புதன், 22 ஜூன், 2011

இலங்கை அரசியலில் உலகமயமாக்கலின் தாக்கம்

பனிக்காடாய் கிடந்த பூமி, வெப்பம் அதிகரிப்பினால் பனி உருக நிலம் புலப்பட ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். ஒன்றுமில்லாது இருந்து பூமியில் ஒன்றாக உயிரினங்கள் உயிர்த்தெழத் தொடங்கி கூர்ப்பு, வளர்ச்சி, கலப்பு என்று வேற்றுமை அடையத் தொடங்கியது. பூச்சியத்துக்குள்ளிருந்த பூமி, இராச்சியமாக மாறி இன்று உலகமயமாதல் என்பதில் வந்து நிற்கிறது.
ஆயிரத்தித் தொளாயிரங்களில் நாடுகள் பிரிவதும், ஆட்சிகள் அமைப்பதும், உலகமெங்கும் விடுதலை இயக்கங்கள் உருவாவதும், தனித்து நின்று போராடியதும், வென்றதும், ஒரு தலைமையின் கீழ் நாடுகள் இருந்ததும், இயக்கங்கள் அமைந்ததும், சாதாரணமான ஒன்றாக இருந்தது. தலைமை என்பதும் அதற்குப் பணிதல் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது வந்தது. உலகத்தின் பாதுகாவலராக சோவியத்தும், அமெரிக்காவும் இருந்து ஒரு பனிப்போரை நடத்தினர். காலப்போக்கில் பெருந்தலைமை என்பது மறையத்தொடங்க பிராந்திய வல்லரசுகள் உ.ம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் தலைதூக்கத் தொடங்கின. அமெரிக்க இரசியப் பனிப்போர் உடைந்ததால் பிராந்தியங்களின் பாதுகாப்பு பிராந்திய வல்லரசுகளின் கையில் சென்றுள்ளது. இடதுசாரித்துவ பெருநிலப்பரப்பைக் கொண்ட சோவியத்தை உடைக்கப்போய் அமெரிக்கா பொருளாதாரம் உடைந்து சுக்கு நூறானது தான் மிச்சம்.
இந்தப் பிராந்திய வல்லரசுகள் தம்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அயல் நாடுகளுடன் நட்புறவாகவும் அன்னியோன்யமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடனும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கிறது. வல்லரசுகளைப் பொறுத்தவரையில் புஜபலம் பொருந்திய அயல்நாடுகள் நட்புறவுடன் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இருந்து வந்தன. உ.ம் ஜேர்மன் பிரான்ஸ். இந்து சமுத்திரத்தைப் பொறுத்தமட்டில் 3 பிராந்திய வல்லரசுகள் தமது எல்லை விரிவாக்கங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறன்றன. இந்த நிலையைச் சரியாகப் பயன்படுத்தி, புலிகளின் கோட்டையை உடைத்தெறிந்தது சிங்களப் பேரினவாத அரசு.
புலிகள் இடதுசாரித்தன்மையைக் கொண்டவர்களாகவும் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தும் ஏன் புலிகளுக்கு சீன உதவி கிடைக்கவில்லை? இந்தியத் துணைக்கண்டம் 6 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டவர்கள் ஒரேமொழியும் இரத்தஉறவும் கொண்ட துணைக்கண்டம் ஏன் புலிகளுக்கு உதவி செய்யவில்லை? பாக்கிஸ்தானைப் பொறுத்தமட்டில் தமிழ் பேசுபவர்களே முஸ்லீம்களாக மாறினார்கள் இவர்கள் தமிழ் முஸ்லீம்களே. இப்படியான எல்லா வசதிகளும் தொடர்பு வசதிகள் இருந்தும் புலிகள் நந்திக்கடலில் குதித்தது ஏன்? உலக அரசியலை நன்கு உணராமை, இராஜதந்திரம் இல்லாமை, மக்களை, மக்கள் போராட்டத்தை மதியாமை, சரியான கெரில்லாவாக இயங்காமை, முரண்டு பிடித்தமை, எல்லாவற்றையும் விட முக்கியமாக அரசியலே இல்லாமை, ஷோ காட்டி வாழ விளைந்தமை. மக்கள் சக்தியையும், அரசியலையும் சரியாக உணர்ந்து கொண்டிருந்தால் நந்தியோ நந்தியாக நின்று காப்பாற்றியிருக்கும்.
மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து அலசி சந்தர்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியது இலங்கை அரசு என்பதை யாரும் மறுக்க இயலாது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்பு அறைந்து அனுப்பியது இலங்கை அரசே. இன்றைய உலகில் புஜயபலத்தை விட புத்திப்பலமே மேலோங்கி நிற்கிறது என்பதை புலிகள் ஏன் மறந்தார்கள். இந்துசமுத்திர அரசியல் சதுரங்கத்தில் பலமுள்ள சிறுநாடுகளை தன்கைக்குள் போடமுயன்றன பிராந்திய வல்லரசுகளான இந்தியா சீனா பாக்கிஸ்தான். இச்சதுரங்கத்தில் காய்களை சரியாக நகர்த்தி பிராந்திய வல்லரசுகளை ஒழுங்குபடுத்தி புலிகளுக்கு செக் வைத்தது சிங்கள அரசு. இராக்கியப் போரையும் தலிபானையும் கருத்தில் கொண்ட அமெரிக்கக் கனவில் இருந்த பிரபாகரனுக்கு புலம்பெயர் தமிழர்களின் அம்புலிமாமா கதை நிலாச்சோறாக அமைந்தது. கடைசி வேளையிலும் அமெரிக்கா வரும் ஒபாமா வருவார் என்ற நம்பிக்கையில் சரணடைந்து வாள்வெட்டு பட்டு இறந்தார் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன். தேசியத்தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதியாக மக்களுடன் இருக்க வேண்டியவன். பங்கருக்குள்ளா இருப்பான் என்றும் மக்களை மையப்படுத்தடா மடையா என்றும் எத்தனைபேர், மாற்றுக்கருத்தாளர்கள் கத்தினார்கள். கேட்டார்களா? சொந்த மக்களை நம்பமுடியாத போராட்டவீரன் எப்படி அமெரிக்காவை நம்பினார்.
உடைபட்ட பனிப்போரால் உடைபடத்தொடங்கின நாடுகள். இதேவேளை புஜபலகண்காட்சி மாயையை தொடர்ந்தும் நிலைநிறுத்த ஒரு இராக்குப்போர் நடந்தது. இப்போரால் பொருளாதார ரீதியில் வெற்றியைக் கண்டது அன்றை இடதுசாரி நாடுகளான இரஸ்சியாவும் சீனாவும்தான். சச்சேனிய தீவீரவாதத்தை முடிவுக்குக் கொண்ட வந்து தமது ஒற்றனான சச்சேனிய தீவீரவாதி ஒருவனின் கையில் அதை ஒப்படைத்து விட்டு அவர்களை அவர்களுடனே அடிபட விட்டுவிட்டு இரஸ்சியா தன் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டது. புஜபலம் காட்டப்போய் அமெரிக்கா இராக்கிலும் ஆவ்ஃக்கானிஸ்தானிலும் முடங்கிப்போய் கிடந்து இன்று பொருளாதார நெருக்கடிக்குள் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் வேளைதான் ஒபாமா வந்தார். இவரை நம்பியா புலிகள் சரணடைந்தார்கள். புலிகள் கூப்பிட்டவுடன் ஓடிவர ஒபாமா என்ன சித்தப்பனா?
இந்தியா சதுரங்கத்தில் தன்காய்களைச் சரியாகவே நகர்த்திக் கொண்ட இருக்கிறது. தமக்கு அயலில் தலையிடியாக இருந்துவந்த பாக்கிஸ்தானுக்கு தனிபான்களினூடாக ஒரு செக்கை இன்று வைத்துள்ளது. அன்றைய இராணுவத்தலைவர் இதன் பின்னணியில் இருப்பாரா என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. அமெரிக்காவால் இரஸ்சிய அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பின்லாடனை பின் அமெரிக்காவே அழிக்க வேண்டிய நிலையானது. இப்படிப் பின்லாடன் இருக்கிறானா இல்லையா என்ற முடிவில்லாமல் போனதால் தலிபான் தொடர்ந்து போராடுகிறது. அமெரிக்கா தன் வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் நிற்கிறது. இந்த நிலையையாவது பிரபாகரன் உருவாக்கி விட்டுவிட்டுப் போயிருக்கலாம். பிரபாகரன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவனாவது போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இருந்திருப்பான். சிங்கள அரசோ பேரினவாதமோ தன் இனவெறியைக் காட்டாமலும் போரின் வெற்றியை உணராமலும் இருந்திருப்பார்கள் ஆனால் பிரபாகரன் என்ற பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும். சிலவேளை மக்களின் போராட்டம் தொடர்ந்திருக்கும். அமெரிக்கா வரும் என்ற புலம்பெயர் புலம்பல்களில் கனவுகண்டு உலக இயற்கை நிதர்சனங்களை விட்டுவிட்டு சரணடைந்து எம்மினத்தை முழு நிர்வாணமாக்கிச் சென்றிருக்கிறார் பிரபாகரன்.
இனிவரும் தலைவர்களாவது இன்றைய உலக அரசியல் நிலமையை உணர்வார்களா? உலகமயமாதல் எதற்காக நடக்கிறது? இதன் விளைவுகள் என்னவாகும்? இவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் நடத்த முயற்சியுங்கள்.
பெருந்தலைமை உடையும்போது சிறுசிறு தலைமைகள் உருவாவது இயற்கையானது. இந்தச் சிறுதலைமைகள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கடினமானதே. இதனால் இணைவுகளும் உடன்படிக்கைகளும் அவசியமாகிறது. இதனால் இசைவாக்கமுள்ள தம்முடன் ஒத்துப்போகக் கூடியவர்களை இணைத்து தம்நாட்டின் ஆட்சிப்பலத்தையும் பிராந்தியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் சிறு சிறு நாடுகளின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் உலகமயமாதல் என்பது அவசியமாகிறது.
கணனிகளாலும் இலத்திரனியல்சார் தொழில்நுட்பங்களாலும் உலகம் ஒரு கிராமம் போல் குறுகிவிட்டது. இன்நிலையைப் பயன்படுத்திய வசதியான நாடுகள் தம் வசதிகளை மேலும் பெருக்கிக்கொள்ள வளர்முக நாடுகளை நாடுகிறார்கள். அங்கே தொழிலாளர்கூலி மிகக் குறைவாக இருப்பதுடன் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களும் மலிவாகவே கிடைக்கின்றன. தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகளையும் வளியசுத்தங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தயாரிப்புகளை மட்டும் தமது முத்திரைகளுடன் உலகநாடுகளின் பெரும் விலையில் சந்தைப்படுத்தி பெருங்கொள்ளை இலாபம் ஈட்டமுடியும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தம் முதலீடுகளை 3ம் உலகநாடுகளில் செய்வதினூடு சுமார் 200மடங்கு இலாபத்தைப் பெறலாம். மூலப்பொருட்களை 3ம் உலகநாடுகளில் இருந்து கொண்டுவந்து பொருள்களை இங்கே உற்பத்தி செய்து அதைச் சந்தைப்படுத்துவதனால் அடையும் இலாபத்தை விட எல்லாவற்றையும் அங்கேயே எடுத்து கழிவுகளையும் அங்கேயே விட்டு விட்டு அதாவது சக்கையை அங்கே எறிந்து விட்டு சாற்றை மட்டும் இங்கே எடுத்துவந்து சந்தைப்படுத்துவதை விட இலாபம் தரக்கூடிய சிறந்த வியாபாரம் என்ன இருக்கிறது.
இந்நாடுகளின் முதலீடுகள் அங்கே ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் போர் எப்படியும் நிறுத்தப்பட வேண்டும். அங்குள்ள அரசின் நட்புறவு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து பெரு இலாபம் பெறமுடியும். இவையனைத்தும் குறுகிய காலத்தில் நடந்தேறினால் மட்டுமே பெருலாபம் உறுதியாகும். இந்நிலையில்தான் தமிழர்களது தலைவிதியும் புலிகளின் ஈழக்கனவும் நந்திக்கடலினுள் கொட்டப்பட்டது.
போர்காரணமாக அகதிகளின் பெருக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிப்பதனால் கலாச்சாரச் சீரழிவுகளும், சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடியும் எற்படுகிறது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றாகி விடுகிறது. அகதிகளை திருப்பி அனுப்பவும் வசதியாகிறது. தமிழ்மக்களின் அழிவையும் அரசாங்கத்தின் அஜாரகங்களையும் நேரில் நின்று பார்த்த நாடுகளே அகதிகளை அனுப்புவற்கான விண்ணப்ப நிராகரிப்புகளை பெருந்தொகையாகக் கொடுக்கத் தொடங்கி விட்டன.
புலிகளுக்கு உதவிசெய்வதூடு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு என்ன இலாபம் ஏற்படமுடியும்? மாறாக நட்டமே ஏற்படும். புலிகளுக்கு உதவி செய்வதூடு போர் நீடிக்கும், தமது முதலீடுகள் தக்கவைக்கப்படும், ஆயுதவிற்பனையால் ஏற்படும் வருமானத்தை விட ஒரு தொழிற்சாலையூடு அள்ளப்போகும் பெருந்தொகையான இலாபத்தை யார் கைவிடத்தயார்? இதனால் இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ள ஐரோப்பிய, அமெரிக்க, பிராந்திய வல்லரசுகள் விரும்பவில்லை. இதுவே ஐரோப்பிய அமெரிக்க தெருக்களில் எங்கள் கண்ணீர்கள் காணாமல் போனதற்கும், எங்கள் குரல்கள் கேட்காமல் போனதற்கும் காரணமாகும்.
இது ஒரு பெரியகட்டுரையாக வளராமல் இருப்பதற்காக உலகமயமாதலினால் ஏற்படும் நன்மை தீமைகளை புள்ளிவடிவத்தில் தந்து மீதியை பின்னோட்ட எழுத்தாளர்கள் கொண்டு சென்று முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டுவிடுகிறேன்.
• உலகமயமாதலினால் சிலவேளைகளில் பொருளாதாரச் சமநிலை ஏற்பட சாத்தியம் உண்டு.
• 3ம் உலகநாடுகளில் மூலவளங்கள் அழிக்கப்படும் ஆனால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வெளிநாடு சென்று திரைகடலோடியும் திரவியம் தேடாமல் வெளிநாட்டவர்களே உங்களை நோக்கி வரும் காலம் கனிந்துள்ளது.
• பொருளாதார வளங்கொண்ட நாடுகளின் முதலீடுகள் உறுதியுடனும் உத்தரவாதத்துடனும் இருக்க வேண்டுமானால் போர்கள் நிறுத்தப்படும். இது இலங்கையில், பிலிப்பைந்து, சுமாத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் நடந்தேறின.
• போர்கள் நிறுத்தப்படும் போது இணைதல்கள் சாத்தியமாகும். பலமுள்ளவர்கள் இணைந்து பலவீனர்களை உண்பார்களா?
• வளர்முகநாடுகள் ஐரோப்பிய அமெரிக்கநாடுகளின் கழிவறையாக மாற்றம் பெறும்.
• வளர்முகநாடுகளிலும், படித்தவர்களுக்கும் வசதியானவர்களுக்குமே வேலைவாய்ப்பு என்று ஆகிவிடும். இதனால் கறுப்புப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
• பொருளாதார மையமாக்கல் வலதுசாரித்துவத்துக்கு வழிகோலும். பணக்காரன் பெரும் பணக்காரனாவதும் ஏழைகள் தொடந்து கொடுமைகளை அனுபவிப்பதும் ஊக்கிவிக்கப்படும்.
• வலதுசாரித்துவம் வகுப்புவாதத்துக்கு தூபமிடும்.
• சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் பிராந்திய வல்லரசுகளாலும், பெரும்பான்மை இனத்தவர்களின் இணைவுகளாலும் வெளியே வராமல் நசுக்கப்படும். உ.ம் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் உகுரு இனப்போராட்டம். சிறுபான்மை இனங்கள் உருந்தெரியாமால் பையப் பைய அழிக்கப்படுவார்கள் அன்றேல் தானாக அழிவார்கள்.
• ஆதிக்க மொழிகள் ஆட்சியைப் பெறும் உ.ம் ஆங்கிலம், அரேபிய மொழி இரஸ்சிய மொழிகளால் சிறுமொழிகள் சிறுபான்மை இனம்போல் உலகத்தை விட்டே விரட்டப்படும்.
• சிறுகைத்தொழில்கள் அழிக்கப்படும். பெருந்தொழில்கள் அவற்றை விழுங்கும்.
• மனிதனின் அடிப்படை தேவையான விவசாயம், பண்ணைகள் அழிக்கப்பட்டு பெருவருமானம் தரும் கைத்தொழில்கள் முதன்மைப்படுத்துப்படும். இதனால் வளியசுத்தம் அதிகரித்து உலகில் சமநிலை பாதிக்கப்படும். உணவு தயாரிப்புக்குப் பதிலாக வில்லைகள் தயாரிப்பு அதிகரிக்கும்.
• 3ம் உலகநாடுகளில் முன்பின்னறியா புதிய வியாதிகள் வில்லை வியாபாரங்களுக்காக வலம்வரும். உ.ம். தெங்குக்காச்சல், பறவைக்காச்சல், பன்றிக்காச்சல் இனி பூனைக்காச்சல், நாய்காச்சல் என்று இன்னும் எத்தனை எத்தனையோ காச்சல்களும் பேச்சல்களும் பீச்சல்களும் உருவாகும்.
• பெருந்தெருக்களாலும், போக்குவரத்து, தொழிற்சாலை போன்றவற்றினால் ஏற்படும் வளியசுத்தமும், இரசாயனக்கழிவுகளும் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளில் குறைப்பதற்காக 3ம் உலகநாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடு எனும் பெயரில் ஏற்றுமதி செய்யப்படும். அதாவது வளர்முகநாடுகள் பொருளாதார வல்லரசுகளின் கழிவறையாகும்.
• உலகரீதியாக பொருளாதாரச் சமநிலை ஏற்படச்சாத்தியம் இருந்தாலும் வல்லரசுகள் அவற்றை தடுக்கும். ஆனால் வளர்முக நாடுகளில் ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
• ஒருநாட்டில் இன்னொருநாடு தங்கிவாழவேண்டி அமைவதால் சிறுபான்மைகளின் கருத்துக்கள் போராட்டங்கள் பெரும்பான்மை இணைவுகளால் கொல்லப்படும். பெரும்பான்மை பெரும்பான்மையுடன் கைகோர்த்துக் கொள்ளும் உம் இந்திய இலங்கை உறவு. சீன இலங்கை உறவு.
• கணனிகளாலும் அதிவேக வாழ்வியலாலும், இரசாயனக்கழிவுகளாலும் வளியசுத்தங்களினாலும் அங்கே மக்களின் வாழ்வுக்காலம் குறையும், கூட்டுவாழ்வு குலையும். தனித்துவமான கலாச்சாரங்கள் அழியும்.
• கலாச்சாரங்கள் இணைவுகளால் பலமானதே வாழும். இயந்திரவாழ்க்கை ஒன்று மிருகவாழ்வியலுக்கு வித்திடும்
• உடன்பாடுகளுடன் நாடுகள் இணைந்து பெருலாபம் பெறும்.
• நாடுகளின் எல்லைகள் உடையும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அதிகரிப்பதனால் வகுப்புவாதமும் வர்க்கபேதமும் போராட்டங்களும் அதிகரிப்பதற்கு சாத்தியம் உண்டு.
• தனித்துவமற்ற சமூகம் உருவாகி பணத்துக்காக அலையும்.
• பொருளாதாரப் பரிமாற்றம் போல் பயங்கரவாதப் பரிமாற்றமும் வெகு வேகமாக நடைபெறும். அமைதியான நாடுகளில் களவு கன்னக்கோல் பாலியல் வல்லுறவு என்பன அதிகரிக்கும்.
• நன்மை தீமைகள் இரண்டும் பொதுவானாலும் பொருளாதாரம் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளின் கையிலேயே என்றும் இருக்கும்.
• இவ்வளவு காலமும் 3ம் உலகநாடுகள் வல்லரசுகளின் ஆயுதக்கழிவகமாக இருந்தது. இன்று அவை வழியசுத்தம், இரசாயனக்கழிவகமாக மாற்றம் பெறுகின்றன. எது எப்படி வளர்ந்தாலும் மாற்றம் பெற்றாலும் ஒன்று மட்டும் உண்மை ஏதோ ஒருகழிவகத்தை எம்மக்கள் சுமப்பார்கள்.
இப்படி நன்மை தீமைகளுடனான ஒரு உலகமயமாதல் நடந்தேறும். நான் தவறவிட்ட விடயங்களை பின்நோட்டம் விடுவோர் விட்டுவைக்காது தொடருங்கள்

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு