திங்கள், 25 அக்டோபர், 2010

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை நாகரீகங்கள்
முன்பெல்லாம் பள்ளியில் மாரல் ஸ்டடி என்று ஒரு
வகுப்பு உண்டு. நல்லது கெட்டது கதைகளாக
சொல்லப்படும்.

value education என்று பிறகு மாற்றினார்கள்.

இப்போது இரண்டு வகையும் இல்லை. அதனால்
பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை
நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.

இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு
செல்கிறது.


குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும்
பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால்
உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால்
அடித்து திட்டி செய்வோம்.

தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி
நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்
சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள்
என்னவென்று பார்ப்போம்.

************************************

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது
கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி
முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக
சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில்
சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில்
இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/
தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது
கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன
வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை
தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது
நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை
திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள்
வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.
கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.
இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.


4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்
சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது
"You're welcome" சொல்ல மறக்காதீங்க.




5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.
பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே
போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எஜமான் பட நெப்போலியன்
போல,”கல்யாண வீட்டுல நான் தான் மாப்பிள்ளை, செத்த
வீட்டுல நா தான் பொணம், மாலையும் மரியாதையும்
எனக்குத்தான்” எனும் அந்த வசனம் சினிமாவில் சரி
நிஜத்தில் வெற்றி/தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை
வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப்
பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின்
மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு
வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால்
என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க
வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே
நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியே
வந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே
செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான்
நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது
மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு
படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின்
பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க
வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை
அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணர வேண்டும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு