரிவின் நலன்களை கவனித்துக் கொள்கின்றன.
டென்மார்க்கின் கல்வி முறை




செயல்பாடுகள் உயர்நிலைக் கல்வி கழகங்களின் பல மன்றங்களும், சங்கங்களும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளுக்கு வகை செய்வதுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களும் விளையாட்டுகள் மற்றும் விழாக்களுக்கென சொந்தமான சிறப்பு படிப்புச் சூழலையும் கொண்டுள்ளன. கல்வி நிறுவனத்தின் வாழ்க்கை வகைக்குப் பங்காற்றுவது மாணவர்களையே பெரிதும் பொறுத்திருக்கிறது.
அரசு தரும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் கடனுதவித் திட்டம் ( SU)
வாழ்க்கைச் செலவுகளுக்கு நிதி உதவி
பல கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் இலவசம். எனினும் மாணவர் என்ற முறையில் உங்களுக்கு வாழ்க்கைச் செலவுகள், புத்தகங்கள் முதலானவற்றுக்குப் பணம் தேவைப்படும். ஆகையால் டென்மார்க் அரசு, மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவிக்கு தகுதி உடைய ஒரு அங்கீகரித்த படிப்புத் திட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு அவ்வுதவியை வழங்குகிறது.
கல்வி உதவித் தொகைகள், கடனுதவிகள் மற்றும் பள்ளி படிப்புக்குப் பின் வேலைகள்
நிலையான மாதத் தொகை வடிவில் அரசு வழங்கும் உதவிப் பணத்தை நீங்கள் பெறலாம். இது சாதாரணமாகத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியிருக்காது. நீங்கள் படிப்பு முடிந்த பிறகு வட்டியுடன் திருப்பித் தர வேண்டிய கடன் உதவியும் உங்களுக்கு வழங்கப்படலாம். மாணவர் கடனுக்கு சிறப்பான குறைந்த வட்டி விகிதம் இருக்கும்.
பல மாணவர்கள் கடன் பெறாமல் இருக்க முடிவு செய்வர். அதற்குப் பதிலாக ஓய்வு நேரத்தில் வேலை ஒன்றை செய்கிறார்கள். படிப்பு முடிந்த பின் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைத் தவிர்ப்பதற்கு அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

வயது வந்தோர் கல்வி
பொதுவான வயது வந்தோர் தொழிற்கல்வி
பள்ளிப் படிப்பிற்கு கூடுதலாக பயிற்சி பெற வாய்ப்பு
பொதுவான வயது வந்தோர் தொழிற்பயிற்சி 18 வயதிற்கு மேற்பட்ட எல்லாக் குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டம் எந்தக் குறிப்பிட்ட தொழில் அல்லது கல்வித் தகுதியையும் நோக்கமாகக் கொண்டதல்ல. ஆனால், இது பொது விஷயங்கள் குறித்து நமது பள்ளிப் படிப்பை மேம்படுத்திக் கொள்ளவும், கூடுதல் பயிற்சி பெறவும் வாய்ப்பளிக்கிறது.
கணிதம், ஆங்கிலம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம், மனவியல், இரண்டாம் மொழியாக டேனிஷ், கணிணி அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகியவை கற்பிக்கப்படும் பாடங்களாகும்.
ஒரு தேர்வுடன் நிறைவடையும்
9-வது அல்லது 10-வது வகுப்பு அல்லது உயர் ஆயத்தத் தேர்விற்கு (HF) பிறகு இறுதித் தேர்வு ஒன்றுக்கு சமமான தேர்வுடன் திட்டத்தை நிறைவு செய்யலாம்.
வயது வந்தோர் தொழிற்பயிற்சி மையம் (VUC) ஒன்றில் வகுப்பு நடக்கிறது பகல் மற்றும் மாலை இரு வேளை வகுப்புகளும் உண்டு. புதிய வகுப்புகள் முறையான இடைவெளிகளில் ஆண்டுதோறும் நடக்கும். ஆகையால், உங்களுக்கு சரியாகப் பொருந்தும் சமயத்தில் நீங்கள் கற்கலாம்.
வெளிநாட்டு கல்விப் பட்டங்களின் அங்கீகரிப்பு
உங்கள் கல்வித் தகுதிகளை டென்மார்க்கிற்கு மாற்ற முடியுமா?
வெளிநாட்டில் நீங்கள் உங்கள் கல்விப் பட்டம் பெற்றிருந்தால், உங்கள் கல்விப் பட்டம் டென்மார்க்கில் அங்கீகரிக்கப்படுகிறதா அல்லது இங்கே உங்கள் கல்வித் தகுதியை பயன்படுத்த உங்களுக்கு கூடுதலாக பயிற்சி தேவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
ஒரு நகராட்சி அறிமுகத் திட்டம் அல்லது வேறு ஏதாவது செயல்பாட்டுத் திட்டம் ஒன்றில் நீங்களஅ பங்கேற்பதாக இருந்தால் உங்கள் விவகாரங்களைக் கவனிக்கும் பணியாளரைத் தொடர்பு கொண்டு அறிவுரை பெறலாம்.
வெளிநாட்டுக் கல்வித் திட்ட கணிப்பு பற்றிய உதவி
வெளிநாட்டில் நீங்கள் பெற்ற கல்விப் பட்டங்கள் டென்மார்க் கல்வி மற்றும் தொழிலாளர் சந்தைத் தரங்களுடன் எவ்வாறு ஒப்பிடக்கூடியவை என்பதை நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அமைப்பு டென்மார்க் வெளிநாட்டுக் கல்வித் தகுதி மதிப்பீட்டு மையம் (CVUU).
வெளிநாட்டு வயது வந்தோர்க்கான டேனிஷ் மொழி வகுப்புகள்
வெளிநாட்டைச் சேர்ந்த வயது வந்தோர்க்கு டேனிஷ் மொழிப் பாடங்கள்
டென்மார்க்கில் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்ட 18 வயதிற்குப்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் டேனிஷ் மொழியிலும், சமூக விவகாரங்களிலும் இலவசமாக பாடங்கள் கற்க உரிமை உண்டு.
பங்கு பெறுவோர் இறுதித் தேர்வு ஒன்றை எழுதலாம். அதை, உதாரணமாக கல்வித் திட்டம் ஒன்றில் சேருவதற்கு பயன்படுத்தலாம். நிரந்தர இருப்பிட அனுமதி அல்லது டேனிஷ் குடிமை பெற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், சிறப்பு விதிவிலக்குகள் இல்லாதவரை நீங்கள் எப்படியும் இந்தத் தேர்வில் தேறியே ஆக வேண்டும்.
புதிதாக வந்துள்ள வெளிநாட்டவர்களுக்கான அறிமுகத் திட்டத்தில் நீங்கள் பங்கு பெறுவதாக இருந்தால், நீங்கள் நகராட்சிப் பகுதியில் வசிப்பவரான பிறகு ஒரு மாதத்திற்கு மேற்படாமல் இந்த பயிற்சியை நகராட்சி உங்களுக்கு அளிக்க முன்வர வேண்டும். திட்டத்தை பல்வேறு வழிகளில் செயல்படுத்தலாம். உதாரணமாக பங்கேற்பவர்களுக்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கலாம் அல்லது பெரிய அல்லது சிறிய குழுக்களாக நகராட்சி மொழிப் பயிற்சி மையம் தொழிற்கல்விக்கூடம் அல்லது வேலை சூழலில் கற்பிக்கலாம். இதோடு, தொலைக் கல்வியையும் இணைத்து கற்பிக்கலாம்.

டேனிஷ் மொழி பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்வது கட்டாயமாகும்
நிதி உதவி குறைக்கப்படலாம்
டென்மார்க் வந்து சேர்ந்த பிறகு விரைவாக உங்களால் வேலை தேடிக் கொள்ள முடியவில்லையெனில், அறிமுக உதவி வடிவில் டென்மார்க் அரசின் நிதி உதவி உங்களுக்குத் தேவையாக இருக்கும். அறிமுகச் சலுகைகளைப் பெறுவதற்கு நீங்கள் டேனிஷ் மொழிப் பயிற்சியிலும் செயல்பாட்டுத் திட்டங்களிலும் சுறுசுறுப்பாகப் பங்கேற்று, தொழிலாளர் சந்தைக்குக் கிடைக்கும்படி செய்து கொள்ள வேண்டும். இதனால் கிடைக்கும் வேலை வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையினால், பயிற்சிப் பள்ளி பங்கு கொள்வோரின் வருகையைப் பதிவு செய்து, வராதவர்களை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. தக்க காரணம் இன்றி வராமல் இருந்தால், நகராட்டி அதிகாரி, நிதி உதவியை குறைக்கவோ நிறுத்தவோ வேண்டியிருக்கும்.


டேனிஷ் மொழி – சமூகத்திற்கு உங்கள் திறவுகோல் டேனிஷ் மொழி கல்வி, வேலை மற்றும் சமூக வாழ்க்கைக்கு உங்கள் திறவுகோலாகும். மேலும், மொழியை கற்றுக் கொள்வது டென்மார்க் சமுதாயத்தில் உங்கள் உரிமைகளையும் கடமைப் பொறுப்புகளையும் புரிந்து கொள்வதற்கு முக்கியமாகும். சட்டத்தை பின்பற்றாமல் இருப்பதற்கு சட்டம் தெரியாது என்று சொல்வது காரணமாக இருக்க முடியாது. மேலும் ஒவ்வொரு நாளும் நீங்கள் எதிர்நோக்கும் பல பாதுகாப்பு விதிகளும் வழக்கமாக டேனிஷ் மொழியில்தான் எழுதப்பட்டிருக்கும். டென்மார்க் மக்களுடன் எவ்வளவுக்கெவ்வளவு நிங்கள் அதிகமாக பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவாக டேனிஷ் மொழியைக் கற்றுக் கொள்வீர்கள். ஆகையால் டென்மார்க் மக்களை சந்திக்க வேண்டியது முக்கியமாகும். உதாரணமாக மாலை வகுப்புகளில் விளையாட்டுகளில், அல்லது மற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நீங்கள் உள்ளூர் சங்கங்கள் அல்லது பெற்றோர் சங்கங்களில் சேரலாம். பல அண்டை வீடுகளில் உங்கள் வீட்டு வேலையில் உதவி கிடைக்கலாம்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு