செவ்வாய், 28 ஜூன், 2011

பாடசாலை செல்லும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்கள் என்னும் பட்டத்தை கையில் ஏந்தும நிலை

2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி.
குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எனும் பெயரிலிருந்து ஆப்பிரிக்கா கீழே இறங்க முதலிடத்தில் இந்தியா அவமானகரமாக அமர்ந்திருப்பதாகச் சொல்கிறது யூனிசெஃப் அறிக்கை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரம் பட்டை தீட்டுதல், சிவகாசி சாத்தூர் அதைச்சுற்றிய பகுதிகளில் தீப்பெட்டி செய்தல் மற்றும் பட்டாசு செய்தல், பீடி சுற்றுதல், தென் மாவட்டங்களில் செங்கல் சூளைகள், முந்திரி ஆலைகள், காஷ்மீரில் கம்பளம் செய்யும் தொழில், உத்திரப்பிரதேச பானை செய்யுமிடங்கள், பிரோசாபாத்தில் கண்ணாடி தொழிற்சாலை இவை தவிர உணவகங்கள், சாலைகள், வீடுகள் எங்கும் இன்னும் இருக்கிறார்கள் பல இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள். பதினைந்து வருடத்துக்கு முந்திய கணக்கெடுப்பே இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் கல்வி கற்கவில்லை என்கிறது. இப்போது அந்த எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 5 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக சில கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
குமரி மாவட்டத்தின் செங்கல் சூளைகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் ஏராளமான அளவில் பணி செய்கிறார்கள். மண்ணைச் சேறாக்குவது, அதை மிதிப்பது, செங்கல் அறுப்பது, அதை அடுக்குவது, சுமப்பது என அனைத்து விதமான பணிகளையும் சிறுவர்கள் செய்கிறார்கள், மிகவும் குறைந்த ஊதியத்தில்.
இதைத் தவிர குமரிமாவட்டத்தில் சிறுவர்கள் முந்திரி ஆலைகளில் அதிகமாக வேலை செய்கிறார்கள். முந்திரி ஆலைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளே வேலைக்குச் செல்கிறார்கள். வறுக்கப்பட்ட முந்திரியை உடைப்பது, அதன் மெல்லிய தோலை நீக்குவது என பல வேலைகளை சிறுமிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த புகையினால் பல நோய்களும், முந்திரியின் திரவத்தினால் தோல் தீய்ந்து போதல் போன்ற பல அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.
பதிமூன்று, பதினான்கு வயதுக் குழந்தைகள் பலர் வீடுகளில் வேலைக்காக சேர்க்கப்படுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என எல்லா வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டிய சூழல். இரவில் தாமதமாய் தூங்கி பகலில் விடியும் முன்பே எழும்பும் இந்த சிறுமிகளின் மன உளைச்சல் அளவிட முடியாதது. படிக்கும் ஆர்வம் இருக்கும் பல சிறுமிகள் ஒரு அடிமை நிலையில் தங்கள் வாழ்க்கையை சமையல் கட்டில் இழந்து விடும் சூழல் இன்று பல இடங்களில்.
கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசு வீட்டு வேலை மற்றும் உணவகங்களில் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. எனினும் நிலமை சீரடைந்தபாடில்லை. இது மட்டுமன்றி குழந்தைத் தொழிலாளர்கள் தடை செய்யப்படவேண்டிய இடங்கள் பல உள்ளன. அரசு சார் நிறுவனங்கள் பலவற்றில் குழந்தைகள் இன்னும் இருக்கிறார்கள்!
நெசவுத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் பல ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள். நெசவுத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்குக் காரணம் அவர்களுடைய சிறு கைகள் நூல் இழைகளை பக்குவமாய் சரிசெய்யும் என்பது தான். சிறுவர்களை வைத்து சிறு சிறு பொருட்களை விற்கச் செய்வது, அவர்களை ஷூ பாலிஸ் போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதும் இன்று பரவலாக நடந்து வருகிறது.
சிறுவர் சிறுமியரை போரிலும் பல இயக்கங்கள் பயன் படுத்துகின்றன. அவர்களால் பிறருடைய கவனத்தைக் கவராமல் தப்பிக்க முடியும் என்பதும், அவர்களை எளிதில் கட்டளைகளால் கட்டுப்படுத்தலாம் என்பதும், அவர்களுக்கு மூளைச் சலவை செய்வது எளிது என்பதும் முக்கிய காரணங்களாகும்.
எண்பதுகளில் ஈராக் ஈரான் போரின் போது சிறுவர்கள் பெருமளவில் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் நிலங்கள் வழியாக சிறுவர்களை அனுப்பி சோதிப்பதும், அவர்களை போரில் வலுக்கட்டாயமாக நுழைப்பதும் என அரசுகள் சிறுவர்களை கொடுமைப்படுத்தின. சுமார் மூன்று இலட்சம் குழந்தைப் போர் வீரர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்களில் பலர் இறந்து, பலர் காயமுற்றும் தங்கள் வாழ்வின் மகத்துவமான பகுதியை இழந்துவிட்டனர் என்பது வேதனையான செய்தி. பல இயக்கங்கள் சிறுவர் சிறுமியரை போதைக்கு அடிமையாக்கி போரில் ஈடுபடச் செய்வதுண்டு. உள்ளூரிலேயே தேர்தல் காலங்களில் சிறுவர்கள் பல்வேறு விதமான அரசியல் வேலைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள், அதை அரசும் கண்டு கொள்வதில்லை.
சர்க்கஸ் போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியர் சாகசங்கள் செய்தும், கழைக்கூத்தாடிகளாகியும் வேலை செய்கின்றனர்.
இவை தவிர குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் சர்வதேச அளவில் கவலைக்குரிய ஒன்றாகவே மாறிவருகிறது. பாலியல் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தான் சமுதாயத்தின் மிகப்பெரும் அவமானம் எனக் கருத வேண்டும். குறைந்த பட்ச பணத்திற்காக மழலைகளின் எதிர்காலத்தை பாலியல் பயங்கரத்துக்குப் பலியிடுவதில் பல பெற்றோரே உடந்தையாய் இருக்கிறார்கள் என்பது உறைய வைக்கும் உண்மை.
சமீபத்தில் இந்தியாவில் ராஜமுந்திரி என்னுமிடத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய செயலை cnn-ibn வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். யூனிசெஃப் கணக்கெடுப்பு, சுமார் ஒரு இலட்சம் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் ஒவ்வோர் இரவும் பத்து முறை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறி பதை பதைக்க வைக்கிறது. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பது கவனிக்கப்படத் தக்க ஒன்று. பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளில் ஐவரில் ஒருவர் ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சித் தகவல்.
நோய்டா கொலையும், இந்தியாவின் பெருநகரங்களில் அடிக்கடி நடக்கும் குழந்தைகள் கடத்தலும், கொலையும் எல்லாமே குழந்தைகள் மீதான பாதுகாப்பு உணர்வு ஒரு சமூக உணர்வாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பறை சாற்றுகின்றன.
பண்டைக்காலங்களில் விவசாயத்தை நம்பியே வாழ்ந்த குடும்பத்தினர் தங்கள் குழந்தைகள் கல்வியறிவு பெறுவதைவிட அனுபவ அறிவு பெறுதல் சிறந்ததென்று விவசாயத்தில் ஈடுபடுத்தினர். அதை அவர்கள் குழந்தைத் தொழிலாகப் பார்க்கவில்லை. குடும்பத்திற்குத் தேவையான பணியாகவே கருதினார்கள். பின் காலம் செல்லச் செல்ல மாறிவரும் சூழலுக்கும், அமைப்புக்கும் ஏற்ப குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளும் மாறின.
நேபாளத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் உள்ளனர். சுமார் அறுபது சதவீதத்துக்கும் மேலான குழந்தைகள் இங்கே விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிற இடங்களில் குடிபெயரும் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பரிதாப நிலையையே கொண்டுள்ளனர். மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களும் இந்த நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர் நிலை இன்று வளரும் நாடுகளில் மட்டுமே பெருமளவில் இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வறுமையே இதன் முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுவதனால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை குடும்பங்களில் செய்யாமல் குழந்தைத் தொழிலை அறவே ஒழிப்பது சாத்தியமில்லை. சட்டங்களினால் குழந்தைகளை வேலைக்கு வருவதை நிறுத்தும் அதே நேரத்தில் அந்த குழந்தைகளுக்குக் கல்வியை அளிப்பதற்குரிய வசதிகளையும் அரசு செய்தல் அவசியம்.
நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குழந்தைத் தொழிலாளர்கள் நிறைய பேர் இருந்த யூ.கே போன்ற பல மேலை நாடுகள் இன்று முழுவதும் அதிலிருந்து விடுபட்டு விட்டன. அதற்கு சட்டங்களும் அரசின் தொலைநோக்குப் பார்வையுமே காரணம் எனலாம்.
யூ.கேவில் குழந்தைப் பராமரிப்புக்கு ஏராளம் நலத் திட்டங்கள் உள்ளன. தாய்மை நிலையிலுள்ளவர்களுக்கு, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, தத்து எடுத்துக் கொண்டவர்களுக்கு என பல சலுகைகள் உள்ளன. பெற்றோருக்கு வரிகுறைப்பு , குழந்தை பராமரிப்பு நிதி என பல அமலில் உள்ளன.
தாய்மை நிலையில் உள்ளவர்களுக்கு முப்பத்தொன்பது வாரங்கள் வரை அரசே உதவி செய்கிறது. மருத்துவ செலவுக்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாயை யூ.கே அரசு குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அளிக்கிறது.
குழந்தையின் பதினாறு வயது முடியும் வரைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை நலத் திட்ட உதவிகளை அரசு செய்கிறது. கல்வி கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு 20 வயது வரை அரசு உதவி செய்கிறது. குறைந்த வருமானம் உடைய பெற்றோரின் குழந்தைகளுக்கு உணவு, பள்ளிச் சீருடை, கட்டணம் முதலியவற்றை அரசே செலுத்துகிறது. குழந்தைகளைப் பராமரிக்கும் பாதுகாவலர்களுக்கும் அரசு பல சலுகைகள் நல்குகிறது.
பிரான்ஸ் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை குழந்தை நலனுக்காய் நல்குகிறது. தாய்மார்களின் மருத்துவச் செலவு, பெற்றோருக்கு உதவித் தொகை, கல்வித் தொகை தவிர ரெயில்வே போன்ற இடங்களிலும் 40 விழுக்காடு குறைந்த கட்டணத்தின் இருபது வயது வரை உள்ளவர்கள் பயணிக்க வகை செய்கிறது. வளர்ந்த நாடுகளில் அமலில் உள்ள இதுபோன்ற நலத்திட்டங்கள் அங்கே குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டது.
நெதர்லாந்து நாட்டில் 1900ல் ஆறாம் வயது முதல் பன்னிரண்டாம் வயது வரையுள்ள சிறுவர் சிறுமியருக்குக் கல்வி கட்டாயமாக்கப் பட்டது. முதலில் வெற்றி பெறாமல் இருந்த இந்த திட்டம் அரசின் தீவிர கண்காணிப்பினாலும், அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளினாலும் வெற்றியடைந்தது. முதலில் வெறும் 9 விழுக்காடு சிறுவர் சிறுமியர் மட்டுமே கல்விக்கு அனுப்பப் பட்டனர்.
அதன்பின் 1969ம் ஆண்டு ஆறாம் வயது முதல் பதினைந்தாம் வயது வரை கட்டாயக் கல்வி எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது மேலும் திருத்தப்பட்டு 1975ம் ஆண்டு ஆறு முதல் பதினாறுவயது வரை என்று நிர்ணயிக்கப்பட்டது.
பெல்ஜியம் நாட்டிலும் 1914ல் ஆறு வயதுமுதல் பன்னிரண்டு வயது வரை கட்டாயக் கல்விமுறை அமலுக்கு வந்தது. அது வளர்ச்சியடைந்து 1983ம் ஆண்டில் ஆறு வயதுமுதல் பதினெட்டு வயதுவரை என்றானது. பிரிட்டனிலும் 1857க்கு முன் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியறிவற்றே இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலமையோ வியப்பூட்டுகிறது.
ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைவு 1989ம் ஆண்டு ‘குழந்தைகளின் உரிமை’ பற்றிய ஒப்பந்தம் ஒன்றை இட்டன. அதன் படி சிறுவர்களுக்கு 52 உரிமைகள் இருப்பதாக அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. 189 நாடுகளில் இதுவரை அதில் கையொப்பமிட்டுள்ளன.
குழந்தைகள் குழந்தைத் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படாமலும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடவும், வீடுகளில் தங்கி வளரும் உரிமையையும், ஆரோக்கியமான வாழ்வுக்கு உரிமையுடையவர்களாகவும், கல்விக்கு உரிமையுடையவர்களாகவும், கருத்துச் சுதந்திரம் உடையவர்களாகவும், வன்முறைகளிலிருந்து காப்பாற்றப்படவேண்டியவர்களாகவும் குழந்தைகளை அந்த ஒப்பந்தம் சித்தரித்தது.
எளிய வேலையோ, கடினமான வேலையோ குழந்தைகள் தங்களுடைய வாழ்வின் அடிப்படையாகிய கல்வி போன்ற உரிமைகளை விட்டு விட்டு வேலை செய்வதே மனித உரிமைக்கு எதிரானதாகும் என்பதை அவை பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமாக வலியுறுத்தின.
மேலை நாடுகளில் 1851 ல் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை விதிகள் எட்டு வயதுக்குக் குறைந்தவர்களை வேலைக்கு வைப்பதை தடை செய்தது. தங்கச் சுரங்கம் போன்ற இடங்களில் வயது பத்து என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் காலம் செல்லச் செல்ல அந்த வயது வரம்புகள் ஒத்துக் கொள்ள முடியாதவை என்று விலக்கிக் கொள்ளப்பட்டன. குழந்தைகள் வேலைக்குச் செல்வதே தவறு என்பது உணரப்பட்டது.
வீடுகளில் இருக்கும் புகைபோக்கிகளைச் சுத்தம் செய்வதற்காக பயிற்சி பெற்ற சிறுவர்கள் புகை போக்கிகளில் ஏறி சுத்தம் செய்வது மேலை நாடுகளில் முன்பு இருந்த வழக்கம். பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு இந்த சிறுவர்கள் ஆளாவதாகச் சொல்லி 1875ம் ஆண்டு அது தடை செய்யப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் கூடிய ஒருங்கிணைந்த நாடுகளின் ‘மில்லேனியம் டெவலப்மெண்ட் கோல்ஸ்’ எனும் திட்டம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாகக் கையில் எடுத்துள்ளது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை ஒரு சமூக, இன, நாட்டுப் பிரச்சனை அல்ல எனவே அதை ஒரு சர்வதேசப் பார்வையில் பார்க்கவும், ஒழிக்கும் முயற்சிகள் எடுக்கவும் இந்த திட்டம் முயல்கிறது.
உலக குழந்தைத் தொழிலாளர்களில் 8 கோடி பேர் கடினமான ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. தெருவில் பிச்சையெடுத்து அலையும் சிறுவர்கள் ஆப்பிரிக்காவில் மட்டும் 10 இலட்சம் பேர் இருக்கின்றனராம்.
ஒரு குடும்பத்தின் வருமானத்தில் எட்டு முதல் பன்னிரண்டு விழுக்காடு வரை குழந்தைகள் சம்பாதிப்பதாகவும், இதனால் குழந்தைத் தொழிலின் முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது குடும்ப சூழல் என்றும் யூனிசெஃப் தெரிவிக்கிறது.
சமூகத்தின் வேர்களில் கரையானாக அரித்துக் கொண்டிருக்கும் இந்த சிறுவர் தொழில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து மனிதநேயமும், தொலை நோக்குப் பார்வையும், சமூக அக்கறையும் கொண்ட எவருக்கும் இருக்கப் போவதில்லை. இதை ஒழிக்க முக்கியத் தேவை என்ன ? கல்வி !
கல்வியைக் கட்டாயமாக்கும் எந்த ஒரு மாநிலமும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது கேரள அரசு. மத்திய அரசு கல்விக்கென ஒதுக்கும் நிதியை விட அதிகமாக சுமார் 12 சதவீதம் அளவுக்கு கேரள அரசு ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கியதால் இன்று கல்வியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாய் திகழ்கிறது. அங்கே குழந்தைத் தொழிலாளர்களே இல்லை எனலாம். அப்படி யாரேனும் தென்பட்டால் அவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.
கல்விக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்பும்போது தற்காலிகமாய் தடைபட்டுப் போகும் குடும்ப வருமானம் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தின் எழுச்சிக்கே அடித்தளமாக அமைகிறது என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கல்வியறிவு பெறாமல் சிறு சிறு வேலைகளில் ஈடுபடும் சிறார்கள் தாங்கள் சூழ்ந்திருக்கும் மக்களின் பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விரைவிலேயே சமூக விரோத செயல்களைச் செய்யவும், தன்னை வாழவைக்காத சமூகத்தின் மீது வன்முறைக் கோபம் கொள்ளவும் பழகிவிடுகிறார்கள்.
2015ம் ஆண்டிற்குள் ஏழு வயதுமுதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்த சர்வதேசத் திட்டம் செயலாக்கம் பெற்றால் பல பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு அது அடித்தளமாக அமையும்.
கல்வி அளிக்க முடியாத சூழலில் குழந்தைகளை வேலை செய்வதைத் தடுப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் வெறுமனே இருந்துவிட முடியாது வாழ்க்கைக்குரிய சூழல் அவர்களுக்காய் அமைக்கப்பட வேண்டும். இன்று பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு ஆண் பெண் ஏற்றத் தாழ்வும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
எகிப்து, ஜிம்பாவே போன்ற நாடுகளில் அதிக அளவில் துவங்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைகளினால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1997க்குப் பிறகு பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது.
குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிப்பதும், அந்த கல்வியைக் குழந்தை பெறுவதற்குரிய வாகன வசதிகளை செய்வதும் என உலக நாடுகள் பலவும் இப்போது குழந்தைத் தொழிலை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது.
குழந்தைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதால் குழந்தைகளின் கல்விச் செலவும், அந்த குழந்தையினால் வந்து கொண்டிருந்த வருமான இழப்பு எனும் இரட்டை இழப்பிற்கு குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. இதற்குரிய மாற்று வழிகளை குடும்பங்களும், அரசும் முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் வேலைக்குச் செல்தல் என்பது ஒன்று முதல் இரண்டு சதவீதம் மட்டுமே. அது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் இருபதை எட்டுகிறது. காரணம் வளர்ந்த நாடுகளில் காணப்படும் சட்டங்களின் செயலாக்கமும், விழிப்புணர்வும், சமூக அக்கறையுமே.
இந்தியாவில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் சட்டம் அமலில் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே அந்த விவரங்களைக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மூவாயிரத்து முப்பத்தெட்டு பள்ளிக்கூடங்கள் உள்ளன. தமிழகத்தில் 160 பள்ளிக்கூடங்களும், உத்திரப் பிரதேசத்தில் அதிக பட்சமாக 1075 பள்ளிக்கூடங்களும் உள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் தொழிலாளர் துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தான் சிறுவயதில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் அதை மறுத்து கல்வியே முக்கியம் என கைக்கொண்டதால் இன்று உயர் நிலையில் இருப்பதாகவும் சொல்லியிருப்பது குழந்தைத் தொழிலாளர் முறை எத்தனை உயரதிகாரிகளை முளையிலேயே கொல்கிறது என்பதைச் சொல்கிறது.
இந்தியாவில் குடும்பத்தாரால் நடத்தப்படும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை அரசு தடை செய்யவில்லை. எனவே பெரும்பாலான கிராமப்புறங்களில் சொந்த நிலத்தில் பணிசெய்யும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
ஏராளம் சட்டங்கள் எழுத்து வடிவில் இருந்தும் இன்னும் நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை ஏன் முற்றிலும் ஒழியவில்லை. ஒரு முக்கியமான காரணமாக தொழிற்சாலை நிறுவனத்தினர் கொடுக்கும் முட்டுக்கட்டை என்கின்றனர் விமர்சகர்கள். கம்பள ஆலை போன்றவற்றில் குழந்தைகளே பெருமளவில் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். அரசு கண்டு கொள்வதில்லை !
குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு வறுமை மட்டுமே ஒரே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகள் பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. வறுமையுடன் சேர்த்து, பெற்றோர் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் வயோதிகமாகவோ, ஊனமுற்ற நிலையிலோ இருத்தல், தாய் விதவையாக இருத்தல், பெற்றோர் குடி போன்ற போதைகளுக்கு அடிமையாய் இருத்தல் போன்றவையும் குழந்தைத் தொழிலாளர் நிலையை வளர்க்கின்றன.
மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும். குறிப்பாக குழந்தைகளால் வரும் வருமானம் தடைபடும் குடும்பங்களுக்கு அரசு ஏதாவது நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்க காவல் துறையில் தனி குழு அமைத்தல், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களை கடுமையாக தண்டித்தல், கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு இன்னொரு காரணமாக படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் எனும் நம்பகத் தன்மை இன்மையையும் குறிப்பிடலாம். பொறியாளர் தேர்வு முடித்தவர்களில் அறுபது விழுக்காட்டினரும், எம்.பி.எ படித்தவர்களில் எழுபத்தைந்து விழுக்காட்டினரும் இன்று வேலையின்றி அலைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எந்த வகையிலும் கல்வி கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை ஏற்படுத்தப் போவதில்லை. நம்பகத் தன்மையை அரசு உருவாக்க வேண்டும்.
கடனுக்காகவும், முன்பணத்துக்காகவும் கொத்தடிமைகள் போல உழைக்கும் சிறுவர்கள் பலர் பட்டாசு ஆலைகளில் உள்ளனர். இவர்களுடைய உளவியல் ரீதியான பாதிப்பு சொல்லக் கூடியதல்ல. கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்படும் சிறார்கள் அடைக்கப்படும் மறுவாழ்வு மையங்களின் நிலமையோ, சீர்திருத்தப் பள்ளிகளின் நிலமையோ கொத்தடிமை நிலையை விடப் பரிதாபம். மாதம் எட்டு ரூபாய் கூட இல்லை என்று அதிர்ச்சிச் செய்தி அளிக்கின்றன ஊடகத் தகவல்கள்.
2002ம் ஆண்டு மத்திய அரசு 2007க்குள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியைச் சாத்தியமாக்குவோம் என்று சூளுரைத்து சர்வ சிக்ஸா அபிமன் என்றொரு திட்டத்தைத் துவங்கியது. இப்போது ஆண்டு 2007 ! நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நாமறிவோம்.
குழந்தைத் தொழிலாளர் நிலை என்பது ஏதோ சில இடங்களில் நிலவி வரும் பிரச்சனையல்ல. இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான களங்கமும், உலக அரங்கில் நமது தேசத்தின் மீது சுமத்தப்படும் அவமானமும் என்பதை அனைவரும் உணரவேண்டும். பிரச்சனைகளை களையெடுக்க அரசும், அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு உறுதுணையாய் நாம் இருக்கவேண்டியது நம் தார்மீகக் கடமை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்

லேபிள்கள்:

தமிழ் மொழியை பாதுகாப்பது தமிழர் ஆகிய எமது கடமை

தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதி உரைத்தது உண்மைதானா? அச்சிடும் ஆப்செட் போன்ற எந்திரங்களின் வருகையால் தமிழ் இனி மெல்ல அச்சாகும்.

சுவைக்கத்தக்கது இந்தச் சொல்நயம். கணினித் தட்டச்சு, ஒளிக்கதிர் அச்சு என்றெல்லாம் வந்துள்ள இன்றைய சூழலில் இந்தச் சொல்நயம் பொருத்தமாகவும் இருக்கிறது.

அண்மையில் வெளியான ஒரு செய்தி: ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) உலகில் வேகமாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. தற்போதைய நிலைமை நீடிக்குமானால் அடுத்த ஐம்பதாண்டுகளில் தமிழும் இப்பட்டியலில் இடம்பெறும் என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
இந்தச் செய்தி ஏற்படுத்துகிற ஆழ்ந்த தாக்கத்தில் மேற்படி சொல்நயத்தைச் சுவைக்க முடியவில்லை. தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற ஓலம் உண்மைதானோ என்ற கவலை சூழ்கிறது.

தமிழ் மக்களின் ஆங்கில மோகம்; சந்துக்குச் சந்து ஆங்கிலப் பள்ளிகள் திறப்பு; ஊடகங்களின் அலட்சியம்; அரசாங்கத்தின் அக்கறையின்மை... என்றெல்லாம் காரணங்கள் கூறப்படுகின்றன. கவிதைக்கும் காதல் கற்பனைக்கும் ஏற்ற தமிழ் இன்றைய கணினிக்கும் நவீன தொழில் வளர்ச்சிக்கும் ஈடுகொடுப்பதாய் இல்லை என்று கூறுவாரும் உண்டு. மாறிய சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத எந்தவொரு மொழியும் அழிந்து வரும் அரிய மொழிகள் பட்டியலில் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது என்ற ஒரு வாதமும் வைக்கப்படுகிறது.

தமிழ் குறித்து உணர்ச்சிவசப்பட வைக்கும் எண்ணங்கள் ஊட்டப்பட்ட அளவுக்கு, அதன் வளர்ச்சிக்கான சிந்தனைகள் வளர்க்கப்படவில்லை, செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, என்பன போன்ற வீர முழக்கங்கள் எந்த அளவுக்கு மொழியின் மேம்பாட்டிற்கு வழி வகுத்தன என்ற கேள்வியை இப்போதாவது எழுப்ப வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் முழங்காமலே தமிழின் பாதையைச் செப்பனிட முன்வந்தவர்கள் மொழிப்பற்றில்லாதவர்கள் என்று முத்திரையிடப்பட்டார்கள். இன்று கணினி மெல்லியத்திலும் இணையத்தளத்திலும் தமிழை உலாவரச் செய்தவர்களில் பலர் இப்படியான முழக்கங்களை எழுப்பாதவர்கள்தான்.

மக்களிடையே ஆங்கில மோகம் வளர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். பல இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒரு இடத்தில் கூடியிருப்பார்களானால் எல்லோரும் இயல்பாக அவரவர் தாய்மொழியில்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அங்கே ஆங்கிலம் தாய்மொழியல்லாத ஒரு இனத்தைச் சேர்ந்த இருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பார்களானால் அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். மற்றவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியத்தை அவ்வாறு வேறு மொழியில் பேசிக்கொள்கிறார்கள் என்றாலாவது புரிந்துகொள்ளலாம். ஆனால் காலையில் என்ன சாப்பிட்டாய் என்பது போன்ற பேச்சுக்களைக் கூட ஆங்கிலத்தில் நிகழ்த்துகிறார்கள்!

இந்த மோகத்தை முதலீடாக்கித்தான் சிகரெட் கடைகள் போல் ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வீட்டிலும் வீதியிலும் பேசுகிற மொழி ஒன்றாக இருக்க இப்படி மூளையில் திணிக்கப்படுகிற இன்னொரு மொழியால் உண்மையான முன்னேற்றம் காண முடியுமா? தமிழர்கள் எத்தனை பேர் நவீன அடிமைகளாக எத்தனை வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் அலுவலர்களாகவும் வேலைசெய்கிறார்கள் என்பது தமிழ்ச்சமுதாயம் முன்னேறியதன் அடையாளமாகுமா?

அறிவியல் உண்மைகளைப் பயன்படுத்தி சாதனைகள் செய்கிற தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிக்கிற தமிழர்கள் இல்லை அல்லது மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் அறிவியலைத் தாய்மொழியில் கற்கவில்லை, மொழிபெயர்ப்பின் மூலமாகவே கற்றார்கள் என்பதுதான். ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்கிறபோது மூளை நேரடியாக அதை ஆங்கிலத்தில் யோசித்துச் சொல்வதில்லை, தமிழில் யோசித்துப் பிறகு மொழிபெயர்த்தே சொல்கிறோம். அதே போல் ஆங்கிலத்தில் ஒன்றைக் கேட்கிறபோது தமிழில் மொழிபெயர்த்தே புரிந்துகொள்கிறோம். எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக இந்த மொழிபெயர்ப்பை ஒருவரது மூளை செய்கிறது என்பது அவரவருக்குக் கிடைக்கிற பயிற்சியையும் வாய்ப்பையும் பொறுத்தது. இவ்வாறு மூளை இரட்டை வேலை செய்வது தேவையற்ற சுமை. அதனால்தான் தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகமாக இல்லை. இத்தகைய நிலைமை உள்ள எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு மூளைக்கு இரட்டை வேலை கொடுப்பது தமிழ் மக்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டதா அல்லது ஏற்றப்பட்டதா?

ஆங்கிலத்தில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்றியதில் அரசாங்கத்திற்குப் பங்கில்லையா? வேலைவாய்ப்புகளை உருவாக்காத தொழிற்கொள்கைக்கும் இதற்கும் தொடர்பில்லையா?
தமிழக அரசின் சட்டங்களும் ஆணைகளும் இப்போதும் ஆங்கிலத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. பின்னர்தான் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றெல்லாம் மைக் தெறிக்கப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்திய மொழிகளில் ஒன்றாகிய இந்தி திணிக்கப்படுவதைத் தடுத்தார்கள். ஆனால் அங்கே தமிழ் ஆள்வதற்கு வழிசெய்யவில்லையே! ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்குத்தானே ரத்தினக் கம்பளம் விரித்தார்கள்! இன்றோ எங்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடங்களும், இந்தி வகுப்புகளும் அமோகமாக நடக்கின்றன.

இதில் இந்தியாவின் மைய ஆட்சியாளர்களது பங்கு குறைந்ததல்ல. சொல்லப்போனால் அதுதான் மையமானது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிற சட்டங்கள், தீர்மானங்கள் யாவும் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன. பின்னர்தான் இந்தியில் - இந்தியில் மட்டும் - மொழிபெயர்க்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகிற மக்கள் பிரதிநிதிகள் ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே விவாதங்களில் பங்கேற்க முடியும். இந்தி மாநிலங்கள் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் பேச முன்னனுமதி பெற வேண்டும். அமைச்சர்களுக்கோ அந்த அனுமதியும் கிடையாது.
யாரும் அவரவர் மொழியில் பேசலாம், அதை மற்றவர்கள் அவரவர் மொழியில் கேட்கலாம் என்ற மொழிபெயர்ப்பு வசதியை நாடாளுமன்றத்தில் நிறுவுவது குறித்து மைய ஆட்சியாளர்களும் கவலைப்படவில்லை; மாநிலங்களில் மொழி உரிமை குறித்து நரம்பு தெரிக்கப் பேசி வந்தவர்களும் அலட்டிக்கொள்ளவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், நாடாளுமன்றத்தில் இவ்வாறு நொடிப்பொழுதிலேயே மொழிபெயர்க்கும் ஏற்பாட்டைச் செய்வது கடினமல்ல. வேடிக்கை என்னவென்றால், இந்த அடிப்படை மாற்றத்திற்கான கோரிக்கையை வலியுறுத்துகிறவர்கள், மொழிப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட மார்க்கியவாதிகள்தான்!

மைய அரசு மாநிலங்களுக்கு அந்தந்த மொழியிலேயே அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும்; மாநில அரசுகள் தத்தம் மொழியிலேயே மையத்திற்கு அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும். அந்தந்த மட்டத்தில் இவற்றை உடனுக்குடன் மொழிபெயர்த்துக்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மைய அரசு சமமாக மதிக்கிறது என்பதற்கான உறுதிப்பாடாக இருக்க முடியும்.
இதையும் மார்க்சியவாதிகளன்றி வேறு யாரும் வலியுறுத்துவதில்லை. சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றின் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் ஆள்வோரும், அதிகார வர்க்கமும், இவர்களை ஆட்டுவிக்கும் சக்திகளும் கவனமாக இருக்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்?

நீதிமன்றத்தில் தமிழ், நிர்வாகத்தில் தமிழ், உயர் கல்வியில் தமிழ் என்ற கோரிக்கைகள் இதுவரை மைய அரசாலும் மாநில அரசாலும் குப்பைத் தொட்டிக்குத்தான் அனுப்பப்பட்டு வருகின்றன. மாநில அரசைப் பொறுத்தவரை வர்த்தக நிறுவனங்கள் பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வேண்டும், அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பன போன்ற மேம்போக்கான ஆணைகளை அவ்வப்போது வெளியிடுவதோடு சரி. மேற்கூறிய அடிப்படை நடவடிக்கைகளுக்குத் தயாராக இல்லை.

இப்படியாகத்தான், தமிழிலேயே பயின்றால் உள்ளூரிலேயே முடங்கிவிடவேண்டியிருக்கும் என்ற அச்சம் மக்கள் மனங்களில் குடியேற்றப்பட்டது. அவையத்தில் தம் மக்கள் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற நியாயமான ஆசை உள்ள பெற்றோர், அவரவர் பொருளாதார வசதிக்குத் தக்கபடி ஆங்கில வழிப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளை அனுப்புகிறார்கள். ஆம், இந்த ஆங்கில மோகம் என்பதே கூட வலுக்கட்டாயமாக ரத்தக்குழாயில் ஏற்றப்பட்ட போதை மருந்து போன்றதுதான்.

தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற அச்சத்திற்கு இதையெல்லாம் தாண்டிய வேறொரு காரணம் இருக்கிறது. அதுதான் இன்றைய உலகமய சந்தைப் பொருளாதாரம். சமூக அக்கறையோ, உரிமைகள் குறித்த விழிப்போ இல்லாத நவீன அடிமைகள்தான் தேவை என்கிறது இந்தச் சந்தை. அதற்கேற்ப இந்திய அரசு மண்டியிட்டு, நாட்டின் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. நிதிச் சட்டங்களை வளைத்துக்கொடுக்கிறது. அணு மின்சார உற்பத்திக்கான உடன்பாடுகளில், விபத்து ஏற்படுமானால் அதற்கான இழப்பீடு பொறுப்புகளிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை விடுவிக்கும் விதிகளுக்கு உடன்படுகிறது. இதன் இன்னொரு பகுதியாகத்தான் ஆங்கில ஆதிக்கத்திற்குக் கோட்டைக் கதவுகள் திறந்துவிடப்படுகின்றன.

எனது அன்றாட ரயில் பயணத்தில் ஐ.டி. செக்டார் எனப்படும் தகவல்தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் பலரையும் காண்கிறேன். மடிக்கணினிகளை விரித்து வைத்துக்கொண்டு அவர்கள் உரையாடுவதைக் கவனிக்கிறேன். அந்தப் பேச்சில் ஜி.பி., பைட், மெகாபைட், ரெசல்யூசன், டிஜிட்டல்... என்ற அவர்களது தொழில்சார்ந்த சொற்களைத் தவிர வேறு எதையும் கேட்க முடிவதில்லை. ஒப்பீட்டளவில் உயர்ந்த ஊதியம் பெறுகிற அவர்கள் நாட்டின் அரசியல், சமூக நிலைமைகள் குறித்தெல்லாம் விவாதிப்பதையோ விமர்சிப்பதையோ கேட்க முடியவில்லை. சமுதாயத்தை விடுங்கள், இளைஞர்களுக்கே உரிய பாலின ஈர்ப்பு (அதாவது அவர்கள் சைட் அடித்த விவகாரங்கள்) சார்ந்த தகவல்களைக் கூட பரிமாறிக்கொள்வதில்லை! இப்படி வாழ்வியல் இயல்புகளிலிருந்தே துண்டிக்கப்பட்டுள்ள இவர்கள் தங்களது நிறுவனத்தில் நடக்கிற உழைப்புச் சுரண்டல் பற்றியோ, தொழிற்சங்க உரிமைகள் பற்றியோ பேசுவார்கள் என்று கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு மெல்லிய வல்லுநர்களை வன்மையாய் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது உலகமயச் சுரண்டல்.

அரசியல் அதிகாரத்துடனோ, ராணுவ பலத்துடனோ அல்லாமல் இவ்வாறு அடிமைப்படுத்துவதற்கான நிதி முதலீடு, தொழில்நுட்பங்கள், எந்திரங்கள், வர்த்தக உடன்பாடுகள் போன்ற கருவிகளில் ஒன்றுதான் ஆங்கிலமும். அதுவும், முன்பு உலகத்தை அடக்கியாண்ட பிரிட்டிஷ் ஆங்கிலம் அல்ல; இன்று உலகத்தை ஆளாமலே அடக்க முயல்கிற அமெரிக்க ஆங்கிலம். இந்தியாவைப் பொறுத்தவரையில் இதன் தனித்தன்மையான சாதியப் படிநிலை ஏற்பாடு கூட நவீன உழைப்புச் சுரண்டலுக்கும், நவீன மூளைச்சலவைக்கும் உதவியாக இருக்கிறது. ஆகவேதான் சமூக நீதியை நோக்கிச் செல்வதற்கான இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை பிரம்மனின் தலையில் இருந்து பிறந்த வர்ணத்தவர் அல்லாத மற்ற மூன்று வர்ணத்தவர்களும் கூட எதிர்க்கிறார்கள். ஏன், வர்ண அடுக்கிற்குள்ளேயே சேர்க்கப்படாமல் வெளியே நிறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளின் படித்த இளைஞர்களிடையே கூட, பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்பது போன்ற நுனிப்புல் சிந்தனைகள் பரவியுள்ளன. இப்படிப்பட்ட உலக - உள்நாட்டு நிலைமைகளிலிருந்து மொழி என்பதைப் பிரித்துக் கையாள முடியாது. யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையில், தற்போதைய நிலைமைகள் நீடிக்குமானால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெற்றுவிடும் என்ற குறிப்பை, இந்த நிலைமைகளோடு இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ் இனி மெல்லச்சாகும் ஒரு பேதை உரைத்ததாக பாரதி பாடினான். உண்மையிலேயே அது பேதைமையான புலம்பலாகவே போய்விட வேண்டும், அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உலக - உள்நாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு, சாதிய ஒழிப்பு போன்ற போராட்டங்களோடு இணைந்ததே மொழிப் பாதுகாப்புக்கான போராட்டமும். அடக்குமுறைகளுக்கும் துரோகங்களுக்கும் எதிராக ஆங்காங்கே ஒலிக்கும் குமுறல் ஒலிகள் இந்தப் போராட்டங்கள் பற்றிய நம்பிக்கையை விதைக்கின்றன. வர்க்கப் பிரச்சனை வேறு, வர்ணப் பிரச்சனை வேறு என்று பிரித்துவைத்து, ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தடம் மாற்ற முயல்வோர் குறித்த எச்சரிக்கையோடு மக்களை அணிதிரட்டினால் போராட்டம் வெற்றிபெறும். அந்த வெற்றியின் பலன்களில் ஒன்றாக தமிழ் இனி மெல்ல அச்சாகும் என்பது மட்டுமே நடப்பாகும்.

லேபிள்கள்:

உலக வங்கி கூறும் கல்வி முறை

உலக நாடுகள் வேலைவாய்ப்பை தரும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

வகுப்பறையில் மாணவர்களை அதிகநேரம் செலவழிக்க வைப்பதைவிட, அவர்கள் படித்து முடித்தவுடன் வேலை பெறுவதற்கு ஏதுவான கல்வியின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான கல்வி கொள்கையை துவக்கி வைத்து உலக வங்கி தலைவர் ராபர்ட் சோலிக் கூறியதாவது, "பொருளாதார மேம்பாடு, நல்ல முன்னேற்றம், வறுமையை குறைத்தல் ஆகியவை அறிவையும், திறனையும் பொறுத்து இருப்பதால், நல்ல தரமான கல்வியை மாணவர்கள் பெறுவது அத்தியாவசியம். இந்த புதிய கொள்கையின் மூலம், வரும் 2015 ம் ஆண்டுக்குள், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் பொருட்டு பல நாடுகளுக்கு உதவ, உலக வங்கி மீண்டும் உத்திரவாதம் அளித்துள்ளது.

ஒரு அறிக்கையின்படி, உலகளவில் 21 கோடி பேர் வேலையின்றி இருப்பதாக கூறப்பட்டாலும், இன்னொரு அறிக்கையோ, பல பணிகளுக்கு திறமையான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறது.

தற்போது உலக நிலைமை வேகமாக மாறி வருகிறது. வளரும் நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தங்களிடம் உள்ள அதிகளவிலான இளைஞர் பட்டாளத்திற்கு நன்கு பயிற்சியளித்து பயன்பெறுவது தொடர்பாக கவலை அடைந்துள்ளன. வளர்ந்த நாடுகள் கல்வியின் முழு பலனையும் பெற, மனித அறிவின் திறனை அவர்கள் பயன்படுத்த வேண்டும். கல்வியை விட சிறந்த கருவி எதுவும் இல்லை" என்று கூறினார்.

லேபிள்கள்:

இந்தியா ஆரம்ப கல்வியில்

ஒவ்வொரு குடிமகனின் மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கும், ஆரம்ப கல்வியே அடித்தளமாக அமைக்கிறது. தற்போதைய கடந்த காலத்தில், இந்தியா ஆரம்ப கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவையாவன; ஆரம்ப கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாதியில் விட்டுச்செல்லாமல் கல்வியை தொடர்வது, ஒழுங்காக பள்ளிக்கு வருதல் மற்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு கல்வியை விரிவு படுத்துதல் ஆகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கினை வகிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் தொடக்கநிலை கல்வியின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தின்படி குழந்தைகளுக்கு பதினான்கு வயது வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், தற்போது பாராளுமன்றம், கல்வி உரிமை விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்டை உரிமையாகும். இந்த நேர்த்தியான இலக்கான, எல்லாருக்கும் தொடக்ககல்வி கிடைக்கச் செய்தலை (அதாவது எல்லா பகுதிகளிலும் உள்ள, 100 சதவீதம் குழந்தைகளும் தொடக்க கல்விக்கு பதிவு செய்தல் மற்றும் யாரும் விட்டுச் செல்லாமல் இருத்தல்), இன்னும் இந்தியா அடையவில்லை. இந்த இலக்கை அடையவே, அரசானது 2001-ல் சர்வ சிக்ஷா அபியான் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறுவியது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ICT யானது, குறிப்பாக கிராமபுற இந்தியாவில் கல்வி அமைப்பில் இருக்கும் மற்றும் இல்லாத வசதிகளை சரி செய்து வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய அறிவுபூர்வமான செய்திகளை வழங்கி, தொடக்க கல்வியை எல்லாருக்கும் கிடைக்க செய்வதற்கான முயற்சியை, இந்தியா டெவலப்மென்ட் கேட்வேயின், ஆரம்ப கல்வி முகவையானது புரிந்துவருகிறது

லேபிள்கள்:

சூழலைப் பாதுகாத்தாலும் அதனை பின்பற்றும் முறையும்

சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகலாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப்பொருளாதார ஒழுங்கமைப்பில் விவசாயத்துறையிலே இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றக்கூடிய சாத்தியப்பாட்டையும் எமது பிரதேச சூழலில் இதனைப் பின்பற்றும் ஏதுநிலை பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது.

உலக சூழல் பிரச்சனைகள் எனும் போது பொதுவாக சுற்றுப்புறம் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் பற்றியும் பலர் பேசுவதுண்டு. ஆனால் சூழல் பிரச்சனைகளை புவிக்கோளம் சார்ந்த உலகளாவிய ரீதியில் அணுகுதல் வேண்டும். இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு புவிக்கோளம் சார்ந்த சூழல் அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் முதற்கண் அவசியம்.

சூழற்பாகுபாடும் பிரச்சனைகளும்.

புவிச்சூழலை கற்கும் வசதிகருதி நான்கு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம் நிலமண்டலம் (Lithosphere)> நீர்மண்டலம் (Hydrosphere), வளிமண்டலம் (Atmosphre), உயிரியல் மண்டலம் (Bioshpre) என்பன அவையாகும். இவை ஒவ்வொன்றும் சில துணைப்பிரிவுகளையும் கொண்டுள்ளன. நிலமண்டலத்தினுள் புவிச்சரிதம்(Relief), மண்(Soil), ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர்(Surface water), தரைக்கீழ் நீர்(Under ground water), சமுத்திரங்கள்(Oceans) ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும் (Climate) அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (Natural Vegetation), விலங்கினங்கள், பறவையினங்களின் வாழ்க்கை (Animals life) ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.

உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில் இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து புவித்தொகுதியின் சகல கூறுகளின் மேலும் அவன் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனித வாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் வெவ்வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளை தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்தி வந்தமையை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனித தேவைக்குரிய வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவனது வாழ்வுக்காக எப்பிரச்சனையுமின்றி வழங்கி வந்தது. மனித குலத்தின் இயற்கைக்கு மாறான அதிகரிப்பும் அவனது பேராசைக்குரிய தொழில்நுட்ப வளர்ச்சியும் புவித்தொகுதி வளங்களை பெருமளவு சுரண்டின. வீண்விரயமாக்கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக வளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை ஏற்பட்டது.


இயற்கை வேளாண்மை

பசுமைப்புரட்சியால் விவசாயத்துறையில் துரிதஎழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்க அதன் எதிர் விளைவாக உயிர் சூழல்மண்டலம் நஞ்சாகிக் கொண்டிருந்தது. பசி பட்டினியால் உலகில் சிவப்புப்புரட்சி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவியபோது மூன்றாம் உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்குலகத்தால் பசுமைப்புரட்சி அவசரமாக புகுத்தப்பட்டது எனவும் விமர்சிப்பர். றொக்பெல்லர் போட் ஆகிய பல்தேசிய நிறுவனங்கள் பசுமைப்புரட்சி என்ற நடவடிக்கைகளுக்கு உதவிவந்தமை இவ் ஜயுறவை வலியுறுத்தும். இவ் ஆய்வின் பெறுபேறான பசுமைப்புரட்சியின் வித்தான புதிய இனவிதைகளைக் கண்டுபிடித்தமைக்காக 1970 ஆம் ஆண்டில் நோர்மன் போர்லாங் அவர்களுக்கு நோபல்பரிசு கிடைத்தது.

பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் விவசாயத்துறையில் இரசாயனத்தொழில்நுட்ப மாற்றங்களையும் பொறிமுறைத் தொழில்நுட்ப மாற்றங்களையும் புகுத்தின. இவை மூன்றாம் உலக நாடுகளுக்குப் புதியன என்பதோடு இந்நாடுகளின் பாரம்பரிய விவசாயத்துறையை மேற்கு நாடுகளின் நவீன உற்பத்திகளின்றி வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியாத நிலைமைகளையும் தோற்றுவித்தன. இரசாயன உரப்பாவனை, களைகொல்லிப் பாவனை, கிருமிநாசினிப் பாவனை என்பன மண், நீர் நிலைகள், தாவரம் என்பனவற்றையும் நஞ்சாக்கிற்று. இதனால் எழுபதுகளில் உச்சம்பெற்றிருந்த பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் எண்பதுகளில் விமர்சனத்தை எதிர்நோக்கி தொண்ணூறுகளில் மாற்றத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இதனாலேயே இன்று உலகம் மீண்டும் இயற்கைவேளாண்மை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.

இயற்கைவேளாண்மையை நிலைத்துநிற்கக்கூடிய வேளாண்மை, நிலையான வேளாண்மை, பேண்தகு வேளாண்மை என்று பலவாறு வழங்குவர். இயற்கை வேளாண்மை பழமைக்குத் திரும்புதல் எனப் பொதுவாக கூறப்பட்டாலும் இன்றைய உலக நிலவரங்களை அதாவது குடித்தொகை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, சூழல் நெருக்கடி என்பனவற்றை மனங்கொண்டு புதுப்பொருளாதார ஒழுங்கின் அடியாகச் சிந்தித்ததன் விளைவே இது எனலாம். இயற்கை வேளாண்மையின் தந்தை என ஜப்பானியக் காந்தி மாசானபு ஃபுகாகோ (Masanabu Fukuoka)வைத் தரிசிக்கலாம். இவர் இயற்கைவேளாண்மையை வலியுறுத்தி எழுதிய “ஒற்றை வைக்கோல் புரட்சி” (One Straw Revolution -1975) என்ற நூலும் “இயற்கைக்கான வழி” (The road to nature – 1977) என்ற நூலும் மிகவும் பிரபலமானவை. இந்நூல்கள் பலமான ஆதரவையும் கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டவை. இவர் வழியில் இன்றும் பலர் சிந்தித்து வருகின்ற போதிலும் பில் மோலீசின் (Bill Mollision) டேவிட் ஹம்ரன் (David Homton) ஜே.ஜே றோடேல் (J.J.Rodale) என்பவர்களும் மூன்றாம் உலகைச் சேர்ந்த இன்னும் சிலரும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

மாசானபு ஃபுகாகோ இயற்கை வேளாண்மை பற்றி வெறும் போதனை செய்யவில்லை. அதன் சிறப்பை செயல்முறையூடாகக் காட்டுகின்றார். ஜப்பானில் ஹிகோதீவின் மலைச்சாரலில் இவரது 15 ஏக்கரளவான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இது முற்றுமுழுதான இயற்கை விவசாயப் பண்ணையாக விளங்குகின்றது. நுண் உயிரியலாளராகவும் விவசாய சுங்க அதிகாரியாகவும் பணியாற்றி இவர், 25 வயதில் அவற்றைத் துறந்து இயற்கை வழி விசாயத்தில் நாட்டம் கொண்டார். இவர் ஒரு பொளத்த மதத்தினராக விளங்கியமையும் இயற்கையில் அதிகம் நாட்டம் கொள்ள வைத்ததெனலாம். அவரது இயற்கை நேசிப்பினை அவரது நூலில் விரவிவரும் பின்வரும் கூற்றுக்களால் உணர்ந்து கொள்ளமுடியும்.

மனிதர்களால் எதையும் அறிந்துகொள்ளமுடியாது என்பதையும் இயற்கையைப் புரிதல் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விடயம் என்பதையும் இறுதியில் அறிவதற்காகவே நாம் கடினமாக கற்கவேண்டியுள்ளது,

வாழ்க்கை என்பது இயற்கையிலிருந்து விலகிய ஒன்றாக இருக்கக்கூடாது. வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமையடையச் செய்வதே….

மனிதன் தனது சொந்த விருப்பத்தைவிட்டு, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் இயற்கை அவனுக்குச் சகலதையும் அளிக்கும். மக்கள் இயற்கை உணவை விட்டு எப்போது செயற்கை உணவைத் தேர்ந்தெடுத்தார்களோ அன்றே அவர்கள் தம் அழிவுக்கான தேதியைக் குறித்துவிட்டார்கள்.

Masanobu Fukuoka,(1975) one straw Revolution.

இயற்கை வேளாண்மையை ‘ஒன்றும் செய்யாமல் ஒரு வேளாண்மை’ என்று குறிப்பிடும் மாசானபு ஃபுகாகோ தான் தன் வயலில் வேலை செய்யும் போது ‘இதனையும் செய்யாமல் இருந்தால் என்ன?’ என்ற கேள்வியைத் தன் மனதில் கேட்டுக்கொண்டே செய்வதால் இயற்கை வழியில் அனைத்தையும் விட்டுவிட முடிகின்றது என்கிறார். தன் பண்ணையில் உலாவரும் போது இயற்கையாக வளர்ந்த நெற்கதிர் ஒன்று நவீமுறையில் பயிராகும் நெல்லைவிட மிக்க ஆரோக்கியமாகவும், அதிக கதிர்களைக் கொண்டதாகவும் விளங்கியதைக் கண்டே தான் இயற்கைவழி விவசாயத்தின்பால் அக்கறை கொண்டதாக கூறும் இவர், புவியிலிருந்து வரும் அனைத்தும் புவிக்கே திரும்பிவிட வேண்டும். நெற்கதிர்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறுகின்றார். அவர் முன்வைக்கும் இயற்கை வேளாண்முறையில் நான்கு அம்சங்கள் முக்கியமானவை.

மண்வளம் பேணுதல் பற்றிக் கூறும் போது பயிர்வளர்ச்சிக்கு பண்ணையை உழ வேண்டியதில்லை. தாவரங்களின் வேர்களும், மண் புழுக்கள், முயல் மற்றும் ஏனைய சிறு விலங்கினங்கள் என்பன இயற்கையாகவே மண்ணை உழுகின்றன. உக்கவைக்கும் நுண்ணங்கிகளின் பெருக்கம் மண் வளத்தையும் பெருக்கும் என்கின்றார்.

பயிர் வளர்ச்சிக்குரிய உரம் பற்றிக் குறிப்பிடும் போது நிலத்தை அதன் போக்கில் விடுவோமாயின் இயற்கையாகவே அது மண்ணில் உரச்சத்தை நிர்வகித்துக்கொள்ளும். பண்ணையில் வளரும் மிருகங்களும், பறவையினங்களும் இயற்கையாக உரத்தை வழங்கும். வைக்கோலை வெளியேற்றாது விட்டால் அது உக்கி உரத்தை வழங்கும் எனக் கூறும் அவர், காட்டில் செழித்து வளரும் மரங்களுக்கு நாம் உரமிடுகின்றோமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.

களைகளின் வளர்ச்சி இயற்கை சமச்சீர்த்தன்மையைப் பேணும் ஒரு நடவடிக்கையே. அதனை உழுது அழிக்க எண்ணினால் அது பெருகுமேயன்றிக் குறையாது. பருவப்பயிர்களுக்கிடையே ஊடுபயிர்களை வளர்ப்பது வைக்கோலால் நீண்டகாலம் வயல் பரப்பை மூடிவைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் களையைக் கட்டுப்படுத்தும் என்கின்றார்.

பூச்சிக்கட்டுப்பாடு பற்றிக் குறிப்பிடும் போது மாசானபு ஃபுகாகோ இயற்கையான சுற்றுச் சூழலில் வளரும் பயிர்க்ள் ஆரோக்கியமானவையே. இயற்கையில் பூச்சிகளுக்கு எதிர்ப் பூச்சிகள் உண்டு. நாம் கிருமிநாசினி தெளிப்பதால் அனைத்துப் பூச்சிகளும் அழிந்து இயற்கைச்சமநிலை அற்றுப்போகின்றது. சிலந்திவலை பின்னி என் பண்ணை முழுவதையும் பாதுகாப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்க முடியம். எனது பண்ணை சிலந்திவலைப் பரவலால் மின்னிக்கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். மயிர் கொட்டிகளை செம்பகம் அழிக்கும். எலிகளை ஆந்தைகள் அழிக்கும். தவளை, தேரை என்பனவும் பூச்சிகளிலிருந்து பயிர்களைக் காக்கும். இயற்கையின் விந்தைகளை எம்மால் பூரணமாக விளக்க முடியாது என்று வலியுறுத்துகின்றார்.

மாசானபு ஃபுகாகோவின் பண்ணையின் பெரும்பரப்பு பல்வகை பழ மரங்களைக் கொண்டதே. இவை ஒன்றுடன் ஒன்று இயற்கையாக இணைந்து அற்புதமாக வளர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் பழங்கள் இயற்கையாக ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படும். சில சுருக்கம் விழுந்தும் வாடியும் இருக்கும். இவ் இயற்கைப்பழங்களுக்கு நவீனமுறையில் உற்பத்தியாகும் பழங்களைவிட ஜப்பானில் நல்ல சந்தை வாய்ப்புகள் உண்டு. நவீமுறையில் உற்பத்தியாகும் பழங்கள் கவர்ச்சியாக இருப்பதற்காக மெழுகு கூடப் பூசுகின்றார்கள். வாடாது இருக்க இரசாயன கலவைகளைத் தெளிக்கின்றார்கள். இவை எல்லாம் மக்களின் உணவை நஞ்சாக்கும் நடத்தைகள் என மாசானபு ஃபுகாகோ சாடுகிறார்.

இவரது பொருளாதார சிந்தனைகள் நவீனபொருளிளயலாளரது சிந்தனையிலிருந்து மாறுபட்டவை. விவசாய நடவடிக்கைகளில் குறைந்தளவு மக்கள் இருப்பது ஒரு அபிவிருத்தி குறிகாட்டியென நவீன பொருளியலாளர் கூற இவர் 80-90 வீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமெனக் கூறுகின்றார். பொருளாதார வளர்ச்சி வீத அதிகரிப்பைப் பற்றி அலட்சியப்படுத்தும் இவர் வளர்ச்சி வீதம் 0 ஆக இருப்பதே நிலையான பொருளாதார வளர்ச்சி என வாதிடுகின்றார். மாசானபு ஃபுகாகோ நவீன உலகில் பழமையைப் பேணுவதன் மூலம் புதுப்பொருளாதார ஒழுங்கை உருவாக்கமுடியுமென்று சொல்லாலல்ல செயல்மூலம் நிரூபித்து வருகின்றார்.

சூழலுக்கு ஊறுவிளைவிக்காத நிலைத்து நிற்கும் வேளாண்மை பற்றிய கருத்துக்களை உலகிற்கு பரப்பி வரும் இன்னொரு முக்கியமானவர் பில் மோலீசன் (Bill Mollisipon) ஆவார் இவரும் டேவிட் ஹோம்ரன் என்பவரும் இணைந்து ‘ஃபோமா கல்சர்’ என்ற நூலை 1978 இல் வெளியிட்டனர். இதன் அர்த்தம் நிலைத்துநிற்கும் பயிர்ச்செய்கை (Permnanent Culture) என்பதாகும். இவர்கள் இந்நூலில் மாசானபு ஃபுகாகோ சிந்தனைகளால் கவரப்பட்டுள்ளமை நன்கு வெளிப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் டயால்கம் (Taylgum) என்ற இடத்தில் நிலைக்கும் பயிர்ச்செய்கை நிறுவனம் (Perma Culture Institute) என்ற அமைப்பினை நிறுவி அதனூடாக மேற்படி வேளாண் முறைகளை உலகிற்குப் பரப்பி வருகின்றார்கள். உலகில் இவர்களுக்கு 54 நாடுகளில் கிளை நிறுவனங்கள் உண்டு. இந் நிறுவனங்களின் மூலம் நிலைக்கும் வேளாண்மையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முறையான பாடத்திட்டம் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சியில் விவசாயச் செய்முறை அத்துடன் இணைந்த தோட்டக்கலை, கட்டிடக்கலை, போக்குவரத்து, நிதி, சமூக அபிவிருத்தி திட்டங்கள், விரயமற்ற உற்பத்தி, சுற்றுவட்ட முறையில் வளங்களைப் பயன்படுத்துதல். உள்ளுர் பாரம்பரிய தாவர வித்துக்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல், தரிசான நிலங்களை வேளாண்மைச்செய்கை மூலம் சீர்செய்தல் என்பன அடங்கும். இவற்றை ஒழுக்கநெறியுள்ள திட்டமிட்ட விஞ்ஞானமாகக் கொண்டே பயிற்றிவிக்கின்றார்கள்.

நிலைக்கும் பண்பு புவியின் பாதுகாப்புக் குறித்த ஒழுக்கநெறி மாத்திரமன்றி மனிதபாதுகாப்புக்குறித்த ஒழுக்கநெறியுமாகும். இவர்களது போதனையில் நுகர்வது போக எஞ்சிய அனைத்தும் மறுமுதலீடாக புவிக்கே திரும்பி விடவேண்டும். புவியைப் பேணும் ஒழுக்க நெறி தார்மீக நெறியாகவும் கல்வி நெறியாகவும் போற்றப்படவேண்டும் என்பது இவர்களது வேண்டுகோளாகும். எந்த ஒரு அரசுக்கும் அல்லது அரசியல் அமைப்புக்கும் அழிந்துவரும் புவிபற்றி அக்கறையே இல்லை. நிலம் என்றால் அதில் எந்தளவு பணம் பெறலாமென்றே திட்டமிடுகின்றார்கள் என இவர்கள் சாடுகின்றார்கள்.

பில் மோலீசின் நவீன விவசாயத்தை இறந்து கொண்டிருக்கும் விவசாய முறை என சாடுவதோடு நவீன விவசாயம் வர்த்தக நோக்கத்தைக்கொண்ட, அழிவுக்கு வழிகோலும் முறைகளை உள்ளடக்கிய, எரிபொருளை வீணடிக்கின்ற விவசாயம் என்கின்றார். மேலும் அவர் நவீன விவசாயம் முட்டாள் தனமான நோக்கங்களுக்காக தேவையற்ற பயிர்களை வளர்க்கின்றது. சோயா பயிர் உற்பத்தி கால்நடைக்கு உணவாகின்றது. மீனைப் பொடிசெய்து பன்றிகளை வளர்க்கின்றார்கள். மாட்டிறச்சி வர்த்தகத்தால் உலகின் புல் நிலங்கள் அழிந்து பாலைநிலம் பரவி வருகின்றது என்கிறார். மேலும் நவீன விவசாயச் செய்கை தொழிற்சாலை உற்பத்திக்கான மூலப்பொருளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதே தவிர மக்களுக்கு உணவு வழங்குவதையல்ல. புவியின் மொத்த நிலப்பரப்பில் 4வீத பரப்பளவில் உணவு உற்பத்தி முறையாகச் செய்யப்பட்டாலே உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படமாட்டாது என உறுதிபடக் கூறுகின்றார்.

நவீன முறையில் விவசாயம் செய்தவர்கள் இம் மாற்றுமுறைக்கு வரும் போது ஆரம்பத்தில் உற்பத்தி குறையும் என்றாலும் பின்னர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும். நவீனமுறையில் இரசாயனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததன் காரணமாக 5 ஆண்டுகள் நிலைமாறும் நிலை நிலவும். ஆறாவது ஆண்டிலிருந்து உற்பத்தி இருமடங்காக உயரும். வேளாண்மையுடன் காடுவளர்ப்பும் இணைந்துள்ளதால் நைட்ரசன் சத்து நிலங்களுக்கு ஊட்டத்தை வழங்கும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கூடவே மரக்கறிகள் நிறைந்த வேளாண்பண்ணை முறைகளையே பில் மோவீசின் குழுவினர் வலியுறுத்துகின்றனர். இவர்களது பண்ணை சுயநிறைவு கொண்டது. உரத்தின் தேவையோ, களை பூச்சி நாசினிகளின் தேவையோ எழுவதில்லை. இவர்களது பயிர்ச்செய்கை முறை பரந்துபட்டு பயிர்ச்செய்கை முறை (Extensive Agriculture) ஆகும்.

எவ்வளவு மோசமான தரிசு நிலம் என்றாலும் அந்நிலத்தை பசுமையாக்கக்கூடும் என கூறும் இவர்கள் பாறை நிலம், அதிக ஈரம் கொண்டநிலம், உவர்நிலம், வரண்ட பாலைநிலம், என்பனவற்றில் வேளாண் பண்ணைகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். ஜ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின்( F.A.O) பயிற்சியாளர் தொகையைவிட தங்கள் நிறுவனத்தின் பயிற்சியாளர் தொகை அதிகமென பெருமைப்படும் பில் மோலீசன் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 1000 கிராமங்களில் ஃபேமாகல்சர் பயிற்சியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள் என்கின்றார். ஏறத்தாழ ஒரு இலட்சம் இந்திய விவசாயிகள் பில் மோலிசனின் பண்ணைத்திட்ட முறைகளைப் பின்பற்றி பயனடைந்து வருகின்றார்கள். மூன்றாம் உலக நாடுகளுக்கு இவரது வேளாண் முறைகள் பொருத்தமானவை என கருதப்படுகின்றது. நிலைத்து நிற்கக்கூடிய இவ்வகை வேளாண்முறைகள் மீது நிஜமான அக்கறை செலுத்தும் காலம் வருமெனக்கூறும் இவர் 2000 ஆம் ஆண்டின் பின் நவீன விவசாய முறை மெல்லமெல்ல இறந்து நிலைத்துநிற்கும் விவசாயமே நிலைபெறும் என சூளுரைக்கின்றார்.

அமெரிக்காவிலிருந்தும் ஒரு குரல் இயற்கை வேளாண்மையில் அக்கறை கொண்ட ஒலிப்பு ஆச்சரியத்தை அளிப்பதே. அக்குரல் “றோடேல் நிறுவனத்தின்” குரலாகும். ஜே.ஜே. றோடேல் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிறுவனத்தை அவரது மகன் ஜோன் றோடேல் தற்போது நடத்தி வருகின்றார். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் எம்மாமவுஸ் என்ற இடத்தில் இத்தொண்டு நிறுவனம் அமைந்துள்ளது. இயற்கை வேளாண்மையின் சிறப்பை உலகிற்கு பரப்புவது மாத்திரமன்றி மூன்றாம் உலக வசதிகுறைந்த ஏழைமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான சமூகநலத் திட்டங்களையும் இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வேளாண் செய்கையை அடிப்படையாகக்கொண்ட சுயநிறைவு பெறத்தக்க அபிவிருத்தித்திட்டங்களிற்கு இந்நிறுவனம் உதவி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலகநாடுகளில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் மக்கள் பயன்பெறும் பொருட்டே பெரும்பாலும் இவ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

றோடேல் நிறுவனத்தினர் உலகில் பரப்பிவரும் வேளாண்முறைக்கு “புனர் ஜென்ம வேளாண்மை” (Rebirth Agriculture) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர்களது நிறுவனமே மாசானபு ஃபுகாகோவின் ஒரு வைக்கோல் புரட்சி ( One Straw Revolution) என்ற நூலையும் இயற்கைக்கான வழி (The Road to nature) என்ற நூலையும் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் மூலம் நூலாசிரியரை அனைத்துலகத்திற்கும் அறிமுகமாக்கியது.

றோடேல் நிறுவனம் நிலைத்து நிற்கும் வேளாண்மைப் பண்புகளை உலகத்தவர் அறிதல் பொருட்டு “உயிர்ப்பு வேளாண்மை” (Organic Farming) என்ற சஞ்சிகையினையும், புதிய பண்ணை (New Farm) என்ற செய்திப்பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. மேலும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தத்தக்க பல்வேறு நூல்களையும் இந்நிறுவனம் காலத்துக்கு காலம் வெளியிட்டு வருவதோடு சர்வதேச கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து வருகின்றது.

இயற்கை வேளாண்மை பற்றி முதலாம் உலக நாட்டைச் சேர்ந்தவர்களைவிட மூன்றாம் உலகநாட்டினரே கூடிய அக்கறை கொள்ளவேண்டும். யதார்த்த நிலை கவலை தருவதாக உள்ளது. அரசாங்க மட்டத்தில் திட்டமிடுவோரும் இதுபற்றி அலட்சியமாகவே இருக்கின்றார்கள். இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும் நிதி நெருக்கடியாலும் நிபுணத்துவக் குறைபாட்டாலும் இவ்விடயம் தொடர்பாக அதிகளவில் அக்கறை செலுத்த முடியாதுள்ளது. இருப்பினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலைத்து நிற்கும் வேளாண்மையால் சில நிறுவனங்கள் கவனம் கொள்கின்றன.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதபாத் நகரில் கலாநிதி அனில்குப்தாவின் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது. இவர்கள் ‘நம்வழி வேளாண்மை’ என்ற மகுடவாசகத்தை முன்வைத்து சூழல்பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் மதுரை, ஒரிஸ்ஸாவில் புவனேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு, உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர்கள் காந்திய நிறுவனங்களுடனும் இணைந்தும் பணியாற்றி வருகின்றார்கள். அனில் குப்தாவின் நிறுவனத்தினர் நம்வழி வேளாண்மை பற்றி பிரசாரம் செய்யும் அளவிற்கு மாதிரிப்பண்ணைகளை அமைத்து செயல்முறையில் காட்டும் தன்மை குறைவாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் மனீந்தர்பால் என்பவர் பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தின் துணையுடன் நடத்தும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளோரியாப்பண்ணை, புதுவையில் அமைந்துள்ள ஏ.எஸ் சட்டார்ஜியின் இயற்கைப்பண்ணை, கீரானூரில் நாம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa) பண்ணை, உடுமலைப்பேட்டையில் சி.ஆர் ராமநாதனின் விவசாய காட்டியல் (Agro Forestry) பண்ணை, எம்.எஸ் சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனத்தினர் நடத்தும் சில பண்ணைகள், வீரனூர் சுற்றுச்சூழல் சங்கப் பண்ணை என்பன இந்தியாவில் இயற்கை வேளாண்முறைகளை முன்னெடுப்போருக்க வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.

இலங்கையில் கலாநிதி ஆரியரத்தினாவின் சர்வோதய இயக்கம் நடத்தும் சில விவசாயப் பண்ணைகளும் மன்னாரிலுள்ள “ஸ்கந்தபாம்” எனும் பண்ணையும் இயற்கை வேளாண்வழியை பின்பற்றத் தூண்டுதலளிக்கும் எம்மவரின் முயற்சியெனக் குறிப்பிடலாம்.

முடிவுரை

எமது பிரதேசத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த யுத்த நெருக்கடியால் நாம் பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் சில நன்மைகளும் விளைந்துள்ளன. எரிபொருள் உரம், களை நாசினி, கிருமிநாசினி என்பவற்றின் தட்டுப்பாட்டால் எமது விவசாய நிலங்கள் நஞ்சாகாது பேணப்பட்டு வந்துள்ளமை குறித்துரைக்கத்தக்க நல்விளைவுகளாகும். இந்நிலங்கள் நிலைத்துநிற்கும் பண்பு கொண்ட இயற்கை வேளாண்மைக்குரிய அடிப்படைகளை கொண்டுள்ளன. வலிகாமத்தில் வடபகுதிச்செம்மண் வலயம், தீவுப்பகுதி பிரதேசம் என்பன மக்கள் புலம்பெயர்ந்ததால் இரு தசாப்தங்களாக பலவழிகளில் இயற்கைவழி மாற்றத்தி;றகுள்ளாகி சீர்பெற்றுள்ளன. இவ் இடங்களில் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும் இக்காலகட்டத்தில் அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் 21ஆம் நூற்றாண்டுக்குரிய சூழல்பேண் இயற்கைவேளாண் வழிமுறைகளை மேற்குறித்த பகுதிகளில் அறிமுகப்படுத்துதல் அறிவுடைமையாகும்.

பொதுவாக யாழ்ப்பாண விவசாய மக்கள் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தகாலத்தில் உரம், நாசினிப்பாவனையின்றி அதிகளவு விவசாய உற்பத்திகளைப் பெற்றமை கவனத்திற்குரியது. தீவுப்பகுதியை பொறுத்தவரையில் மீள்குடியமர்ந்தோர் குறைவு. ஆனால் விவசாய நிலங்கள் அதிகம் உள. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி சூழல்பேண் இயற்கை வேளாண் பண்ணைகளையும், விலங்கு வளர்ப்பு பண்ணைகளையும் அங்கு உருவாக்குதல் சாத்தியமே. இக்கட்டுரையாளர் தீவுப்பகுதியை சேர்ந்த வேலணைக்கிராமத்தில் “இராசரத்தினம் உருக்குமணி” பசுமைக்கிராமம் ஒன்றை உருவாக்கி வருவதையும, அங்கு இயற்கை வேளாண்மை முறையில் உபஉணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதையும் முன்னுதாரணமாக கொள்ளலாம்.

யாழ்ப்பாண நகரச்சந்தையில் உடன் விற்பனை செய்யக்கூடிய காய்கறி உற்பத்தி, விலங்கு வேளாண் உற்பத்தி, மீன்பிடி உற்பத்தி என்பனவற்றை தீவுப்பகுதியில் மேற்கொள்ள உதவி வழங்குவதன் மூலம் தீவுப்பகுதியை அபிவிருத்தி செய்வதோடு யாழ்ப்பாண நகர மக்களில் ஒருபகுதியினரின் உணவுத் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும்.

பொதுவாக வடகீழ் மாகாண புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பவற்றிற்காகத் திட்டமிடுவோரும் ஆலோசனை வழங்குவோரும் இப்பிரதேசங்களில் நிலைத்து நிற்கும் பண்பு கொண்ட 21ஆம் நூற்றாண்டிற்குரிய சூழல் பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்தல் பயன்தருமா என்பது பற்றியும் எவ்வெவ் இடங்களில் எந்தெந்த வழிகளில் இதனை அமுல் நடத்த முடியுமென்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு தெளிந்த நல்லறிவைப் பெறுதல் வேண்டும்

லேபிள்கள்:

புதன், 22 ஜூன், 2011

சர்வதேச புவி தினம்

சர்வதேச புவி தினம் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.
உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற்கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும், செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ம் திகதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மனிதர்களின் அலட்சியப்போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் மக்கள்தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகிறது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது.

போர்ச் சூழலினாலும், அணுப் பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர்நோக்குகிறது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப் போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே சர்வதேச புவிதினம் கொண்டாடப்படுகிறது.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன்கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி, நீர்வீழ்ச்சிகள், காடு, கழனி, வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியவசியமானவை.

பூமி- மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம் தான் இந்த எழில் கொஞ்சும் இயற்கை. குறிப்பாக அயன மண்டல மழைக்காடுகளைக் குறிப்பிடலாம். இந்த மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது ஏனைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள்- இயற்கையின் புதையல்களாகவே இருக்கின்றன.

இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில்(இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர-விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராளமான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு, சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடுகளில் தான் இராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு இந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள மழைக் காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக் காடுகளின் நிலைத்திருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது.

ஏராளமான இரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் "சாவி" காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர- விலங்கினங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன.

ஆண்டுக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் மழைக் காடுகள் நீர்ச்சுழற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத்தொடர்தான் இந்த மழைக்காடுகள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்று கூறும் அளவிற்கு குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மனிதனின் கொடூரப்பிடிக்குள் சிக்கி படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாக பூமி சந்தித்தது கோரப்புயல்களும், இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றனவையுமே. அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச் சமநிலைக் குலைவுகள் தான் ஏற்படுகின்றன.

மேலும் அமிலப் படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றது. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் புவி வெப்பமாவதுடன் சூழலையும் பாதிக்கின்றது. சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்க முடியும்.

மனிதன் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம். இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாக வேரிடப்படுவதன் மூலமே சூழல் மாசடைவதைத் தடுக்க முடியும்.

அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற இயற்கை சார்பான மகாநாட்டில் உலக நாடுகள் புவியைக் காக்க எடுக்க வேண்டிய பொதுக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புவிச் சூழல் மனிதனைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சூழலைக் காத்து புவியையும் காத்து வாழ்வை வளமாக்க வேண்டிய பொறுப்பு மனிதனையே சாருகின்றது.

லேபிள்கள்:

நாளாந்த பத்திரிகைகள் பார்வையிட

திண்மக்கழிவு

திண்மக்கழிவு என்பது நாளாந்த வாழ்க்கைச் செயற்ப்பாடுகளிலிருந்து உருவாகும் பொருளாதார பெறுமதியற்ற திண்மப்பொருட்கள் என விபரிக்கப்படுகின்றது. அதாவது வீடுகள், வைத்தியசாலைகள், வர்த்தகவியாபார, கைத்தொழில் மற்றும் விவசாய செயற்ப்பாடுகளினால் மட்டுமன்றி பொதுத்துறைகளாலும் வெளியேற்றப்படுகின்ற திரவமல்லாத கழிவு திண்மக்கழிவு என வரையறுக்கப்படுகின்றது. திண்மக்கழிவானது உணவுக்கழிவுகள், தேவையற்ற துணிகள், தோட்டக்கழிவு, கட்டட நிர்மாணக்கழிவு, தொழிற்சாலைக்கழிவு, கடதாசி, உலோகங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி முதலானவற்றையும், பொதி செய்வதனால் உண்டாகும் கழிவுகள் போன்ற பல்வேறுபட்ட வித்தியாசமான பொருட்களினை உள்ளடக்குகின்றது.

திண்மக்கழிவுகளானது நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும், தொழிற்சாலைக்கு தொழிற்சாலையும் வேறுபடுகின்றது. சிலவேளைகளில் குறிப்பிட்ட சில பொருட்கள் குறித்த நாட்டினில் அல்லது தொழிற்சாலையினால் அல்லது நபரினால் கழிவுகளாகக் கருதப்படலாம். ஆனால் ஏனைய நாடுகள் அல்லது தொழிற்சாலைகள் அல்லது நபர் மேற்குறிப்பிட்ட கழிவுகளை கழிவுகளாகக் கருதாத சம்பவங்களும் காணப்படுகின்றன. வீதி விபத்தினால் கொல்லப்பட்ட நாய், கோழி போன்றவற்றின் இறந்த உடலுக்கு பெறுமதி இல்லாமையால் அது கழிவாகக் கருதப்படுகின்றது. அதே சமயம் கோழியின் உடலுக்கு பெறுமதி உள்ளதால் அது கழிவாகக் கருதப்படுவதில்லை. இருந்த போதிலும் நாய் இறைச்சி நுகரப்படும் நாடுகளினில் நாயின் இறந்த உடலுக்கு பெறுமதி காணப்படுகின்றது.

எங்களுடைய நாட்டில் கடதாசி, தேங்காய்சிரட்டை, பிளாஸ்ரிக் என்பனவற்றை திண்மக்கழிவுகளாக கழிக்கின்றார்கள். ஊண்மையில் இவை பெறுமதியுள்ள வளங்களாகும். உகந்த முகாமைத்துவத்தின் ஊடாக இப்பொருட்க்களிலிருந்து பல நன்மைகளினை பெற்றுக்கொள்ளலாம். நன்கு திட்டமிடப்பட்ட நாடுகள், நகரங்களின் பூங்காக்கள், தெருக்கள், வீதிகள் போன்றவற்றை அழகுபடுத்துவதற்க்காக தாவரங்கள் நாட்டப்படும் போது நகரக் கழிவுகளான தாவரப்பகுதிகள் மண்ணின் அமைப்பைப் பேணுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நன்கு திட்டமிடப்படாத நாடுகளில் அவ்வகையான தாவரப்பகுதிகள் வளங்களாகக் கருதப்படாது கழிவுகளாகக் கருதப்பட்டு கழிவாக வெளியேற்றப்படுகின்றன.

உலகிலுள்ள பல நாடுகளில் உள்ளதைப்போல் எங்களுடைய நாட்டிலும் நகரத் திண்மக்கழிவுகளானது உள்ளுர் அதிகார சபைகளினால் அகற்றப்படுகின்றன. நச்சுத்தன்மையான கழிவுகள் வேறொரு தனிப்பட்ட வகைக்கழிவாக கருதப்படுகின்றது. இக்கழிவுகள் தொழிற்சாலைகள், மருத்துவச் செயற்ப்பாடுகளின் போது உருவாக்கப்படுகின்ற நச்சுத்தன்மையான கழிவுப்பொருட்க்களிற்க்கான முகாமைத்துவம் சிறந்த மேற்ப்பார்வையின் கீழ் செய்யப்படல் வேண்டும்.

6.2 திண்மக்கழிவுகளின் பாகுபாடு:

திண்மக்கழிவுகளானது அவை வெளிவிடப்படும் இடங்களின் அடிப்படையில் பின்வருமாறு பாகுபடுத்தப்படுகின்றது.

o மாநகர-சபை திண்மக்கழிவுகள்
o வீட்டுத் திண்மக்கழிவுகள்
o சந்தை,வர்த்தக திண்மக்கழிவுகள்
o நிறுவனத் திண்மக்கழிவுகள்
o வீதி,கடற்க்கரைத் திண்மக்கழிவுகள்
o நிர்மாணத் திண்மக்கழிவுகள்
o கைத்தொழில் திண்மக்கழிவுகள்
o விவசாயத்தினால் உருவாகும் திண்மக்கழிவுகள்
o தீங்கு பயக்கும் திண்மக்கழிவுகள்
6.3 திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் சுற்றாடல் பிரச்சினைகள்:

o வளி மாசடைதல்
o நீர் மாசடைதல்

o மண் மாசடைதல்
o சுகாதாரப் பிரச்சினைகள்
o உயிரினப் பல்லினத்துவத்தின் மீதான சேதங்கள்
o இயற்கை காட்சிகளின் அழிவு
o சமூகப் பொருளாதார பிரச்சினைகள்
6.3.1. வளி மாசடைதல்:

திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் பிரச்சினைகளில் வளி மாசடைதல் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். பல்வேறுபட்ட நுண்ணுயிர்களால் திண்மக்கழிவுகள் பிரிந்தழிகைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இச்செயற்ப்பாடுகளின் போது காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டினால் பல்வேறுவகையான இரசாயன வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாயுக்கள் வளிமண்டலத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து துர்நாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவ்வாறு துர்நாற்றம் உருவாகும் காரணத்தினால் அவ்விடப்பரப்பில் வாழும் வதிவிடவாசிகளுக்கு தொல்லைகள் ஏற்ப்படுத்தப்படுகின்றன. இதனால் கழிவுகள் கழிக்கப்படும் இடங்களினைத் தெரிவு செய்தல் இலகுவான நோக்காக இருக்காது. திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பூகோள வெப்பமுறலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இதுவரையில் எங்களுடைய நாட்டில் கழிவகற்றப்படும் இடங்களிலிருந்து உருவாகும மெதேனைக் குறைக்கவோ அல்லது சேகரிக்கும் வசதிகளோ காணப்படவில்லை. இதனால் எமது நாட்டில் கழிவகற்றப்படும் இடங்கள் வளி மாசடைதலின் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. பல்வேறுபட்ட திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்ப்பாடுகளின் போது உருவாகும் தூசுகளாலும் வளி மாசடைதல் ஏற்படுகின்றது. குறிப்பாக திண்மக்கழிவுகளின் காவுகையின் போதும், கழிவகற்றலின் போதும் தூசு துணிக்கைகள் பரம்பலடைகின்றது. இதனால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்ப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கைத்தொழில் கழிவுகள் கழிவகற்றலுக்கு அகப்படும்போது உருவாகும் தூசுகளால் தீராத சுவாச நோய்கள் உருவாக்கப்படலாம்.

திண்மக்கழிவுகள் எரிக்கப்படும்போது உருவாகும் பல இரநாயனக் கூறுகளானவை மனிதனுக்கு அதிகளவு தீமையை ஏற்ப்படுத்துகின்றன. இவற்றுள் இரு ஒட்சிசன் அதிக நச்சுத்தன்மையானவை. இவ் இரசாயனங்கள் நீரில் கரையமுடியாதவை. ஆனால் இவை கொழுப்பில் கரைந்து நீண்ட காலத்துக்கு சுற்றாடலில் நிலைத்திருக்க கூடியவை. இக்கூறுகள் ஆபத்தான ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கக் கூடியவை. திண்மக்கழிவுகள் குறைந்த வெப்பநிலையில் எரிக்கப்படும்போது இவ்வகை இரசாயனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவை முற்றாக பிரித்தழிவதற்கு உயர் வெப்பநிலை மிக அவசியமாகும். இதனாலேயே, பிளாஸ்ரிக் பொருட்கள் குறைந்த வெப்பநிலையில் எரிக்கப்படல் சுற்றாடலுக்கு நட்புறவான செயற்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பல சந்தர்ப்பங்களில் தீப்பற்றக்கூடியதாக இருக்கலாம். பிளாஸ்ரிக் உள்ளடங்கலாக எல்லா திண்மக்கழிவுப்பொருட்களும் பல நிலைகளில் எரிதலுக்கு உட்படுத்தப்படலாம். இதனால் உயர்ந்த சுற்றாடல் மாசடைதல் நிலைமைகள் உருவாக்கப்படலாம்.

6.3.2. நீர் மாசடைதல்:

திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை நீர் மாசடைதல் ஆகும். எமது நாட்டில் உள்ள வடிகாலமைப்புத் தொகுதியானது பல வழிகளில் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொலித்தீன் பைகள், தேங்காய் மட்டைகள், ஏனையவை போன்றன வடிகாலமைப்பினுள் சென்று வடிகாலமைப்புத் தொகுதியைத் தடுக்கின்றன. இவ்வாறு தடுக்கப்பட்டுள்ள வடிநீரானது நுளம்புகள்,பறவைகள்,எலிகள்,உடும்புகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களுடன் தொடர்புபட்டு வாழுகின்ற ஏனைய விலங்குகளின் இனப்பெருக்க இடங்களாகச் செயற்படுகின்றன. கிணறுகளும் வடிகால்வாய் நீரும் அவற்றினுள் கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மாசாக்கப்படுகின்றன. இதனால் உயிரியல் ஒட்சிசன் தேவை (டீழுனு), இரசாயன ஒட்சிசன் தேவை (ஊழுனு) மிக அதிகளவில் காணப்படுகின்றது. திரவக் கழிவுகளால் குடிநீர் தொற்றாக்கலுக்குள்ளாக்கப்படுவதன் மூலம் பல சுகாதாரப் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மேலும் தீவிரமான சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்ப்படுகின்றன.

6.3.3. மண் மாசடைதல்:

திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான சுற்றாடல் பிரச்சினை மண் மாசடைதல் ஆகும். துpண்மக்கழிவுகளின் வெளியேற்றத்தினால் மண்ணினது இரசாயன, பௌதீகத் தன்மைகள் மாற்றத்திற்குட்படலாம். துpண்மக்கழிவுகளில் வேறுபட்ட வகையான பொருட்கள் காணப்படுகின்றமையால் குறிப்பாக மண்ணினது நீர் பெறுமானமானது பெருமளவில் வேறுபடுகின்றது. இதனால் தாவரங்களின் வளர்ச்சியும் மண்ணில் உள்ள உயிரினங்களின் வளர்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் இப்பிரச்சினையானது மேலும் சிக்கலடைகின்றது. ஏல்லா இடங்களிலும் பொலித்தீன்பைகள் கொட்டப்படுவதனாலும் இவைகள் பிரிகையடைவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமையாலும் மண்ணின் வளம் குறைவடைந்து செல்கின்றது. திண்மக்கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் நிலநீர் மட்டம் குறைவடைந்து செல்லும் நிலை ஏற்படலாம்.

மண் மாசடைதல்



6.3.4. சுகாதாரப்பிரச்சினைகள்:

திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை சுகாதார ரீதியான பிரச்சினையாகும். திண்மக்கழிவுகளுடன் பல சுகாதாரப்பிரச்சினைகள் தொடர்புபட்டுள்ளன. துpண்மக்கழிவுகளுடன் தங்களுடைய வாழ்க்கை வட்டத்தை நெருங்கிய முறையில் பேணுகின்ற ஈக்கள்,நுளம்புகள்,கரப்பான் பூச்சிகள்,எலிகள் போன்றவற்றினால் வேறுபட்ட வகைக்குரிய நோய்கள் பரப்பப்படுகின்றன. அதாவது டெங்கு,மலேரியா, மூளைக்காய்ச்சல், பைலேரியா போன்ற நோய்கள் இவ்வங்கிகளால் பரப்பப்படுகின்றன. மேலும் திண்மக்கழிவுகளுடன் திண்மக்கழிவகற்றும் இடங்களுக்கு நோய்க்கிருமிகள் வந்து சேர்கின்றன. இதன் காரணமாக வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரப்பப்படுகின்றன.

லேபிள்கள்:

சூழல் மனிதனின் சொத்து அதனை பாதுகாப்பது எமது கடமை

01. சூழல் பற்றிய அறிமுகம்:

மனிதனைச் சுற்றயுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் ‘சூழல்” எனலாம். நாள்தோறும் நாம் காண்கின்ற எம்மைச் சுற்றியுள்ள சகல அம்சங்களையும் சூழல் என்பது குறித்து நிற்கும். அந்தவகையில் ‘சூழல்” என்பது உயிர்வாழும் அங்கிகளுக்கு (ORGANISISMS) இடையில் காணப்படும் நிலைமைகளின் மொத்த கூட்டு என வரையறுக்கபடும். உயிரற்றனவாகிய பௌதீக, இரசாயன அசேதனங்களுக்கும் (ABIOTIC) உயிர் வாழும் சேதனங்களின் (BIOTIC) பரிமாணங்களுக்கும் இடையிலான இடையீடுகளின் விளைவே இச்சூழல் நிலைமைகளாகும். இச்சூழல் இரண்டு வகைப்படும்.

01. பௌதீக சூழல்/ இயற்கை சூழல்
02. பண்பாட்டு சூழல் /மனிதனால் உருவாக்கப்படும் சூழல்

இயற்கை சூழல்
பண்பாட்டு சூழல்

பௌதீகசூழல் எனும்போது தரைத்தோற்றம், வடிகாலமைப்பு, காலநிலைத்தன்மைகள், தாவரங்கள் என்பன அடங்குகின்றன. பண்பாட்டுச்சூழல் எனும்போது பயிர்ச்செய்கை அம்சங்கள், நகரச் சூழல் அம்சங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட தெருக்கள் என்பனவற்றோடு இவற்றில் வாழுகின்ற சமூகச்சூழல் அம்சங்களையும் குறிக்கும். சூழல் எனும் பதமானது விபரண ரீதியாக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதை வரையறை செய்வது மிகவும் கடினமாகும். அண்மைக்காலங்களில் மனிதனைச் சூழ்ந்து காணப்படும் பௌதீக, பண்பாட்டு அம்சங்களுக்கு வழங்கப்படும் மறுபெயரே சூழல் எனப்படும். சுற்றுச்சூழல், சுற்றாடல், சூழல் என்பன ஒரே கருத்துடைய சொற்களாக வழங்கி வருகின்றன.

சூழல் என்னும் விடயத்தில் சூழலியல், சூழல், சூழற்றொகுதி போன்ற சொற்பதங்கள் முக்கியமானவை. சூழலியல் என்பது சூழலுக்கேற்ப உயிரினங்களின் இசைவாக்கம் பற்றிய அறிவை வழங்குகின்ற கற்கைநெறியாகும். 19ஆம் நூற்றாண்டிலேயே சூழலியல் பற்றிய கருத்துக்கள் வலிமை பெற்றாலும், 1868ஆம் ஆண்டு ஜேர்மனிய உயிரியலாளரான ஏர்னற் ஹேர்க்கீல் (ERNST HAECKEL) என்பவரே முதன்முதலில் இது பற்றி கருத்து தெரிவித்தார். “தாவரங்களும் சூழலுடனான அவற்றின் தொடர்புகளும்” என்ற ஆய்வில் பயன்படுத்தப்பட்டடுள்ளது. இச்சொல்லானது OIKOS (House), LOGOS என்ற இரு கிரேக்க சொற்களில் இருந்து பெறப்பட்டது. அதன் கருத்து வாழ்வதற்கான வீடு அல்லது இடம் என்பதைக் குறிப்பதாகும். சூழலிற் காணப்படுகின்ற அங்கிகளின் பரவல் தொழிற்பாடு, அவற்றின் எண்ணிக்கை, சூழலுக்கும் அங்கிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பன சூழலியலில் முக்கியம் பெறுகின்றன.



அடுத்து சூழல் என்பது உயிர்ப்பகுதிகள் உயிரற்ற பகுதிகள் இணைந்த விடயஙமாக காணப்படுகின்றது. உயிரற்ற பௌதீகச்சூழலிற் காணப்படுபவை மண், நீர், வெப்பம், வளிமண்டல நிலைமைகள் போன்றனவாகும். சமுத்திரங்கள், காடுகள், புல்வெளிகள், நன்னீர் நிலைகள் என்பவற்றிற்கேற்ப சூழற்தன்மைகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. மேலும் பாமர்,வெரேனியஸ் ஹன்டிங்டன் போன்ற ஆய்வாளர்களும் சூழல் பற்றிய வரைவிலக்கணம் அறிஞர்களால் வரையறுக்கப்பட்டிருந்த போதிலும் இவ் எல்லைகள் காலத்திற்கு காலம் விரிவடைந்து நிலம், நீர், வளிமண்டலம், நட்சத்திரக்கூட்டங்கள் என்ற முழு உலகையும் சூழல் என்னும் எல்லைக்குள் உள்ளடக்கியுள்ளது.

சூழற்றொகுதியை நோக்கின் யாதாயினும் வரையறைக்குட்பட்ட பிரதேசத்தில் நிலவுகின்ற பௌதீகச் சூழலையும் அச்சூழலின் இயல்புக்கேற்ப வாழும் அனைத்து அங்கிகளையும், அவ்வங்கிகளுக்கும் சூழலுக்கும் இடையே காணப்படும் அனைத்து இடைத்தொடர்புகளையும் கூட்டாக நோக்குவதாகும். மில்லியன் கணக்கான தாவர, விலங்கின நுண்ணுயிர்களின் இணைவுத்தன்மையிலே பூமியில் வாழும் வாழ்க்கை தங்கியுள்ளது. உயிரினத் தோற்றத்திற்கும் நிறைவேற்றுத் தன்மைக்கும் சூழலமைப்பே காரணமாகும். பல்வேறு வகைப்பட்டதும், தொடர்ச்சியானதுமான தொடர்புகள் மூலம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்கின்றது.

02. சூழலின் முக்கியத்துவம்:

உலகளாவிய ரீதியில் அநேக துறைகளில் இன்று சூழல் கல்வி முக்கிய இடம்பெறுகின்றது. இதற்கு அடிப்படைக்காரணம் அண்மைக்கால உலக சூழல் நெருக்கடியாகும். சர்வதேச சமூகத்தின் சூழல் பற்றிய ஈடுபாட்டை இனங்காண ஐக்கிய நாடுகள் சபையினால் 1972 ம் ஆண்டு ஸ்ரோக்கம் நகரில் நடைபெற்ற முதலாவது சூழல் மாநாட்டைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட உலக சூழல் தினமான ஜூன் 5 உம், 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் றியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவியுச்சி மாநாடும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும். உலகின் சுற்றுப்புற சூழ்நிலையை நோக்குவோமாக இருந்தால் 1960 களின் முற்பகுதியில் மனிதன் முதன்முதலாக தன்னுடைய சுற்றுச் சூழலைத் தொடர்புபடுத்தி அக்கறையாக சிந்திக்கத் தொடங்கினான். அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் மிக நீண்ட காலமாக சுற்றுச் சூழலைப்பற்றி விவாதித்து வருகிறான். இன்று கொள்கை வகுத்தலின் வெவ்வேறு சந்தர்ப்பத்திலும் பிரயோகிக்கப்படுகின்றது.

இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்வுக்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும் சுற்றுச் சூழலையும் எந்தத் தேவைக்குப் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும் என்பது எவ்வளவு உணரப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு அவை பயன்படுத்தும் போதும் பொருளின் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் சிக்கலான கோட்பாடுகள் அரசியல் மற்றும் சமூகவியல் போன்ற துறைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். இங்கு இவை அனைத்திலும் கூட்டுச்சேர்க்கையின் விளைவாக சுற்றுச்சூழலில் ஒரு சிக்கலான நிலை தோன்றுகின்றது.

இதன் விளைவாக தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. இந்த விடயத்தில் உள்ள சிக்கல்தன்மை, பாதகத்தன்மை மற்றும் இதன் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கின்றது. அபிவிருத்தியைப் பற்றிக் கருதும்போது பொருளாதார, அரசியல் மற்றும் சமூகவியல்சார் அழுத்தங்கள் அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் அதே வேளை அந்தக் காரணிகள் மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்ததாகவும் எம்மால் சிறியளவே விளங்கி கொள்ளப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் என்ற விடயத்திற்கும் அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவும் விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படுகின்றது. இதற்கு காரணம் மனிதன் சுற்றுச் சூழலின் இயற்கைச் சமநிலையைப்பற்றி பூரணமாக அறியாமல் இருப்பதாகும். அண்மைய காலங்களில் விஞ்ஞானத்துறையானது. மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் எம்மால் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் சம்மந்தமான அறிவை இன்னும் பூரணமாக பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இந்த அறிவை வளங்களைப் பயன்படுத்தல் மற்றும் அவற்றினைப் பேணுதல் போன்றவற்றிலும் மற்றும் அபிவிருத்தி, நின்று நிலைக்கும் பயன்பாடு போன்றவற்றிலும் கூட எம்மால் பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது.

சுற்றுச் சுழலியல் என்ற கோட்பாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுற்றுச் சூழலைப் பேணல் மற்றும் நின்று நிலைக்கும் பயன்பாடு ஆகியவற்றில் இருந்தே தோன்றின. ஆனால் அவை தற்போது அந்தக் குறிக்கோள்களின் உண்மையான நோக்கங்களில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட தடுமாற்றங்களாகும். இத்துடன் இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற ஒரு கோட்பாடு கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சுற்றுச் சூழலுடன் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு துறையினையும் எடுத்துக்கொண்டாலும் கூட அந்தத் துறைகளினுள் அகமுரண்பாடுகளும் வெவ்வேறு துறைகளுக்கிடையிலான முரண்பாடுகளும் காணப்படுவதால் ஒரு மோதலான நிலை தோன்றுகின்றது.

03. சூழல் மாசடைதல்:

உலகளாவிய ரீதியில் நாடுகளை பொதுவாக அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள், என பிரிக்க முடியும். இத்தகைய இரண்டு வகையான நாடுகளிலும் குடித்தொகை அதிகரிப்பு, நகராக்கவிருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பது பொதுவாகக் காணப்படும் விடயமாகும். குடித்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே மனிதன் தனக்கு ஏற்படும் தேவைகளை நிவர்த்தி செய்ய முற்படும் போது அதன் விளைவாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே சூழல் மாசடைதல் என்பது காணப்படுகின்றது.

சூழல் மாசடைதல்
இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது அது சூழல் தொகுதியில் அல்லது சுற்றாடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்மாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். இன்னொரு வகையில் கூறினால் இயற்கை சூழல் என்பது தூய்மையானது, ஆனால் பலவகைப்பட்ட மனித நடவடிக்கைகளினால் அச்சூழலானது மாசாக்கப்படல் அல்லது இயற்கை வட்டங்கள் அல்லது இயற்கை சமநிலை பாதிக்கபடுதலானது. சூழல் மாசடைதல் எனப்படும்.

அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. அந்த வகையில் சூழலிற்கு விடப்படும் பாதார்த்தங்கள் அல்லது வாயுக்கள் அல்லது அங்கு தாவர விலங்கினங்கள் வாழ்வதற்கு பொருத்தமில்லாத மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். எவ்வாறு இருந்தும் மேலே கூறப்பட்ட வரைவிலக்கணத்தினை ஒருபடி முன்னோக்கி பார்த்தால் சூழல் மாசடைதல் என்பதற்கு மிகப்பபொருத்தமான வரைவிலக்கணம் பின்வருமாறு முன்வைக்கப்படுகின்றது. “தொகுதியில் அல்லது சூழலில் ஏற்படுத்தப்படும் பௌதீக இரசாயன உயிரியல் இயல்புகளின் விரும்பத்தகாத மாற்றம் அல்லது ஏற்படுத்தப்படும் ஆபத்தான நச்சுவிளைவுகளின் தொற்றுகையே சூழல் மாசடைதல்” எனப்படும்.

இவ்வாறு சூழல் மாசடைவதன் விளைவாக சூழலில் உள்ள மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களும் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலுக்கு சர்வதேச ரீதியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக நாடுகளின் நகர்ப்புற அபிவிருத்தி காரணமாக இன்று நகரச்சூழல் பெருமளவில் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. நகரங்களில் வசதிவாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற மக்கள் நகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். nயுமாத்த குடித்தொகையில் 40 வீதமான மக்கள் நகரப்பகதிகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். இதன் காரணமாக கிராமங்களை விட குடித்தொகைச்செறிவு நகரங்களில் அதிகமாக உள்ளதுடன், சூழல் மாசடைதல் பிரச்சினைகளும் அதிகமாக காணப்படுகின்றது. இந்த வகையில் பின்வரும் வகையில் சூழல் மாசடைதல் இடம்பெறுகின்றது.

o நிலம் மாசடைதல்
o நீர் மாசடைதல்
o வளி மாசடைதல்
o ஒலி மாசடைதல்

லேபிள்கள்:

நீர் மாசுபடுதல் இன்றைய உலகில் முக்கியமான கவலைகளில் ஒன்றாக உள்ளது.

நீர் மாசுபடுதல் இன்றைய உலகில் முக்கியமான கவலைகளில் ஒன்றாக உள்ளது.
பலநாடுகளின் அரசுகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வுகள் காண முயன்று கொண்டு இருக்கின்றன. பலவகையான மாசுகள் நீர்வழங்கலை அச்சுறுத்திக்கொண்டே வருகின்றன. அதுவும் வளங்குன்றியுள்ள நாடுகளில் அது பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக, இயற்கை நீரில் புதிதான கழிவுநீர்க்கால்கள் இரண்டறக் கலப்பது என்பது கழிவுநீர் அகற்றும் முறையில் ஒரு பொதுமுறையாகி உள்ளது இத்தகைய நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பாதி வளர்ச்சி அடைந்த சீனா, இந்தியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இது பரவலானதாக உள்ளது.
கழிவுநீர், சாக்கடைச்சேறு, குப்பை மற்றும் நச்சாக உள்ள மாசுகள் யாவும் நீரில் இறுதியில் வந்து குவியலாகி விழுகின்றன. அதிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தாலும் பிரச்னைகள் தோன்றத்தான் செய்கின்றன. சுத்திரிகரிக்கப்பட்ட கழிவுநீரால் சாக்கடைச் சகதிகள் தோன்றி அவைகள் நிலத்தினில் நிரம்பு கின்றன. அதனால் நிலமெங்கும் பரவு கின்றன. கடைசியில் கடலினில் குவிந்து கலக்கின்றன.[14] இதற்குக் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட இடம் என்றுசொல்ல இயலாத மாசுகள் தோன்றும் பகுதி அதாவது விவசாயஇடங்களில் நீர்பொங்கிவழிதலாலும் அதுவே ஒருமுக்கிய மாசுகளின் மூல ஆதாரம் ஆகின்றது.அதனோடு நகரங்களில்புயல்மழைநீர்பொங்கி வழிவதும் உடன் ரசாயன கழிவுகள்தொழிற் சாலைகளால் மற்றும் அரசாங்கங்களால் குவிந்து விடுதலும் உரிய காரணங்களாகி விடுகின்றன.
நீரும் சச்சரவும்
இரு மாநிலங்கள் இடையில் நிகழ்ந்த சச்சரவு என்பதற்கு தெரிந்த உதாரணமாக விளங்குவது கிமு 2500 மற்றும் 2350 காலத்தில்சுமேரியமாநிலங்களான லாகேஷ் மற்றும் உம்மா இரண்டுக்கும் ஏற்பட்ட நதிநீர்ப் பிணக்கே ஆகும்.[15] அதுதவிர்த்து சர்வதேச அளவில் நீருக்காகச் சண்டை என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் நீரானது வரலாற்றில் தொடர்ந்து சண்டைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. நீர்சொற்பமாகக்கிடைக்கும் போது அரசியல் உளைச்சல்கள் கிளம்பிவரும். இதுவே நீர்இறுக்கம் என்றும் குறிப்பிடுவதுண்டு. நீர்இறுக்கம் உள்ளூர் மற்றும் பிரதேசஅளவில் பிணக்குகள் தோன்றிவரக் காரணமாய் அமைந்தது.[16] ஒரு சுத்தமான எண்ணிக்கை சார்ந்த வழி முறைமையியல்படி, தாமஸ்-டிக்ஸன் நீர்ப்பற்றாக்குறை மற்றும் சாகுபடிநிலம் கிடைப்பதிலும் பற்றாக்குறை இரண்டுமே வன்முறைப்பிணக்குகளுக்குப் பிரகாசமான வாய்ப்பளிக்கின்றன.[17]

நீர்இறுக்கம் சண்டைகள் மற்றும் அரசியல் உளைச்சல்கள்-இழு உலைவுகள் தோன்றவதற்கு கடுப்பூட்ட வல்லதாக அமைந்துள்ளது. அரசியல் உளைச்சல்கள் நீரால் மட்டும் நேரடியாகக் தோன்றுவது கிடையாது. சுத்தநீர் கிடைப்பது தரத்திலும் அளவிலும் நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்துவருவதில் ஒரு பிரதேசத்தின் ஸ்திரத்தன்மையை அது பாதிக்கின்றது. அதன்விளைவாக மக்கள் தொகையின் ஆரோக்கியம், பொருளாதார வளர்ச்சிக்குமுட்டுக்கட்டை, பெரியசச்சரவுகள் வர கடுப்பூட்டும் வண்ணம் நிலைமை உருவாகும்.[18]

சச்சரவுகள் மற்றும் உளைச்சல்கள் நீரால் தேசிய எல்லைகளுக்குள் ஆற்றின்கீழ்ப்படுகையில் உள்ள வடிநிலப் பிரதேசங்களில் நிகழக்கூடும். சீனாவின்மஞ்சள்நதியின் அல்லது தாய் லாந்தின்சாவோ பார்யா நதியின் தாழ்வான பகுதிகள், எடுத்துக் காட்டாக, நீர் இறுக்கத்தைப் பலவருடங்களாக அனுபவித்துக் கொண்டுவருகின்றது. மேலும் கூடுதலாக, சில உழுநிலமுடைய நாடுகள் பாசனத்திற்காக நீரையே நம்பியுள்ளவைகள் அதாவது சீனா, இந்தியா, ஈரான், மற்றும் பாகிஸ்தான் யாவும் குறிப்பாக நீர்சம்பந்தமான சச்சரவுகள் தோன்றக் கூடிய அபாயக்கட்டங்களைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன.[18] அரசியல் உளைச்சல்கள், பொதுமக்கள் பேராட்டம், வன்முறை இவைகள் நீர்தனியார்மயமானதால் வெடித்துக்கிளம்பும். 2000ல் நடந்த பொலிவியன் தண்ணீர்ச் சண்டைகள் இக்கருத்தில் ஒரு வழக்காக ஆகியுள்ளது.

லேபிள்கள்:

மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.

நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.

[1]நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே புதுப்புனலாக இருக்கும் அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்திருக்கும்.[1] மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும். [2]

சுத்தநீர் மறுபுதுப்பிக்கும் மூல ஆதாரமாகும் இருந்தபோதிலும், உலகின் சுத்த புதிய நீர்வழங்கல் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. நீரின் தேவை அதன் வழங்கலைக் காட்டிலும் உலகின் பல பகுதிகளில் விஞ்சியுள்ளது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உயிரின [[வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்|வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்]]பேணிப் பாதுகாக்கும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டில் சமீப காலமாகத்தான் தோன்றி வருகின்றது அதுவும் கிட்டத்தட்ட பாதியளவு ஈரநிலங்கள் மதிப்புமிகும் சுற்றுப்புறச் சூழல் சேவைகள் உடன் இழப்புக்குள்ளாகியதால் அவ்விழிப்புணர்வு பெருகியுள்ளது. வளமார் சுத்தநீர் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புகள் யாவும் நடப்பு நிலையில் குன்றி வருகின்றன அப்படி குறைந்து வருவது கடல் மற்றும் நில- உயரின வாழ்க்கைச் சூழல்அமைப்புகளைவிட வேகமாக இருப்பது கண்கூடு.[3] நீர்ப்பயனாளிகளுக்கு நீரின் ஆதாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டிய உருவரைச்சட்டமே (அப்படி ஒரு உருவரைச்சட்டம் இருக்குமானல்) நீர் உரிமைகள்என்று வழங்கப்படும்.
மேற்பரப்பு நீர் என்பது நதி, ஏரி அல்லது சுத்தநீர் உள்ள ஈரநிலம் இவைகளில் உள்ள நீராகும். மேற்பரப்பு நீர் இயற்கையாக ஆவி குளிர்ந்து மழையாகி நீர்நிலைகளில் நிரம்புகின்றது. அதேபோல் கடலில் கலந்து வீணாகுவதும், ஆவியாகப் போய் விடுவதும், துணைமேற்பரப்பில் கசிந்தொழுகலாலும் இயற்கையாக இழந்து விடுகின்றது.




ஆவி குளிர்ந்து மழை ஆவதுதான் மேற்பரப்பு நீர் அமைப்பில் உள்ள நீர் வடிநிலத்தில் ஒரே இயற்கை உள்வைப்பாக இருந்த போதிலும், மொத்த நீர்அளவு ஒரு குறிப்பிட்ட நேரம் பல காரணங்களைச் சார்ந்துள்ளன. இந்தக் காரணங்களில் உள்ளடங்கும் ஏரிகள், ஈரநிலங்கள், மற்றும் செயற்கை நீர்த் தேக்கங்கள்ஆகியவைகளின் தேக்கத்திறன் ஒட்டியும், நீர்த்தேக்க நிலைகளின் மண்வளம்அதன் ஊடுருவ இடம் தரும் இயல்பு ஒட்டியும், நீரானது வடிநிலத்திலிருந்து மறைந்தோடிவிடுவதுஒட்டியும், பதங்கமாகும் நேரம் மற்றும் உள்ளூர் ஆவியாகும் வீதங்கள் ஒட்டியும் அமைந்திருக்கும். இத்தகு அனைத்துக் காரணங்கள் நீர்இழப்புக்குரிய விகிதாசாரங்களைப் பாதிக்கும்.


மேலும் இக்காரணங்கள் மனித நடவடிக்கைகள் பெருமளவு அல்லது சிலநேரங்களில் சீரழிக்கும் விளைவினை உண்டாக்கும். மனிதர்கள் நீர்த்தேக்கங்கள் கட்டிக்கொண்டே போவதால் தேக்கும் திறன் அதிகரிக்கின்றது. அது ஈரநிலங்களில் வடிகால்கள் வழியே குறைந்து போகின்றது. மனிதர்கள் அடிக்கடி வழிந்தோடும் நிர்த்தேக்க எண்ணிக்கைகள் மற்றும் அவைகளின் இயக்க வேகம் அதிகரிக்கச் செய்து நீர்சேரும் பிரதேசங்களின் ஊற்றொழுக்கு வழிமுறைப் படுத்தி வருகின்றனர்.


நீரின் ஒரு குறிப்பிட்ட காலம் மொத்தமாகக் கிடைக்கும் அளவு ஒரு முக்கிய மான கருத்தாக உள்ளது, சில நீர்ப் பயனாளிகள் நீர்த்தேவை விட்டுவிட்டு பெற வேண்டுவர். எடுத்துக்காட்டாக, பல பண்ணைகள்இளவேனில் காலம் அதிக அளவு நீர் வேண்டும் நிலையில் இருக்கும் ஆனால் குளிர் காலத்தில் நீர் கிடைப்பது அரிதாகி விடும். அப்படிப் பட்ட பண்ணைகளுக்கு நீர்வழங்கல் வேண்டி, மேற்பரப்பு நீர்அமைப்பு ஒன்று உருவாக்குதல் அவசியமாகின்றது. அது ஏராளமாக தேக்கும்திறன் கொண்டதாகவும் நீரை ஆண்டு முழுதும் சேகரிக்கத் தகுந்ததாகவும், குறுகிய காலத்தில் நீரை வெளிவரச்செய்யத் தக்கதாகவும் அந்த அமைப்பு விளங்கிட வேண்டும். வேறு சில பயனாளிகள் நீர் தொடர்ந்து தேவைப் பட ஒரு சக்தி சாதனம்நீரைக் குளிர வைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். அப்படி ஒரு சக்தி சாதனம் நீருக்கென உண்டாக்க மேற்பரப்பு நீர் அமைப்பு தேக்கும் திறன் போதுமானதாக இருக்கச் செய்ய வேண்டும். எனவே, அப்படி இருந்தால்தான் அது சராசரி ஊற்றொழுக்கு தேவைக்குக் குறைந்த போது ஈடுகட்டும் என்று அவர்கள் அதற்காவன செய்வர்.


இருந்தபோதிலும், ஒரு நீர்வடிநிலத்தின் நீண்ட கால சராசரி ஆவி குளிர்ந்திடும் வீதம் அந்த நீர்வடிநிலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் மேற்பரப்பு நீரின் சராசரி நுகர்வினை மேலாகக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும்.

இயற்கையான மேற்பரப்பு நீர் அதிகமாகப் பெருகச் செய்ய வேறொரு நீர்வடிநிலத்தில் இருந்து அதை இறக்குமதி செய்யலாம். அதைக் கால்வாய் வழியாகவோ, குழாய் வரிசை வழியாகவோக் கொண்டு வரலாம். அதேபோல் செயற்கையான முறையில் பிற இங்கு அட்டவணைப் படுத்திய மூல ஆதாரங்களில் இருந்து கொண்டு வரலாம் ஆனால் நடை முறையில் அளவுகள் புறக்கணிக்கக் கூடியதாகவே இருக்கும். ஏன்எனில் மனிதர்களே மேற்பரப்பு நீர் 'இழந்தது' என்றும்(அதாவது அது பயன் படுத்தத் தக்கதாக இல்லை) அதற்குக் காரணம் மாசுபடுத்தலேஎன்றும் கூறலாம்.

[4]உலகிலேயே பிரேசில் தான் அதிக அளவில் சுத்தநீர் வழங்கலில் முதலிடம் பிற நாடுகளைக் கட்டிலும் பெறுகின்றது. ருஷியா, கனடா நாடுகள் அடுத்து வருகின்றன.


ஆற்றொழுக்கின் கீழ்
ஆறு செல்லும் திசைஎங்கும், நீரின் மொத்தக் கொள்ளளவு நீரோட்டத்துடன் கொண்டு செல்லப் படும் அதில் கண்புலனாகும் தங்குதடையற்ற நீரின் ஓட்டம் அடிப்பரப்பில் ஓடும் போது பாறைகள் ஊடே உள்ளிருக்கும் சரளைக்கற்கள் எல்லாம் தாண்டி செல்லும் போது அது திடமான பங்களிப்பாக தருவது கலந்திருக்கும். அதன் வெள்ளப்பரப்பு ஹைபோரெய்க் மண்டலம் என அழைக்கப் படுகின்றது

பல ஆறுகளில் பெரும் பள்ளத்தாக்குகளில் இந்த கண்புலனாகாத ஓட்டத்தின் உட்புறம் கண்புலனாகும் ஓட்டத்தை விஞ்சியிருக்கும். இந்த ஹைபோரெய்க் மண்டலம் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்-தடி நீர் இடையில் அடிக்கடி ஓர் இயக்கும் உள்முகம் நீரினை உள்ளடியாகவே நீரடுக்குப் பாறையிலிருந்து பெற்றுக் கொண்டு அதை உள்ளீடற்றதாக்கச் செய்யும். இது பெரும்பாலும் நிலத்தடிப் பாறைச்சிதைவுப்பகுதியில் முக்கியமாகக் இருக்கும். அங்கு ஆழமான நீண்டதுளைகள் மற்றும் நிலத்தடி ஆறுகள் பொதுவாக காணப்படும்.

நிலத்தடி நீர்.



ஷிபோட், ஒரு பொது நீர் மூல ஆதாரம் யுக்ரேனியன் கிராமங்கள்.

நிலத்தடி நீர்அடிப்பரப்புநீர் எனவும் அழைக்கப்படும். சுத்தநீர் மண்ணில் நுண்துளை மற்றும் பாறைகளில் அமைந்திருக்கும். அது ஆழமான நீண்ட துவாரங்கள்ஊடே அடிநில நீர்மட்டத்தின் கீழ்இருந்து கிளம்பிவரும். சிலசமயம் இதுஒரு தனிவேறுபாட்டை இருவகை யான நீர்ப்பரப்பிற்கும் இடையே வெளிப்படுத்தும் ஒன்று அடிப்பரப்பு நீர் அது மேற்பரப்புடன் தொடர்பு கொண்டிருக்கும். மற்றொன்று ஆழமான உள்ளடி நீர்ப்பரப்பு அதை ஆழ்நீளத்துளை என்பர்.(சில சமயங்களில் அது புதைபடிவ நீர் என்றும் கூறுவதுண்டு)

அடிப்பரப்பு நீர் மேற்பரப்பு நீர்உடன் சேர்த்து உள்வைப்பு, வெளிவைப்பு, நீர்ச்சேகரிப்பு சொற்றொடர்களில் சேர்த்துக் கருதப்படும். ஆனாலும் மாறுநிலை வேற்றுமையானது அதன் மெதுவான நீர்வரத்து கொண்டு செல்லப்படும் வீதம், அடிப்பரப்பில் உள்ள நீரின்சேகரிப்பு பொறுத்திருக்கும். பொதுவாக உள்வைப்பைக் காட்டிலும் மேற்பரப்பு நீர்அதிகமாகவே இருக்கும். இந்த வேற்றுமை மனிதர்களுக்கு அடிப்பரப்பின் நீரை நெடுங்காலத்திற்கு அதன் விளைவுகள் பற்றி எண்ணாமல் பயன்படுத்த ஏதுவாகும். இருந்த போதிலும் நெடுங்காலத்திற்கு கசிந்தொழுகும் நீர் அதன் சராசரி வீதம் மேற் பரப்பின் நீர் விட அதிகம் கட்டுப்பட்டதாக இருக்கும். அது அந்த சராசரி நுகர்வுக்கு உகந்த தாக இருக்கும்.

அடிப்பரப்பிற்கு உரிய நீர் மேற்பரப்பு நீர்கசிந்தொழுகல் மூலம் இயல்பான உள்வைப்பாக அமைந்திருக்கும். இயல்பான வெளிவைப்புகள் என்பதுதான் அடிப்பரப்பிலிருந்து வரும் ஊற்றுகள் ஆகும். ஆழநீண்டதுளைகள் கடல்களுக்கு ஏதுவாக அமைந்திருக்கும்.


மேற்பரப்பு நீர் ஆதாரம் திடமான ஆவி யாகுதலுக்கு உட்பட்டால் ஒரு நீர் மூலஆதாரம் ஆகும். அது உவர்ப்புத் தன்மைபடைத்திருக்கும். இது கண்மறைவாக உள்ள புதைந்திருக்கும் நீர்நிலைகளுக்குப்பொருந்தும். செயற்கையான முறையில்பாசனம் பெறும்பண்ணைகளிலும் இது காணலாம். கடற்கரைப் பகுதிகளில் மனிதர்கள் அடிப்பரப்பில் இருந்து பயன் படுத்தும் போது கசிந்தொழுகலின் போக்கை மாறு படுத்திவிட ஏதுவாகும். ஆதனால் மண் ணானது உப்புத்தன்மை பெற்றிருக்கும். மனிதர்களும் தங்களது பயன்பாட்டால் அடிப்பரப்பின் நீரை 'இழக்கச்' செய்யலாம். (அதாவது அதைப் பயன்படுத்த இயலாத வண்ணம்) ஏன்எனில் அது அந்த அளவிற்கு மாசு படிந்து விடும். அவர்கள் உள்வைப்பை அதிகரிக்கச் செய்யலாம் அதைஅடிப்பரப்பிற்கு நீர்த்தேக்கங்கள் எழுப்பி கொண்டுவரலாம் அல்லது குளங்களிலும் நிலைநிறுத்தச் செய்யலாம்.


உப்புநீக்குதல்
உப்புநீர் சுத்திகரிப்பு ஓர் இயற்கை வழிமுறையாகும். அதனால் உப்புநீர் (பொதுவாக கடல்நீர்) சுத்தநீராக மாற்றப்படும். பொதுவாக உப்புநீர் சுத்திகரிப்பு வழிமுறைகள் என்பனவடிகட்டுதல் மற்றும் மறுதலை ஊடுகலப்பு(துளைகள் உள்ள இடைத்தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை) நடப்புரீதியில் கடல்நீர் சுத்திகரிப்பு மாற்று நீர்ஆதாரங்களைக் காட்டிலும் அதிகச் செலவு வைக்கும் பணியாகும்.மொத்த மனிதப் பயன்பாட்டில் ஒரு சிறிதளவு பின்னம்தான் சுத்திகரிப்புப் பணியால் திருப்தி பெறுவர். அது பொருளாதார ரீதியில் அதிகமதிப்புடைய பயன்பாடுகளுக்கு (அதாவது குடும்ப அமைப்பு மற்றும் தொழிற்சாலை உபயோகங்கள்) மட்டுமே உகந்ததாகும். அதுவும் வறண்ட பகுதிகளுக்கேசாலப் பொருந்தும். இந்த சுத்திகரிப்புப்பணி அதிகப் பரவலாக பாரசீக வளைகுடா நாடுகளில் நடைபெறுகின்றது.


உறைபனி நீர்


நியூபௌந்துலாந்து கண்ட பனிப்பாறை போல
பல்வேறுபட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டுபனிப்பாறைகளைஓர் நீர்ஆதரா மாக்க முனைவதுண்டு, ஆயினும் இன்றளவும் அது புதுமையான நோக்கங்கள் கொண்ட தாகவே இருந்து வந்துள்ளது. பனிப்படல நீரொழுக்கு ஒரு மேற்பரப்புநீர் ஆதாரம் என்றும் கருதப் படுகின்றது.

இமாலயங்கள் அடிக்கடி 'உலகின் கூரை' என்றழைக்கப் படுகின்றன. அது பூமியில் மிகப் பரந்த மற்றும் கடல்மட்ட உயரமானப் பிரதேசங்கள் கொண்டுள்ளன. மேலும் அதிகம் பனிப்பாறைகளும் துருவப்பிரதேசங்கள் போல உள்ளன. ஆசியாவின் பத்து பெரிய நதிகள் இங்கு உற்பத்தி யாகின்றன. ஒருகோடி மக்களுக்கும் மேற்பட்டோர் இதை நம்பி உள்ளனர். தட்பவெப்பநிலை மேலும் சிக்கலாக்கும் வண்ணம், உலக சராசரிக்கும் மேல் செல்லும் வண்ணம் நிலைமை உள்ளது. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளில் வெப்பநிலை 0.6 டிகிரிகளுக்கும் மேலாக உள்ளது, அதேசமயம் உலகவெப்பமயமாகுதல் புடி 0.7 என்றே கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.[5]




சுத்த நீரின் பயன்கள்
சுத்தநீரின் பயன்கள் நுகர்வு மற்றும் நுகர்வற்றது என இருவகைப்படுத்தப் படலாம் (நுகர்வற்றது சிலசமயங்களில் 'புதுப்பித்தல்' என்றழைக்கப் படுகின்றது. நீரின் பயன் வேறுபயன்பாடுகளுக்குக் கிடைக்காத வரை நுகர்ச்சியானதாகவே இருக்கும். இழப்புகள் என்பது அடிநீர்ப்பரப்பின் கசிவு மற்றும் ஆவியாகுதல் ஆகும் இவைகள் நுகர்ச்சியாகவும் கருதப்படும். ஏன்எனில் நீரானது விளைபொரு ளாகவும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றது.(அதாவது பண்ணை விளைபொருள் போல) நீர் சுத்திகரித்தபிறகு மேற்பரப்புநீர் போல மாற்றிவிட இயலும். அதாவது கழிவுநீர் பொதுவாக நுகர்ச்சியற்றதென்று கூடுதல் பயன்பாட்டிற்கு மாற்றும்வரை கருதப்படும்.

விவசாய எந்திரங்கள்


ஒரு பண்ணை நிலம் ஆணடரியோ
உலகெகங்கும் நீரின் பயன்பாடு 69% பாசனத்திற்கே செலவிடப்படுகின்றது என கணக்கிடப்பட்டுள்ளது. 15-35% பாசனத்திற்கு மீட்டுப்பெறத் தாங்குதல் இன்றி உள்ளது.[6]


உலகில் சிலபகுதிகளில் பாசனம் எந்த பயிரினையும் விளைவிக்க அவசியமாகின்றது. ஆனால் மற்ற பகுதிகளில் அதிக லாபம் ஈட்டும் பயிர்களை வளர்க்கவும், பயிர்விளைச்சலை அமோகமாக்கவும் முடிகின்றது பாசன முறைகளில் பல்வகைகள் பயிர்விளைச்சல், நீரின் நுகர்ச்சி, கருவிகளுக்கு முதலீட்டுச்செலவு, மற்றும் கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. பாசன திட்டங்கள் அதாவது உழுசால்மற்றும் தலைக்குமேல்நீர்தெளித்தல் போன்ற செலவுகுறைவாகப் பிடிக்கும் ஆயினும் திறனிலும் குறைவாகவே இருக்கும். ஏன்எனில் நீரானது பெருமளவு ஆவியாகுதல், ஓடிவிடுதல், அல்லது மண்டல வேர்ப்பகுதியில் வடிந்துவிடுதல் போன்ற காரணங்களால் இழப்புக்கு உள்ளாகின்றது கண்கூடு. மற்ற பாசன முறைகளான, சொட்டுநீர்ப் பாசனம்அல்லது துளித்துளிப் பாசனம்,அலைநீர்ப் பாசனம், தெளிப்புப் பாசனம்-தெளிப்பான்களை தரையிலிருந்து இயக்குதல், கடைபிடிக்கலாம். ஆனால் இவைகள் செலவுபிடிக்கும் திட்டங்கள் ஆகும் அதுவும் ஓடுதல்,வடிதல்,ஆவியாதல் எல்லாவற்றாலும் ஏற்படும் இழப்பைக் குறைக்கக் கூடும். எந்த வழிமுறையானாலும் அது சரிவர நிர்வகிக்கப் படவில்லை எனில் பலன் வீணாகிவிடும். எல்லா வழிமுறைகளும் அவைகள் தகுந்த நிலவரங்களில் பயன்படுத்தப் படும் வரையில் ஆற்றல் மிக்கவைதான உரிய பாசன நேரம், மற்றும் மேலாண்மை இரண்டையும் ஒட்டியே பாசன வழிமுறை அமைந்திருக்கும். ஒரு பிரச்னை என அடிக்கடி கருதப்படுவது உப்புநீர் சுத்திகரிப்பு செய்வதால் அடிப்பரப்பு நீர் பாதிக்கப் படுவதாகும்.

நீரியல்கலாசாரம்ஒரு வளர்ந்துவரும் விவசாய நீர்ப்பயன்பாட்டு முறையாகும். சுத்தநீர் கொண்ட வணிகநோக்கில் மீன்பிடித்தல் தொழிலும் விவசாய நோக்கில் நீர்பயன்படுத்துவது போன்று இணையாகக் கருதப்படலாம் ஆயினும் குறைவான முன்னுரிமை பாசனத்தை விட அது பெற்றிருக்கலாம். (ஆரல் கடல் மற்றும் பிரமிடு ஏரி காண்க)

உலகில் மக்கள்தொகை பெருகப் பெருக, உணவுத் தேவை அதிகரிக்க, வேண்டியுள்ளதால் நிர்ணயிக்கப் பட்ட நீர்வழங்கல் அடிப்படையில் அதிகம் உணவு உற்பத்தி செய்வதும் அதற்கு குறைவாக நீர் பயன்படுத்த முனைவதும், பாசன முறைகளில்[7] அபிவிருத்தி செய்வதும்,தொழில்நுட்பங்கள் பயன் படுத்துவதும், விவசாய நீர் மேலாண்மை மற்றும் பயிர் வகைகள் மற்றும்நீர்உபயோகம்பற்றிச் சரிபார்த்து எச்சரிப்பதும் யாவும் மேற்கொள்ளப் படவேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது.
தொழிற் புரட்சி


போலந்து ஒரு சக்தி சாதனம்
உலகெங்கிலும் நீரின் பயன்பாடு 15% தொழிற்சாலைகளுக்கென்று அளவிடப்பட்டுள்ளது, முக்கிய தொழில்துறை பயனாளிகள் சக்தி சாதனங்கள், குளிரூட்ட, எரிஆற்றல் மூல மாகப் பயன்படுத்தவே செய்கின்றனர். (அதாவது நீர்மின்விசைத் திட்டங்கள்) உலோகமற்றும் எண்ணெய் சுத்தி கரிப்புகள் போன்ற நீரினை வேதியல் செயல்முறைகளுக்கெனவும், பொருளுற்பத்தித் திட்டங்களுக்காகவும், ஒரு தீர்வாகப் பயன் படுத்துகின்றனர்.

தொழில்துறைக்கென்று ஒரு பங்கு நீரின் பயன்பாடு நுகர்ச்சியாகத்தான் உள்ளது ஆனால் மொத்தமாக அது விவசாயப் பயன்பாட்டைவிடக் குறைந்துள்ளது.


நீர் எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றது. நீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும்,மாசுபடுத்தாததாயும், புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது. சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது.

த்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர்விசை மின்நிலையம் ஆக உள்ளது. அழுத்தத்திற்குள்ளானநீர், நீர்வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,மேலும் பாதுகாப்பானதாகவும்,சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது. அதிகவெப்பம் குளிர்ச்சியடையவும் வைக்கின்றது அல்லது ரம்பப் பிளேடுகளை அதிகச்சூடு ஏறாத வண்ணம் தடுக்கவும் செய்கின்றது.

நீரானது நீராவிச்சுழலி, வெப்பப் பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிக்கப் படாமல் வெளியேற்றும் நீர் தொழிற்சாலையில் மாசுபடுத்தும். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு தொழிற்சாலை களிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியல் மாசு), வெளியேற்றப் பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன.

வீடுகள்


குடிநீர்
உலகெங்கிலும் 15% நீரின் பயன்பாடு குடும்ப அமைப்புகளுக்காகவே ஆகின்றது. இதில் குடிநீர் குளியல், சமையல், துப்புரவு, மற்றும் தோட்டப் பராமரிப்பு யாவும் அடங்குகின்றன. அடிப்படை குடும்ப அமைப்பிற்கு என நீர்த்தேவைகள் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 50 லிட்டர்கள் என்று பீட்டர் கிளேக்கு என்பார் கணக்கிட்டுள்ளார். அதில் தோட்டப் பராமரிப்பு அடங்காது.
குடிநீர் என்பது போதுமான உயர்தரம் கொண்ட தாகவும், அது நுகரத் தக்க தாகவும், அல்லது பயன்படுத்தினால் அபாயம் ஏற்படாத தெனவும், நீணட காலத் தீங்கிழைக்கா தெனவும் இருத்தல் வேண்டும். அத்தகைய நீர் பொதுப்படையாக பருகத்தகும் நீர் என்று வழங்கப்பெறும் முன்னேறிய நாடுகளில் குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மேலும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கும் சேர்த்து பருகும் தரம் மிக்கதாக இருக்கவேண்டும்.அதில் ஒரு சிறிதளவு உண்மையில் நுகரப்படுகின்றது அல்லது உணவு தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.


பொழுதுபோக்கு


கடற்கரை ஊற்றுக்களின் நீரோட்டங்கள்
பொழுது போக்குகேளிக்கைகளுக்காக நீரின் பயன்பாடு சிறிதெனினும் அது மொத்தத்தில் வளர்ந்துவரும் சதவீத மாகவே உள்ளது. அத்தகு பயன்பாடு பெரும்பாலும் நீர்த் தேக்கங்களில் நடைபெற்றக் கொண்டு வருகின்றது. நீர்த்தேக்கம் பூர்த்தியானதும் மிகைநீர் இந் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றது. அது கேளிக்கைப் பயன்பாடு என வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீர்வெளியேற்றும் பொழுது ஒருசில நீர்த்தேக்கங்களில் வெண் நீர்- கரைஊற்றுநீர் படகுச் சவாரிக்கெனப் பயன்படுத்தப் படுகின்றது.அது கேளிக்கைப் பயன்பாட்டின் கீழ்வரும். பிற எடுத்துக்காட்டுகள் பயன்பாட்டாளர்களில் தூண்டில் மீன்பிடிப்பாளர்கள், பனிநடைக்கட்டைப் பயனாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நீச்சல்காரர்கள் முக்கியமாக அடங்குவர்.

பொழுதுபோக்குப் பயன்பாடு வழக்கமாக நுகர்ச்சியற்றதாகும். கோல்ப் ஆடுகளங்களில் அதிக அளவில் நீர்உபயோகம் படுத்தப் படுவதாகவும் அதுவும் வறண்ட பகுதிகளில் என்றும் குறிவைத்துக் கூறுவதுண்டு. பொழுதுபோக்குப் பாசனம் (தனியார் தோட்டங்கள் உள்பட) குறிப்பிடத்தக்க விளைவை நீர்வள ஆதாரங்கள் பேரில் ஏற்படுத்துகின்றதா என்பது தெளிவில்லாமல் தான் இருக்கின்றது. ஏன்எனில் போதிய நம்பகமான தரவுகள் கிடைக்கப்பெறாததும் காரணம் ஆகும். சில அரசாங்கங்கள் கலிபோர்னியா அரசாங்கம் உள்பட கோல்ப் ஆடுகளத்தை விவசாயநோக்கம் கொண்டவை என்று அங்கீகரித்துள்ளன. சுற்றப்புறச் சூழல் ஆர்வலர்களின் குற்றச் சாட்டுகளுக்காக வீணாகும் தண்ணீர் பயன் படுத்துவதற்காக அங்ஙனம் செய்துள்ளனர். எப்படி எனினும், கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்கள் காண்கையில் அதன்விளைவு இதற்கெல்லாம் மீண்டும் அளிக்கப்பட்டாலும் பூஜ்யம் அளவிற்கு நெருங்கியுள்ளது.

கூடுதலாக பொழுதுப்போக்குப் பயன்பாடு பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக நீர்த்தேக்கத்தில் மிகுந்துள்ள நீர் கோடையின் பிற்பகுதியில் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தப் பட்டால் அது குடியானவர்களுக்கு இளவேனிற்காலத்தில் நடவுக்காலத்தில் கிடைக்காமல் போய்விடும். நீர் வெண்ணீர் தெப்பச் சவாரிக்கு வெளி யேற்றப்படுவது நீர்மின்விசை பற்றாக்குறை காலத்தில் தேவைக்கேற்ப கிடைக்காமல் போய்விட வாய்ப்புண்டு.




சுற்றுச்சூழல் ரீதியான
சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பாடு சிறி தளவெனினும் அது மொத்தத்தில் சதவீதம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது. சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பர்டுகளில் அடங்குவது: செயற்கை ஈரநிலங்கள், செயற்கை ஏரிகள், வனவிலங்குகளுக்குகந்த சூழ்நிலை உருவாக்குதல், அணைக்கட்டுகளில்மீன் பிடிக்க ஏணிப்படிகள் அமைத்தல், நீர்த்தேக்கங்களில் நீர்வெளியேற்றும் போது அத்தருணமாக மீன்குஞ்சு உற்பத்தி செய்வித்தல் ஆகியவாகும்.

பொழுது போக்குப் பயன்பாடு போல சுற்றுப்புறச் சூழல் பயன்பாடும் நுகர்வற்றதாகக் கருதப் படுகின்றது. பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக, நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றும் பொழுது அதை மீன் குஞ்சுகள் உற்பத்திக்குப் பயன்படுத்தினால் அது அற்றின் மேல்பகுதியில் உள்ள நிலங்களுக்குதவாமல் போய்விடும்.


நீர் இறுக்கம்


1970–2000 காலகட்டத்தில் வளரும் நாடுகளின் மக்கள் பெற்ற குடிநீர் பங்கின் சிறந்த கணிப்பு.

முதன்மைக் கட்டுரை: water crisis
நீர்இறுக்கம் என்ற கோட்பாடு என்பது தொடர்பு படுத்திப் பார்த்தால் சுலபமாகத் தோன்றும். உலக வணிகத் தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக் குழுவின் படி நிலைமைகளுக்கு ஏற்ற வாறு பயன்பாடு அமையும் நீர் எல்லா உபயோகங்களுக்கென போதுமானதாக இல்லாமல் போனாலும் அது விவசாயம். தொழில்சாலை, மற்றும் வீட்டு உபயோகம் என்று இருந்தாலும் நீர்இறுக்கம் ஆகிவிடும்.

தனிநபர்வருவாய்போல வரையரை செய்வது கடினம் எனினும் அது நீரின் பயன்பாடு மற்றும் திறன்பற்றிய யூகக் கருத்துக்கள் கொள்ளவைக்கின்றது என்றாலும் முன்மொழியப்பட்ட கருத்து: வருடாந்திர தனிநபர் புதுப்பித்துக்கொள்ளும் சுத்தநீர் கிடைக்கும் அளவு 1700 கனமீட்டர் குறைவாகும் பொழுது நாடுகள் நீர்இறுக்கம் கிரமமாகவோ அல்லது கால வேளையாகவோ பெறும் அனுபவம் அடையக் கூடும். 1,000 கனமீட்டர் கீழ் நீர்கிடைப்பது சொற்பம்
ஆனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கக் கூடும் அதனால் மனிதர்களின் ஆரோக்கியம் உடல்நலம் பாதிக்கும் நிலை ஏற்படும்.


மக்கள்தொகை வளர்ச்சி
2000-ல் உலக ஜனத்தொகை 6.2 பில்லியன்கள் ஆகும். ஐ.நா மதிப்பீட்டின்படி 2050ல் கூடுதலாக 3.5 பில்லியன்கள் ஆகும்போது வளர்முக நாடுகள் நீர் இறுக்கம் என்ற பிடியில் சிக்கித் தவிக்கக்கூடும்.[8] [9]எனவே நீரின் தேவை அதிகரிக்கும்நீர்ப்பாதுகாப்பு முறைகள்மற்றும் மறுசுழற்சி முறைகள்எந்த அளவிற்கு நடைபெறகின்றதோ அதை ஒட்டி வீதாசாரமாக முக்கிய நீர்வள ஆதாரங்கள் பொறுத்து அமையும்.[10]

அதிகரிக்கும் செழுமை
வறுமை துயர்தணிப்பு வீதம் இருபெரும் ஜனத்தொகை அரக்கர்களான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது செழுமைஅதிகரிப்பு என்பதின் பொருள் அதிக நீர்நுகர்வாகும். சுத்த புதிய நீர் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் மற்றும் வாரத்திற்கு 7 நாட்கள் என்றளவில் ஆதாரத்துப்புரவுச்சேவைகள் தோட்டம் மற்றும் கார் போன்றவற்றிற்காக மட்டுமின்றி தனியார் நீச்சல் குளங்கள் ஜாக்குசிசிஸ் பராமரிக்க நீர் தேவைப்படுகின்றது.

வணிக நடவடிக்கைகள் விரிவாக்கம்
வணிக நடவடிக்கை என்பது தொழில் மயமாகுதல் இருந்து சேவைத்துறைகள் வரையில் அதாவது சுற்றுலா மற்றும் பொழுது போக்கு துறைகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து வேகமாக விரிவாகிக் கொண்டே வருகின்றது. அதன்விளைவாக நீர்த்தேவை அதிகரிக்கின்றது. வழங்கல்மற்றும் துப்புரவு நிமித்தம் வேண்டப்படுவதால் அது நீர்வள ஆதாரங்கள் மேல் அழுத்தங்கள் மற்றும் இயற்கை உயரின வாழ்க்கைச் சூழல் மேல் தாக்கங்கள் உருவாக்குகின்றன.

வேகமாக நகரமயம் ஆகுதல்
நகரமயமாகும் போக்குமுடுக்கி விடப்பட்டுள்ளது. சிறிய தனியார் கிணறுகள் மற்றும் மலக்கழிவுத்தொட்டிகள் குறைந்த அடர்த்திகொண்ட சமுதாயங்களில் நன்கு செயல்பட்டதுபோல அதிக அடர்த்திகொண்ட நகரப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படஇயலவில்லை. நகரமயமாகுதல் குறிப்பிடத்தக்க மூலதனம் நீர் உள்கட்டமைப்பபுகளுக்காகவேண்டப் படுகின்றது. அப்பொழுது தான் நீர் தனியார் களுக்கு, மற்றும் கழிவுநீர் ஒருங்குவிப்புகள் மேல் உரிய கவனம் செலுத்த இயலும். அது தனியார்கள் மட்டுமின்றி வணிக நோக்கிலும் கைகூடும். மாசுபடிந்த தொற்றுநோய் பரவவைக்கும் நீர்வளங்கள் சுத்திகரிக்கப் படவேண்டும் இல்லைஎனில் அது பெர்துமக்களின் சுகாதார அபாயநேர்வுகளுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஐரோப்பிய நகரங்களில் அறுபது சதவீதம் 100000 பேர்கள் கொண்டுள்ளன. வேகமான வீதம் நிலத்தடிநீர் சேமித்து வைப்பது காட்டிலும் பயன்படுத்தப் படுகின்றது ஏதேனும் நீர் எஞ்சியிருப்பினும் அது கைவரப் பெறுதற்கு அதிகம் செலவாகின்றதுஎன்பது நிதர்சனமான உண்மை நிலவரமாகும்.

லேபிள்கள்: ,

நகர்மயமாக்கல் போக்கும் அதன் விளைவுகளும்

1972 - ஆம் ஆண்டு ரோம்கிளப் "வளர்ச்சியின் எல்லை" என்ற மக்கள் தொகை குறித்த மால்தீசிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை நகர்மயமாக்கல் போக்கு தீவிரமடையும் என வருங்காலத்தைப் பற்றி கணித்தது. அதன் கணிப்பை விஞ்சக் கூடிய அளவு இன்று பூமி பெருமளவு நகர்மயமாகிவிட்டது.
பத்து லட்சம் பேருக்கு மேல் வாழும் நகரங்கள் 1950-ஆம் ஆண்டு 86-இருந்து; இன்று 400 ஆக உயர்ந்துள்ளது; 2015-ஆம் ஆண்டில் அது 550 ஆக ஆகக்கூடும். தற்போதைய நகர மக்கள் தொகை 1960-ஆம் ஆண்டின் மொத்த உலக மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. கிராமங்களில் வாழும் 320 கோடி மக்கள் 2020-ஆம் ஆண்டுகளில் குறைந்து விடுவர். உலக நகர்மயமாக்கல் வளர்ச்சிப் போக்கின் காரணமாக 2050-ஆம் ஆண்டில் நகரங்களில் மட்டும் வசிப்போர் 1000 கோடிக்கு மேல் போய்விடும்.
இதில் வளர்முகநாடுகளின் நகர்மயமாக்கம் தான் தீவிரமாக இருக்கப்போகிறது. அடுத்த தலைமுறையில் வளர்முக நாடுகளின் நகர மக்கள் 400 கோடியாகிவிடும். சினா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் மொத்த நகரமக்கள் தொகை இன்றைய ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது. 80 லட்சம் பேருக்கு மேல் மக்கள் குடியிருக்கும் மாநகரங்கள் (Mega Cities), இரண்டு கோடிக்கு மேல் வாழும் மாபெரும் நகரங்கள் (Hyper cities) ஆகியவற்றின் வளர்ச்சி அபரிமிதமாகிவிடும். (பிரெஞ்சு புரட்சியின்போது மொத்த நகர வாழ் மக்கள் வெறும் 2 கோடி மட்டுமே).
மாநகரங்களின் பெருக்கம் ஒருபுறம் இருந்தாலும் இரண்டாம் அடுக்கு நகரங்களிலும், சிறிய நகர்ப்புற பகுதிகளிலும் மக்கள் திரள்வது அதிகரிக்கவே செய்யும் இம்மாதிரியான நகர வளர்ச்சி நகரத்துக்குத் தேவையான சேவைகள் எதுவும் திட்டமிடப்படுவதில்லை.
சினாவில் 1978-ஆம் ஆண்டு 193 நகரங்கள் இருந்தன. 1998-ல் அது 640 ஆக உயர்ந்து விட்டது. 1979-சந்தை சிர்திருத்தத்தின் விளைவாக கிராமப்புற உழைப்பு சக்திகள் சிறிய நகரங்களை நோக்கியும் - மாநகரங்களை நோக்கியும் நகர ஆரம்பித்தன. இதன் விளைவாக நகர மக்கள் இன்று 43 சதவீதமாக ஆகிவிட்டனர்.
சினத்து கிராமங்கள் நகர மயமாக்கப்பட்டதோடு நகரங்களை நோக்கிய குடிபெயர்சியும் பெருமளவில் நடைபெற்றது.
புதிய நகர்மயமாக்கம்:-
நமது சமகாலத்தில் கிராம / நகர கலவை என்பது மனித இருப்பிடத்துக்கான வளர்ச்சியில் புதிய பாதையாக உருவெடுத்துள்ளது நாட்டின் எந்த பகுதியும் தூய நகரமாக அல்லது தூய கிராமமாக இல்லாமல் இரண்டின் கலவையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் இத்தகைய புதிய நகர் மயமாக்கல் நிகழ்ந்து வருகிறது.
நதியோர டெல்டாகள் இன்று மாநகர வளர்ச்சியில் நகர - தொழில் மையங்களாகவே மாற்றப்படுகின்றன. ஷங்காய் அப்படிப்பட்ட மகாநகரம் ஆகிவிட்டது. உலக மூலதன வலைப்பின்னல் நகரங்களில் ஒன்றாக டோகியோ, நியூயார்க், லண்டன் ஆகியவற்றுடன் ஷங்காயும் ஆகிவிடும். இந்த மகாநகரங்களில் தான் அனைத்து தகவல்களும் குவிக்கப்படுகின்றன. உலக நகரங்களாக மாறிய மகா நகரங்களுக்கும் - இதர நகரங்களுக்கும் இடையே சமமின்மையும், ஏற்றத் தாழ்வும் புதிய முரண்பாடுகளாக வளர்ந்துள்ளன. இதனால் நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான, இடைவெளி என்ற பிரச்சனை சிறிய நகரங்களுக்கும் பெரிய மாநகரங்களுக்கும் இடையிலான வருமானம் மற்றும் வளர்ச்சி பற்றிய இடைவெளி என்ற பிரச்சனையாக மாறிவிட்டது.
தற்போதைய நகரமயமாக்கம் தொழில் மயமாதல், வளர்ச்சி போன்ற திசைகளோடு எந்த தொடர்பும் இல்லாத வகையில் திசைகளோடு எந்த தொடர்பும் இல்லாத வகையில் நடைபெறுகிறது. உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் பிரிக்கும் தன்மை கொண்ட சிலிகான் முதலாளித்துவத்தின் விளைவு இது என சிலர் விவாதிக்கின்றனர்.
ஆனால், ஆசியா, சகாரா ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் வளர்ச்சி இல்லாத நகரமயமாக்கலே நடைபெற்று வருகிறது. இங்கெல்லாம் 1970-களில் ஏற்பட்ட கடன் நெருக்கடியும், 1980களில் உலக நிதி நிறுவனம் முன்வைத்த பொருளாதார சிர்திருத்தங்களும் உலக அரசியல் வளர்ச்சியின் அங்கமாக புதிய வகைப்பட்ட நகரங்களையே உருவாக்கின. 1960-93 ஆண்டுகளில் உண்மைக் கூலி குறைந்தது. விலை வாசி உயர்ந்தது; நகர வேலையின்மை உச்சத்துக்குச் சென்றது. ஆனால், இந்த ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.8 சதமாக தொடர்ந்து வளர்ச்சியடையவே செய்தது.
நகரங்கள் வேலைவாய்ப்பை அளிக்கும் மையங்களாக இருக்கும் நிலை மாறியும் நகர மக்கள் தொகை பல்கிப் பெருகுவதன் ரகசியம் என்ன? தான்சானியா போன்ற நாடுகளில் கூட எவ்வித நகர பெருக்கம் ஏற்பட்டுக் கொண்டே உள்ளது.
உலக வர்த்தக அமைப்பும், சர்வதேச நிதி நிறுவனமும் வேளாண்மை ஒழுங்கற்றதாக்கி விவசாயிகளை விவசாயி என்ற நிலையிலிருந்து வீழச்செய்து (De-peasantiozation) அதன் மூலம் உபரியான கிராமப்புற தொழிலாளர்களை உள்பத்தி செய்கிறது. இந்த கிராமப்புற உழைப்பாளர்கள் மாநகரங்களின் சேரிகளில் தஞ்சம் புகுகின்றனர். நகரங்களில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி இருந்தும் வேலைவாய்ப்புகளில் தேக்கநிலை இருந்தும் நகர மக்கள் தொகை பெருக்கம் இதனால் தீவிரமடைகிறது. இது "மிகு-நகர்மயம்" என்று அழைக்கப்படுகிறது. புதிய தாராளவாத உலக முறைமையியல் விளைவுகளில் இதுவும் ஒன்று.
மார்க்ஸ் தொடங்கி வெப்பர் வரையிலான செவ்வியல் சமூகவியலாளர்கள் எதிர்காலத்தின் மாநகரங்கள் மான்செஸ்டர், பெர்லின், சிகாகோ போன்ற தொழில்மயநகரங்களின் அடியோற்றியே தொழில்மயமாகும் எனக் கருதினர். லாஸ் ஏஞ்ஜல்ஸ் தொடங்கி பெங்களூர் வரை இது ஓரளவு நிறைவேறியுள்ளது. ஆனால் தெற்கு நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் விக்டோரியன் காலத்து டப்ளின் நகரம் போலவே ஆகிவிட்டது. டப்ளின் நகரம் 1800 முதல் 1850 வரை தொழில் மயமாவதற்குப் பதிலாக தொழில்மய இறக்கம் என்ற (De-industrialisation) பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நகரின் சேரிகள் தொழில் புரட்சியின் விளைவாக உருவானவை அல்ல.
இவ்விதமேதான் தார்-ஏ-சலாம், டாக்கா, லிமா போன்ற நகரங்கள் இறக்குமதி சார்பு தொழிலைக் கொண்டதாலும், பொதுத்துறை ஆலைகள் குறைந்ததாலும், ஊக்கமான மத்தியதர வர்க்கம் தமது தரத்தில் இருந்து வீழ்ந்தாலும் பேரழிவுக்கு உள்ளானாலும் அந்த நகரங்கள் வளரவே செய்தன. ஜாவாவிலும் இந்தியாவிலும் நடைபெற்ற யந்திர மயம், மெக்சிகோ, ஹாதி, கென்யா போன்ற நாடுகளின் உணவு இறக்குமதி, ஆப்பிரிக்கா முழுவதும் நிலவிய உள்நாட்டுப் போர் மற்றும் பஞ்சம், பெரும் உடமையின் உறுதிப்பாடு, வேளாண் வர்த்தகத்தின் தொழில் போட்டி போன்ற "உலகக் காரணிகள்" நகர் மயமாக்கல் போக்கை உந்தித்தள்ளி வருகிறது.
அதே சமயத்தில் பொருளாதார கட்டமைப்பை சரி செய்யும் போக்கு (Sap), நாணய மதிப்புக் குறைப்பு, அரசின் தலையீடு குறைதல், நகரங்களின் கடன் மற்றும் வீழ்ச்சியின் தீவிரம் போன்றவை காரணமாக நகரச் சேரிகள் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக டிக்கன்ஸ் காலத்து படுமோசமான பின்தங்கிய நிலை நகர்மய உலகத்தில் விரைந்து பரவி வருகிறது.
நகர்புற வறுமை பற்றிய "சேரிகளின் சவால்" என்ற ஐக்கிய நாடுகள் சபையின் மானுட குடியிருப்பு திட்டம் 2003 அக்டோபரில் வெளியிடப்பட்டது. இது உலகம் தழுவிய அளவில் நகர்ப்புற வறுமை பற்றிய ஆய்வை மேற்கொண்டது. முதன் முறையாக, சினாவும் முன்னாள் சோவியத் நாடுகளும் இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய அறிக்கை பழைய ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளின் பார்வையில் இருந்து வேறுபட்ட பார்வையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, பன்னாட்டு நிதிநிறுவனம் போன்ற "வாஷிங்டன் பொதுக்கருத்து" மாதிரிகள் உலக அளவிளான நகரச் சேரிகளின் பிரச்சனையை மோசமான அரசாங்க நிர்வாகத்தின் விளைவாக மட்டுமே காட்டுகின்றன. உலகமயமும் அதனால் ஏற்பட்ட அசமத்துவமும் இத்தகைய சேரிகள் உருவாவதற்கான காரணங்கள் என்பதை மூடி மறைக்கின்றன.
ஆனால் ஐ.நா அமைப்பின் இந்த புதிய அறிக்கை சர்வதேச நிதி நிறுவனத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை சரி செய்யும் திட்டத்தின் - புதிய தாராள வாதத்தின் விளைவாகவே நகரச் சேரிகளின் பிரச்சனையைப் பார்க்கிறது. கடந்த 20 ஆண்டுகால தேசிய அளவிலும் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார திசைவழி காரணமாகவே நகர வறுமையும் நகரச் சேரிகளம் பல்கிப் பெருகி உள்ளன. ஒதுக்கலும், அசமத்துவமும் தீவிரமாகியுள்ளன. நகர்வாழ் அறிவாளிகள் நகரங்களை வளர்ச்சிக்கான சாதனமாக பயன்படுத்திக் கொள்வதை தடுத்துள்ளன என அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
சேரிகளின் சவால் என்று அறிக்கை சுற்றுச் சூழல் பிரச்சனையை, நகர்ப்புற நச்சுத் தன்மைகளை, நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கிராமப்புறங்களிருந்து குடிபெயர்ந்துவரும் ஏராளமான உழைப்பாளிகள் பற்றியோ, நகர்ப்புற ஏழ்மையின் பாலியல் தன்மைகளையோ, முறைசாரா வேலைவாய்ப்பின் நிலைகளையோ கூட அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இவ்வளவு குறைபாடுகள் இருந்தும் இந்த அறிக்கை பல அடிப்படைகளில் மதிப்பு மிகுந்ததாகவே உள்ளது. நகர வறுமையின் பேரழிவுகளைப் பற்றி அதன் உலகளாவிய விளைவுகளைப் பற்றி அறிக்கை ஆதாரப் பூர்வமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வறுமையின் நகரமயமாக்கம்:-
1812-ஆம் ஆண்டு சேரிகள் என்றால் மோசடிகளும், குற்றவியல் வியாபாரமும் நடைபெறும் இடம் என வரையறுக்கப்பட்டது. 1830-40களில் ஏழைகள் வாழும் வாழ்விடமாக சேரிகள் புரிந்துகொள்ளப்பட்டன. ஒரு தலைமுறைக்குப் பின் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சேரிகள் உருவானதைத் தொடர்ந்து அது ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்காக அறியப்பட்டது. மோசமான குடிசை வீடு, அதீத மக்கள், நெரிசல், வறுமை மற்றும் தீமையின் கூட்டுத் தொகையாகவே சேரிகள் விளங்கின. பாதுகாக்கப்பட்ட தண்ணீரின்மை, கழிப்பிடமின்மை, பாதுகாப்பின்மை, போன்ற இல்லாமைகள் பலவற்றின் வாழ்விடமாக சேரிகள் விளங்கின.
இத்தகைய நகரச் சேரிகளில் வாழ்வோர் 2001 ஆம் ஆண்டில் 92 கோடி பேர் ஆவார். இது ஏங்கல்ஸ் தனது இளம் வயதில் மான்செஸ்டரை ஆராய்ந்தபோது நிலவிய உலக மக்கள் தொகைக்குக் சமமாகும். வளர்முக நாடுகளின் நகரவாசிகளில் 78 சதவீதத்தினர் உண்மையில் சேரிவாசிகளே ஆவர். இவர்கள் உலக நகரமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர். நகரங்களில் வசிக்கும் சேரிவாசிகளின் சதவீதம் சில நாடுகளில் 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். எத்தியோப்பியா நகரவாசிகளில் 99.4% சேரி மக்கள். ஆப்கானிஸ்தானில் 98.5% நேபாளத்தில் 92% டெல்லியிலோ சேரிக்குள் சேரிகள் உருவாவது என்ற போக்கு அதிகரித்துவிட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமான அரசு அறிக்கைகளில் இந்த பிரச்சனை வெகுவாக மூடி மறைக்கப்பட்டு விடுகிறது.
உலகெங்கும் இன்று 2.5 லட்சம் நகர சேரிகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின் மிகப்பெரிய மாநகரங்களான கராச்சி, முப்பை, டெல்லி, கொல்கத்தா, டாக்கா ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் 15,000 சேரி குடியிருப்புகளில் இரண்டு கோடி பேர் வாழ்கின்றனர்.
மரபு சார்ந்த வகையில் தொழில் புரட்சி மூலமாக உருவான சேரிகள் நகரின் உள்ளேயே நகரின் அழுகலாகக் கிடக்கும். ஆனால் தற்போதைய புதிய நகர சேரிகள் நகரத்தின் விளிம்புகளில் பெருகி வருகின்றன.
சேரி புவியியல் குடியிருப்புக்கான இடத்தினை அளிப்பதில் தொடங்குகிறது. வளர்முக நாடுகளின் 85 சதவீதமான நகரவாசிகள் சட்ட விரோதமாகவே நிலத்தை அபகரித்துள்ளதாக ஒரு ஹார்வர்டு ஆய்வு கூறுகிறது. நிலத்தின் மீதான யூகபேரம் பெருமளவு நகரங்களில் வளர்ந்து வருகிறது. சட்ட விரோதமான தனியார் நில யூக பேரத்தில் தேசிய அளவிலும் உள்ளூர் அளவிலுமான அரசியல் தலையீடு வழக்கமாகவே உள்ளது. சட்டப்பூர்வ நிலைமை இல்லாத சேரி வாசிகள் அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு விடுகின்றனர்.
மனித வாழ்வுக்கான அடிப்படை வசதிகள் இத்தகைய நகரச் சேரிகளின் இயல்பாகவே மறுக்கப்பட்டு விடுகின்றன. ஆப்பிரிக்க நகரச் சேரிகளில் நீரும் - மின்சாரமும், இதர நகர சேவைகளும் இன்று வரை உருவாகவே இல்லை 57 சதவீதமான ஆப்பிரிக்க நகரவாசிகள் கழிப்பிட வசதி ஏதுமின்றியே வாழ்கின்றனர். நகரங்களில் உருவாகும் மானுட/மிருக கழிவுகள் தண்ணீரோடு கலந்து விடுவதால் நீர்வழி நோய் காரணமாக 20 லட்சம் நகரக் குழந்தைகள் ஆண்டு தோறும் மாண்டுபோகின்றன. நைரோபி போன்ற நகரங்களில் பிளாஸ்டிக் பைகளில் தமது கழிவுகளை ஏழைகள் சுமந்து திரிய வேண்டியுள்ளது. மும்பையில் 500 பேருக்கு ஒரு கழிவறைக்கூடு என்ற விதத்தில் உள்ளது. இவை அச்சுறுத்தும் வாழ்க்கையே தவிர வேறில்லை. இதுவல்லாது நச்சுக் கழிவுகளின் பெருக்கம், வேதித் தொழிற்சாலைகளின் கழிவுகள், சாக்கடை கழிவுகளின் பெருக்கம் போன்றவைகளால் சேரிகளே முதலில் தாக்கப்படுகின்றன. இந்தியாவில் போபால் விஷவாயு கசிவின் பேரழிவை இங்கு நினைவு கூறிக்கொள்ளலாம்.
பொருளாதார சிர்திருத்தமும் நகர்மயமாக்கலும்:-
உலகமய நிலைகளில் கடைபிடிக்கப்படும் பொருளாதார சிர்திருத்தங்கள் நகரங்களின் நலத்திட்டங்களை கைவிட்டு விடுகின்றது. நகர வளர்ச்சிக்கான அரசாங்க முதலீட்டை நிதிச் சிக்கனம் என்ற பெயரில் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. இத்தகைய புதிய பொருளாதாரக் கொள்கைகள் கிராம எதிர்ப்பு தன்மை கொண்டவை மட்டுமல்ல. அவை நகர எதிர்ப்பு தன்மை கொண்டவையுமாகும். ரீகன் தொடங்கி புஷ் வரையிலான அமெரிக்க அதிபர்களின் ஆதரவோடு உலகெங்கும் பெரிய வங்கிகளின் நலன் காக்கப்பட்டது. பொதுத்துறை தனியார்மயமாக்கப்பட்டது. நிதி நாணய மதிப்புகள் குறைக்கப்பட்டன. உடல்நலன் மற்றும் கல்வித் துறைகள் லாப நோக்கத்தோடு தனியார் மயமாக்கப்பட்டன. இறக்குமதி கட்டுப்பாடுகளும் உணவு மானியங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டன. உலக சரக்கு சந்தையில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பகாசுர கம்பெனிகளின் வர்த்தகமே "சுதந்திரச் சந்தை" என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டது.
அரசு தனது கடமை, பொறுப்புகளில் இருந்து பொருளாதார சிர்திருத்தம் என்ற பெயரால் பின் வாங்கியது நகர வறுமை பெருமளவு வளர்ந்ததற்கு காரணம் என்ற ஐநாவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இது 1980-90களில் நடைபெற்றது.
வெள்ளை மாளிகையாலும், சர்வதேச நிதி நிறுவனத்தாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நகர்ப்புற ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்காவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. உண்மையில் உலகெங்கும் பல நாடுகளில் எண்ணை விலை உயர்வு, பஞ்சம், வட்டி விகித உயர்வு, சரக்கு விலைகளின் மாற்றம் போன்றவைகள் பொருளாதார சிர்திருத்தம் காரணமாக ஏற்பட்டன.
தேசிய பொருளாதார கட்டமைப்பை சரி செய்யும் திட்டத்தை மேற்கொண்டதன் விளைவாக ஆப்பிரிக்காவெங்கும் ஆலை உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைந்தனர். மூலதனம் பறந்து சென்றது. விலைவாசி உயர்ந்தது. தொழிலாளியின் உண்மை கூலி வீழ்ந்தது. இவற்றின் விளைவாக மோசமான குற்றங்களும், அடியாட்களின் பெருக்கமும் அதிகரித்துவிட்டது.
1970களில் 7.5 கோடி பேர் கிராமப்புற ஏழைகள் லத்தீன் அமெரிக்காவெங்கும் இருந்தனர் (நகர ஏழைகள் 4.4 கோடி) 1990-ல் 115 கோடி பேர் நகர ஏழைகள்; 8 கோடி பேர் கிராம ஏழைகள் என ஏழைகள் பற்றிய நகர, கிராம வித்தியாசம் மாறுபடத் தொடங்கியது. லத்தீன் அமொரிக்காவில் பொருளாதார சிர்திருத்தங்களை ராணுவ சர்வாதிகாரிகளே பெருமளவு மேற்கொண்டனர். சிலியின் சாண்டியாகோ நகரில் சர்வாதிகாரி பினோசெ சேரிகளையும் - சந்தைப்பகுதிகளையும் புல்டோசர் கொண்டு அழித்தான். அவை கிளார்ச்சியின் மையங்கள் என்பதால் அழிக்கப்பட்டன. போனஸ் அயர்சில் ஏழைக்கும் - பணக்காரனுக்கும் இடையிலான வருமான விகிதம் 23 மடங்கு என இருந்தது. லிமாவில் 1985-90 ஆண்டுகளில் மட்டும் 17 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக ஏழைகள் பெருகிவிட்டனர்.
இந்த பெருவெள்ளத்தில் நீந்திக் கரைசேருகிறவர்கள் சேரலாம், இல்லையேல் மூழ்கிச் சாகலாம் என்ற கொடூர சமூக சிந்தனை புதிய தாராளமயத்தின் கருத்தியலாகவே வளர்க்கப்பட்டது. இந்த நிலையில் சேரி வாழ் பெண்களின் நிலை பல மடங்கு கேவலமாகியது. அமைப்பு சாரா துறைகளில் பெண்கள் கொடூரமான முறையில் சுரண்டப்படுவது தீவிரமடைந்துவிட்டது. சுய வேலை வாய்ப்பு மூலம் பெண்களை பொருளாதார ரீதியில் சுதந்திரமானவர்களாக ஆக்குவது என்ற முழக்கம் உண்மையில் ஏமாற்றாகவே முடிந்தது.
முன்னாள் சோவியத் நாடுகளில் நகர வறுமை பல மடங்கு உயர்ந்துவிட்டது. வரலாறு காணாத ஒட்டாண்டித்தனம் அது. 1990-ல் 1.4 கோடி பேர் இந்த நாடுகளில் ஏழைகளாக இருந்தனர். 2003-ல் 16.8 கோடி பேராக இது உயர்ந்து விட்டது. இந்த பொருளாதாரப் பேரழிவு முதலாளித்துவம் அவர்களுக்கு அளித்த பரிசு!
உபரி மனிதர்களா?
1870-1900 வரையிலுமான பிற்கால விக்டோரியன் ஏகாதிபத்தியம் உலகச் சந்தையை ஆசிய / ஆப்பிரிக்க விவசாயிகளிடம் கொண்டு சென்றது. விளைவு: லட்சக்கணக்கான பஞ்சச் சாவுகளும் பாரம்பரிய தொழிலில் இருந்து கோடிக்கணக்கானோர் துரத்தி எறியப்படுதலும், லத்தீன் அமெரிக்காவில் அரை விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் குறைந்த பட்சம் உயிர்வாழ்வதற்கே இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவற்றின் காரணமாக இருபதாம் நூற்றாண்டில் கிராமப்புற மக்களின் எழுச்சிகளும், கிராமப்புற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தேசவிடுதலைகளும் உருவாயின.
தற்போது பொருளாதார சிர்திருத்தங்கள் அதே போன்றதொரு அடிப்படை மாற்றங்களுக்கு வழி ஏற்படுத்துகிறது. நகரங்கள் வளமையையும் செழிப்பையும் கொண்டுள்ளதற்குப் பதிலாக திறனற்ற உபரி மக்களைக் கொட்டுமிடமாக மாறிவிட்டது. கூலி குறைவான அமைப்புசாரா சேவைகளும், தொழில்களும், வர்த்தகமும் தாராள மயத்தின் நேரடி விளைவாகும் என ஐநா அமைப்பின் அறிக்கை எடுத்துரைக்கிறது. உண்மையில், உலகெங்கும் நகரங்களின் அமைப்புசாரா தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது. அமைப்புசாரா உற்பத்தி முறையிலேயே (ஆலைத் தொழில் அழிவைத் தொடர்ந்து) வாழ்ந்து கொள்ளும் முறையை மூன்றாம் உலக நாடுகளின் நகரங்கள் வளர்த்து வருகின்றன.
சேரிகளின் சவால் என்ற அறிக்கை, வளர் முக நாடுகளின் பொருளாதார ரீதியாக செயல்படும் மக்கள் தொகையில் ஐந்தில் இரண்டு பங்கினர் அமைப்புசாரா தொழிலாளரே என எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த அமைப்புசாரா தொழில் மூலமாக, ஆசியாவில் 40 சதவீதமாக நகரப்புற வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் இது 60-75 சதவீதமாகவும், ஆப்பிரிக்காவில் இது 60 சதவீதமாகவும் உள்ளது.
இது எதைக் காட்டுகிறது?
பெரும்பாலான மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளர்களாகவே இருப்பதைக் காட்டுகிறது. இந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யுமிடத்திலும், உலக அளவிலான சுரண்டல் ஏற்பாட்டிலும் கொடூரமாக சுரண்டப்படுகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் மூலமான பாதுகாப்பு ஏதுமில்லை.
இந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் குட்டி முதலாளிகள் அல்லர்; இவர்கள் தொழிலாளர் ரிசர்வ் படையுமல்ல. அல்லது, இவர்கள் பழைய அர்த்தத்தில் உதிரிப் பட்டாளிகளுமல்ல. இவர்கள் புதிய உழைப்புப் பிரிவினையின் ஒப்பந்த வேலைகளுக்கு ஆட்பட்ட உழைப்பு சக்திகளாவர். பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் நேரடிச் சுரண்டலுக்கு ஆட்பட்டவர்களாவர்.
ஐரோப்பிய தொழில் புரட்சி கிராமப்புறங்களில் இருந்கு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொள்ளவில்லை. அமெரிக்க கண்டத்துக்கு மிகப் பெருமளவில் ஐரோப்பிலிருந்து குடிபெயற்சி நடைபெற்றதால் இந்த பிரச்சனை ஓரளவு சமாளிக்கப்பட்டது. ஆனால், இன்று உழைப்பு சந்தை உலகமயமாகி விடவில்லை. பணக்கார நாடுகளுக்கு பெருமளவில் குடிபெயர்வதை தடுக்கும் தொழில் நுட்ப "பெருஞ்சுவர்" வலுவாக எழுப்பப்பட்டுவிட்டது. எனவே 21-ஆம் நூற்றாண்டின் உபரி மனிதர்கள் நகரச் சேரிகளில் குவிக்கப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. இவர்கள் ஆலைத் தொழிலில் சம்பந்தப் படாத அமைப்புசாரா தொழிலாளர்களாக தமது வாழ்நிலையை வைத்திருக்கிறவர்கள்.
பொருளாதாரத்தில் பல சிறு அடுக்குகளாக உள்ள இவர்கள் இனவழியேயும் பல இனங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்கு கூட்டு உழைப்பு அல்லது பெருவீத வர்க்கப் போராட்டம் என்ற கலாச்சாரம் உருவாக வாய்ப்பில்லை. இவர்கள் ஆலைகளில் ஒன்று சேர்வதில்லை. மாறாக, சந்தைகளில் அல்லது சேரித் தெருக்களில் செயல்படுகின்றனர். இத்தகைய அமைப்பு சாரா உழைப்புசக்தி பணக்காரர்களுக்கு "வீட்டு சேவை" செய்வது தொடங்கி பல வகைப்பட்ட சேவைத் துறைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது நிலவும் உற்பத்தி முறைமையை மாற்றி அமைப்பது குறித்த ஆர்வம் இவர்களுக்கு இருக்க முடியாது. தனக்கான வர்க்கமாக (Class in itself) இத்தகையவர் மாறுவது - அதுவும் மார்க்சிய அடிப்படையில் மாறுவது - என்ற வாய்ப்பு இன்று அருகியே உள்ளது. இத்தகைய மாநகர ஆக்கம் பற்றியோ - அமைப்புசாரா தொழிலாளர் பற்றியோ மார்க்ஸ் ஏங்கல்ஸின் ஆய்வுகள் எதுவும் குறிப்பிடவில்லை.*
(* குறிப்பு : இன்றைய மாநகர ஆக்கம் பற்றி மார்க்ஸ் காலத்திலேயே குறிப்பிட்டிருக்க முடியாது. மார்க்சியத்திடம் அவ்விதமான "எதிர்காலவியலை" எதிர்பார்ப்பது மார்க்சியமாகாது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, புதிய சமூக வேலைப் பிரிவு, புதிய வர்க்கங்களின் ஆக்கம் போன்றவை முதலாளித்துவத்தின் கீழ் மூலதனக் குவியலின் நிகழ்வுப் போக்கோடு தொடர்புடையது. இந்த மார்க்சிய அடிப்படையில் இக்கட்டுரை அமையவில்லை என்பது கட்டுரையின் பலவீனங்களில் ஒன்று.)
மதவாத அரசியலின் வளர்ச்சி
அமைப்புசாரா தொழிலாளர்களின் போராட்டம் எதுவும் தொடர்ச்சியற்றதாகவும், திடுமென தோன்றுவதாகவுமே உள்ளது. அவை பொதுவாக உடனடி நுகர்வுப் பிரச்சனை மீதான இயக்கமாகவே உள்ளது. உணவுப் பொருள் விலை உயர்வை எதிர்த்த கலகங்கள், குடியிருப்பு உரிமைக்கான மோதல்கள் என்பன போன்றவையாகவே உள்ளன. பெரும்பாலும், வெனிசுலாவிலும் நகர்ப்புற ஏழைகளின் பிரச்சனைகளை இடதுசாரி அரசியலாக்குவதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அவையும் சமூக மாற்றம் பற்றியதாக இல்லாமல், சலுகை திட்டம் பற்றியதாகவே அமைந்துள்ளது.
ஆனால், தெற்காசியாவிலும் - ஆப்பிரிக்காவிலும் சேரி நகரங்களின் பிரச்சனைகளை இனமத வாத இயக்கங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. லாகோஸில் முஸ்ஸ“ம் எதிர்ப்பு கலகங்கள் நகரப் பிரச்சனை வெடித்தது. மும்பையில் இத்தகைய இயக்கத்தை அரை பாசிச இயக்கமான சிவசேனா நடத்தியது.
புதிய நகர்மயமான உலகம் அதீத வேகத்தில் உருவாகி வருகிறது. எதிர்பாராத திசைகளில் அது பயணப்படுகிறது. கடந்த காலத்தை மட்டும் வழி காட்டியாகக் கொண்டு இதனை எதிர்கொள்ள முடியாது. புதிய வகைப்பட்ட நகரங்களின் சமூக பதட்டம் எப்படிப்பட்டதாக மாறும் என்பதை ஒருவரும் முன்கூட்டி அறிய இயலவில்லை.
தொழில் புரட்சி நகரங்களில் கடவுள் செத்துப் போனார். ஆனால் இன்று வளர்முக நாடுகளின் நகரங்களில் அவர் மீண்டும் எழுகிறார். இந்த இரண்டு நகர வறுமைகளின் கலாச்சாரங்களுக்கும் இடையிலான வேறுபாடு பெரியதாகவே உள்ளது. தொழில் புரட்சி காலத்து தொழிலாளி வர்க்கம் நகர்மயம் காரணமாக சமயச் சார்பற்றதாகவே இருந்தது. அப்போதைய நகரச் சேரிகளில் சிறு அளவில் தேவாலயங்கள் இருந்தாலும் பிரதான போக்காக கடவுள் நம்பிக்கையின்மையே தொழிலாளர் உணர்வில் இருந்தது. 1880-களில் பெர்லின் உலகின் மிக அதிகமான மதமற்றவர்கள் வாழும் நகரமாக இருந்தது. 1902-ல் லண்டனின் தொழிலாளர் குடியிருப்புகளில் 12 சதவீதத்தினரே தேவாலயங்களுக்குச் சென்றனர். பார்சிலோனாவிலும், டோகியோவிலும், செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கிலும் தொழிலாளர்கள் டார்வினையும் மார்க்சையும் தழுவினர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் அராஜக வாதமும், சோசலிசமும் ஊக்கமாக செயல்பட்டதைப் போல, இன்று வளர்முக நாடுகளின் மாநகரங்களிலும், நகரங்களிலும் வெகு ஜனப்படுத்தப்பட்ட இஸ்லாமும், கிருத்துவமும், இந்துத்துவமும் வேகமாகச் செயல்படுகின்றன.
மொராக்கோவில் உள்ள நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இவர்கள் மத்தியில் எழுந்த இஸ்லாமிய இயக்கம்தான் நகரச் சேரிகளின் உண்மையான அரசாங்கமாக உள்ளது. அரசு எந்திரம் தாக்கும் போது சட்ட உதவி செய்வது, இரவுப் பள்ளிகளை நடத்துவது, நோய்வாய்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, புனிதப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது, மரணமடைந்தால் அடக்கம் செய்ய உதவுவது போன்ற பல வகைகளில் இந்த நகரச் சேரி மக்களுக்கு இத்தகைய மத இயக்கங்கள் உதவுகின்றன. அன்றாட வாழ்வின் கொடூரங்கள் மீதான அன்றாட நடவடிக்கைகளாகவே இவை உள்ளன. அரசின் புறக்கணிப்பை எதிர்த்த போராட்டங்கள் இத்தகைய மத அரசியல் அமைப்புகள் மூலம் நடத்தப்படுகின்றன.
மேலைய நாடுகள் அல்லாத மூன்றாம் உலக நாடுகளின் கிருத்துவமாக பெந்தகோஸ்த் கிருத்துவம் உருவாகியுள்ளது. பெந்தகோஸ்த் கிருத்துவம் வறுமையின் இருப்பிடமாக உள்ள நகரங்களில் மிகுந்த ஊக்கமாகச் செயல்படுகிறது. இது நகரங்களின் கொடூர வாழ்க்கைக்கு எதிரான மாற்றுப் பண்பாடாகவே வளர்ந்துள்ளது. இது நகரங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை அமைத்துக் கொடுக்கிறது. குடியால் மதி மயங்கி போதைக்கு அடிமையானவர்களை மீட்டு புதிய வாழ்க்கை கிடைக்க உதவுகிறது. தெருக் குழந்தைகளைத் திரட்டி அவர்களுக்குரியதை செய்ய விழைகிறது. இவற்றோடு, மனிதத்துன்பங்களுக்கு தீர்வாக - மருந்தாக மத நம்பிக்கையை முன் வைக்கிறது.
இத்தகைய மதவாத கிளர்ச்சிகள் தொழிற் சங்கங்களையும் - இடது சாரி அரசியலையும் எதிர்ப்பதில் முனைப்பாக உள்ளன. நகர ஏழைகள் பற்றிய பிரச்சனைகளில் மிகுந்த தீவிரவாதத் தன்மையிலான இயக்கத்தையும் நடத்துகின்றன. மாநகரச் சேரிகளில் இத்தகைய மத அடிப்படைவாத இயக்கங்கள் இதனால் பலம் பெற்றுவிடுகின்றன.
இடதுசாரிகள் இத்தகைய நகரச் சேரிகளில் பெருமளவு செயல்படுவதில்லை என்பதால் இது எந்தத் தடையுமின்றி நடைபெற்றுவருகிறது. இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை இனித்தான் பார்க்க வேண்டும்.

லேபிள்கள்: