வெள்ளி, 25 மார்ச், 2011

மாஸ்லோ

முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகள்தாம் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளியல் சரிவின் மூல காரணம் என்பதைச் சில உதாரணங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' என்ற போர்வையில் லாபம் பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஏழை-பணக்காரர்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மென்மேலும் அதிகரிக்கச் செய்வதே முதலாளித்துவம். வட்டி அதன் இரத்த ஓட்டமாக இருந்து வருகிறது. தனது லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள 'வர்த்தக நெறிமுறை'களைக் (Business Ethics) கூட காற்றில் பறக்கவிட்டு தில்லுமுல்லுகள், தகிடுதத்தங்கள் செய்யவும் முதலாளித்துவவாதிகள் தயங்குவதில்லை என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

முதலாளித்துவத்தின் இன்னொரு அடிப்படை 'பொருளாதார மனிதன்' (Homo Economicus) எனும் கோட்பாடு. பொருளாதார நடவடிக்கைகளில் மனிதர்கள் இப்படி-இப்படித்தான் நடந்துக் கொள்வார்கள் என சில பொருளியல் நிபுணர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு குடியிருப்புப் பகுதியில் பலசரக்குக்கடை வைத்திருக்கும் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் தமது வாடிக்கையாளர்களைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்து வைத்திருப்பார்: 'இவர்கள் நடுத்தர வருமானமுடைய மாதச் சம்பளக்காரர்கள், மாதத்தின் முதல் பாதியில் வீட்டு உபயோக, மளிகைப் பொருட்களை அதிகம் வாங்குவார்கள், விலை ஏற்ற இறக்கங்களில் மிக கவனமாக இருப்பார்கள், இவர்களை நம்பி கடன் கொடுக்கலாம், தேதி பிறந்தவுடன் கடனை அடைத்து விடுவார்கள்' இப்படி எல்லாம் அவரது கணிப்பு இருக்கும். அவரது இந்த மதிப்பீட்டைப் பொருத்தே அவர் கொள்முதல் செய்யும் பொருட்கள், அதன் தரம், விலை, விளம்பரம் ஆகியவை அமையும்.

அது போலவே, சில பொருளியல் நிபுணர்களின் கணிப்புப்படி மனிதர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ஜான் கே என்ற பொருளியலாளர், "மனிதர்கள் பொதுவாக சுயநலவாதிகள். உலகாதாய நோக்கம் மட்டுமே கொண்டவர்கள். தனது செல்வ மதிப்பை கணக்கிடுவதிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்" என்கிறார். இதுதான் முதலாளித்துவம் அறிமுகப்படுத்தும் 'பொருளாதார மனிதன்'. மனிதர்களைப் பற்றிய இந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான், சிறு முதலாளிகள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை தங்கள் லாபங்களை அதிகரித்துக் கொள்வதற்காக செய்யும் முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும், 'பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!' என நியாயப் படுத்தப் படுகின்றன.



மனித வாழ்வின் பல நிலைகளில் மாறிக்கொண்டே இருக்கும் அவனது தேவைகளை ஆபிரஹாம் மாஸ்லோ என்ற சமூகவியலாளர் வகைப்படுத்தியிருக்கிறார். மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் அவனைச் செலுத்தும் உந்துசக்தியாக இருப்பது அவனது தேவைகள்தாம் என்பது அவரது கருத்து.



வருமானம் தேடி பட்டணத்திற்கு வருகிறான் ஒரு கிராமத்து இளைஞன். அவனுக்கு இப்போது உடனடித்தேவை உண்ண உணவு, குடிக்க நீர், உடுத்த உடை, படுக்க ஓர் இடம். உடல் சார்ந்த இத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுதான் இப்போது அவனது ஒரே நோக்கம். அவனுக்கு ஒரு வேலை கிடைத்து, இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டால் அடுத்ததாக அந்த வேலை நிரந்தரமாக வேண்டும், அல்லது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், வாடகைக்கு தனி வீடு வேண்டும் என அவனது அடுத்தக் கட்டத் தேவைகள் முன்னுக்கு வரும். இந்தத் தேவைகளும் நிறைவேறிய பிறகு, திருமணம் செய்து குடும்பஸ்தனாகும் ஆவல் பெருகும். இந்த நிலையை அடைந்த பிறகு தனது சுய கவுரவத்தை நிலை நிறுத்தும் விதமாக பதவி, அங்கீகாரம், அந்தஸ்து ஆகியவற்றை அவன் அடைய முற்படுவான்.

மாஸ்லோ-வின் தேவை அடுக்கு


வாழ்வின் இத்தனை நிலைகளிலும் பொருளாதாரத்தை மையமாக வைத்தே சுழன்று கொண்டிருந்த அந்த மனிதனுக்கு அவனது சுய கவுரவத்தேவைகள் நிறைவேறிய பிறகே 'தன்னை அறிய வேண்டும்' என்ற உந்துதல் பிறக்கிறது. ஆன்மீகச் சிந்தனைகளையும் நன்னடத்தைகளையும் வளர்த்துக் கொண்டு உயரிய நோக்கங்களை முன்வைத்துத் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறான் அவன்.



இக்கோட்பாட்டின்படி, ஒரு மனிதன் தான் எதிர்பார்க்கும் பதவி, அங்கீகாரம் ஆகியவற்றை அடையுமுன் நற்குணம், நல்லொழுக்கம், ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டான் என்கிறார் அபிரஹாம் மாஸ்லோ. பொருளாதாரத் தேவைகள் முழுவதும் நிறைவேறி, ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை அடைந்த பிறகே நெறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது பொதுவாக மனிதனின் இயல்பு என்பது மாஸ்லோவின் கருத்து. அரசியல் போன்ற பிற துறைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், முதலாளித்துவத்தின் சுயநல அடிப்படைக்கு இக்கோட்பாடு மிகவும் பொருத்தமானது.



உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தன் போட்டியாளர்களை நசுக்கி உலகின் நம்பர் ஒன் கணினி மென்பொருள் நிறுவனம் என்ற தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள செய்த முறைகேடுகளும் சட்ட மீறல்களும் ஏராளம். இதன் தொடர்பில் பல நூற்றுக் கணக்கான வழக்குகளையும் அந்நிறுவனம் சந்தித்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கிடையில் 1999இல் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு, உலக அளவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவற்காக அவர் 'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்' எனும் சேவை நிறுவனத்தைத் துவக்கினார். மாஸ்லோவின் கோட்பாட்டிற்கு இதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.



முதலாளித்துவக் கொள்கையினால் பலன்களைவிட பாதகங்களே அதிகம் என்ற நிலையில், அதைச் சீர்திருத்த ஒருவர் கூட முயலவில்லையா என்ற இயல்பான சந்தேகம் நமக்கு எழலாம். முதலாளித்துவத்தை சீர்திருத்தும் திட்டம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு பில் கேட்ஸ் வெளியிட்டார். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு